மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 ஜனவரி, 2010

நிகழ்காலங்கள் - -முனைவர். மு.பழனி இராகுலதாசன்

எனது (கல்வித்)தந்தை பேராசிரியர் முனைவர் மு.பழனி அவர்கள் சிறந்த சிந்தனையாளர். இவரது பெயருடன் புத்தரின் மகன் பெயரை இணைத்து பழனி இராகுலதாசன் என்ற பெயரில் எழுதி வருகிறார். தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது எளிமையும் மற்றவர்களுக்கு உதவும் குணமும் மாணவர்களிடம் இவர் மீது மரியாதையை உருவாக்கியது.

இவர் மிகச்சிறந்த எழுத்தாளர், இவரது நிகழ்காலங்கள் என்னும் சிறுகதை தொகுப்பு 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்தின் "ஜீவா விருது" பெற்றது. சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள கல்லூரித் ((தன்னாட்சி) தமிழ்த்துறையில் இந்த சிறுகதைத் தொகுப்பு பாடநூலாக்கப்பட்டுள்ளது.

எனது பேராசான் தான் பிறந்த நெடுங்குளம் கிராமத்தில் இருக்கும் வாய்ப்பை தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி பறித்தாலும் (ஏறத்தாழ முப்பது வருடம் பேராசிரியர் பணி) தனது கிராமத்தின் மீதும் அங்குள்ள மக்கள் மீதும் மிகுந்த மரியாதை கொண்டவர்.

கவிஞர் மீராவின் 'அன்னம் விடு தூது' பத்திரிக்கையில் 'கேள்வியும் நானே பதிலும் நானே' என்னும் பகுதியில் ஒருமுறை பதில் அளிக்கும் போது 'எனது நெடுங்குளம் கிராமத்து மண்ணும் மக்களுமே எனக்கு எழுதக் கற்றுக் கொடுத்தவர்கள். அவர்களது வயல்வெளி வாழ்க்கையை இலக்கியப் படுத்தும் சிறிய முயற்சியே எனது படைப்புகள்' என்று கூறியிருந்தார்.

இவரது கதைகளை அதிகம் பிரசவித்த பெருமை 'தாமரை' மற்றும் 'செம்மலர்' இதழ்களையே சாரும். தனது எழுத்தால் காசு பார்க்க விரும்பாத இலக்கியவாதிகளுள் இவரும் ஒருவர். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மதிக்கும், நேசிக்கும் மனிதர் எங்கள் பேராசான் . சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் கலை இலக்கியப் பெருமன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் அடிகளார் அய்யா குறித்து பேசாமல் இருந்ததில்லை.

அய்யாவின் அரவணைப்பில், அவரது நிழலில் ஒதுங்கும் வாய்ப்பு கிடைத்ததால் நாங்களும் ஏதோ எழுதுகிறோம். எங்களை எழுத்தாளராக்கிப் பார்த்த சந்தோஷம் அவருக்கு மட்டுமே உண்டு. கல்லூரியில் படித்த போது நான் எழுதிய கவிதைக்கு 'கட் அவுட் நிழலுக்கு கீழே' என்று தலைப்புக் கொடுத்து தாமரைக்கு அனுப்பி வைத்து பிரசுரமானபோது முதல் முறை அச்சில் பார்த்த என்னை விட அதிகம் சந்தோஷப்பட்டவர் என் அய்யாதான்.

எனது ஒவ்வொரு வளர்ச்சியிலும் என் பொற்றோரின் பங்கைவிட அதிகமானது அய்யாவின் பங்கு என்றால் மிகையாகாது. இன்றும் நான் அவர் அருகில் இல்லாவிட்டாலும் சில நாட்களுக்கு முன்னர் 'தினத்தந்தி' ஞாயிறு மலரில் நான் எழுதிய கதையைப் படித்து (நான் அவரிடம் சொல்லவே இல்லை) எனது மனைவியிடம் கதை படித்தேன் நல்லாயிருந்த்ததுன்னு சொல்லுங்க என்றவர், அவரது நிகழ்காலங்கள் புத்தகத்தில் 'தினத்தந்தி கதை படித்தேன் நன்று' என்று எழுதி கையொப்பம் இட்டு கொடுத்திருந்தார். அந்த புத்தகம் உறவினர் ஒருவர் மூலமாக அபுதாபி வந்துவிட்டது.

அதில் இருந்து ஒரு கதை உங்கள் பார்வைக்கு.... (ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்தானே)

யில் இறகுகளையும் பிலிம் துண்டுகளையும் தீப்பெட்டிப் படங்களையும் சிலேட்டுக் குச்சிகளுக்கு விற்பனை செய்து கொண்டும் , வாங்கிக் கொண்டுமாய்த் தீவிரமான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வகுப்புப் பையன்களை வாத்தியாரின் கடுமையான அதட்டல்குரல் நிமிர்ந்து பார்க்கச் செய்தது.

"ரெண்டு ரெண்டு எருவராட்டி எல்லோரும் கொண்டாந்தீங்களா?"

நாற்காலியில் சாய்ந்து, குத்துக்காலிட்டுக் கொண்டு, குடும்பப்பாசம் நிறைந்த ஒரு 'வாராந்தரி'யின் அட்டையைப் பார்த்தபடியே சத்தம் போட்ட வாத்தியாரைப் பையங்கள் எல்லோரும் ஏககாலத்தில் தலைதூக்கிப் பார்த்தார்கள்.பாடம் சம்பந்தப்பட்டதோ, அல்லது ஊர்-உலக விவகாரம் சம்பந்தப்பட்டதோ, அவர் கேள்வி கேட்டு உறுமுகிற காலங்களில் 'கூட்டுக்குரல்' கொடுத்துத்தான் அவர்களுக்குப் பழக்கம்.

இப்போதும் அப்படித்தான் பலமான குரலில் மொத்தமாய் "கொண்டந்திருக்கோம் சார்" என்று கூட்டிமுழங்கிவிட்டு அடங்கினார்கள். குரல் கீழ்நிலைக்கு வந்து அடங்குகிற கடைசி நேரத்தில் , அவரவர் எருவாட்டிகளைப் பத்திரப்படுத்தியிருக்கும் அவரவர் இடங்களைக் கடைக்கண்ணால் பார்த்து வைக்கப்பட்ட இடங்களில் வைக்கப்பட்ட மாதிரியாகவே அவையெல்லாம் இருப்பதை உணர்ந்து திருப்தியும் கொண்டார்கள்.

ஏககாலத்தில் எல்லோரும் கூக்குரலிட்டாலும் சத்தம் போட்டு ஒப்புக் கொண்டால் மட்டும் ஆயிற்றாக்கும்.அவருக்கு ஒவ்வொருவராய் விசாரித்து உறுதி செய்து கொண்டால் அன்றித்திருப்தி ஏற்படாது. சன்னமாய், ஒல்லியாய் ஆனால் உறுதியாய், நீளமாய் இருக்கிற மூங்கில் பிரம்புக் குச்சியை பீமசேனனின் கம்பீரத்தைல் தாங்கி ஒவ்வொரு பையனுக்கும் முகத்துக்கு நேராய், ஏதோ பொட்டு வைக்க நீளும் ஒரு விரலைப் போல் நீட்டி, "நீ கொண்டாந்தியா?" ...ம்...ம்... அடுத்து நீ... ம்... ம்..." என்று தானாகவே முணங்கிக் கொள்வார் விசாரணையும் பழுது ஆகாமல் பத்து நாளுக்கொரு தரமாவது ஏதாவது ஒரு 'கழுதை' சும்மாவந்து நின்று அகப்பட்டுக் கொள்ளும்.

இன்றைக்கும் அப்படித்தான்.

பிரம்பின் முனை ஒவ்வொருவரின் முகம் நோக்கி நகர, நகர ஒவ்வொரு விநாடியும் ரொம்பவும் உஷ்ணம் கலந்த அமைதியில் நகர்ந்து... கடைசியில் அழகிரிக்கு நேராய் வந்து நின்றது...

"நீ கொண்டாரலையா?"

'இல்லை' என்பதன் அடையாளமாய் அவனுடைய தலைமட்டும் பக்கவாட்டில் இப்படியும் அப்படியும் லேசாக அசைந்தது. அடுத்த கணங்களில் என்ன நிகழப் போகிறது என்பது ஒவ்வொரு 'கழுதைக்கும்' தெரிந்திருந்ததால், எல்லோரும் நிசப்தமாய் இருந்தார்கள். அதை நெஞ்சுக்குள் நினைத்துப் பார்க்கையில் தலையசைக்கவும் நிதானமிழந்து புடிச்சு வச்ச சிலை மாதிரி நின்று விழித்தான்.

"திருட்டு ராஸ்கோல்... யாராவது இப்படி நிப்பேன்னு எனக்குத் தெரியுமே... கழுத்தறுக்கத்தானே நீயெல்லாம் இங்கவாரே... நீ படிச்சது போதும்..ஓடிப்போயி ஒழுங்கா ரெண்டு எருவராட்டி வாங்கியா... அப்பத்தான் சோறு... இல்லாட்டி இல்லே..."

நாற்காலியில் இரண்டு கைகளிலும் தன் கைகளை ஊன்றி எழுந்து நின்று, அவர் உறுமி இளைத்து ஓய்கையில் அவன் வெளியேறி இருந்தான்.

--------------------------------



அவிழ்கிற மாதிரியும், அவிழாதது மாதிரியுமாய்ப் பாவலாக்காட்டிக் கொண்டிருக்கிற கால் சட்டையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஓடினான் அழகிரி. தினமும் பள்ளிக்கூடம் புறப்படுகையில் மூளிச்சிலேட்டும், முன்பின் அட்டை கிழிந்த, இலவசமாய்க் கிடைத்த தமிழ்ப்புத்தகமும், புழுக்கைக் குச்சிகளும் மறக்காமல் எடுத்துக் கொள்வதோடு இரண்டு எருவராட்டிகளும் எடுத்துக் கொண்டுதான் புறப்படுவான், இன்றைக்கென்று புறப்படுகையில் எப்படியோ மறந்துபோய் வந்து, வாத்தியாரின் ருத்ரதாண்டவத்தையும் தரிசித்து விரட்டப்பட்டதை நினைக்கையில் அழுகையாய்ப் பொங்கியது அவனுக்கு.

'நந்தனின் புலைப்பாடியைப் போல, ஊருக்குத் தீட்டும் பட்டுவிடக்கூடாது' என்று தள்ளி, வயல்வெளிக்குள் ஒரு தீவு போல, - ஒரு திட்டுப்போல காட்சி தருகின்ற குடிசைகளுக்கு அவன் போக வேண்டும். இந்நேரம் போனால் குடிசையில் ஆத்தா இருக்கிறதோ எங்கேனும் வேலை வெட்டிக்குப் போயிருக்கிறதோ தெரியவில்லை.

குடிசைகளுக்கு அருகாமையில் நெருங்குகிறபோதே அழகிரியின் கண்கள் தன் குடிசைவாசலில் பதிந்தன. வாசலில் முள் படல் கட்டியிருந்தது. கிட்டத்திலே வந்து படலுக்குள் ஊடுருவி 'ஆத்தா இருக்கா' என்று பார்த்து 'இல்லை' என்று தெரிந்ததும் , சுற்றிலும் குடிசைச் சனங்கள் வேறு யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான். பெரும்பகுதி சனங்கள் வேலைக்குப் போயிருந்தார்கள். வேப்பமரத்தடியில் ஏறுமுக வெயிலின் கதகதப்பை அனுபவித்தபடி சப்பட்டை போட்டு, மடியை விரித்துக் கொண்டு பேன்சீப்பில் 'வரட்டு' 'வரட்டு'ன்னு போன் இழுத்துக் கொண்டிருந்தாள் ஆவாரங் கிழவி.

"ஆயா" என்று குரல் கொடுத்தான் அழகிரி.

டேபிள் விளக்கின் 'ஷேடோ'வில் சுற்றிலும் தொங்குகிற மாதிரி, தலையைச் சுற்றி ஒருசாண் நீளத்தில் பரந்து, வடிந்து கிடக்கும் செம்பட்டை முடியை விலக்கிக் கொண்டு கிழவி பார்த்தாள்.

"யாரு... அழகிரியா, என்னடா... பள்ளிக்கூடம் போகலியா?"

"போனேன்"

"வந்துட்ட?"

"இன்னிக்கு எருவாட்டி கொண்டு போகல்லே; எடுக்க வந்தேன்"

"எருவாட்டி இல்லாட்ட என்னா?"

"சோறு போட மாட்டாக"

"எருவாட்டி கொடுத்தா சோறு போடுவாங்களா?"

"ஆமாம்"

"ரெண்டு ரெண்டு எருவாட்டி தினம் நான் கொண்டாந்து போட்டா... எனக்கும் சோறு போடுவாங்களா?"

அழகிரி மெதுவாகச் சிரித்துக் கொண்டான்.

"ஏ... பயபுள்ள என்னா சிரிக்கிறே?"

"ஒனக்கெல்லாம் போட மாட்டாக, படிக்கிறவுங்களுக்குத் தான் போடுவாக"

"ஆமா... ஆத்தாவைக் காணோமே, எங்க?" - என்று பிரச்சினைக்கு வந்தான் அழகிரி. அதற்குமேல் நீட்டி முழங்கிப் பேசிக் கொண்டிருக்க இரண்டு பேருக்குமே சுவாரஸ்யம் இல்லாதது மாதிரித் தோன்றியது. ஆவாரங்கிழவிக்குப் பேன் பிடுங்கி எடுத்தது."நாசமத்துப்போன பேனுச்சனியன் வேற... அய்யாவூட்டுக்குச் சாணி சகதி அள்ளப் போயிருப்பா" என்று சொல்லிவிட்டுச் சீப்பைப் போட்டு இழுக்க ஆரம்பித்தாள்.

வாசலின் கருவேலமுள்படல் பழைய சேலையின் கரைக்கோட்டுத் துணியால் கட்டப்பட்டிருந்தது நல்ல சிகப்பு நிறத்தில் ஏதோ ஒரு திறப்புவிழாவுக்குக் கட்டப்பட்டிருந்த புதிய ரிப்பன் மாதிரித் தெரிந்தது. ஆத்தா எப்பவும் ரொம்பப் பதனம்தான். 'ரிப்பன் வெட்டாமல்' திறப்புவிழா நடத்தி உள்ளே போக வேண்டும். முடிச்சுகளை அவிழ்த்துவிட்டுப் படலை வெளிப்பக்கமாய் இழுத்துத் திறந்த கொண்டு உள்ளே போனான் அழகிரி. சுற்றிலும் பார்வையை ஓடவிட்ட அழகிரிக்கு குடிசையின் உள்புறம் அலாக்காகத் தெரிந்தது அவ்வள்வு விசாலம்;தட்டி வைத்த எருக்கள் சொல்லி வைத்த மாதிரி ஒன்றிரண்டு கூட இல்லை ஆத்தா யாருக்காவது காசுக்கு விற்றிருப்பாளோ?...

--------------------------------

ஊருக்குள் பாளையத் தேவரய்யா வீட்டில் தான் அழகிரியின் ஆத்தாவுக்கு வேலை. பத்துச் சோடி மாட்டுக் கொட்டத்தைத் தினமும் பளிங்குபோலச் சுத்தப்படுத்த வேண்டும். குப்பைகளைக் குவித்து தரம்பிரித்து நாற்றங்காலுக்குத் தனியாகவும் வீட்டுக்குப் பின்புறமாய் தோட்டத்தில் காய்கறிச் செடிகளுக்குத் தனியாகவும் குவித்து வைத்து வரவேண்டும். மாடிப்படி வழியே மேலே ஏறி, பழையதானிய வகையறாக்களை உலரவைத்து அள்ளிப் போட்டு வர வேண்டும். ஊருக்கு அப்பால் இருக்கிற ஓடைக் கரைத் தோப்பிலிருந்து உரியா மட்டைகளை அள்ளிக் கொண்டு வர வேண்டும். வயல் வரப்புகளில் நிமிர்ந்து நிற்கிற கருவேல மரங்களின் காய்களை உலுக்கிப் பொறுக்கிச் சாக்குகளில் நிரப்பிக் கொண்டுவந்து, ஆடுகளுக்கு மழைக்கால உணவாய்ச் சேமித்து வைக்க வேண்டும். மூன்று மைல் தொலைவில் இருக்கிற ரைஸ்மில்லுக்குத் தலைச் சுமையாய்க் கொண்டு போய் மாவரைத்து அல்லது பச்சை நெல் அரைத்து கொண்டு வர வேண்டும். பெரிய அய்யாவுக்குக் கைக் குத்தல் என்றால் அலாதியான பிரியம். குந்தானியில் போட்டு நெல்குத்தி அடுக்க வேண்டும். இவையெல்லாம் ஒரே நாளில் அவள் பார்க்கிறதில்லை என்றாலும் நாள் முழுவதும் அவளை வாட்டி வதைக்கிற வகையில், சில வேலைகள் தினமும் முழுமையாய் இருக்கும்.

சக்கரமாய்ச் சுழன்று பார்த்துவிட்டு மாட்டுத் தொழுவத்தின் வைக்கோல் கட்டின் மீது, பெருமூச்சு விட்டு 'உஸ்' என்று தலைசாய்க்கிற நேரத்தில் நேரத்தில் எஜமானி அம்மாளின் மூக்கில் வியர்த்துவிடும். "நல்லா இருக்குடி" படுக்கையைப் பாரு படுக்கைய... அய்யாவுக்கு பெரண்டைத்துவயல் அரைச்சு வச்சு எத்தனை நாளாச்சு... ஓடக்கரையில போயி 'பிடிச்சபிடி' பறிச்சுக்கிட்டுவா" என்று உத்தரவு போட்டு விடுவாள்.

சேலைத் தலைப்பில் வேலையை முடிந்து கொண்டிருக்கிற எஜமானியம்மாளோடு பொழுதெல்லாம் அலக்குடுத்துக் கொண்டிருந்தாலும், தினம் நாலு எருவாட்டி சேர்ப்பதில் கவனமாக இருப்பாள் அவள். வயல் வெளிகளில் அவள் நடமாடுகையில் 'ஊர்காலி'கள் போட்டிருக்கும் சாணக் குவியலை எடுத்துச் சேர்ப்பாள் யாரோ ஒரு காண்ட் ராக்டருக்கு வசதிக்கு வழிகாலாய் அமைந்து, விரிசலாய் சொர சொரப்பு தட்டி நிற்கும் பாலத்தின் சுவர்களிலோ, ஆலமரத்தின் தூரிலோ இப்படி எங்கேயாவது ஓரிடத்தில் அகலமாய்-பெரிதாய்-எருவாட்டிகளைத் தட்டி விரல்கள் பதிய வைத்திருப்பாள். மூன்று நாட்கள் கழித்து, நினைவாய் கூடையை எடுத்துக் கொண்டு தட்டிய எருவாட்டிகளை திரட்டும் போது, சுமாராக ஒரு கூடைக்கு நிரம்பி இருக்கும். அவனுக்குத் தினம் இரண்டு இரண்டு எருவாட்டிகள் போக மிச்சம் கிடப்பதில் அவள் வெற்றிலை பாக்குமென்று கொள்வாள்.

அன்றைக்கு மதியத்துக்குள் ஒருசாக்கு நிறைய கருவேலங்காய்களைச் சேகரித்து வரவேண்டும் என்று விதித்திருந்தார்கள். வாங்கரிவாளைக் கருவேல மரத்துக்குள் கொடுத்துக் கொக்கிபோல் மாட்டிக்கொண்டு உலுக்கி உலுக்கிக் காய்களைத் தட்டிக் கொண்டிருந்தாள். பலம் கொடுத்து - மூச்சுக் கொடுத்து 'ம்...ம்...ம்...' என்று இரைந்து, ஏதோ மல்லுக்கட்டிக் கொண்டிருப்பது போல் இழுத்துக் கொண்டிருந்தாள் அவள். அவளுக்கு வாழ்க்கையே ஒரு மல்லுக்கட்டாய், மரணவிளையாட்டாய்ப் போன பிறகு வேறு என்னதான் செய்வது? தான் நிற்கும் வயல் வரப்பில், தனக்குப் பின்னால், ஏதோ நிழலாடுவது மாதிரி அவளுக்குத் தோன்றியது.

காய்கள் உலுக்கும் மும்மரத்தில் கவனிக்காமல் விட்டு விட்டால், உலுக்கி வைத்திருக்கிற காய்களை வழியில் போகிற ஆடுகள் வந்து களவாணித்தனமாய்த் தின்று விடும்... அப்படித்தான் ஆடு ஏதேனும் தின்ன வருகிறதோ என்று நினைத்தச் சீற்றம் கொண்டவளாய் "எந்தப் பய ஆடு?... ஓனக்கா உலுக்கி வச்சிருக்கேன்...?" என்று சப்தமிட்டுத் திரும்புகையில் அவளுக்குத் திகைப்பாய் ஆகிவிட்டது...

நீருக்குள் மூழ்கி எழுந்தது மாதிரி வேர்வை சொட்டச் சொட்ட, அவிழ்கிற மாதிரியும் அவிழாதது மாதிரியுமாய் பாவலாக் காட்டிக் கொண்டிருந்த கால்சட்டையைப் பிடித்துக் கொண்டு அழகிரிதான் வந்து நின்றான்.

வயிற்றுமணியை வாய்நிறையக் கூப்பிட்டு அன்பொழுக அணைத்துக் கொள்ளுவதற்கு வறுமை ஒரு குறுக்கீடாக இருக்க முடியுமா? மரத்துக் கிளையில் கொக்கிபோலப் பிடித்துக் கொண்டிருந்த வாங்கரிவாளை விட்டுவிட்டு வாயூரக் கூப்பிட்டாள்.

"அழகிரி, நிய்யா... ஏன்யா இங்க வந்தே? பள்ளிக்கூடம் போகல?"

அவனை அருகே அழைத்து அணைத்தபடி வயல் வரப்பில் உட்கார்ந்தாள். கருவேல் மரம்போல் பரட்டையாய் காற்றாடிப் போய்க்கிடந்த தலையை நீவிவிட்டாள். மடியில் உட்கார்ந்து கொண்ட அழகிரி, அவள் முகம் பார்த்துச் சொன்னான்.

"இன்னிக்கு எருவாட்டி கொண்டுபோக மறந்துட்டேன் ஆத்தா, வாத்தியாரு எடுத்துக்கிட்டு வாடா, எடுத்துக்கிட்டு வந்தாத்தான் சோறுன்னு சொல்லிட்டாரு..."

"அப்புறம்?"

"வீட்டுக்குப் போனேன் நிய்யி இல்ல. வீட்டுக்குள்ளயும் போயிப்பார்த்தா அங்கயும் எரு இல்ல..."

அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது. அழகிரி பள்ளிக்கூடம் போனபிறகு வீட்டிலே இருந்த எருவாட்டியை எல்லாம் அள்ளிவந்து கடைக்காரர் வீட்டிலே போட்டுவிட்டு வெத்திலை பாக்கு புகையிலை வாங்கிக் கொண்டு வந்தது எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்துக் கொண்டாள். பள்ளிக்கூடம் போன அழகிரி வழக்கம் போல் எடுத்துப் போயிருப்பான் என்றும் , மறுநாளைக்கு வேண்டியதை அன்றைக்கு சாயங்காலம் சேகரித்துக் கொண்டுவிடலாம் என்றும் நினைத்து அனைத்தையும் அள்ளிக் கடையில் போட்டுவிட்டதை இப்போது நினைக்கையில் அவளுக்குத் துக்கமாய் வந்தது.

"நான் இங்கே நின்னது உனக்குத் தெரிஞ்சதாய்யா?"

"கம்மாய்க் கரையில் நின்னு பார்த்தேன். நிய்யி வாங்கரிவா போட்டு இழுத்தது தெரிஞ்ச்சுச்சு, கட்டியிருக்கிற சேலையும் நல்லா அடையாளம் தெரிஞ்சசது ஆத்தா. போனதுக்கும் போன பொங்கலுக்கு வாங்குனதுதானாத்தா இந்த மஞ்சச்சேலை. தூரத்துல இருந்து பார்க்கிறப்போ நல்லா தெரிஞ்சுதுத்தா..."

அழகிரி சின்ன வயசானாலும் சுட்டிப்பயல்; கெட்டிக்காரன் அவன் கொஞ்சிப் பேசுகிற பிஞ்சு அழகில் அவள் சில நிமிடங்கள் தன்னை இழந்து போனாள். தான் வருடாந்திரமாய்கட்டிக் கொண்டிருக்கிற... இப்போது தான் பெற்றெடுத்த பிள்ளைக்குத் தன்னைத் தொலைதூரத்திலிருந்து அடையாளம் காட்டிய அழுக்கேறிய பழுப்பு மஞ்சள் சேலையை ஒருமுறை பார்த்துக் கொண்டாள். அப்போது அவளது நெஞ்சு அழுதது அதன் பிரதிபலிப்பாய் கண்கள் பனித்தன. கண்களில் நிறைந்த நீரை அவனுக்குத் தெரியாமல் அவள் மறைத்துக் கொண்டு சொன்னாள்.

"அழகிரி, அந்தா... அந்தப் பனைமரத்தூரில் ரெண்டு எருவாட்டி தட்டிவச்சிருக்கேன் எடுத்துக்கய்யா" என்று சுட்டிக் காட்டினாள்.

"சின்னதா, பெரிசாத்தா?"

"சொமாரா இருக்கும் ஏன்யா அப்படிக் கேக்குறே?"

"சின்னதா இருந்தா வாத்தியாரு திட்டுறாருத்தா... அன்னிக்கு ஒருநா கொண்டுபோனது சின்னதா இருந்துச்சு... அதுக்கு "ஏண்டா திங்கிற வட்டி மட்டும் அகலமா பெரிசா வச்சிருக்கே... எரு மட்டும் இத்துணூண்டு கொண்டார"ன்னு

திட்டினாருத்தா..."

அவள் ஆற்றாமல் பெருமூச்சுவிட்டாள். சிறிது நாழிகைக்கு அதுவே பதிலாக இருந்தது. அது அவனுக்குப் புரியாது என்று நினைத்தவளைப்போலப் பேசத் தொடங்கினாள்.

"அழகிரி நேரமாச்சு...எருவாட்டிகளை எடுத்துக்கிட்டுப் புறப்படுப்பா..."

அவிழ்கிற மாதிரியும் அவிழாதது மாதிரியுமாய்ப் பாவலா காட்டுகிற கால்சட்டையை ஒரு கையிலும்... எருவாட்டிகளை ஒரு கையிலுமாய்ப் பிடித்துக் கொண்டு ஓட்டமாய் ஓடினான் அழகிரி...

வயிற்றுக்குள் வளர்ந்த மாதங்களில், உதைத்து விளையாடிய அந்த பிஞ்சுக்கால்கள் இப்போது வறண்ட பூமியை உதைத்துக் கொண்டு சோற்றுக்காக டுவதைப் பார்க்கையில் நெஞ்சுக்குள் யாரோ நெருப்பை அள்ளிக் கொட்டியதுபோல் இருந்தது அவளுக்கு, சிறிது நேரம் அவள் மரமாய் நின்று போனாள்.

--------------------------------
ஊருக்குள் நுழைந்து, இரண்டு மூன்று தெருக்களைக் கடந்து மேற்குக் கடைசியில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு வரவேண்டும். அழகிரி தாவி வந்து கொண்டிருந்தான். நடுத்தெருவில் ஓடி, அதன் கீழ்முனையில் திரும்பிவிட்டால், பள்ளிக்கூடத்து வேப்பமரம் கண்ணுக்குத் தெரியும். இதோ... வந்தாயிற்று தெருவின் கீழ்முனையில் திரும்பி வேப்பமரத்து உச்சியில் பார்வையை பதித்து ஓடுகையில்...

யாரோ கூப்பிடுவது மாதிரி அரையும் குறையுமாகக் கேட்டது. அதற்கெல்லாம் செவிசாய்க்காமல் "நேரமில்லை என்னைப்போய் ஏன் கூப்பிடுகிறார்கள்" என்ற நினைப்பில் மேலும் அவன் கால்கள் தாவும்போது...

"ஏலே படுவா மவனே... எங்கடாப்பா இந்த ஓட்டம் ஓடறே...பிரசண்டு அய்யா கூப்பிடுறாகளே, கேக்கலே... பெரிய கோட்டையைப் பிடிக்கப் போற மாதிரி ஒரே கதியா எடுக்கிறியே ஓட்டம்... நில்லுடா" என்று ஊர்ப் பிரசண்டு அய்யாவுக்காக, அவருடைய சகலவிதமான 'யாவாரங்களுக்கும்' அதிகாரப் பூர்வமாய் வேலைசெய்யும் ஒரு 'ஏசண்டு' உறுமியது.

அழகிரி ஒருகணம் ஸ்தம்பித்து நின்றுவிட்டான். நின்று, குரல் வந்த திக்கில் அவன் முகம் திரும்புகையிலும் கூட, ஒருகால் முன்னும் இன்னொருகால் பின்னுமாய் 'சடன்பிரேக்' நிலையில் நின்றான். தன்னை யாரும் கூப்பிடவில்லை என்று தெரிந்தால் அவன் இதற்குள் நாலு எட்டு வைத்திருப்பான். அவனையன்றி அங்கே வேறு யாரை அதிகார மிரட்டலோடு குரலுக்குரியவர்கள் கூப்பிடப்போகிறார்கள்?

தெருத் திண்ணையில் 'பிரசண்டு அய்யா' ஜிப்பாவும் துண்டுமாய்த் திண்ணையைஅலங்கரித்துக் கொண்டிருந்தார். மிதியடிகளைக் கழற்றிக் கொள்ளாமலேயே, கால்மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த தோற்றத்தில் 'பிரசண்டு' என்றவுடன், "இந்தியாவின் முதல் குடிமகனுக்கும் 'பிரசண்டு' என்றுதானே பெயர்" என்று பாமரத்தனமாய் தன்னையும், டெல்லி மனிதரையும் இணைத்துப் பார்த்துக் கிளுகிளுத்துப்போன அறியாமை பிரகாசமாய்த் தெரிந்தது. வீதி வழியே 'வரும்' 'போகும்' பசுமையான பெண்களை அவர் 'வேடிக்கை' பார்த்துக் கொண்டிருந்தார்.அதுதான் அவருக்கு மிகவும் முக்கியமான வேலை, என்றைக்கோ - எப்போதோ - எவனோ வாங்கிக் கொடுக்கப்போகும் மெட்ராஜ் ஓட்டல் பிரியாணிக்காக இப்போதே பல் குத்திக் கொண்டிருந்தார்.

"எங்கடா போறே?"

"பள்ளிக் குடத்துக்கு"

"கையில என்ன?"

"எருவாட்டி"

"எதுக்கு?"

"சாப்பிட"

அட்டகாசமாய்ச் சிரித்தார் பிரசண்டு, "அடடே, எருவைப் போய் யாராவது சாப்பிடுவாங்களா?... பாளையத் தேவரு வீட்ல வேல பாக்குறாளே குஞ்சம்மா, அவ மகன் தானடா நிய்யி...?"

'ஊர்ப் பெரிய மனுசரான பிரசண்டு' சோக் அடித்ததை அழகிரி புரிந்து கொண்டான். அவனுக்கு எரிச்சலாய் வந்தது. அவரைக் குத்திக்காட்டுவது போல் எதையாவது மறுதலிக்க அவனுக்கு விருப்பமே என்றாலும், ஏனோ வேறு எதுவும் சொல்லாமல், தனக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொன்னான்:

"இந்த எருவாட்டியைக் கொடுத்தாத்தான் வாத்தியாரு மத்தியானச் சோறு போடுவாரு..."

"ஹே... அதச்சொல்றியா, சரி... எருவாட்டிய இங்ஙன போடு, இந்தா... காசு, கடையில அஞ்சு ஆனை வாங்கியா."

ஏதோ தனக்கு ஒரு வாய்ப்பு க் கிடைத்திருப்பது மாதிரி ஒருகணத்தில் நினைத்துக் கொண்ட அழகிரி, நமட்டுச் சிரிப்பை சிரமப்பட்டு மறைத்து, விழுங்கிக் கொண்டே கேட்டான்.

"ஆனையா?"

"ஆமாண்டப்பா ஙொப்பன் மகனே, நான் கேட்டேன்னு கேக்குறயாக்கும்... ஆனைன்னா... ஆனையில்ல, சிகரட்டு" என்றார் பிரசண்டு.

அழகிரி கடைக்குப் போனான். ஒதுங்கி... ஒதுங்கி... நிற்பவர்களுக்கெல்லாம் ஓரமாய் நின்று கொண்டு, அப்புறமாய்... கடைக்காரருக்குக் கேட்கிற மாதிரி, "பிரசண்டு அய்யாவுக்கு அஞ்சு ஆனைச்சிகரட்டு" என்று இரைந்தான். கடைக்காரர், தனது மரியாதையை பிரசண்டு அய்யாவுக்குச் சமர்ப்பிக்கிறதுக்கு அடையாளமாய், அஞ்சு ஆனைகளைத் தனியே உதிரியாய்க் கொடுக்காமல், ஒரு புதுப் பெட்டியை உடைத்து, அஞ்சு ஆனைகளை எடுத்து வைத்துக் கொண்டு மீதி அஞ்சுடன் பாக்கெட்டாகக் கொடுத்தனுப்பினார். "அய்யாகிட்ட சொல்லுடா, புதுசா ஒடச்சுக் கொடுத்தார்"னு என்று ஒரு சேதியும் சொல்லியனுப்பினார்.

ஆனைகளைச் சேர்ப்பித்துவிட்டு, எருவாட்டிகளை எடுத்துக் கொண்டு, வேப்பமரத்து உச்சியை வெறித்து பார்த்து, அவன் பள்ளிக்கூடத்தை நோக்கி ஓடுகையில் ஏதோ ஒரு மணி அடிப்பது அவனுக்குக் கேட்டது. வந்திருந்த பசியால் அவனுக்கு பத்தும் பறந்து போயிருந்த போதிலும், அந்த மணிச்சப்தம் அன்றைய அவனுடைய வயிற்றுப் பிரச்சினையோடு சம்பந்தப்பட்டிருப்பதால், அவனுடைய கேள்விப் பொறி உஷார் நிலையிலேயே இருந்திருக்கக் கூடும்...

சாப்பாட்டு வேளை முடிந்திருக்குமோ...? இந்த மணி... வகுப்புகள் தொடங்குவதற்கான மணி போலிருக்கிறது. ஓட்டமாய்... தாவுதலாய் எவ்வி, எவ்வி ஓடிவந்த அழகிரி பள்ளிக்கூடத்தின் வாசலில் கால்வைத்து உள்ளே பார்த்தான். அடுத்த நொடியில் பள்ளிக்கு வெளியே பார்த்தான். மதியச் சாப்பாட்டை முடித்த பிறகு வழக்கமாகப் பையன்கள் எல்லாம் கை அலம்பிக் கொள்ளப் பக்கத்து வாய்க்கால் பக்கம் போவார்கள். ஓடும் நீரில் கை அலம்பி, தட்டுக்களையும் கழுவி சிறிது நேரம் கப்பல் விளையாடி, பிறகு தட்டுக்களில் நீரை நிரப்பிக் கொண்டு திரும்புவார்கள். தட்டின் நீருக்குள் முகம் பார்த்து தூரத்தில் தெரியும் வான் பார்த்து... சூரிய ஒளியையும் பார்த்து, விளையாடிக் கொண்டே வந்து, பள்ளி வாசலில், தட்டுத் தண்ணீரை கால்களில் ஊற்றிக் கழுவிக் கொண்டு உள்ளே ஓடிப் போவார்கள். இந்த வாடிக்கையான விளையாட்டில், அதோ அழகிரியின் நண்பர்கள் தட்டின் நீரில் முகம் பார்த்து... வருகிறார்கள்.

அவர்களைப் போல், இனி நாளைக்குத்தான் விளையாடி... தட்டுத் தண்ணீரில் முகம் பார்க்கலாம் என்பதை நினைக்கையில் ... கண்கள் குளமாகி, கண்ணிமைகள் படபடத்தன. மழைக்காலத்தின் தந்திக் கம்பிகளைப் போல் கண்ணீர் கொட்டியது அவனுக்கு.

-முனைவர். மு.பழனி இராகுலதாசன்

நன்றி: தாமரை (செப்டம்பர் 1978)

1 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

வணக்கம் குமார்.

நலமா? நானும் நீங்கள் அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஐயா ராகுலதாசனுக்கு மாணவன் தான்.
அவருடைய எழுத்துகளால் ஈர்க்கப்பட்டுத்தான் தமிழ் இலக்கியமும் இதழியலும் படித்து சென்னையில் பத்திரிகையாளனாகப் பணி புரிந்து தற்போது சொந்த தொழில் தொடங்குவதற்காக புதுக்கோட்டை வாசம்.

தாங்கள் எந்த ஆண்டு படித்தவர்? என்ன துறை ?

1990-1993 இல் நான் தமிழ் இலக்கியம் பி.ஏ.படித்தவன். தற்போது ஐயாவுடன் தொடர்பில்லாமல் இருக்கிறேன். எனவே அவருடைய தொடர்பு முவரி கிடைத்தால் மிகவும் மகிழ்வேன்.

உங்கள் வலைப் பூ அருமை. நான் சுவாசித்த அதே மண்ணின் வாசனையை உங்கள் எழுத்துகளால் உணரமுடிகிறது. உங்கள் தொடர்பை எதிர்பார்க்கிறேன்.

பழ.அசோக்குமார்
ready2allk@yahoo.com