மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 28 பிப்ரவரி, 2013

இலங்கை வேண்டுமா அல்லது தமிழர்கள் வேண்டுமா? - திருச்சி சிவா எம்.பி


போர்க் குற்ற நாடான இலங்கை வேண்டுமா? அல்லது தமிழர்கள் வேண்டுமா? என்பதை ஆளும் மத்திய அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் திமுக எம்.பி. சிவா பேசியதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசிலிருந்து திமுக வெளியேறும் முடிவுக்கு முன்னோட்டமோ என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது, 

ராஜ்யசபாவில் நடைபெற்ற இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விவாதத்தில் சிவா பேசுகையில்,இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி மீண்டும் ரத்தம் கசியும் இதயத்துடன் இங்கே நான் பேசுகிறேன். தமது சொந்த நாட்டு மக்களையே படுகொலை செய்கிற ஒரு மனிதாபிமானமற்ற நாட்டுடன் இந்தியா உறவு வைத்திருக்கிறது. 

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக 13-வது அரசியல் சாசன திருத்தம் பற்றி பேசுகிறீர்கள்.. இலங்கையில் என்ன நடக்கிறது என்பதே அமைச்சருக்கு தெரியவில்லை. அண்மையில் தமிழர்களுக்கு சுயாட்சி இல்லை என்று அறிவித்திருக்கிறார் அதிபர் மகிந்த ராஜபக்சே. தமிழருக்கு ஆதரவாக இருந்தார் என்பதற்காக தலைமை நீதிபதியை தூக்கி எறிந்தவர் ராஜபக்சே. அந்த நாட்டை இன்னமும் நட்பு நாடு என்கிறீர்களே... 

இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக நிதி ஒதுக்கப்பட்டது என்கிறீர்கள்.. அந்த நிதி தமிழருக்காகத்தான் செலவிடப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகில் எங்கெங்கோ மனித உரிமைகள் பாதிக்கப்படும்போதெல்லாம் இந்தியாவின் குரல் கேட்கிறது. ஆனால் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மட்டும் இந்தியாவின் குரல் அப்படி ஏன் கேட்கவில்லை? இலங்கையை தொடர்ந்து இந்தியா ஆதரிக்கிறது...

இலங்கை வேண்டுமா? அல்லது இந்தியாவின் தென்பகுதியில் வாழும் மக்கள் வேண்டுமா? யாருடன் நட்புறவு வேண்டும் என்று மத்திய அரசுதான் தீர்மானிக்க வேண்டும்.  இலங்கை வெளிநாடு என்கிறீர்களே..அப்புறம் எப்படி அமைதிப் படையை அங்கு அனுப்பினீர்கள்? அப்புறம் எப்படி எங்களது தமிழ் மக்களை அழிக்க உதவினீர்கள்? இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சியே இல்லை. 

பிரபாகரனின் மகன் சிறுவன் பாலச்சந்திரனின் நெஞ்சில் 5 குண்டுகள் பாய்ந்திருக்கிறது. அதுவும் சுடப்படுவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பாக உணவு கொடுத்துவிட்டுக் கொன்றிருக்கிறார்கள். இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை அவசியம். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும். அல்லது அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். 

இலங்கை அதிபர் ராஜபக்சேவை இனியும் இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றார் அவர். திருச்சி சிவா தாம் பேசும் போது, பாலச்சந்திரன் புகைப்படங்களையும் ராஜ்யசபாவில் எடுத்துக் காண்பித்தார்.

நன்றி : தட்ஸ் தமிழ்

-'பரிவை' சே.குமார்.

அமில அவலம்! - தினமணி தலையங்கம்


கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி அமில வீச்சினால் பாதிக்கப்பட்ட, மூன்று மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காரைக்கால் பொறியியல் பட்டதாரிப்பெண் விநோதினி, நோய்த்தொற்று காரணமாக இறந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சம்பவமாக சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இன்னொரு இளம்பெண் வித்யா, அமில வீச்சினால் பாதிக்கப்பட்டு மருந்துவமனையில் இறந்துள்ளார். விநோதினி ஒரு ஆணின் கைக்கிளையால் (ஒருதலைக் காதல்) அமிலவீச்சுக்கு ஆளானவர். வித்யாவோ, திருமணம் உடனே நடைபெறாமல் தள்ளிப்போவதற்காகத்  தாக்கப்பட்டவர்.

 காதலுக்கு சம்மதிக்கவில்லை; மணம்புரிய விரும்பவில்லை; மணமுறிவுக்கு உடன்படவில்லை ஆகியவைதான் பெண்கள் மீதான அமில வீச்சுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. வாழ்நாள் முழுதும், சில தருணங்களில் பார்வை இழப்புடனும், சில தருணங்களில் முகம் சிதைந்தும் நடமாடுவது என்பது, அவரை ஒவ்வொரு வினாடியிலும் ஒவ்வொரு நாளிலும் நரக வேதனையில் வாழச்செய்வதாகும். ஒரு பெண்ணைக் கொல்வதைவிட மிகக் கொடிய செயல் அமில வீச்சு.

 2008-ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலம் வாரங்கல் நகரில் இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த இரண்டு பொறியியல் கல்லூரி மாணவிகள் மீது கல்லூரியிலிருந்து இடைநின்ற மாணவர், தனது இரு நண்பர்களுடன் மோட்டார் பைக்கில் சென்று அமிலம் வீசித் தாக்கியதில், காதலிக்க மறுத்த பெண் மட்டுமின்றி, வாகனத்தில் உடன்சென்ற பெண்ணுக்கும் முகம் சிதைந்தது.

 இந்த வழக்கில், போலீஸாரைக் கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தப்பிச்செல்ல முயன்ற அந்த மூவரும் அடுத்த நாளே "என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டனர். அது "போலி என்கவுன்டர்' என்று குற்றவாளிகளின் பெற்றோரும், மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்த அதேவேளையில், வாரங்கல் காவல் கண்காணிப்பாளருக்கு கல்லூரி மாணவிகள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று மலர்க்கொத்துகளை வழங்கிக்கொண்டிருந்தனர்.

 அமில வீச்சுக்குக் கடும் தண்டனைகள் இல்லாத அந்த நேரத்தில், இத்தகைய "என்கவுன்டர்', பெண்கள் அமைப்புகளால் நியாயப்படுத்தப்பட்டதை சற்று வேதனையுடன் புரிந்துகொள்ள முடிந்தது. தற்போது அமலுக்கு வந்துள்ள பெண்கள் மீதான வன்முறை குறித்த அவசரச் சட்டத்தில், அமில வீச்சில் உடல்பாகங்கள் சேதமடைந்தால் 10 ஆண்டுகள் சிறை; வெறும் அமிலவீச்சு முயற்சி, மோசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றால் 5 ஆண்டுகள்வரை சிறை என்று பரிந்துரைந்திருக்கிறது வர்மா கமிஷன்.

 அமில வீச்சு என்பது கொலைக் குற்றத்தைவிட மிகக்கொடியது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் ஒன்றாகக் கலந்து பேசி, அமில விற்பனை, பயன்பாடு ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு காண வேண்டும் என்று கூறியது. ஆனால் அதற்கான முயற்சியில் எந்தவொரு மாநிலமும் முனைப்புடன் இறங்கியதாகத் தெரியவில்லை. வித்யாவின் மரணத்தைத் தொடர்ந்து தற்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையிலும்கூட, அமில விற்பனைக்குக் கட்டுப்பாடு உண்டா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

 "ராஜதிராவகம்' பொதுவாக நகைக்கடைகளில் மட்டுமே இருக்கும். அதற்கு  அடுத்தபடியாக கல்லூரி, மேனிலைப் பள்ளிகளில் வேதியியல் ஆய்வுக்கூடத்துக்காக நைட்ரிக் ஆசிட், சல்பூரிக் ஆசிட் வாங்கப்படும். நைட்ரிக் அமிலம் மிகஅதிகமாக நீர்த்த நிலையில், கழிவறைகள் கழுவும் திரவமாக விற்கப்படுகிறது. இவற்றின் விற்பனைக்கு எந்தத் தடையும் இல்லை. யார் யார் வைத்திருக்கலாம் என்பதற்கும் நிபந்தனைகள் இல்லை. விற்பனையாளர்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் யார் என்பது தெரியும் என்றும், புதிய ஆட்களுக்குத் தருவதில்லை என்றும் கூறினாலும், யார் யார் அமிலம் வைத்திருக்கலாம் என்று சட்டம் வரையறுக்கவில்லை. அதனால், அமில விற்பனைக்குக் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டியது இன்றியமையாதது.

 அமில வீச்சு இல்லாமல் வேறு வகையில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படாதா என்ற கேள்வி எழலாம். கத்தியால் குத்தியும், தீயினால் சுட்டும் ஏற்படுத்தும் காயங்களையும்விட மோசமானது அமில வீச்சு. இது தசை முழுவதையும் அழித்து எலும்புகளையும் அரித்துச்செல்லும் தன்மை உடையது. ஆகவேதான் அமில விற்பனை, பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன.

 அமில வீச்சினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு "பிளாஸ்டிக் சர்ஜரி', மனநல ஆலோசனை, வேலைவாய்ப்பு ஆகியவை இன்றியமையாதவை. அமிலவீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் போராடும் அமைப்புகள் சில இருந்தாலும், இதில் அரசின் நிதியுதவி இல்லாமல், பாதிக்கப்பட்டவர் முழு சிகிச்சையைப் பெறுவது இயலாது. இதற்கான சிகிச்சைகள் மிகச் செலவு மிக்கவை. இந்த விஷயத்திலும் ஒரு பொதுவான விதியை அரசு உருவாக்கியே தீரவேண்டும்.

 அரசு மருத்துவமனைகளில் இவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்க முடியவில்லை என்பதற்கு, மூன்று மாதங்கள் கழித்து இறந்த விநோதினி மற்றும் 30 நாள்கள் கழித்து இறந்த வித்யா இருவரும் சாட்சி. இவர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதி அரசு திட்டத்தில் இப்போது இல்லை.

 அரசு மருத்துவமனைகள் எந்த அளவுக்கு மோசமாகப் பராமரிக்கப்படுகின்றன என்பதற்கும் இந்த மரணங்கள் உதாரணம். உயர் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் அவர்களது நேரடிக் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்வதில்லை, போகட்டும். அடிக்கடி சோதனையிடக்கூட, பார்வையாளராக அரசு மருத்துவமனைக்குச் செல்வதில்லை என்பதுதான் இந்த அவலத்துக்குக் காரணம். இது தெரிந்தும் செயல்படாமல் இருக்கிறார்களே, அவர்களும்தான் வினோதினி, வித்யா போன்றவர்களின் மரணத்திற்குக் காரணம்!

நன்றி - தினமணி
                                                                                                                                                                                        -'பரிவை' சே.குமார்

புதன், 27 பிப்ரவரி, 2013

ரயில் பட்ஜெட் - முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை


14ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் நேற்று தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* பயணிகள் கட்டணம் உயரவில்லை.
* முன்பதிவு, தக்கால் கட்டணம் உயர்கிறது.
* பார்சல், லக்கேஜ் கட்டணத்தில் மாற்றமில்லை.
* இணையதளம் மூலம், அதிகாலை, 12:30 மணி முதல், இரவு, 11:30 வரை டிக்கெட் எடுக்கலாம்.
* மொபைல் போன் மூலம், "இ- டிக்கெட்' வசதி அளிக்கப்படும்.
* ஒரே நேரத்தில் இப்போது, 40 ஆயிரம் பேர்,"இ - டிக்கெட்' எடுக்க முடியும்; இது, 1.2 லட்சம் பேராக அதிகரிக்க, "நெக்ஸ்ட் ஜென்' இ - டிக்கெட் என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதன் மூலம், ஒரு நிமிடத்தில், 7,200 டிக்கெட் வாங்க முடியும்.
* 67 புதிய எக்ஸ்பிரஸ், 26 புதிய பாசஞ்சர் ரயில், எட்டு, டி.இ.எம்.யு., ஐந்து, எம்.இ.எம்.யு., ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
* ரயில்களில், படிப்படியாக, பயோ - டாய்லெட் அறிமுகப்படுத்தப்படும்.
* ரயில்வே பாதுகாப்பு படை பிரிவில், பெண்களுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
* கூடுதலாக, ஆறு இடங்களில், "ரயில் நீர்' பாட்டிலில் அடைக்கும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும்.
* பயணிகள், ஊழியர்கள், "ஆதார்' அடையாள அட்டை பயன்பாடு அதிகரிக்கப்படும்.
* ரயில்களில், அறிவிப்பு வசதி மற்றும் எலக்ட்ரானிக் டிஸ்பிளே வசதி செய்யப்படும்.
* பல ரயில்களில், இலவசமாக, "வை - பி' வசதி அளிக்கப்படும்.
* எரிபொருள் கட்டணத்தை பொறுத்து, சரக்கு கட்டணம், ஏப்ரல் முதல் மாற்றியமைக்கப்படும்.
* 12வது திட்ட காலத்தில் (2012 - 17), 10,797 ஆளில்லா, லெவல் - கிராசிங்குகள் நீக்கப்படும்.
* ஆட்டோமேடிக் சிக்னல்களில், ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை முறை பின்பற்றப்படும்.
* விபத்து நிவாரண பணியில், தானாக செயல்படும் நிவாரண ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
* ரயில் பெட்டிகளில், தீ மற்றும் புகை கண்டறியும் கருவிகள், எளிதில் தீப்பிடிக்காத துணிகள் பயன்படுத்தப்படும்.
* ரயில் உணவுகளை கண்காணிக்க, தனி பிரிவு ஏற்படுத்தப்படும். அதை தொடர்பு கொள்ள, கட்டணமில்லா தொலைபேசி எண், 1800 111 321 அறிமுகப்படுத்தப்படுகிறது.
* முன்பதிவு டிக்கெட்டின் தற்போதைய நிலை குறித்து, எஸ்.எம்.எஸ்., அலர்ட் செய்திகள் அனுப்பப்படும்.
* 500 கி.மீ.,க்கு புதிய பாதை, 750 கி.மீ.,க்கு இரட்டை பாதை, 450 கி.மீ.,க்கு அகலப்பாதை அமைக்கப்பட உள்ளது.
* விருது வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு, சலுகை கட்டணம் வழங்கப்படும்.
* இந்த ஆண்டில், 1.52 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்.
* ரயில் கட்டண ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்படும்.
* ரயில்வே துறைக்கு நஷ்டம், நடப்பு நிதியாண்டில், 24,600 கோடியாக இருக்கும்.
* சில குறிப்பிட்ட, சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களில், "அனுபூதி' என்ற பெயரில், விசேஷ, "ஏசி' பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும்.
* சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு செல்ல, "ஆசாத் எக்ஸ்பிரஸ்' ரயில் அறிமுகப்படுத்தப்படும்.
* சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா நாடுகளின் ரயில்வே துறை மட்டுமே பெற்றுள்ள, "1 பில்லியன் டன்' சரக்கு கையாளும் திறன் சாதனை, விரைவில் இந்திய ரயில்வே துறைக்கும் கிடைக்கும்.
* ரேபரேலி, பில்வாரா, சோனேபட், காலஹண்டி, கோலார், பாலக்காடு மற்றும் பிரதாப்கார் பகுதிகளில், புதிய ரயில் பெட்டி தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
* நலிவடைந்தோர், மாற்றுத் திறனாளிகளுக்கான, 47 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
* "ஏசி' ரயில் இன்ஜின்கள் அறிமுகப்படுத்தப்படும்.

பயணிகள் கட்டணமும் உயரும்: பன்சால் சூசகம்:

"எரிபொருள் விலைஏற்றத்திற்கு ஏற்ப, ஏப்ரல் மாதம் முதல், சரக்கு கட்டணத்தில், 5 சதவீதம் உயர்த்தப்படும்' என, அறிவித்துள்ள ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால், "பயணிகள் கட்டணமும் உயரலாம்' என, சூசகமாக தெரிவித்தார். ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த பின், பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர், பவன்குமார் பன்சால் கூறியதாவது: எரிபொருள் விலையை சரிகட்டும் நடவடிக்கையாக, ஏப்ரல், 1ம் தேதி முதல், சரக்கு கட்டணத்தில், 5 சதவீதம் உயர்த்தப் படும். இதன் மூலம், வரும் நிதியாண்டில், 4,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். பிற துணை கட்டணங்களான, முன்பதிவு கட்டணம், ரத்து கட்டணம், தக்கால் கட்டணம் போன்றவற்றின் மூலம், 483 கோடி ரூபாய் திரட்டப்படும். மொத்தம், 4,683 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். டீசல் கட்டண உயர்வு மற்றும் மின் கட்டணம் அதிகரிப்பு போன்றவற்றால், ரயில்வே துறைக்கு, 5,100 கோடி ரூபாய் கூடுதல் செலவாகிறது. இப்போதைக்கு, பயணிகள் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. எரிபொருள் விலையின் அடிப்படையில் கட்டண மாற்றம் எதிர்காலத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது. பயணிகள் கட்டணத்தை உயர்த்தாததால், 850 கோடி ரூபாய் இழப்பை, ரயில்வே துறையே ஏற்று கொள்கிறது. பட்ஜெட்டில், மேற்கு வங்கம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என, திரிணமுல் காங்கிரஸ் கூறுவதில் உண்மைஇல்லை; அம்மாநிலத்திற்கு, 14 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர், பன்சால் கூறினார்.

பன்சாலின் கன்னி பட்ஜெட்: பல இடங்களில் தடுமாற்றம்: 

மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும், காங்கிரஸ் கட்சி வசம், 17 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள, ரயில்வே பட்ஜெட் சமர்ப்பிக்கும் வாய்ப்பு, ரயில்வே அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, பவன்குமார் பன்சாலுக்கு கிடைத்தது. இது தான் அவரின் முதல், ரயில்வே பட்ஜெட் என்பதால், அவரிடம் தடுமாற்றம் காணப்பட்டது. குறிப்பாக, ஊர்களின் பெயரை அவர் வாசிக்கும் போது, தட்டுத் தடுமாறியதை, எதிர்க்கட்சி தலைவர், சுஷ்மா வெகுவாக ரசித்து சிரித்து கொண்டிருந்தார். காங்கிரஸ் தலைவர், சோனியாவும் அதை கவனித்தாலும், கண்டுகொள்ளாதது போல இருந்தார். பார்வையாளர் மாடத்தில், பன்சாலின் மனைவி மது மற்றும் மகன்கள் அமர்ந்திருந்தனர். பன்சாலின், 75 நிமிட பட்ஜெட் உரையின் முதல் அரை மணி நேரத்தில், எம்.பி.,க்கள் அனைவரும் அமைதியாக இருந்து கேட்ட படி இருந்தனர். புதிய ரயில்வே திட்டங்கள், காங்கிரஸ் எம்.பி.,க்கள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினரின் தொகுதிக்கு சென்றதை அறிந்த பிற கட்சியின் எம்.பி.,க்கள், கூச்சல் எழுப்பினர்; சிலர், பட்ஜெட் உரை தாளை கிழித்து எறிந்தனர். குறிப்பாக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் சில இடதுசாரி கட்சிகளின், எம்.பி.,க்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, கோஷம் எழுப்பினர். ராஜ்யசபா எம்.பி.,க்கள் பலர், லோக்சபா வந்து, பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து, பன்சாலின் பட்ஜெட் உரையை கவனித்தனர்.

நன்றி : தினமலர்.

-'பரிவை' சே.குமார்

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

நான் நிர்வாணமானவன்: பாரதிராஜா சிறப்பு பேட்டி!

"அன்னக்கொடியும் கொடிவீரனும்" படத்தின் பணிகளில் ரொம்வே பிசியாக இருக்கிறார் பாரதிராஜா. தனது சொந்த ஸ்டூடியோவிலேயே டப்பிங், மிக்சிங் பணிகளை செய்து கொண்டிருக்கிறார். இடையில் இளையராஜா அடித்த கமெண்ட் அவரை கொஞ்சம் கடுப்பேற்றி இருந்தாலும் வழக்கம்போல கரகர குரலில் அளித்த பேட்டி:


* அன்னக்கொடியையும், கொடிவீரனையும் எப்போ கண்ணுல காட்டுவீங்க?



ஏய்யா படம் இம்புட்டு லேட்டுன்னு நேராவே கேட்டுற வேண்டியதுதானே. எப்பவுமே நான் பிளான் பண்ணி அடிக்கிறவன்தான். இந்த முறை கொஞ்சம் மிஸ்சாகிப்போச்சு. கொஞ்ச நாள் வெளிநாடு போயிட்டேன். அப்புறம் படத்துக்கான லொக்கேஷன் தேடி அலைஞ்சதுல கொஞ்சம் தாமதமாகிப்போச்சு. வறண்ட கிராமமாவும் இருக்கணும், வசதியான கிராமமாவும் இருக்கணும் இந்த ரெண்டுல ஒண்ணு இருந்தா இன்னொன்னு இருக்காது. கடைசியில போடி மெட்டு, மலைக்கு கீழ் கரட்டுப்பட்டிங்ற ஒரு ஊரை கண்டுபிடிச்சேன். சொன்னா நம்புவீயாய்யா, அந்த ஊர்ல இப்பவும் பொழுது சாஞ்சபிறகு அசலூருக்காரங்க ராத்திரி தங்ககூடாது. நான் போயி நின்னப்பவே பஞ்சயாத்தை கூட்டிட்டாங்க. சினிமா நம்ம ஊர்ல எடுக்கவே கூடாதுன்னு நின்னாங்க. அப்புறம் நாலு பெரியவங்க யோவ் பாரதி, நம்ம ஊர் பையன்யா நல்ல படமாத்தான் எடுப்பான்னு பஞ்சாயத்துல பேசி அப்புறம் பர்மிஷன் கொடுத்தாங்க. இப்படி பல பஞ்சயாத்துக்களை கடந்த வர வேண்டி இருந்ததால படம் கொஞ்சம் லேட்.



* கார்த்திகா எப்படி?



அவ அம்மாவை நான்தான் அறிமுகப்படுத்தினேன். ராதா கிட்ட கிளாமர்தான்யா இருந்திச்சு. ஆனா இந்த பொண்ணுகிட்ட பர்மாமன்ஸ் இருக்கு. வேணா எழுதி வச்சுக்க, இந்தப் பொண்ணு நடிப்புல அவுங்க அம்மா தொடாத உசரத்தை புடிக்கும்யா. ஐ வில் சேலன்ஞ்.



* அறிமுகம் லக்ஷ்மன் எப்படி செலக்ட் பண்ணினீங்க?



அவன் பெரிய குடும்பத்து பையன். தேனிக்காரன்தான். அவுங்க தாத்தா காசுல அந்தக் காலத்துல நான் நாடகம் போட்டிருக்கேன். என் மடியில வளர்ந்த பையன். பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கேன். ஒரு நாள் என் முன்னாடி வந்து நின்னப்போ, நான் மனசுல உருவாக்கி வச்சிருந்த கொடிவீரன் மாதிரி இருந்தான். டேய் நடிக்கிறியாடான்னு கேட்டேன். அவுங்க அப்பா அம்மா ரொம்ப யோசிச்சாங்க. அப்புறம் கன்வீன்ஸ் பண்ணி கொடிவீரனா மாத்திட்டேன்.



* உண்மை கதைன்னு சொல்றாங்களே...?



சின்ன வயசுல எங்க தாத்தன் பாட்டன் சொன்ன கதைதான் கொடிவீரன்ங்கற செருப்பு தைக்கிற தொழிலாளிக்கும், அன்னக்கொடிங்ற இன்னொரு ஜாதிப் பொண்ணுக்கும் இருக்கிற காதல் அது வளர்ந்த கதை, வீழ்ந்த கதை, மீண்டும் துளிர்த்த கதைதான்.



* விஸ்வரூபம் பிரச்னையில தைரியமா நின்னுனிங்களே... உங்க படத்துக்கு அதனால பிரச்னை வருமா...?



கமல் மகா கலைஞன்யா. அவனை சீண்டினா நான் சும்மா இருந்துடுவேனா. சப்பாணியா நொண்டி நொண்டி நடந்து தமிழ் சினிமாவை தலை நிமிர்ந்து நடக்க வச்சவன்யா. அவன், நான் வெளிநாட்டுக்கு போறேன்னு சொல்றான்னா வெட்கமா இருக்குய்யா. அந்த அளவுக்கு அவனை புண்படுத்திட்டாங்க. அதை எடுக்காத, இதை எடுக்காதன்னு சொன்னா அப்புறம் எதைத்தான் எடுக்குறது?. கஜினி முகம்மது வரலாற்றை படமா எடுத்தா அவன் நம்ம கோவில் சொத்தை கொள்ளை அடிச்சதை எடுத்துதானே ஆகணும். அதை எப்படி தடுப்பாங்க.



* உங்க படத்துலேயும் ஜாதி பிரச்னை இருக்குதாமே?



கிராமத்து பக்கம் கதை பண்ண போயிட்டாலே ஜாதி இல்லாம படம் எடுக்க முடியாது. கிராமத்துல என்ன அம்பானி, பிர்லா சண்டையா இருக்கும். வேதம் புதிது, அலைகள் ஓய்வதில்லை படத்தில் சொல்லாத ஜாதி பிரச்னையா. இதுலேயும் ஜாதி இருக்கு. பலர் மேடையில பேசாததை, பல கட்சிகள் சொல்லாத கருத்தை பாரதிராஜா சினிமாவுல சொல்றான்.



* கிராமங்கள் இப்போ எப்படி இருக்கு...?



ரொம்ப மாறியிருக்கு. கூரை வீடெல்லாம் காரை வீடா மாறியிருக்கு. வயக்காடு குறைஞ்சு வீடாகி இருக்கு. விவசாயம் பண்ற ஆட்கள் குறைஞ்சு போச்சு. சுருக்கமா சொன்னா வசதி அதிகமாயிருக்கு. ஆனா ஜாதி மட்டும் குறையல. அது அப்படியேதான் இருக்கு. தாழ்த்தப்பட்ட ஜாதி ஜனங்கள் வாழ்க்கையும் அப்படியேதான் இருக்கு.



* கிராமங்களை இப்போ சினிமாவுல சரியா காட்டுறாங்களா...?



ஸ்டூடியோக்களுக்குள்ள கிடந்த சினிமாவ நான்தான் கிராமத்துக்கு கூட்டிட்டு போனேன். கிராமத்தை நான் கொஞ்சம் அழகிகளோடு காட்டினேன். இப்போ வர்ற இளைஞர்கள் அதை அப்படியே ரத்தமும் சகதியுமா காட்டுறாங்க. விஷயம் ஒண்ணுதான் காட்டுற பாணி வேறு விதமா இருக்கு.



* இளையராஜா உங்களை பற்றி நிறைய பேசி இருக்காறே?



நாங்க அண்ணன் தம்பி நாலுபேரு. ஆனால் நான்தான் பாரதிராஜாவா மாறியிருக்கேன். ஏன்னா கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கான். என்னை விட திறமையான ஆயிரம் பாரதிராஜாக்கள் சினிமா பக்கமே வரல. அவுங்களுக்கு ஒரு களம் கிடைக்கல. ஆயிரம் ரஜினிகாந்த், ஆயிரம் கமல் இருக்காங்க. அவுங்களுக்கு களம் கிடைக்கல, கமலுக்கும் ரஜினிக்கும் கிடைச்சுது. நாம எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அது கடவுள் கொடுத்த கிப்ட். நாம வெறும் குழாய்தான், தண்ணிய ஊத்துறது அவன். எந்த குழாய்ல ஊத்தணுங்றத அவன்தான் முடிவு பண்றான். இதுல நான்தான் பெரிய ஆள்னு தலைக்கணத்தோடு திரியக்கூடாது. இதைத்தான்யா அவன்கிட்ட சொன்னேன். அவரு கோவிச்சுக்கிட்டாரு. என்னை பத்தி தப்பு தப்பா சொல்லியிருக்காரு.



நான் ஒண்ணும் உத்தம புத்திரன்னு சொல்லல. என்கிட்டடேயும் 20 சதவிகிதம் அழுக்கிருக்கு. ஆனா 80 சதவிகிதம் பரிசுத்தமானவன். என்னோட அழுக்கு பக்கத்தை பேசுறதுக்கும் நான் தயங்கல. நான் நிர்வாணமானவன், எங்கிட்ட எந்த ஒழிவு மறைவும் கிடையாது. நான் பேசுறது பைத்தியக்காரன் பேச்சுன்னு சொல்லியிருக்கார். நான் அப்படி சொல்ல மாட்டேன். அவரு பேசுறது குழந்தைத்தனமானது. ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்குங்க, வேலை செய்ய முடியுறவன் வேலைய செஞ்சிக்கிட்டிருப்பான். வேலை செய்ய முடியாதவன் தத்துவம் பேசிக்கிட்டுருப்பான்.

-'பரிவை' சே.குமார்

நன்றி :  தினமலர்

புதன், 20 பிப்ரவரி, 2013

வட்டியும் முதலும் ! - ராஜுமுருகன்



(நன்றி : ஓவியம்: ஹாசிப்கான்)


ரேஞ்சர் தெரியுமா உங்களுக்கு?

கடலூர் பக்கம் ஒரு கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவ மக்களின் தலைவர் ரேஞ்சர். பாண்டிச்சேரி கலைச்செல்வன்தான் ரேஞ்சரைப் பற்றிச் சொல்லி, அவரிடம் என்னை அழைத்துப்போனது. நாங்கள் போனது ஒரு சாயங்காலம். ஊர் திடலில் மொத்த நரிக்குறவ மக்களும் திரண்டு இருந்தனர். கொஞ்ச நேரத்தில், 'தலைவர் வர்றாரு... தலைவர் வர்றாரு...’ எனச் சத்தங்கள் வர, ரேஞ்சர் வந்தார். ஜகஜக வெனப் பச்சைக் கலரில் தலைப்பாகை கட்டி, கூலிங் க்ளாஸ் போட்டு, பளபள காவி பைஜாமா, பட்டு வேட்டியில் விசித்திரமாக இருந்த ரேஞ்சரை ஒரு நாற்காலியில் அமர்த்தித் தூக்கி வந்து திடல் நடுவே உட்காரவைத்தார் கள். அது தலைவருக்கு அவர்கள் தரும் மரியாதை போல என நினைத்தேன். கூட்டத்தில் சில பிரச்னைகளை அந்த மக்கள் சொல்ல, சடசடவென லா பாயின்ட்களோடு பல விஷயங்களை ரேஞ்சர் பேசியது அவ்வளவு வசீகரம். கூட்டம் முடிந்ததும் மறுபடி நாற்காலியோடு அவரைத் தூக்கிப் போனார்கள். அப்போதுதான் கவனித்தேன்... அவருக்கு இரண்டு கால்களும் ஊனம். சட்டென்று அந்தக் காட்சியின் விசித்திரம் துயரமாக மாறி என்னை அறைந்தது.

''இது என்ன பேரு ரேஞ்சர்னு..?'' என்றதும் பகபகவெனச் சிரித்தார். 

''நம்மாளுகள்ல பார்த்தீங் கன்னா, ஊர்ப் பேரை நிறைய ஆளுகளுக்கு வெச்சிருப்போம். சிதம்பரம், பழநி, பாண்டிசேரினு. அப்ப எங்க தங்கிருக்கமோ அந்த ஊர் பேரை வெச்சி ருவோம். அப்புறம் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித், விஜய்னு சினி ஆக்டருங்க பேரையும் வெச்சுருவோம். எங்கப்பா ஒரு மொரட்டுக் கூக... நாங்க அப்ப காட்டுக்குள்ள இருந்தோம். எப்போ பாத்தாலும் இந்த ரேஞ்சருங்க வந்து டார்ச்சர் குடுத்துட்டே இருப்பாங்க... அப்பதான் நா பொறந்துருக்கேன். ஒடனே எங்கப்பா, 'நீங்க என்னடா ரேஞ்சரு... எம் புள்ளையும் ரேஞ்சருதான்’னு கோவத்துல இந்தப் பேரை வெச்சுட்டாரு. எப்பிடியோ நாமளும் ரேஞ்சர் ஆகிட்டம்...'' என்றவரின் கால்களைக் கவனித்தேன். இரண்டு கால்களும் செயல்பட முடியாமல் ஊனமாகி இருந்தன. நான் கவனிப்பதைப் பார்த்தவர், ''இதுங்களா..? இதுக்குப் பின்னாடி ஒரு கதை இருக்குங்க...'' எனச் சிரித்தார்.

20 வருடங்களுக்கு முன்பு அந்த மக்கள் எல்லாம் பிழைப்புக்காக கடலூர் பக்கம் வந்திருக்கிறார்கள். ஊசிமணி பாசிமணி விற்பது, வேட்டையாடுவது எனத் திரிந்தவர்களின் வாழ்க்கையை மாற்ற நினைத்து இருக்கிறார் ரேஞ்சர். அப்போது கடலூரில் இருந்த அதிகாரி ஒருவர், அரசு புறம்போக்கு நிலத்தை அவர்களுக்கு வழங்க... ரேஞ்சர் அந்த மக்களைச் சேர்த்துக்கொண்டு விவசாயம் பார்க்கத் தொடங்கியிருக்கிறார். மொத்தப் பேரும் கை கோத்து, விதைத்து, நட்டு, உரம் போட்டுக் காவல் காத்துப் பயிர் பண்ணியிருக்கிறார்கள். பயிர்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாராகிவிட்ட ஓர் இரவில், 'தொழிலாளிப் பசங்க மொதலாளியாகலாம்னு பாக்குறீங்களாடா... விவசாயம் கேக்குதா ஒங்களுக்கு...’ என குரூப் கட்டி வந்த பக்கத்து ஊர்க்காரர்கள் மொத்த வயலையும் அறுத்துப் போய்விட்டார்கள். அப்போது பார்த்து அந்த அதிகாரி மாற்றலாகிவிட்டார். ஊர்க்காரர்களை எதிர்த்துக் கேட்க முடியாமல்... என்ன செய்வது என்று தெரியாமல் மொத்த ஜனமும் கண்ணீரில் நிற்க, நொறுங்கிவிட்டார் ரேஞ்சர். போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆபீஸ் எனத் திரிந்தவர் மனசு நொந்துபோய், தற்கொலை செய்துகொள்வதற்காக ஒரு புளிய மரத்தில் ஏறிக் கீழே குதித்திருக்கிறார். 

அதில்தான் இரண்டு கால்களும் செயல் இழந்துவிட்டனவாம்.

''தற்கொலை செஞ்சுக்கக்கூடத் தெரியாத தற்குறியா இருந்திருக்கேங்க நான்... இயலாமை யும் கோவமும் முண்டிக்கிட்டு என்ன பண்ற துனு தெரியாம எத்தன ஏழபாளைங்க இருக் காங்க சாமி இந்த நாட்டுல? சாவணும்னா புளிய மரத்துல ஏறிக் குதிக்கக் கூடாதுங்கறதுதான் நான் கத்துக்கிட்ட பாடம்...'' என இப்போது சிரிக்கிறார் ரேஞ்சர். அதன் பிறகு, ஆஸ்பத்திரியில் வைத்து, இரண்டு கால்களும் செயல்படாத நிலையில் வந்தவரை அந்த மக்கள் தலைவராக்கிக்கொண்டார்கள். அப்புறம் இந்த மக்களின் பிரச்னைகளையே தனது தினசரி வாழ்வாக்கிக்கொண்டார். உட்கார்ந்தபடியே உலகம் படித்து, சட்டங்கள் அறிந்து, மனிதர்கள் புரிந்து அந்த மக்களுக்காகவே இருக்கிற ரேஞ்சரைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. வரும்போது அவர் சொன்னார், ''சார்... நா எதுக்காக விவசாயம் பண்ணணும்னு நினைச்சேன்... எதுக்காவ புளிய மரத்துல ஏறி வுழுந்து சாவணும்னு துடிச்சேன்... எனக்காகவும் இதுங்களுக்காகவும் இல்ல... எங்க புள்ளைவளுக்காவ... இந்தக் கதியத்த பொழப்ப அதுங்க வாழக் கூடாதுங்கறதுக்காவ... நம்ம கஷ்டத்த அடுத்த தலைமுறைக்குக் குடுத்துட்டுப் போவக் கூடாது சார். அதுங்களுக்கு எதாவது நல்லது பண்ணிட்டுப் போறவன்தான் மனுஷன். பணங்காச வுடுங்க... நம்பிக்கையக் குடுத்துட்டுப் போவணும்ல?!''

இதைக் கேட்டதும் எனக்குச் சிலிர்த்துவிட்டது. அவரைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு வந்தேன். அடுத்த தலைமுறைக்காக நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? என்ன நம்பிக்கைகளை சேர்த்துவைக்கிறோம்? நமது நினைவாக எதைக் கையளிக்கப்போகிறோம்? என அலை அலையாக மனம் கேள்வி எழுப்பியது. இரை தேடும் வித்தையை மட்டும் அல்ல, பசி தீர்க்கும்கருணை யையும் அல்லவா கையளிக்க வேண்டும். அதிகாரத்தை அடையும் பாதைகளை மட்டும் அல்ல; எளியவர்களுக்காகப் போராடும் உணர்வு களையும் அல்லவா சொல்லித் தர வேண்டும். பிழைப்பதற்கான மூளையை மட்டும் அல்ல; வாழ்வைத் தரிசிப்பதற்கான மனசையும் அல்லவா கையளிக்க வேண்டும்.

நான் ஆதர்சங்களாக நினைக்கும் பலரால் பணம், அதிகாரம் எதிலும் ஓர் இடத்தை அடையவே முடியவில்லை. உலகின் அற்புதமான சொற்களையும், கனவுகளையும், நம்பிக்கைகளையும் நமக்குத் தந்தபடி அவர்கள் 'பிழைக்கத் தெரியாதவர்களாக’ தேநீர்க் கடைகளிலும், மதுக் கடை களிலும், பயணங்களிலும் காணக் கிடைக்கிறார் கள். அறத்தையும் அடுத்தவர்களின் விளைவு களையும் பொருட்டாகக் கருதாமல், மோதி மிதித்து நடக்கும் பலர் பணம், அதிகாரம் என ஓர் இடத்தை அடைந்துவிட்டதையும் பார்க்கி றேன். ஈழப் பிரச்னை எரிந்தபோது, தவ்விக் குதித்து வந்த பலர் இப்போது என்ன செய்கிறார் கள்? கூடங்குளத்துக்காக எகிறி வந்தவர்கள் பாதிப் பேர் எங்கே போனார்கள்? 'போராளி’ என்கிற அடையாளத்தைத் தனது வாழ்வின், பிழைப்பின் ஒரு பகுதியாக வைத்திருப்பவர்கள், அடுத்த அரசியல் முகத்தை மாட்டிக்கொண்டு வேறு வேலைகளில் பிஸியாகிவிட்டார்கள். தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதை மட்டுமே நோக்கமாக வைத்திருப்பவர்கள் அவர்கள். அவர்கள்தான் நினைத்ததைக் கொள்முதல் செய்கிறார்கள். தனக்கான நாற்காலியை அடைகிறார்கள். சுற்றத்தால் கொண்டாடப்படுகிறார்கள். ''வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுறாங்க பாஸ்...'' என்றபடியே மத்திய அமைச்சகத்துடன் ஐபோனில் பேசுகிற இடத்தில் இருக்கிறார்கள். ''அவரைப் போல பொழைக்கத் தெரியணும். அந்த இடத்துக்கு நீ வரணும்டா...'' என அடுத்த தலைமுறைக்கு (தவறான)முன்னுதாரணம் ஆகிறார்கள். ஒவ்வொரு நாளும் வேகம் எடுக்கிற உலகத்தில் சக மானுடர்களின் பசி, ஏக்கம், போராட்டம் பற்றிய அக்கறையின்மை யைத்தான் அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கிறோமா நாம்? தனிப்பட்ட வாழ்க்கையின் வெற்றி, தோல்வி யைத்தான் அவர்களுக்குப் பாடமாக்குகிறோமா?

சமீபத்தில் திருவொற்றியூரில் நண்பர் குமரய்யா அழைத்திருந்த ஒரு விழாவுக்குப் போயிருந்தேன். வட சென்னையைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள் வழங்கும் விழா அது. சில நண்பர்கள் சேர்ந்து 'புத்தக வங்கி’ ஏற்படுத்தி, இந்தக் காரியத்தைச் செய்கிறார்கள். விழாவில் திருவொற்றியூர் முருகனைச் சந்தித்தேன். ''இவரு கேன்சர் விழிப்பு உணர்வுக்காக சைக்கிள்லயே தமிழ்நாடு முழுக்கச் சுத்திட்டு வந்திருக்கார் சார்... இதுக்காக இதுவரைக்கும் கிட்டத்தட்ட ஐயாயிரம் கிலோ மீட்டர் சைக்கிள்லயே போயிருக்காரு...'' என முருகனை அறிமுகப்படுத்தினார்கள். ''எப்பிடி இந்த விஷயம் உங்களுக்குத் தோணுச்சு?'' என அவரிடம் கேட்டேன். ''என் மனைவி கேன்சர் வந்து செத்துப்போயிட்டாங்க சார். மார்பகப் புற்று நோய்... அது வரைக்கும் அதைப் பத்தி எதுவும் தெரியாது. அப்புறம்தான் இந்தப் புற்றுநோய்க்காக எவ்வளவு சிகிச்சைகள் இருக்கு... எவ்வளவு இடங் கள் இருக்கு... என்னல்லாம் பண்ணணும்னு  தெரிஞ்சது. நான் என் மனைவியை அவ்வளவு நேசிச்சேன் சார். அவங்க போனதை இப்போ வரை ஜீரணிக்கவே முடியலை. என்னை மாதிரி இந்த நோயால எவ்வளவு ஜனம் கஷ்டப்படும்னு நெனைச்சேன்.... நாளைக்கு வர்றவங்க இதைத் தெரிஞ்சுக்கணும்னு நெனைச் சேன்... அதனாலதான் சார் இந்த சைக்கிள் பயணத்தை ஆரம்பிச்சேன். ரெண்டு மாசத்துக்கு ஒரு தபா எங்க ஏரியால மருத்துவ முகாமும் ஏற்பாடு பண்றேன். ஏதோ என்னால முடிஞ்சது'' என்றார் புன்னகையுடன்.

வெற்றி, தோல்வி என்றெல்லாம் எதுவும் இல்லை. சந்தோஷம் துயரம் என்றும் எதுவும் இல்லை. நமது தோல்வியை வெற்றியாகவும் துயரத்தைச் சந்தோஷமாகவும் வரும் தலை முறைக்குக் கொடுப்பதுதான் இந்த வாழ்வின் அர்த்தம் என்பதை திருவொற்றியூர் முருகன் எனக்குச் சொல்லித்தந்தார். குழந்தைகளின் கலைஞன் வேலு சரவணனும் அப்படித்தான்.

வேலுவை நான் பரபரப்பான தி.நகர் சாலை ஒன்றில் சந்திப்பேன். ஏதேதோ வேலை களுக்காக ஓடித் திரியும்போது நடுவில் கிடைக்கும் சந்திப்பு.

''குழந்தைகளுக்கான ரசனையை மேம்படுத்த ஒரு கூத்து பண்றோம். அதுக்காகப் போயிட்டு இருக்கேன்...'' என்பார் புன்னகையுடன். ஒரு நாள் பார்த்தால் விழுப்புரம் பக்கத்தில் ஏதாவது கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்குக் கதை சொல்லிக்கொண்டு இருப்பார். தஞ்சா வூர் பக்கம் ஏதோ ஒரு சிற்றூர் மைதானத்தில் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டு இருப்பார். ஒரு நாள் திருவண்ணாமலையில் பொம்மை முகமூடி மாட்டிக்கொண்டு அவர் தவ்வித் திரிய, மொத்தக் குழந்தைகளும் குதித்துச் சிரித்துக் கிடந்த காட்சி அழகாக இருக்கிறது இப்போதும்.

வேலுதான் சொன்னார், ''பிள்ளைகளுக்கு இயற்கையையும் மண்ணையும் நேசிக்கக் கத்துத்தரணும். அவங்களுக்கு ரசனையையும் அன்பையும் ஊட்டுறதுதான் என் வாழ்க்கை.

பணம் காசு எதுவும் இல்லைங்க... அவங் களோட ஒரு சிரிப்பு போதும் என் வாழ்க் கையை அர்த்தப்படுத்த. அடுத்த தலை முறைக்கு நாம அந்த சிரிப்பைத்தானே தரணும்!''

அந்தக் கணம் எனக்கு அவராகவே மாறிவிடத் தோன்றியது!

-'பரிவை' சே.குமார்.

மன்னித்துவிடு பாலச்சந்திரன் - கார்ட்டூனிஸ்ட்.பாலா


2009 ஆரம்ப நாட்கள் ஈழப்போர் உச்சத்தில் இருந்த நேரம். அங்கிருந்து வரும் புகைப்படங்கள் விடீயோக்கள் போரின் கொடூரத்தை சொன்னது. அதில் கர்ப்பிணி ஒருவரின் வயிறு கிழிந்து அவரின் சிசுவின் பிஞ்சு கால் விரல்கள் வெளியே தொங்கிக்கொண்டிருந்த புகைப்படம் ஒன்றும் இருந்தது. 

என்னால் மறக்கவே முடியாத படம் அது. அப்போது என் மனைவியும் எழுமாத கர்ப்பிணியாக இருந்தார். அதனாலயே என்னை அந்தப் படம் மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கியிருந்தது. அந்த சிசுவின் கால்விரல்கள் பிறந்திராத என் குழந்தையாக என்னைச் சித்திரவதை செய்தது. 

இன்றளவும் சிலபேர் மீது எனக்கு வன்மம் குறையாமல் இருப்பதற்கு அந்தப் படமும் ஒரு காரணம். 

இனிமேலும் தொடர்ந்து ஈழத்திலிருந்து வரும் புகைப் படங்களைப் பார்த்தால் மனப்பிறழ்வுக்குள்ளாகிவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக அவைகளைப் பார்ப்பதை தவிர்த்துவிடுவேன். 



சில மாதங்களுக்கு முன்பு மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் படம் வெளியாகியிருந்தது. இப்போது சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன் உயிரோடு இருக்கும் பாலச்சந்திரனின் படம் வெளியாகியிருக்கிறது. 

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது.. தனக்கு என்னாகும் என்பது பற்றியெல்லாம் ஏதும் அறிந்திராத அந்தப் பாலகன் ராணுவம் கொடுத்த பிஸ்கெட்டை சாப்பிட்டுக்கொண்டிருக்கிற அந்தப் புகைப்படத்தை பார்த்த தருணத்திலிருந்து 2009 காலகட்டங்களில் ஏற்பட்ட மன உளைச்சல் இன்று வந்தது. கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் படத்தை விடப் பிஸ்கெட் சாப்பிட்டுக்கொண்டு உயிரோடு அமர்ந்திருக்கும் இந்தப் படம் எனக்கு மிகுந்த வலியை கொடுக்கிறது.. 
அதுவும்.. அந்த வெறித்தக் கண்கள்... பாவிகளே.. எப்படி மனசு வந்தது.. அந்த குழந்தையை சுட்டுக்கொல்ல..

ஒரு சிறுவனைக்கூட விட்டு வைக்க முடியாதளவுக்கு வன்மத்தோடு இருக்கும் ஒரு இனவெறி அரசுடன் தமிழர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று இப்போதும் கூறி அறிவுஜீவிகள் சிலர் தங்கள் வாழ்வை செழிப்பாக்க கூடும். 

தலைவர் வருவார்.. ஐந்தாம் கட்ட ஈழப்போர் வெடிக்கும்.. என்று செத்துப்போன உங்களை வைத்து சிலர் பிழைப்பும் நடத்தக்கூடும். 

தம்பி.. உன் தந்தையிடம் சொல்.. இவர்களுக்கு மத்தியில் நாம் தமிழர்களாகப் பிறந்ததே அசிங்கம் என்று.. 

மன்னித்துவிடு பாலச்சந்திரன்.. 
நாங்கள் கையாலாகாத தமிழர்கள்.. 


நன்றி:  கார்ட்டூனிஸ்ட்.பாலா

-'பரிவை' சே.குமார்

புதன், 13 பிப்ரவரி, 2013

காதலர்களுக்காக... சில கவிதைகள்


புற்களே...
பூக்களைத் தூவுங்கள்
செருப்பில்லாமல்
என் காதலி..! 



காதலே நீ...
பேசிச் சென்ற
நாட்களைவிட...
பேசாமல் கொன்ற 
நாட்களே அதிகம்...! 




மழைக்கு ஒதுங்கினோம்
நிழற்குடையில்...
ஏனோ விலகமறுத்தது
மனசு..!




நீ நீரருந்திய 
டம்ளரை நான்
யாரையும் பயன்படுத்த
 விடுவதில்லை...
என்னைத் தவிர..!




நீ பூத்தது அறியாமல்
உன் வீட்டு வாசலில்
பூக்களோடு நான்..!




உன் அழைப்புக்காக
காத்திருக்கும்
நேரங்களிலெல்லாம்
என் மனசு போல
கனத்துக் கிடந்தது 
கையிலிருக்கும்
செல்போன்..!




துணைக்கு வருவாயா
தூறலே...
வெயிலில் என்னவள்..!


நண்பர்கள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்....


(எனது கிறுக்கல்கள் வலைப்பூவில் எழுதியவை பிப்ரவரி-14  பகிர்விற்காக மீண்டும் ஒருமுறை இங்கே)


(படங்களுக்கு நன்றி இணையம் மற்றும் ஓவியர். இளையராசா)


-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

மனசு


இந்த மனசு இருக்கே அது எதையாவது பிடிச்சா உடும்புப் பிடிதான் போங்க. காலையில எழும்போதே 'என்னவளே... அடி என்னவளே...' பாட்டு ஞாபகத்தில் வந்தால் அன்று முழுவதும் நம்மையும் அறியாமல் முணுமுணுக்கும் பாடலாக அதுதான் இருக்கும்.

அதுமாதிரிதாங்க இன்னைக்கு காலையில எழும்போதே பக்கத்து வீட்டு பரஞ்சோதி மாமா ஞாபகம் மனசுக்குள் மணியடித்துக் கொண்டிருந்தது.

எனக்கே ஆச்சர்யம். அவங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் சண்டை, பேசிக்கொள்வதில்லை. இருந்தும் அவர் ஞாபகம் மீண்டும் மீண்டும் மனசுக்குள்.

எங்காவது போகும்போது ரோட்டோரம் அழகான பொண்ணு போனாப் போதும், நம்ம அறியாமலே இந்த மனசு உடனே படம் பிடித்துக் கொள்ளும். வீட்டிற்கு வந்து உறங்கினாலும் அந்த முகத்தையே ஞாபகப்படுத்தி நம்மை ஒரு வழி பண்ணும். என்னதான் முயன்றாலும் மனதின் முன் நாம் தோற்றுவிடுவோம் என்பதே நிதர்சன உண்மை.

மனசு சம்பந்தமான கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது அம்மாவின் குரல். எழுந்து வெளியில் வந்தபோது அப்பா யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். மனசு எதிர் வீட்டு மாமாவை நினைவூட்ட எதேச்சையாக அவர் வீட்டுப் பக்கம் பார்த்தேன். சத்தியமா அவரைப் பார்க்கத்தாங்க நினைச்சேன். ஆனா அவரு மக நின்னா. பிளஸ் டூ படிக்கிறா. பல வருட சண்டையால அவ கிட்ட இதுவரை பேசியது கூட இல்லைங்க. என்னவோ நான் அவளை பார்க்கிறதா நினைச்சு உள்ள இருந்து வந்த பரஞ்சோதி மாமா 'அங்க என்னம்மா பண்றே..? கண்ட காலிப்பயலுக வேலியில ஓணானாட்டம் திறியிறானுங்க... உள்ள வா.' என்று சத்தம் போட்டார். எங்க வீட்டுப் பக்கம் நிக்கும் போதே காலிப் பயலாம். என்ன செய்ய, திட்டு வாங்கத்தான் மனசு அவர ஞாபகப்படுத்தியதோ என்னவோ. நல்லவேளை அப்பா காதுல விழலை என்று நினைத்த என் மனதுக்குள் பரஞ்சோதி மாமா மறைந்து அவர் மகள் உட்கார்ந்து கொண்டாள்.

காலேசுக்கு கிளம்பும்போது மறக்காமல் நான் எழுதிய முதல் கதையை எடுத்துக்கொண்டேன். என்னடா திடீர்னு கதை அது இதுன்னு போறானேன்னு நினைக்கிறிங்களா..?. இதுக்கும் மனசுதாங்க காரணம்.

போன வியாழக்கிழமை சவரிமுத்து ஐயா தமிழ் வகுப்பு எடுத்தப்ப யார் யாரு கதை, கவிதை எழுதுவிங்க என்று கேட்டார். பதிப்பேர் கையை தூக்க நான் உட்பட சிலர் கை தூக்கவில்லை. நமக்கு தெரியலைன்னா என்னங்க பண்ணமுடியும்.

அவரு எல்லாரையும் விட்டுட்டு என்னய பார்த்து 'என்ன சார், நமக்கு எதுவுமே வராது படிப்பையும் சேர்த்துத்தான் சொல்லுறேன். எதுக்குத்தான் வர்றோமோ. பாவம் பெத்தவங்க.' என்றார் நக்கலாக. வகுப்பே கொல் என்று சிரித்தது. குறிப்பா மல்லிகா சிரிப்பு மட்டும் தனியா கேட்டது. ரெண்டு நாளா இந்த மனசு வேற அவ சிரிச்சதையே ஞாபகப்படுத்தி கஷ்டப் படுத்திருச்சுங்க.

சை... எல்லாரு முன்னாலயும் அவமானப்படுத்திட்டாரே. அதுவும் மல்லிகா முன்னால வச்சு கேவலப்படுத்திட்டாரே... அவரே எல்லாரு முன்னாலயும் புகழனும் அதுக்கு ஒரே வழி கதை எழுதுறதுதான் என முடிவு செய்து ரெண்டு நாளா யோசிச்சு நேத்து காலையில கம்மாக்கரையில உட்கார்ந்து ஒரு கதை எழுதினேன். அதை இன்னைக்கு அவர்கிட்ட கொடுக்கணும்.

மாமாவையும் மாமா மகளையும் மறந்த மனசு சவரிமுத்து ஐயாவையும் மல்லிகாவையும் பற்றிக் கொண்டது.

நேராக தமிழ்த்துறைக்குச் சென்று ஐயாவிடம் கதையை நீட்டினேன். என்னப்பா இது..? என்று புருவம் உயர்த்தினார். 'கதை' என்றேன். ஓற்றைச் சொல்லில். என்னை ஏற இறங்க பார்த்தார். 'சரி படிச்சுட்டு கருத்தை சொல்லுறேன். மதியம் வந்து பாரு' என்றார்.

'உங்க கருத்தை நான் தனியா கேட்க விரும்பலை. நீங்க உங்க வகுப்புல எல்லாரு முன்னாலயும் சொல்லுங்க. கேவலப்படுத்துறப்ப மட்டும் தனியா வரச்சொல்லியா பண்ணினிங்க.' என்றேன்.

'ம்... தனியா சொல்றது உனக்கு நல்லதுன்னு பார்த்தேன். அப்புறம் உன் இஷ்டம்.' என்றார். 'பரவாயில்லை' என்று கிளம்பினேன்.

நம்ம கதைய படிச்சுட்டு ஐயா நல்ல கருத்தை வகுப்பில சொல்லட்டும் அப்புறம் பாரு மல்லிகாவை என்ன பண்ணுறேன்னு. அவளை வஞ்சம் தீர்ப்பதற்காகவே என் கதையின் நாயகி பேர மல்லிகான்னு வச்சேன்.

மதியம் முதல் பிரிவேளை தமிழ் ஐயா வந்தார். வந்தவர் பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். எனது கதை பற்றி எதுவும் கூறவில்லை. மனசு சொல்லுவாரா மாட்டாரான்னு படபடன்னு அடிக்க ஆரம்பிச்சுடுச்சு. பாடத்துல எப்பவும் கவனம் போகாது. இன்னைக்கு சுத்தமா இல்ல. அடிக்கடி என்னய பார்ப்பதும் சிரிப்பதுமாக இருந்தார். அவரு மேல கடுப்புதான் வந்தது.

வகுப்பு முடிய பத்து நிமிடம் இருக்கும் போது மெதுவாக ஆரம்பித்தார். 'தம்பி செல்வம், ஒரு கதை எழுதி எங்கிட்ட கொடுத்து படிச்சு கருத்துச் சொல்லச் சொன்னார். அதுவும் வகுப்புலதான் சொல்லணுமுன்னு கேட்டுக்கிட்டார் என்றதும் எல்லோரும் என்னய திரும்பிப் பார்த்தனர்.

மல்லிகா மட்டும் நக்கலாக சிரித்தாள். அவளுக்கு எப்பவுமே எல்லாத்திலும் தானே முதல் என்ற கர்வம் உண்டு. அவ நல்லா கதை, கவிதை எழுதுவா. கல்லூரியில வர்ற எல்லா கையெழுத்துப் பிரதியிலயும் எழுதுவா. அழகா வேற இருப்பாளா தேடி வந்து கதை வாங்குவாங்க. அதனால நாம கதை எழுதினா அவளுக்கு நக்கலாத்தான் தெரியும்.

ஐயா தொடர்ந்தார், 'முதல்ல கதை எழுதணுங்கிற அவரோட ஆர்வத்தை பாராட்டுறேன் என்றதும் நான் மத்தவங்களைப் பார்த்து நக்கலாக சிரித்தேன். 'ஏம்மா மல்லிகா... சமீபத்துல மூன்றாம் பிறை படம் போட்டானா..?' என்று வினவ, நம்ம கதைக்கும் இவரு கேக்குற கேள்விக்கும் என்ன சம்பந்தம்? என்ற என் யோசனையை  'ஆமா ஐயா... வியாழக்கிழமை கே டிவியில போட்டான்' என்ற மல்லிகாவின் பதில் கலைத்தது.

'ம். அதானே பார்த்தேன். யாரும் படம் பாக்கலைன்னா இந்த கதைய வாங்கி படிங்க. பேர் மாற்றத்தோட கதை அப்படியே மாற்ற்மில்லாம இருக்கு. ஆத்திரப்பட்டா மட்டும் போதாது தம்பி, சுயமா சிந்திச்சா கண்டிப்பா நல்ல கதை உங்களாலயும் எழுத முடியும்.' என்றார். உடனே வகுப்பு முழுவதும் கோரஸாக கத்தியது.

எனக்கு என்னவோ போலாகி விட்டது. சே... இந்த மனசு இப்படி கேவலப்பட வச்சுடுச்சே. கதை எழுதணுமுனு நினைச்சு உட்கார்ந்தப்ப, பார்த்த படத்தோட கதைய அப்படியே ஞாபகப்படுத்தி... சை... நன்றி கெட்ட மனசு. யார் முகத்திலும் முழிக்காமல் தலையை கவிழ்ந்து கொண்டேன்.

'எல்லாருக்கும் ஓண்ணு சொல்லுறேன். யாருக்காகவும் எழுதாம நீங்களா முயலுங்கள். கண்டிப்பா உங்க திறமை வெளிப்படும். அப்புறம் நம்ம கல்லூரியில ஒரு சிறுகதைப் பட்டறை நடக்கப் போகுது. நிறைய கல்லூரியில இருந்து பசங்க கலந்துக்க இருக்காங்க. அதுக்காக நம்ம கல்லூரியில கதை தேர்வு நடக்க இருக்கு. அது தொடர்பான சுற்றறிக்கை முதல்வர்கிட்ட இருக்கு. விரைவில் உங்களுக்கு வாசிக்கப்படும். நல்ல கதையா குடுங்க. நம்ம மல்லிகா பொருளாதார பசங்க நடத்துற மனசு பத்திரிக்கையில இந்த மாதம் எழுதியிருக்க ஜன்னலோர ரோஜா அருமையான கதை. அம்மா மல்லிகா, அதையே கொடு. கண்டிப்பா பட்டறைக்குப் பிறகு நடக்கப்போற கதை தேர்வுல முதல் கதையா வரும்.' என்று எனக்குள் கனன்ற கோபத்திற்கு எண்ணெய் வார்த்துச் சென்றார்.

மனசு முழுவதும் மல்லிகா ஆக்கிரமித்தாள். வேறு எதை நினைத்தாலும் மனசு அவளிடமே வந்து நின்றது. சே... வெட்கம்கெட்ட மனசே அவளை நினைப்பதை நிறுத்து என மனசோடு சண்டையிட்டேன். ஆனால் ஜெயித்தது என்னவோ மனசுதான்.

அடுத்த பிரிவேளையை கட் அடித்துவிட்டு ஊர் சுற்றி விட்டு வீட்டிற்கு வந்தால் அம்மா, 'ஏண்டா, வரும்போது அக்கா வீட்டுக்குப் போயி விதை நெல்லு மூட்டை தூக்கியாரச் சொன்னேனே. தூக்கியாரலயா..?' என்று கோபமாக கேட்க, காலையில் கிளம்பும் போது அம்மா சொன்னது இப்பதான் ஞாபகத்திற்கு வந்தது. எல்லாத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் மனசு இதை மட்டும் மறந்துவிட்டதே. என்ன மனசு இது என்று மனசை திட்டினேன்.

'அவருக்கு இதெல்லாம் எங்க ஞாபகம் இருக்கப் போகுது. பக்கத்து வீட்டுப் பக்கமுல்ல ஞாபகம் போகுது.' படுத்திருந்தபடி அப்பா சொல்ல, ஏனோ தெரியவில்லை பரஞ்சோதி மாமாவும் அவரது மகள் யாழினியும் மனசுக்குள் மணியடித்தனர்.

-'பரிவை' சே.குமார்

சிறுகதைகள் வலைப்பூவில் எழுதியது மீள்பதிவாக...               

திங்கள், 4 பிப்ரவரி, 2013

'மன்னிப்புக் கேள்'-தணிக்கைத் துறை :: ‘கருத்து சுதந்திரம்'-சசிதரூர்



 'மன்னிப்புக் கேள்' - தணிக்கைத் துறை

விஸ்வரூபம் திரைப்படம் விவகாரத்தில் மத்திய தணிக்கைத்துறை மீது குற்றம் சாட்டிய தமிழக அரசு மன்னிப்பு கோர வேண்டும் என மத்திய தணிக்கைத்துறை தெரிவித்துள்ளது.விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

முத்தரப்பு பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து 144 தடையை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை தணிக்கை துறை வெளியிட்டுள்ள செய்தியில், விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் தணிக்க‌ை சான்று அளித்ததில் தவறு நடந்ததாக , கோர்ட்டில் தமிழக அரசு வக்கீல்கள் வாதாடினார்.இந்த விஷயத்தில் தவறான தகவல் தந்தததாக தமிழக அரசு வக்கீல், நவநீதிகிருஷ்ணன் மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்துள்ளது

-----****-----

 ‘கருத்து சுதந்திரம்' - சசிதரூர்

நாட்டில் சமீபத்திய விஸ்வரூபம் திரைப்படம், ஆஷிஸ்நந்தியின் பேச்சு ஆகியவற்றுக்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகளை பார்க்கும் போது சமுதாயம் சகிப்புதன்மை அற்று இருப்பதையே வெளிக்காட்டுகிறது என்றும், கருத்து சுதந்திரம் பறிபோய் வருகிறது என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சசிதரூர் கவலை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்: விஸ்வரூபம் சர்ச்சை , தாழ்த்தப்பட்டோர் குறித்து எழுத்தாளர் ஆஷிஸ் நந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு இந்த சமூகத்தில் எதிரொலித்திருக்கிறது. இது கலாச்சாரம் என்ற பெயரில் வளர்ந்து வந்துள்ளமை போட்டி மனப்பாங்கு கொண்ட சகிப்புத்தன்மையற்று போனதையே காட்டுகிறது.

எழுத்து, கருத்து சுதந்திரம் நீதிபதி மற்றும் அரசு மூலம் தான் வழிபிறக்கும் என்றால் நாம் இன்னும் பின்தங்கியே இருக்கின்றோம். இது குறித்து நானும் அதிகம் பேச விரும்பவில்லை. எந்தவொரு விமர்சனமும் யாரையும் புண்படுத்தக்கூடாது என்பதில் மாற்று கருத்து இல்லை. இதே நேரத்தில் கருத்து சுதந்திரம் பறிபோவது சரியல்ல. எந்தவொரு விஷயமானாலும் விவாதிக்கவோ, வாதிடவோ நமக்கு உரிமை உண்டு. சமூகத்திற்கு ஒரு சவாலாக இருந்து வரும் இந்த விஷயத்தில் ஒரு சம நிலை ஏற்பட வழி பிறக்க வேண்டும்.

தணிக்கை துறை சான்று :

விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்து இருக்க கூடாது. தணிக்கை துறை சான்று அளித்த பின்னர் இந்த நடவடிக்கை சரியானது அல்ல. படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் இருந்த போதும், எதிர்ப்பு வரும் தேவையற்ற காட்சிகள் இருக்கும் யாரும் நினைத்தால் காட்சிகளை ரத்து செய்ய சொல்லி படத்தயாரிப்பாளரிடம் வாதிடலாம். ஆனால் தடை விதிக்க முன்வரக்கூடாது.

ஆஷிஸ்நந்தியின் பேச்சுக்காக அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுகிறது. இது தேவையற்றது. சல்மான் ருஷ்டி கோல்கட்டாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இன்னும் நாம் பின்தங்கி இருப்பது கவலை அளிக்கிறது. இவ்வாறு சசி தரூர் கூறினார்.

நன்றி : தினமலர்

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் கடந்து வந்த பாதை



டிசம்பர் 7:  "விஸ்வரூபம்' படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.

டிசம்பர் 9:  முதலில் டீ.டி.எச். மூலம் "விஸ்வரூபம்' வெளியாகும்  என்ற அறிவிப்பு வந்தது.

டிசம்பர் 9:  டீ.டி.எச். குறித்து திரையரங்க உரிமையாளர்களுடன் கமல் பேச்சு நடத்தினார்.

டிசம்பர் 11: டீ.டி.எச். வெளியீட்டிற்கு திரையரங்க உரிமையாளர் சங்கம் தரப்பில் எதிர்ப்பு.

டிசம்பர் 29: டீ.டி.எச். நிறுவனங்களுடன் கமல்ஹாசன் ஒப்பந்தம்.

ஜனவரி 9: "என்னை தொழில் செய்ய விடாமல்'  தடுக்கிறார்கள் என்றார் கமல்.

ஜனவரி 12: திரையரங்க சங்க நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு.



ஜனவரி 14: டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளிலும்,

பிப்ரவரி 2-ம் தேதி டீ.டி.எச். மூலமும் "விஸ்வரூபம்' வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஜனவரி 22: "விஸ்வரூபம்' படத்துக்கு தடை கோரி முஸ்லிம்  அமைப்புகள் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு.

ஜனவரி 23.  "விஸ்வரூபம்' படத்துக்கு அரசு திடீர் தடை.

ஜனவரி 24:  கமல்ஹாசன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு.

ஜனவரி 26:  உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் "விஸ்வரூபம்' படத்தை பார்த்தார்.

ஜனவரி 29:  படத்துக்கு தடை இல்லை என நீதிபதி அறிவித்தார்.



ஜனவரி 30:  தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து "விஸ்வரூபம்' படத்துக்கு தடை விதித்தது உயர் நீதிமன்றம்.

ஜனவரி 30: மதச்சார்பற்ற நாட்டை தேடிப் போவேன் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் கமல்ஹாசன்.

ஜனவரி 30: சில காட்சிகளை நீக்க கமல் சம்மதம் தெரிவித்தார்.

ஜனவரி 31: சட்டம் - ஒழுங்கு பிரச்னையால்தான் விஸ்வரூபத்துக்கு தடை என தமிழக அரசு அறிவித்தது. 



பிப்ரவரி 1: அரசு முன்னிலையில் பேச்சு நடத்த கமல்ஹாசன், முஸ்லிம் அமைப்புகள் ஒப்புதல்.

பிப்ரவரி 2: குறிப்பிட்ட சில ஒலிக் குறிப்புகளை நீக்க கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்ததால்,  விஸ்வரூபம் சர்ச்சை முடிவுக்கு வந்தது.


நன்றி : தினமணி

-'பரிவை' சே.குமார்