மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

மனசின் பக்கம் - சிலவரிகள்


மனசின் மனசாட்சி...

தொடர்கதை ஆரம்பிப்பது என்பது நமக்கு தொடர்கதையாகத்தான் இருக்கும் போலிருக்கு. இந்த வாரம் ஆரம்பித்து விடலாம் என்று நினைத்து ஓவியத்திற்காக நண்பனுடன் பேசி வைத்திருந்தேன். இங்கு பருவநிலை மாற்றத்தால் கடந்த மூன்று நாட்களாக பயங்கர இருமல்... தூங்க முடியாமல்... இருக்க முடியாமல்.... அப்பப்பா.... இப்போ கொஞ்சம் பரவாயில்லை. நண்பனிடமும் ஞாபகப்படுத்தவில்லை. இன்னும் அவனும் அனுப்பவில்லை.... அதனால் மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறது தொடர்கதையின் தொடக்கம்.

நகைச்சுவைகள் பற்றி...

நடிகர் வடிவேலு தனது மகளின் திருமணத்தை எந்த அரசியல்வாதியையும் அழைக்காமல் நடத்தி முடித்திருக்கிறார். பத்திரிக்கை கொடுக்கும் போது நீங்க வந்து என்னைய மறுபடியும் சந்திக்கு இழுத்துறாதீங்கன்னு சொன்னதாக சொல்கிறார்கள். பாவம் எல்லாருக்கும் ஆப்பு அடுத்தவன் அடிப்பான்... இவரு தனக்குத்தானே செதுக்கி நறுக்குன்னு அடிச்சிக்கிட்டாரு.

நகைச்சுவையில் கலக்கும் நடிகர் சூரி தனது நீண்ட வசனங்களை நறுகென்று நாலு வார்த்தைகளில் சொன்னால் இன்னும் முன்னுக்கு வரலாம். 

நடிகர் விவேக் எப்பொழுதுமே நகைச்சுவை என்ற பெயரில் யாரையாவது கேலி செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார். சிவாஜியின் கதாபாத்திரங்களை கேலி செய்வதில் இவருக்கு அலாதி பிரியம் போல... இப்போ அப்பரை கையில் எடுத்திருக்கிறார்... பிரபு சப்தம் போட்டதால் இயக்குநர் படம் முடிந்ததும் போட்டுக் காண்பிக்கிறோம்... ஐயாவை கேலி செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறாராம்.

கிரிக்கெட்...

ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகிவிட்டது... நாட்டில் எத்தனை பிரச்சினை இருந்தாலும் மைதானம் நிரம்பித்தான் வழிகிறது. நேற்று சென்னையில் நடந்த போட்டியில் சூப்பர் கிங்ஸ் வென்றுவிடும் என்ற நிலையில் தோணி அடித்த பந்தை எல்லைக்கோட்டருகே வைத்துப் பிடித்து வெற்றியை தமது அணிக்கு சாதகமாக்கிய போலார்ட் பாராட்டுக்குறியவர்,

தமிழ்தாத்தா இலங்கைத் தமிழருக்காக தனது பரிவாரங்களின் பதவிகளை துறக்க வைத்தார். பதவி போன வருத்தத்தில் மூத்தவன் முட்டிக்கிட்டு நிற்கிறான். இந்த நிலையில் பேரனின் ஹைதராபாத் சன்ரைசஸ் அணிக்காக சிங்களவன் சங்ககாரா விளையாடிக் கொண்டிருக்கிறான்.

சாம்பியன் கோப்பைக்கான உத்தேச அணியில் சேவாக், ஹர்பஜன் சிங் சேர்க்கப்படவில்லை. சேவாக்கின் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. 

தமிழ்நாட்டுக்குள் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதியில்லை என்றதும் ஆளாளுக்கு குதிக்கும் வடநாட்டுப் பத்திரிக்கைகள் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட தடை என்ற போது எங்கே போயின... அப்பவும் கத்தியிருந்தால் நீங்கள் கத்துவதில் அர்த்தம் இருந்திருக்கும்.

தமிழகம்...

அம்மாவின் ஆசிகளுக்காக கேடு கெட்ட செயலில் இறங்கும் காவல்துறை நாங்கள் மக்களின் நண்பன் என்று சொல்வது வெட்கக்கேடு. 

மதுரையில் அழகிரியை சந்தித்து இரண்டரை மணி நேரம் பேசியிருக்கிறார் கனிமொழி. குடும்ப விவரம் பேசினார்களாம். எப்படியோ ஐயாவின் வாரிசுகள் அடிதடிக்கு தயாராகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

நடிகர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டத்திலும் சிலர் நடித்துச் சென்றுள்ளது வேதனையான விஷயம். கருணாநிதியாவது காலை மதிய சாப்பாட்டுக்கு நடுவில் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் இவர்களோ எதோ திருமணத்துக்கு வருவது போல் வந்து சென்றிருக்கிறார்கள். இதில் திரிஷா ஐஸ்கிரீம் கடை திறந்து வைத்துவிட்டு வந்திருக்கிறார். ரஜினி ஒரு மணி நேரம். கமல் மாலையில்... என நேரம் கிடைக்கும் போது வந்து பார்த்தவர்கள் மத்தியில் ஒரு சிலர் கடைசி வரை இருந்திருக்கிறார்கள்... அதில் கால்வலியோடு வந்திருந்த அஜீத்தும் ஒருவர்.

யாரையும் பேச விடாத உண்ணாவிரதத்தில் கடைசியில் வர இருக்கும் கமல் பேசுவார் என்ற போது சிம்பு நானும் தமிழந்தான்... நானும் பேசுவேன் என்று சண்டையிட்டதால் கமல் பேசவில்லையாம்... நான் கமல் ரசிகனாக இருந்தாலும் சிம்பு செய்தது சரியே.... காலை முதல் மாலை வரை வீட்டில் இருந்துவிட்டு மாலையில் வந்து என்ன பேச்சு வேண்டிக்கெடக்குங்கிறேன்... இவனுக எல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உண்ணாவிரதம் இருக்கவில்லை என்பது எல்லாரும் அறிந்த உண்மை.

காதலால் அழிந்த காளையர்...

நேற்று எங்கள் மாவட்டத்தில் காதல் தகராறில் நடந்த அடிதடியில் கத்திக் குத்து விழுந்த அண்ணனும் தம்பியும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். இரண்டு ஆண்குழந்தை படிச்சிக்கிட்டு இருக்கு. இன்னும் கொஞ்சக் காலம்தான் அப்புறம் நம்ம கவலை தீர்ந்திரும் என்று நினைத்திருந்த் பெற்றோர் இருவரையும் இழந்து தவிக்கின்றனர். ஊர்மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.  என்னதான் போராடினாலும் போன உயிர் திரும்ப வருமா என்ன?

கொசுறு:

அபுதாபியில் நேற்று மாலை முதல் இடி மின்னலுடன் மழை பெய்தது. இன்றும் வானம் மேக மூட்டமாய் இருந்தது... தூசிக்காற்று வேறு வீசியது... கொஞ்சம் தூறலும் இருந்தது. இதனால் வெயிலின் உக்கிரம் சற்றே தணிந்திருந்தது.


மனசின் பக்கம் மீண்டும் மலரும்...
-'பரிவை' சே.குமார்

5 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

மனசின் பக்கங்கள் ரசித்தேன்,விரைவில் குணமாகி தொடர்கதை எழுதுங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

Yoga.S. சொன்னது…

வணக்கம் குமார்!உங்கள் 'மனசு'போல் மனசு !

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சில நடிகர்கள் நாங்கள் கூத்தாடிகள்தான் என்பதை நேரில் நிரூபித்து விட்டுதான் போயிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொது, இவனுக படங்களை எதற்க்காக பார்க்க வேண்டும் என்றே தோன்றுகிறது...!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பல அலசல்களுக்கு நன்றி...

நலத்துடன் தொடர வாழ்த்துக்கள்...

அம்பாளடியாள் சொன்னது…

நேற்று எங்கள் மாவட்டத்தில் காதல் தகராறில் நடந்த அடிதடியில் கத்திக் குத்து விழுந்த அண்ணனும் தம்பியும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். இரண்டு ஆண்குழந்தை படிச்சிக்கிட்டு இருக்கு. இன்னும் கொஞ்சக் காலம்தான் அப்புறம் நம்ம கவலை தீர்ந்திரும் என்று நினைத்திருந்த் பெற்றோர் இருவரையும் இழந்து தவிக்கின்றனர். ஊர்மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். என்னதான் போராடினாலும் போன உயிர் திரும்ப வருமா என்ன?

என்ன உலகம் இதுவென்றே மனம் வலிக்கிறது :(