மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 29 அக்டோபர், 2013

கொலை கொலையாம்...



(உறவினர் ஒருவர் ஊருக்குச் செல்வதால் பொருட்கள் வாங்கும் வேலை காரணமாக தொடர்கதையை இன்று எழுதி பதிவிட முடியவில்லை... அதனால் மீள்பதிவாக சிறுகதை ஒன்று)

விடியும் முன்பே கிளம்பிய கண்ணாத்தாவின் அழுகை ஊரையே குலுக்கியது.

என்னாச்சு என்ற முனைப்பில் அவள் வீட்டிற்கு சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துவுக்கு முன்னாள் தலைவிரி கோலமாக அமர்ந்து 'சண்டாளன் என் செல்லத்தை கொன்னுபுட்டானே' என்று பெருங்குரல் எடுத்து கத்தினாள்.

'யார் செய்திருப்பார்கள் இந்த பாதகச் செயலை...?' என்று நினைத்தவர்களுக்கு பதில் சொல்லும்விதமாக 'இந்தப்பய நல்லாயிருப்பானா... சொத்துத் தகராறுல கொலை பண்ண துணிஞ்சிட்டானே.. அவன் குடும்பம் விளங்குமா...? ஐயோ.... என் செல்லமே..." என்று அரற்றினாள்.

எல்லாரும் கூடியிருக்கும்போது இந்த மாணிக்கம் பய வீட்டுல இருந்து யாரையும் காணோம். அவன் தான் பண்ணியிருக்கனும். அண்ணன் தம்பிக்குள்ள சொத்து தகராறு நடக்கிறது உண்மைதான். அதுக்காக ஒரு உயிரை எடுக்கிற தைரியம் அவனுக்கு எப்படி வந்திச்சு...

"யேய் தள்ளுங்கப்பா... ராசண்ணன் வர்றாரு." என்று ஒரு கைத்தடி கூட்டத்தை விலக்கிவிட, ராசண்ணன் என்று அழைக்கப்பட்ட அந்த ஐம்பது வயது மனிதர் காலையிலேயே குளித்து நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்து மங்களகரமாக இருந்தார். அவர்தான் அந்த ஊருக்கு அம்பலம் (அதான் நாட்டாமை), அதுபோக நாலஞ்சு கிராமத்துக்கு நாட்டம்பலம் வேற... அவரு பேச்சுக்கு அந்த ஏரியாவே மதிப்புக் கொடுக்கும்.

வந்தவர் தலைவிரி கோலமாக இருந்த கண்ணாத்தாவிடம், "ஆத்தா... இதை யாரு செய்திருப்பான்னு நினைக்கிறே...?"

"பெரியய்யா..." என்று அழுகையை கூட்டினாள்.

"யேய்... கிறுக்கி... அதான் ஐயா கேக்குறாகள்ல... நடந்ததை சொல்லுறத விட்டுப்புட்டு ஒப்பாரி வைக்கிறே..?" அம்பலத்துக்குப் பின்னால் நின்று ஒன்று அம்பலம் பண்ணியது.

"வேற யாரு... அவன் தான் பெரியய்யா... சொத்து தகராறுல இப்படி பண்ணிட்டான்"

"வேம்பா... அந்தப்பய வீட்டுல இருக்கானான்னு பாத்துட்டு வா"

"ஐயா... போலீசுக்கு போகணுமா...?" என்றார் ஒருவர்.

"முதல்ல அவன் இருக்கானான்னு பார்ப்போம்... அவன்தான்னு அந்தப்புள்ள சொல்றத நம்பிக்கிட்டு நாம முடிவெடுக்க முடியாதுல்ல... எதுக்காக இது நடந்துச்சுன்னு தெரியலையில்ல..."

"ஆமா..."

"என் கண்ணுமணி... பொண்ணுமணி... கண்ணு நிறைஞ்ச வைரமணி... உன்னை காவு கொடுக்கவா பாத்துப்பார்த்து வளர்த்தேன்... ம்..ஆஆஆஆஆ...."

"இருத்தா... கொஞ்சம் அழுகையை நிப்பாட்டு..."

"ஐயா அவன் பொண்டாட்டி மட்டும்தான் இருக்கு.." என்றபடி வந்தான் வேம்பன்.

"அவளை கூப்பிடு"

"ஐயா... அவளை இங்க கூப்பிட்டு பேசுறது நல்லாயில்லை... ஏன்னா இவ சாகக் குடுத்துட்டு நிக்கிறா... அவ வந்தா அடிக்கக்கூட தயங்கமாட்டா... அதனால நாம நாலுபேரு அங்க போயி பேசலாம்."

"அதுவும் சரிதான்..."

***

"இந்திரா... இந்திரா..."

"வாங்க பெரியய்யா..."

"என்ன புள்ள ஒங்கொலுந்தன் பொண்டாட்டி முத்த வெட்டிப்புட்டாங்கன்னு ஊரையே கூட்டுது... நீ இங்க இருக்கே"

"இல்ல பெரியய்யா... அதுக்கும் எங்களுக்கும் பேச்சுவார்த்தை இல்லை... அப்புறம் எப்படி..."

"சரி மாணிக்கம் எங்கே..?"

"விடியுமுன்னே எங்கயோ பொயிட்டாரு..."

"முத்த வெட்டுனது அவன் தான்னு அந்தப்புள்ள சொல்லுது... இவனும் ஆளு இல்லை...ம்.."

"அவரு செஞ்சிருக்க மாட்டாருய்யா"

"என்ன புருஷனுக்கு வக்காலத்தா... வேற யாரு இந்த மாதிரி செய்யப் போறா... போன் பண்ணினான்னா உடனே வரச்சொல்லு... என்ன...?"

"சரிங்க... பெரியய்யா..."

***

"எங்குடும்பத்து கொலைய அறுத்துப்புட்டானே... அவன் நல்லாயிருப்பானா... நாசமத்துப் போவான்... அவன் குடும்பம் நடுத்தெருவுல நிக்கணும்..."

"இதபாரு புள்ள... அவன் வீட்டுல இல்லை... எப்படியும் திரும்பித்தான் வரணும். அவன் வரும்போது விசாரிச்சு என்ன பைசல் பண்ணனுமோ பண்ணிக்கலாம் அப்படின்னு நான் நினைக்கிறேன். இல்ல போலீசுக்கு போறதுண்ணா சொல்லு... இப்பவே நான் போன் பண்ணி வரச்சொல்லுறேன். அப்புறம் கோர்ட்டு கேசுன்னு அலையணும்... காசு செலவு பண்ணிக்கிட்டு திரியணும்... என்ன சொல்றே... சுமூகமா போறதுன்னா அடுத்து ஆகவேண்டியதை பார்ப்போம்... இல்ல கேசு குடுக்கிறதுன்னா அதுக்கான வேலையில இறங்குவோம்..."

"எங்ககிட்ட என்ன பெரியய்யா இருக்கு... கேசு போட்டு செலவழிக்க... நீங்களா பார்த்து எதாவது நல்ல முடிவா எடுங்க...வேற என்னத்தை நான் சொல்றது..."

"சரி... அவன் வரட்டும்... பேசிக்கலாம்..."

"ஏய் சுந்தரம் இங்க வாடா" என்று கண்ணாத்தா அழைத்ததும் இதுவரை ஓரமாக நின்றவன் "என்னம்மா" என்றபடி வந்தான்.

"இந்தா... அந்தப்பக்கம் பிடி வீட்டுக்குள்ள கொண்டு போயிடலாம்" என்றபடி தலையை அள்ளிக் கட்டிக்கொண்டு எழுந்தாள்.

அவளும் அவனுமாக தலை தனியாக கிடந்த கிடாயை வீட்டுக்குள் தூக்கிச் செல்ல,

'இனி ரெண்டுமாசத்துக்கு கண்ணாத்தா வீட்டுல உப்புக்கண்டம் மணக்கும்... நல்லா வெட்டியிருந்தாலாவது நமக்கு கொஞ்சம் தருவா... களவாணிப்பய கோபத்துல ஆட்டை வெட்டியிருக்கான் பாரு... ம்ம்ம்ம்ம்..." என்றபடி ஊர் கலைந்தது.

(சகோதரி மேனகாஸாதியா சொன்னதன் பேரில் கிரைம் கதை போன்று ஒன்று 2010 மே மாதம் கிறுக்கியது. மீள் பதிவாக....)

-'பரிவை' சே.குமார்

11 எண்ணங்கள்:

நம்பள்கி சொன்னது…


என் தமிழ்மணம் + 1 வோட்டு போட்டு விட்டேன்.
நன்றி!

Unknown சொன்னது…

ஆட்டை வெட்டினதுக்கா,இந்த பஞ்சாயத்து,நாட்டாம எல்லாம்?ஹ!ஹ!!ஹா!!!

நம்பள்கி சொன்னது…

கோபத்தை இப்படியும் சிலர் காட்டுவாங்களோ?
த.ம.பிளஸ் 1

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

நெஞ்சை தொட்ட கதை அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மீள்பதிவு - படித்ததில்லை... நல்லாயிருக்குங்க...

மகேந்திரன் சொன்னது…

நல்ல கதை சகோதரரே...
அந்த உப்புக்கண்டம் பற்றி நினைத்தாலே
உமிழ்நீர் ஊருகிறது...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கண்ணாத்தா ஸ்டோரி சூப்பர்...!

கவியாழி சொன்னது…

உறவும் பகையும் ஆடு வெட்டில்சுபம்

Typed with Panini Keypad

கவியாழி சொன்னது…

நன்று

அ.பாண்டியன் சொன்னது…

என்னது ஆட்டு கிடாவா! அருமை சகோதரரே. மிக நன்றாக ட்விஸ்ட் வைத்து க்ரைம் கதை சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோதரரே. பகிர்வுக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

டிவிஸ்ட் சூப்பர்! வாழ்த்துக்கள்!