மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 24 நவம்பர், 2014

நண்பேன்டா : சந்தோஷ்


சென்னைக்கு வந்து நண்பர்களுடன் கோட்டூர்புரத்தில் தங்கியிருந்து பின்னர் தி.நகர் வேப்பேரி அம்மன் கோவிலுக்கு எதிரே நண்பன் ஒருவன் வைத்திருந்த அலுவலகத்தில் தங்க ஆரம்பித்தேன். அந்த இடம் அலுவலகம் போல் இருக்காது. அது ஒரு வீடுதான்... மாடியில் வீட்டு ஓனரும் அதற்கு மேலே சிலரும் குடியிருந்தார்கள். எங்கள் வீட்டிற்கு நுழையும் இடத்தில் ஒரு அடிபைப் வைத்து இருப்பார்கள். அதில் தண்ணீர் அடித்துப் பிடித்துத்தான் பாத்ரூமுக்கு பயன்படுத்த வேண்டும். அந்த வீடு காலையில் அலுவலகம்... மாலையில் தங்கும் இடம்.... நண்பன் குடும்பம் ஆதம்பாக்கத்தில் இருந்ததால் அவன் கிளம்பிவிட நான், சந்தோஷ், ராஜா, 2 ராஜேஷ் என ஐந்து பேர் தங்கியிருந்தோம். அந்த அலுவலகம் நடத்திய நண்பனும் நண்பேன்டாவில் வர வேண்டிய நண்பன்தான். ஆனால் இன்று பார்க்க இருப்பது சந்தோஷ் என்ற நடராஜனைப் பற்றி...

சந்தோஷ்... சின்னப் பையன்... அண்ணா என்றுதான் அழைப்பான். கம்ப்யூட்டர் டாக்டர் அவன்... அதாங்க ஹார்டுவேர் மெக்கானிக். சிரிக்கச் சிரிக்கப் பேசுவான்... மற்றவர்களிடம் இருக்கும் ஒட்டுதலைவிட என்னிடம் ரொம்ப பாசமாக இருப்பான். இவ்வளவுக்கும் நான் வரும் முன்னரே அவன் 2 ராஜேஷூடன் நெருக்கமாக இருந்தவன்தான்... என் நண்பனின் அறைக்கு எங்க ஊர் ராஜேஷ் மூலமாகத்தான் நான் வந்தேன். ஆரம்பத்தில் சிரிப்பான்... என்னங்க எப்படி வேலை போகுது என்பான்... அப்புறம் எதுவும் பேசமாட்டான்... கொஞ்ச நாளில் அண்ணா... அண்ணா... என ஒட்டிக் கொண்டான்.

மாலை ஆறு மணிக்கு பணி முடிந்து அறை வருவதற்கு ஏழு மணி ஆகிவிடும். அவனும் ஏழு எட்டு மணிக்குத்தான் வருவான். நல்ல திறமையான வேலைக்காரன்... கம்பெனியில் அவனை நன்றாக பயன்படுத்திக் கொள்வார்கள்... சம்பளம் என்று வரும் போது அவர்கள் கொடுப்பதுதான்... இவன் பெறுவதுதான்... இடையில் பெங்களூரில் ஒரு கிறிஸ்தவப் பள்ளி, தமிழகத்தின் மற்ற இடங்கள் என எல்லா இடமும் போய் வருவான். எங்கு சென்றாலும் இரவு மறக்காமல் என்னண்ணே பண்றீங்க... சாப்பிட்டீங்களா? அவனுக எங்கே? எனக் கேட்டு போன் செய்யாமல் இருக்க மாட்டான்.

பெரும்பாலும் இரவு அவர்கள் எல்லாருமே தண்ணி சாப்பிடுவார்கள்... நம்ம பயலுந்தான்... உக்காந்து குடிக்க ஆரம்பிச்சானுங்கன்னா பனிரெண்டு மணி வரைக்கும் ஓடும். இருந்த அஞ்சு பேர்ல நான் வெளியில் அமர்ந்து அருகே இருந்த பெட்டிக்கடை நண்பனிடம் புத்தகம் எடுத்து வாசித்துக் கொண்டிருப்பேன். இவர்கள் உள்ளே தண்ணி அடிப்பார்கள். நீ சாப்பிடுண்ணே... நாங்க அப்புறம் சாப்பிட்டுக்கிறோம் என்று சொல்லி விடுவார்கள். எங்கள் வீட்டிற்கு அடுத்து ஒரு ஒயின்ஷாப் அதனருகே ஒரு தள்ளு வண்டிக்கடை அங்கு இட்லியும் ஒரு ஆம்லெட்டும் சாப்பிட்டுவிட்டு வந்தாலும் இவர்கள் ஏதோ தீவிரமான விவாதத்தில் இருந்தபடி குடித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள்... எல்லோருமே நல்ல போதை... அதிலும் சந்தோஷ் நான் ஸ்டெடி... நான் ஸ்டெடியின்னு பின்னாடி நடக்கிறான்... இந்த இடத்தில் காரைக்குடியில் தங்கியிருந்த போது நிகழ்ந்த கதைதான் ஞாபகத்துக்கு வரும். அங்கயும் குடிதான்... நானும் மற்றொரு நண்பனும் வெளியே வராண்டாவில் உக்காந்திருக்க, உள்ளே தண்ணிப் பார்ட்டி ஜெகஜோதியா நடந்துச்சு... அப்புறம் என்னோட நண்பன் வந்து மாப்ள ரொம்ப ஓவராயிடுச்சு... நீங்க ரெண்டு பேரும் சாப்பிட எதாச்சும் வாங்கிட்டு வாங்கடான்னு சொல்ல ஸ்பெஷல் தோசை வாங்கியாந்து எல்லாரும் சாப்பிட உக்காந்தாச்சு. நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு எழுந்து விட்டோம். மற்றவர்கள் சாப்பாட்டோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க, போதை அதிகமான ஒரு நண்பர் நாஞ்ச் சால்ப்பிடுறேன்... ஆம்ம்ம்மா... இந்த்த்த்த்த டோசை எங்க்க்க வால்ங்குன்னே அப்படின்னு சொல்லிக்கிட்டே தோசைக்கு கீழ இருந்த பேப்பரை பிச்சு சாப்பிட ஆரம்பிக்க அடேய்... தோசையைத் தின்னுடான்னு சொல்லிப் பார்த்து ம்ஹூம் பலனில்லை... அவனைத் தூக்கி ஒரு பக்கமா படுக்கப் போட்டாச்சு. அப்பத்தான் அதுவரைக்கும் ஸ்டெடியா நின்னவன் எடுத்தான் பாருங்க வாந்தி... நானும் என்னோட நண்பனும் வாசனை தாங்க முடியாம ஓடி வெளிய வரண்டாவுல படுத்துக்கிட்டோம். இன்னொரு நண்பன் அந்தக் குடியிலும் எல்லாத்தையும் கழுவி துடைத்து பின்னர் படுத்ததாக காலையில் சொன்னான்.

சரி இந்தக் கதைக்கு வருவோம். அன்னைக்கு சந்தோஷ் புல்லா இருந்தான்... போதும்டான்னு மற்றவர்கள் சொன்னாலும் கேக்கலை... டேய் இன்னொரு பெக் ஊத்து அப்படின்ன் சொல்லி சண்டை போடுறான்... நான் வெளியில் இருந்து டேய் சந்தோஷ் என்னடான்னு கேக்கவும் டேய் அண்ணன் கோபப்படுது பாரு... சத்தம் போடாதீங்க... நீங்க தூங்குகண்ணே... இந்தா முடிஞ்சிருச்சு என குழறலாய் சொன்னான். பின்னர் சாப்பிட்டார்கள்... எப்பவும் எனக்குப் பக்கத்தில்தான் படுப்பான். அன்று நீ ரொம்ப போதையா இருக்கே அங்கயே படு என உள்ளே படுக்க வைத்தார்கள். படுத்து கொஞ்ச நேரம் இருக்கும்... எதோ ஒரு சத்தம் பார்த்தால் வாந்தி எடுத்து அப்படியே மயங்கிக் கிடக்கிறான்.. நான் எழுந்து வெளியே போய்விட்டேன். ராஜேஷ்தான் சுத்தம் செய்தான். அன்று இரவு பெரும்பாலான நேரம் வீதியில் கொசுக்கடியோடு வேடிக்கை பார்ப்பதில் கழிந்தது.

மறுநாள் மாலை வந்து அண்ணே என்றான்... என்ன நொண்ணே... போடா... போயி பாட்டில வாங்கியாந்து குடி அது மட்டுந்தானே உனக்கு வேணும்... அங்க அம்மா சாகக்கெடந்தாலும் உனக்கு குடிதான் முக்கியம்... மூக்கு முட்ட குடி... அப்புறம் வாந்தி எடுத்துக்கிட்டு அதுலே படுத்துக் கெட... என கோபமாகச் சொல்லவும் சத்தியமா இனி அதிகம் குடிக்க மாட்டேன்... என்று சொன்னான். அப்படியும் குடித்தான்... ஆனால் அளவோடு நிறுத்தியவன்... அப்புறம் வாரம் ஒரு முறைக்கு மாறினான். வாங்கும் சம்பளத்தை ஊருக்கு கொடுத்து விட்டு டைட்டான சூழலில்தான் வாழ்க்கை ஓடும். காலையில் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. மதியம் அலுவலகத்து அருகே ஒரு சிறிய மெஸ்ஸில் சாப்பாடு... இரவு வண்டிக்கடை... ஒரு சில நாட்களில் தி.நகர் போலீஸ் ஸ்டேசனுக்கு எதிரே இருந்த காரைக்குடி மெஸ்... இப்படித்தான் ஓடியது வாழ்க்கை.

ஒரு சில நாட்களில் அவனிடம் காசிருக்காது... காசே இல்லைண்ணே... எதாவது ஐந்து பத்து இருந்தா கொடுங்கன்னு சொல்லி வாங்கிக்கிட்டுப் போவான். இரவு சாப்பிடப் போகும் போது காலையிலேயே காசில்லைன்னு சொன்னானே என போன் அடித்தால் நீ குடுத்த காசில சிகரெட் குடிச்சாச்சு... காசில்லண்ணே... வந்து  தண்ணியக் குடிச்சிட்டு படுத்துட வேண்டியதுதான் அப்படிம்ப்பான்.. சரி வா சாப்பிடப் போவோம் என்று சொல்லி அவனுக்காக காத்திருப்பேன். ஒரு சில நாள் நாம ஓட்டாண்டியா இருப்போம்... அன்னைக்கு சாயந்தரம் எனக்குப் போன் பண்ணி அண்ணே... உங்கிட்டதான் காசில்லையில்ல... நா இங்க கொஞ்சம் வாங்கியிருக்கேன்... இருண்ணே வந்திருறேன்.. சாப்பிடலாம் என்று சொல்லி வந்து சாப்பிடக் கூட்டிச் செல்வான். இப்படித்தான் எங்கள் நட்பு அண்ணன் தம்பியாக நகர்ந்து கொண்டிருந்தது.

பின்னர் குடும்பம் சென்னை வர, நான் அலுவலகத்துக்கு அருகே முகப்பேரில் வீடு பிடித்து இருந்தேன். வீட்டிற்கும் அடிக்கடி வருவான். காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவனது அம்மாவும் இறந்து போக, பெங்களூரில் ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கு சிஸ்டம் சர்வீசுக்காகச் செல்லுவான் என்று சொன்னேனல்லவா... அங்கு இவனின் வேலை பிடித்துப் போன அந்தப் பள்ளியின் சிஸ்டர் அழைத்துக் கொண்டே இருக்க, சில மாத தயக்கத்துக்குப் பின்னர் கிளம்பிவிட்டான். அங்குதான் இன்னும் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. எப்போதாவது மின்னஞ்சல் அனுப்புவான். போன் நம்பர் அனுப்பி கூப்பிடு என்பான்... கூப்பிட்டால் ரொம்ப நேரம் பேசுவான். என்னடா வயசாயிக்கிட்டே போகுது கல்யாணம் பண்ணலையான்னு ஒரு முறை கேட்டேன். இங்க ஒரு பொண்ணை லவ் பண்றேன் என்றான்... டேய் நட்டு லவ்வெல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டியா என்றதும் போண்ணே எனச் சிரித்தான்.

பின்னர் ஒரு முறை பேசிய போது இப்பவே கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா... கொஞ்சம் ஸ்டெடி ஆயிக்குவோம்ன்னு சொன்னேன். அதுக்கப்புறம் ஒரு சின்ன பிரச்சினை... அத்தோட என்னைய விட்டு விலகிப் பொயிட்டா போனடிச்சாலும் எடுக்க மாட்டேங்கிறான்னு புலம்பினான். ரொம்ப சீரியஸா பேசவும்... நீ எப்பவும் ஸ்டெடிதானேடா எனச் சொன்னேன். அடப்போண்ணே... இப்பல்லாம் விட்டுட்டேன் தெரியுமா? என்றான். எனக்கென்ன தெரியும் உங்கூடவா இருக்கேன் என்று சொல்லிவிட்டு வீட்ல பொண்ணு பாக்கச் சொல்லுடா என்றதும் சொல்லிட்டேண்ணே... பாக்குறேன் பாக்குறேன்னு சொன்னானுங்க... இந்தத் தடவை போகும் போது மூணு பொண்ணு பாத்திருக்கோமுன்னு சொன்னானுங்க... பொண்ணு என்னடா பண்ணுதுன்னு கேட்டா... எல்லாமே மூணாங்கிளாஸ் படிச்சிட்டு மாடு மேய்க்கிதுக... அதுகள கட்டிக்கிட்டு... அதான் சொல்லாம கொள்ளாம எஸ்கேப் ஆயிட்டேன்னு சிரிச்சான்... உன்னைய நல்லா மேய்க்குங்கடான்னு சொன்னதுக்கும் சிரிப்பு.

இப்பக் கொஞ்ச நாளா போனும் இல்லை... மெயிலும் இல்லை... மறுபடியும் ஊடலான காதலியோடு கூடல் ஆயிருச்சோ என்னவோ... தன்னோட பசியோட என்னோட பசிக்கும் உணவாயிருந்தவன் சந்தோஷ்.... அண்ணன் அண்ணன் னு பாசத்துடன் மரியாதையும் கொடுத்தவன் சந்தோஷ்... கஷ்டம் என்று சொன்ன போதெல்லாம் எங்காவது பணம் புரட்டிக் கொண்டு வந்து கொடுத்து பின்னர் என்னிடமிருந்து திரும்பப் பெற்றவன் சந்தோஷ்... அம்மா... அம்மா என பாசமாய் அம்மாவுக்கு மருத்துவம் பார்த்தவன் சந்தோஷ்... எத்தனை வலிகள் இருந்தாலும் எந்த நேரமும் சிரிப்போடு இருந்தவன் சந்தோஷ்... எல்லாருக்கும் பிடிக்கும்படி வாழ்ந்தவன் சந்தோஷ்... அவனோட மனசுல புகுந்த அந்தப் பொண்ணு வாழ்க்கையிலும் அவனுடன் இணைந்து சந்தோஷமாக வாழணும்ன்னு இறைவனை வேண்டிக் கொள்கிறேன். 

நண்பேன்டா தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

Yarlpavanan சொன்னது…

சந்தோஷ் - நீ
இத்தனை உண்மைகளை
பரிவை சே.குமார் பகிர
கதாநாயகன் ஆகிவிட்டாய்!
நாம் படிக்கிறோம்
குமாரின் கைவண்ணத்தில்
நல்லெண்ணங்களை...

சிறந்த பதிவு
தொடருங்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பெயரைப் போலவே அவரது வாழ்வும் அமையட்டும்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சந்தோஷமான நட்பிற்குச் சொந்தக்காரரான அந்தச் சந்தோஷின் வாழ்வும் அவரைச் சந்தோஷமாக வைக்கட்டும்....அருமையான நடை

ஸ்ரீராம். சொன்னது…

நண்பர்களின் நினைவுகள் பொழுதுகளை இனிமையாக்குகின்றன. உங்கள் நண்பனின் வாழ்வு அவர் பெயருக்கேற்றவாறு சிறக்கட்டும். குடியை மட்டும் முற்றிலும் விட்டு விடச் சொல்லுங்கள்.

KILLERGEE Devakottai சொன்னது…


சந்தோஷுக்கு சந்தோஷமான வாழ்வு அமைய சந்தோஷமாக வாழ்த்துகிறேன்

தனிமரம் சொன்னது…

நண்பர் சந்தோசமாக இருக்க பிரார்த்திப்போம்.

தினேஷ்குமார் சொன்னது…

மகிழ்ச்சியான வாழ்க்கை அமையட்டும் நண்பன் சந்தோசுக்கு ...
அண்ணே கொஞ்சூண்டு சென்னைய சுற்றிப்பார்த்தேன் அடிபைப்பும் அதனடுத்த வீடும் தள்ளு வண்டி இட்லி எல்லாம் அப்படியே மனசுல ஓடிட்டே இருக்கு....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உங்கள் எழுத்தும் எண்ணப் பகிர்வும் உங்கள் நண்பருக்கு நல்வாழ்வை அமைக்கத் துணைபுரியும்.

ezhil சொன்னது…

மகிழ்ச்சியை மனதில் கொண்டவர் எப்பொழுதும் மகிழ்ச்சியுடனிருக்க வாழ்த்துக்கள்