மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 10 டிசம்பர், 2013

பார்வைகள்

ரசு விரைவுப் பேருந்து திருச்சியிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி இருட்டைக் கிழித்துக் கொண்டு விரைந்தது. இரவு நேர பயணமாதலால் அதிகக் கூட்டமில்லை. சன்னல் அடைத்திருந்த போதும் மார்கழி மாதக் குளிர் பேருந்துக்குள் இருக்கத்தான் செய்தது. சேலைத்தலைப்பை இழுத்து மூடிக் கொண்டு சன்னலோரமாக அமர்ந்திருந்தேன்.

பேருந்துக்குள் ஆடியோ, வீடியோ இரண்டும் வேலை செய்யாததால் இருந்த பத்துப் பேரும் நிம்மதியாக இருந்தோம். ஒரிருவர் செல்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்க, ஒருவர் போனில் உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்.

பேருந்து ஓட்டுநர் நிறுத்தம் இல்லாத ஒரு இடத்தில் திடீரென பேருந்தை நிறுத்தினார். எதற்கு இங்கு நிறுத்துகிறார் என்று யோசிக்கும் போதே ஒரு இளைஞனும் யுவதியும் அவசர அவசரமாக ஏறினர். பேருந்து விளக்கில் அவர்களது முகம் சரிவரத் தெரியவில்லை. அவர்களது இளமையைப் பார்க்கும் போது வீட்டை விட்டு ஓடிவந்த காதல் ஜோடி என்பது எனக்குப் புரிந்தது. அவர்கள் எனக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

நடத்துனரிடம் இராமநாதபுரத்துக்கு பயணச்சீட்டு வாங்கினர். அந்தப் பெண் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். அவர்களை பின்னால் இருந்து பார்த்தபோது அவனுக்கு இருபது வயசுக்குள் இருக்கும். அவளுக்கு பதினெட்டு நிரம்பியிருக்க வாய்ப்பில்லை. 'இந்த வயதில் காதல். இதுகளாலே வாழ்க்கை போராட்டத்துல வெல்லமுடியுமா? .' என்று நான் நினைக்கும் போதே அவர்களது குசுகுசுப்பான பேச்சு எனது சிந்தனையை கலைத்தது.

"எனக்குப் பயமாயிருக்கு..." அவனது தோளில் சாய்ந்திருந்த அந்த யுவதி விசும்பலினூடே பேசுவது மெல்லக் கேட்க, நான் இருக்கையில் சற்று முன் நகர்ந்து அமர்ந்து அவர்களின் பேச்சைக் கூர்ந்து கவனித்தேன்.

"அசடு... எதுக்குப் பயம்... நான் இருக்கேன். என்ன வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்..." .

'ம்... இவனுக்கிட்ட என்ன இருக்கு... எப்படி பார்ததுப்பான்' எனக்கு கோபம் வந்தது.

"இல்ல.. சித்திக்கு தெரிஞ்சா..."

"தெரிஞ்சா என்ன பண்ணமுடியும்..? நம்ம விஷயத்துல முடிவெடுக்க அவங்க யாரு... என்ன வந்தாலும் சந்திப்போம்..."

'அடேங்கப்பா... இவரு தமிழ் சினிமா கதாநாயகன் எத்தனை பேரு வந்தாலும் பறந்து பறந்து அடிச்சு விரட்டப் போறாரு. மூதேவி... இழுத்துக்கிட்டுப் போற பொண்ணுக்கு ஒருவேளை கஞ்சி ஊத்துமான்னு தெரியலை... இதுல என்ன வந்தாலும் சந்திப்பாராம்... முதல்ல இவளை வச்சி வாழ முடியுமான்னு சிந்தி...' எனக்குள் கோபம் எரிமலையாய் கனன்றது.

"இல்லை... என்ன நடக்குமோன்னு எனக்குப் பயமா இருக்கு..."

அவன் அந்த யுவதியோட நெத்தியில முத்தமிட்டு "எதையும் நினைக்காம அப்படியே தூங்கு. எதாயிருந்தாலும் நாளை பார்த்துக்கலாம்." என்றபடி அணைத்துக் கொண்டான்.

எனக்கு அதற்கு மேல் பொறுமையில்லை. தம்பி என்று அந்தப் பையனை அழைத்தேன். அவனும் என்ன என்பது போல் திரும்பினான்.

"உனக்கு வயசு என்ன?"

"என்னோட வயசு உங்களுக்கு எதுக்கு மேடம்...?"

"சொல்லுப்பா..."

"பத்தொன்பது... ஏன்?"

"இரு... அவசரப்படாதே...படிக்கிறியா..."

"இல்லை..."

"ம்ம்... இவ படிக்கிறாளா...?

"ஆமா..."

"இந்த வயசுல வாழ்க்கையின்னாலே என்னன்னே தெரியாது. அப்புறம் எப்படி?"

"நீங்க என்ன சொல்லுறீங்கன்னு புரியலை..."

"புரியலையா... அதான் இழுத்துக்கிட்டு ஓடுறியே... குடும்பச்சுமையின்னா என்னன்னு தெரியுமா..?"

"இழுத்துக்கிட்டு ஓடுறேனா... என்ன சொல்லுறீங்க..."

"என்னப்பா புரியாத மாதிரி நடிக்கிறே... உன்னோட ஆசை தீரும் வரைக்காவது அவளை... "

"மேடம்..." அவனது கத்தலில் பேருந்துக்குள் இருந்த அனைவரும் எங்கள் பக்கம் திரும்பினர்.

"உண்மைய சொன்னா கத்துறே..." நானும் பதிலுக்கு கத்தினேன். அந்தப் பெண் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

"எதுங்க உண்மை... ஒரு பையனும் பொண்ணும் தனியா வந்தா காதலர்களாத்தான் இருக்கணுமா...?"

"காதலர்களா இல்லைன்னா நீங்க ஏன் இந்த நேரத்துல ஓடிவந்து ஏறணும்... அப்பா அம்மாவை மறந்து இவளுகளும் அரிப்பெடுத்து ஓடியாந்துடுறாளுங்க..." கோபத்தில் யோசிக்காமல் வார்த்தையை விட்டேன். அந்தப் பெண் அழ ஆரம்பித்தாள்.

"இப்ப அழு... ஆத்தா அப்பன் மொகத்துல கரியை பூசிட்டு ஓடியாரும் போது இனிச்சிருக்குமே..."

"பேச்சை நிறுத்துங்க மேடம். அப்புறம் மரியாதை கெட்டுடும். இவ யாரு தெரியுமா என் தங்கை... ஒரு பையனும் பொண்ணும் தனியா வந்தாளே காதலிக்கிறாங்கன்னு ஏன் நினைக்கிறீங்கன்னு தெரியலை. நீங்க மட்டும் இல்லை நாட்டுல முக்கால்வாசி பேர் அப்படித்தான் நினைக்கிறீங்க. அது ஏன்னே தெரியலை. தனியா வண்டியில போறது அண்ணன் தங்கையாக இருந்தாலும் உங்க பார்வைக்கு தப்பாத்தான் தெரியுது. அதனாலதான் இன்னைக்கு பெரும்பாலான அண்ணன் தங்கைகள் சேர்ந்து எங்கயும் போறதில்லை." 

எனக்கு என்னவோ போலாகிவிட்டது.சிறிது நிறுத்தியவன் மீண்டும் தொடர்ந்தான்.

"யாரையும் பர்ர்த்தவுடனே தப்பா எடை போடுறதை நிறுத்துங்க. எங்களுக்கு அம்மா இல்லை. அப்பா ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. சித்தி எங்களுக்கு நல்லவங்களா அமையலை. எவ்வளவு கொடுமை பண்ண முடியுமோ அவ்வளவும் பண்ணிட்டாங்க. அப்பா எதுவும் கேட்கிறதில்லை. நான் படிக்கலை. ஆனா இவ நல்லா படிப்பா. இப்ப இவ படிப்பக் கெடுத்து சித்தியோட சொந்தத்துல ஒரு குடிகாரனுக்கு கட்ட ஏற்பாடு நடக்குது. இவளை நல்லா படிக்க வைக்கணும். எங்க அம்மா செத்தப்புறம் எங்க அப்பா வேற கல்யாணம் பண்ணியதால மாமா வீட்டு உறவு அத்துப்போச்சு. எங்களையும் மாமா வீட்டுக்குப் போக விடலை... இருந்தாலும் மாமா உதவுவாருங்கிற நம்பிக்கையில அப்பாவும் , சித்தியும் பக்கத்து ஊரு விஷேசத்துக்கு போயிருக்கிற நேரத்துல யாருக்கும் தெரியாம மாமா ஊருக்கு கிளம்பிட்டோம்."

அவனுக்கு கண்ணீர் வந்தது... அந்தக் கண்ணீருக்கு காரணம் நான்தானே என்று நினைத்தபோது வெட்கமாய் இருந்தது. அந்தப் பெண் தனது தாவணியால் துடைத்தாள்.

எலலோரும் என்னை ஒரு புழுவைப்போல பார்த்தனர். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இதற்கு மேலும் பேசாமல் இருந்தால் குற்ற உணர்வு என்னை எரித்துவிடும் என்பதான் அந்தப் பையனின் கைகளை பிடித்துக் கொண்டு ' ஏனோ தெரியலை இந்த பார்வை நல்ல நோக்கத்துல பார்க்கிறதை விட கெட்ட நோக்கத்துலதான் அதிகம் பார்க்குது. எதையும் ஆழமாய் பார்க்காமல் அவசர கதியில் பார்ப்பதுதான் இத்தனைக்கும் காரணம்  என்னை மன்னிச்சுடுங்கப்பா... ' என்றபடி அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டேன்.

*2009-ல் எனது சிறுகதைகள் தளத்தில் எழுதியது மாற்றங்களுடன் இங்கே.

-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

vanathy சொன்னது…

super story.

பெயரில்லா சொன்னது…

சிறுகதை சிறப்பு. சூழ்நிலை அவ்வாறு.
கலிகாலம் பாருங்கள் . தவறாக நினைத்ததில்
தவறில்லை. ஆனால் என்ன மனதிற்குள்
புழுங்காமல் வெளியே கேட்டு தெளிந்து கொண்டார்களே ...
அந்த மட்டில் பரவாயில்லை தான் . இல்லையென்றால்
அவர்களைப் பற்றிய தவறான கண்ணோட்டம் மறைந்து இருக்காது.
ஆனால் மேடம் கேட்பதற்கு பதில்
சாராக இருந்திருக்கலாம். ஏனெனில்
வார்த்தைகள் விட்டதில் அவ்வளவு சூடு.

இராய செல்லப்பா சொன்னது…

நன்றாக இருக்கிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்தாலே செக்ஸ் உறவுதான் கண்முன்னால் வருகிறது. அண்ணன் தங்கை என்று எண்ணத் தோன்றுவதேயில்லை.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

சித்திகள் ஏன் கொடுமைக்காரிகளாகவேயிருக்கின்றனர்?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல சிறுகதை குமார்....

பகிர்வுக்கு நன்றி.

அ.பாண்டியன் சொன்னது…

சகோதரருக்கு வணக்கம்
சமூகம் பார்க்கும் தவறான பாதையை மிக அழகாக கண்முன் நிறுத்தி விட்டீர்கள். அண்ணனும் தங்கையும் ஒன்றாக செல்வதற்கே இவ்வளவு என்றால் தோழியுடன் செல்ல நேர்ந்தால் இந்த சமூகம் அவர்கள் மீது பல அவிழ்க்க முடியாத முடிச்சுகளைப் போட்டு விடும். அழகான பகிர்வுக்கு நன்றி..

செங்கோவி சொன்னது…

நல்ல கருத்து..நாம் அப்படி சிந்திக்கவே பழகியிருக்கோம்.

Asiya Omar சொன்னது…

பார்வைகள் பலவிதம்,ஒவ்வொன்றும் ஒரு விதம், நல்லவர்களைப் போல் நடிக்கும் நயவஞ்சகர்களை நம்பிவிடுவோம்,ஒன்றும் அறியாதவர்களை சந்தேகப் படுகிறோம்.இது தான் உலகம்.டக்கென்று உணர்ச்சி வசப்பட்டுஆராய்ந்து பார்க்காமல் முடிவுக்கு வருவது தவறு என்பதை அருமையாக உணர்த்தியது கதை.நானும் ஏதோ ட்விஸ்ட் இருக்கும் முடிவில் என்று எதிர்பார்த்தேன்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

கதை நல்லாருக்கு.

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

தொடக்கம் முதல் முடிவு வரை மிக அருமையாக சொன்னிர்கள்

சமுதாயத்தில் இருக்கும் ஒருவகையான பார்வையை எடுததுச்சொல்லிய விதம் நன்று
வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha.ma/2

துரை செல்வராஜூ சொன்னது…

உறவு முறைகளை வாய் மணக்க சொல்லி அழைத்தாலே பல பிரச்னைகள் தீர்ந்து விடும். இந்தக் கதையில் அவன் தோளில் சாய்ந்து கொள்வதும் நெற்றியில் முத்தம் இடுவதும் - தேவையில்லாத சந்தேகங்களைக் கிளப்பும் தானே!..

பனை மரத்தில் கீழ் இருந்து பால் குடிப்பது என்பார்கள். அதே போல்
கண்ணால் காண்பதும் பொய் என்பார்கள்.

அடுத்தவர்களைச் சொல்லிப் பயனில்லை. காலத்தின் கால்களை வாரி விடும் முயற்சியில் - நாமே தடுக்கி விழுகின்றோம்.

மகேந்திரன் சொன்னது…

கண்ணால் காண்பதும் பொய்...
என்பதற்கு மற்றுமொரு நிரூபணம் சகோதரரே...
அருமையான கதை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்றைய நிலை இப்படித்தான் ஆகி விட்டது... ம்... காலக் கொடுமை...