மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 28 பிப்ரவரி, 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 22)

முந்தைய பகுதிகள் :



"இல்லம்மா... கண்ணண்ணே அந்தாளு கால்ல விழுந்து..." அவன் முடிக்கும் முன்னர்...

"என்ன கண்ண கால்ல விழுந்தானா...?" - காளியம்மா

"இவன் எதுக்குடா அவன் கால்ல..." - மணி.

"மாமா... கால்ல விழுந்தாகளா?" - அபி.

"கண்ண மச்சானுக்கு என்ன கிறுக்கா... அந்தாளு வரலைன்னா போகட்டுமே... வந்து என்னத்தை தாங்கப் போறாரு..." - சித்ரா.

"கண்ணா... அடேய் கண்ணா..." வாசலில் நின்று கத்தினார் கந்தசாமி.

இனி...

'கண்ணா... அடேய் கண்ணா...' என கந்தசாமி கத்தவும் பொங்கல் வைப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்த மனைவிக்கு சுப்பிக்கட்டை எடுத்துக் கொண்டு வந்து வைத்த கண்ணன் 'எதுக்கு இப்படி கத்துறாரு... ' என்று நினைத்தபடி 'இந்தா வாறேன் சித்தப்பா' என்று திருப்பிக் கத்தினான்.

மனைவியிடம் "இரு எதுக்கோ கத்துறார்... என்னன்னு கேட்டுட்டு வாறேன்...." என்றவன் இடுப்பில் கட்டியிருந்த துண்டை எடுத்து வியர்வையைத் துடைத்தபடி செல்ல, வாசலில் நின்ற கந்தசாமியின் முகம் கடுகடுவென்று இருப்பதைப் பார்த்ததும் 'என்ன பிரச்சினையோ தெரியலையே' என்று நினைத்தபடி "என்ன சித்தப்பா?" என்றான்.

"தம்பி சொல்றது உண்மையா?"

"என்ன சொன்னான்... எது உண்மையா...? அடியுமில்லாம... முடியுமில்லாம கேட்டா எனக்கு என்ன சித்தப்பா தெரியும்?"

"நடிக்காதடா... அங்க என்ன நடந்துச்சு?" கோபமாகக் கேட்டார்.

'அட அந்த லூசுப்பய் இங்க வந்து சொல்லிட்டானா... இவரு விடமாட்டாரே' என்று நினைத்தவன் "அதுவா... உள்ள வாங்க சித்தப்பா சொல்றேன்..." என அவரை விலகிக் கொண்டு உள்ளே செல்ல, அவனது கையைப் பிடித்து இழுத்து நிறுத்தியவர் "என்ன நடந்துச்சுன்னு சொல்லிட்டுப் போ" கத்தினார். இவரின் சத்தம் பெரிதாவதைக் கேட்டதும் பொங்கல் வைக்கப் போன கண்ணகி அப்படியே வைத்து விட்டு முந்தானையில் கையைத் துடைத்தபடி வேகமாக அங்கு வந்தாள்.

"இப்ப என்ன சித்தப்பா அங்க என்ன நடந்துச்சுன்னுதானே சொல்லணும்... உள்ள வாங்க சொல்றேன்... எல்லாரும் பாக்குறாங்க... நம்ம வீட்டு விஷயம் நாலு பேரு நாலு விதமாப் பேசணுமா என்ன.... வீட்டுக்குள்ள வச்சிப் பேசுவோமே" என்றான் மெதுவாக... அவனின் கைப்பிடியை விட்டவர், "இந்தப்பய என்ன பண்ணிட்டு வந்திருக்கான் தெரியுமா... வாத்தா நீயும் வந்து என்ன பண்ணுனான்னு தெரிஞ்சிக்க... நம்ம வீட்டுப் புள்ளைக நாலும் நாலு விதம்... " என கண்ணகியிடம் சொல்லியபடி அவன் பின்னே சென்றார்.

மணி நிலைப்படியில் அமர்ந்திருக்க, அவனுக்கு அருகே அமர்ந்திருந்த குமரேசன் இவனைப் பார்த்ததும் எழுந்தான். காளியம்மாள் அடுப்படி சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருக்க சித்ராவும் அபியும் அடுப்படி வாசலில் நின்று கொண்டிருந்தார்கள்.

"என்னடா வந்ததும் வத்தி வச்சிட்டியா..?" குமரேசனிடம் கடுப்படிக்க, அவன் பேசாமல் நின்றான்.

"அவனுக்கிட்ட ஏன்டா கத்துறே..? சொல்லு என்ன நடந்துச்சு..."

"என்ன நடந்துச்சு... என்ன நடந்துச்சுன்னா... உச்சாணிக் கொம்புல ஏறி இருக்கவரை இறங்கி வர வைக்கணுமின்னா நாம உச்சாணிக் கொம்புல ஏறுனா சரியா வராது... நாம் கீழ இருந்து அவரை இறங்கி வர வைக்கணும்... அதைத்தான் நான் செஞ்சேன்..."

"என்னடா... செஞ்சேன்... செஞ்சேன்னா... என்ன செஞ்சே அதை உன் வாயால சொல்லு..." மணி கத்தினான்.

"இப்ப எதுக்குண்ணே அவரு மாதிரி நீயும் கத்துறே...? அதான் அவன் சொல்லிட்டானுல்ல... அப்புறம் நா வேற சொல்லணுமாக்கும்... சும்மா இருண்ணே..." 

"என்ன நடந்துச்சுன்னு சொல்லுடான்னா... அதைவிட்டுட்டு ஒவ்வொருத்தனுக்கிட்டயும் கத்துறே...?" கந்தசாமி கோபமாகக் கேட்டார்.

"சித்தப்பா... நம்ம கண்மணி வீட்டுக்காரரைப் பற்றித்தான் எல்லாருக்குந் தெரியுமே... ஆரம்பத்துல இருந்து விடாப்பிடியா நின்னாரு... எவ்வளவோ பேசிப்பாத்தோம்... ஏன் ஆச்சர்யமா அந்த அயித்தை கூட நமக்கு ஆதரவாப் பேசுச்சு... எல்லாத்துக்கும் பதில் சொல்லிக்கிட்டு முறுக்கிக்கிட்டு நின்னாரு... அவரை இறங்க வைக்க அதைவிட வேறு வழி தெரியலை... அதான் கால்ல விழுந்தேன்..."

"யாரு கால்ல யாருடா விழுகுறது...?" காளியம்மாள் கோபமாய்க் கேட்டபடி எழுந்தாள்.

"ஐய்யோ... சின்னம்மா... இப்ப என்ன வந்துச்சு... சபையில யார் கால்லயாச்சும் விழுந்துட்டு வந்தா கேவலம்... நான் தங்கச்சி வீட்டுக்காரர் கால்ல அவங்க வீட்லதானே விழுந்தேன்... உங்களுக்குத் தெரியுமா... அவரே என்ன மச்சான் நீங்க எங்கால்லன்னு பதறிட்டாரு... அப்புறம் தான் எங்ககிட்ட ஓழுங்க பேசினார்.... இங்க வாறேன்னு சொன்னார்..."

"அதுக்காக... அன்னைக்கு அவரு பண்ணுனது தப்புன்னு தெரிஞ்சும் பொண்ணக் கொடுத்துட்டோம்ன்னு சண்டைக்குப் போன இவனுகளைத் திட்டிக்கிட்டு இருக்கேன்... இவனுக இல்லை எவனா இருந்தாலும் கூடப் பொறந்தது கண்ணக் கசக்கிக்கிட்டு வந்து நின்னா அப்படித்தான் நடந்துப்பானுங்க... அந்தப் பிரச்சினையப்போ நீ இல்லை... மாமியா வீட்டுக்குப் போயிருந்தே... கோபம் வராத நீயே திரும்பி வந்து என்ன சொன்னே... அந்தாளை வெட்டாம ஏண்டா வீட்டீகன்னு கேட்டே... கேட்டேல்ல... ஏன்னா கூடப்பொறந்தவளுக்கு பிரச்சினை... கொஞ்ச நாளைக்கு அப்புறந்தானே என்ன இருந்தாலும் அவரை அடிக்கப் போயிருக்கக்கூடாதுன்னு இவனுங்களைத் திட்டினே..."

"ம்..."

"அவரு கால்ல நீ எதுக்குடா விழுகணும்... அதுக்காகவா உன்னைய அனுப்பினேன்..."

"ஐய்யோ சித்தப்பா... இப்ப என்ன நடந்துச்சு... விடுங்க... எல்லாம் நல்லா முடிஞ்சிருச்சு..."

"எல்லாம் முடிஞ்சிருச்சு... எல்லாம் முடிஞ்சிருச்சின்னு சொல்றே... அந்தாளு கால்ல போயி விழுந்துக்கிட்டு... போடா..."

"சித்தப்பா... நா உங்க பிள்ளை... எது செஞ்சாலும் நல்லதுக்குத்தான் செய்வேன்... எதுக்கு இப்ப எல்லாரும் முகத்தைத் தூக்கிக்கிட்டு உக்காந்திருக்கீக... பொங்கலை வைக்க ஆரம்பிங்க... நல்ல நேரம் முடிஞ்சிடப்போகுது... நீ வா... நம்ம பொங்கலை வைப்போம்.." என்றபடி கந்தசாமியின் கைகளைப் பிடித்து "எல்லாம் நல்லதுக்குத்தான்... டென்சனாயி எங்களை ஆஸ்பத்ரிக்கு ஓட வச்சிடாதீங்க... சந்தோஷமா இருங்க..." என்று கிளம்பினான்.

"இவனைப் பாத்தியாலா... கால்ல விழுந்துட்டு வந்து அதுக்கும் கதை சொல்றான்... என்ன பிள்ளை இவன்..." என்று காளியம்மாளிடம் சொன்னவர் "ஆத்தா பொங்கலை வையிங்க... " என்றபடி கண்ணைத் துடைத்துக் கொண்டு தண்னீர் மோந்து குடித்து விட்டு புகையிலையை வாயில் அதக்கினார்.

"ஏங்க அவரு கால்ல எதுக்கு விழுந்தீக..." கோபமாய்க் கேட்டாள் கண்ணகி.

"ஆமா அவரு விட்டுட்டாரு... அடுத்து நீ கேளு... வேலையைப் பாரு..."

"அதுக்காக... எம்புருஷன் எவன் கால்ல வேணுமின்னாலும் விழுகட்டும்ன்னு விட்டுட்டு இருக்கச் சொல்றீங்களா... நீங்க என்ன தப்புங்க பண்ணுனீங்க... அந்தாளு கால்ல விழ.... தப்புப்பண்ணின குமரேசன்தானே விழுந்திருக்கணும்..."

"அட சும்மா இருக்க மாட்டே... அவன் விழுந்தா என்ன நான் விழுந்த என்ன... இப்ப எதுக்கு இந்தப் பேச்சு..."

"எல்லாருக்கும் நல்லவகளா இருந்தா தலையில மொளகாய் அரச்சிருவாங்க பாத்துக்கங்க..."

"இப்ப என்ன... எதுக்கு தேவையில்லாம பேசுறே... விட்டுட்டு பொங்க வைக்கிற வேலையப் பாரு..."

"யாருக்காகவோ எம் புருஷன் அடுத்தவனோட கால்ல விழுகுறது எனக்குப் பிடிக்கலை..."

"சரி... சரி... யாருக்காகவோ விழுகலையே... நம்ம குடும்பத்துக்காகத்தானே விழுந்தேன்... விடு..."

"என்ன விடு கற்பகத்தாச்சி புருஷன் பிரச்சினை பண்ணியிருந்தா குமரேசனோ இல்ல மணி மச்சானோ அவரு கால்ல விழுவாங்களா?"

அவளின் கேள்வி சுருக்கென்று உரைக்க, "இங்க பாரு... அவங்க விழுறாங்களா... இவங்க விழுறாங்களான்னு எனக்குத் தெரியாது... எனக்கு எல்லாரும் நல்லா ஒத்துமையா இருக்கணும்... அதுதான் வேணும்... நீ எங்கப்பாவைப் பாத்ததில்லை... எங்கம்மா நீ வந்த கொஞ்ச நாள்ல போயிருச்சு... எனக்கு... உனக்கு... ஏன் நம்ம புள்ளகளுக்கு எல்லாருக்குமே அவுக ரெண்டு பேருந்தான் எல்லாமே.... இன்னைக்கி வரைக்கும் சித்ரா வேற, அபி வேற, நீ வேறன்னு பிரிச்சிப் பாத்திருக்காங்களா..? இல்ல மணிதான் முக்கியம் குமரேசந்தான் முக்கியம்ன்னு சொல்லியிருக்காரா... அவரைப் பொறுத்தவரை எல்லாமே நாந்தான்... எங்க சித்தப்பா மகனைக்கூட தள்ளித்தான் பாப்பாரு... ஏன்னா அவன் ரொம்ப ஒட்டமாட்டான்... என்னைய மகனா... தகப்பனாப் பாப்பாரு... நா என்ன சொன்னாலும் சரியா இருக்கும்ன்னு சொல்லி எதுக்குமே என்னத்தான் போகச் சொல்லுவாரு... இதே பெரியத்தானுக்கிட்ட உங்க மச்சான்கள்ல கண்ணதாசனை மாதிரி நீங்க பாக்கவே முடியாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்காரு... உனக்கு முன்னாடிக்கூட சொல்லியிருக்காருல்ல... இப்பக்கூட நா அந்தாளு கால்ல விழுந்துட்டு வந்துட்டேன்னதும் அந்தக் குடும்பமே குதிச்சிச்சி... குமரேசன்... எங்கூடத்தான் வந்தான்... நீ பண்ணியிருக்கக் கூடாதுண்ணேன்னு புலம்பிக்கிட்டு வந்தான்.... இங்க வந்து சின்னப்பிள்ளை மாதிரி அழுதுருக்கான்... இதுதான்டி பாசம்... இதுதான் எனக்கு வேணும்... பாத்தியே அந்த மனுசன் கத்துனதை... அவரு கத்துனாருன்னு தெரியும்... அழுதாருடி... அழுதாரு... அது எனக்கு மட்டுந்தான் தெரியும்... உன்னைய மருமகளா இல்லாம மகளாப் பாக்குறாங்க... இந்த பிரச்சினையில விரிசல் வர நீ காரணமாயிராதே... என்னைப் புரிஞ்சவ நீ... உன்னைப் புரிஞ்சவன் நான்.... உன்னோட வலி தெரியுது... விடு... எல்லாம் நல்லதுக்குத்தான்..." சித்தப்பா வீட்டுக்கு கேக்காதவாறு மெதுவாகவும் இல்லாமல் வேகமாகவும் இல்லாமல் படபடவென்று கண் கலங்க கண்ணதாசன் பேசினான்.

அவன் கலங்கவும்... நல்ல நாளும் அதுவுமா இதுவரைக்கும் கலங்காத மனுசன் நம்மளால கலங்கிட்டாரே... ஆத்தாளுக்கு ஆத்தாவா அப்பனுக்கு அப்பனா என்னையத்தானே பாப்பாரு... அவரு சொல்ற மாதிரி மாமா, அத்தை பிரிச்சிப் பாக்கலையே... ஏன் மணி மச்சான், குமரேசன், வீட்டுக்கு வந்த சித்ராக்கா, அபி யாருமே இவரைப் பிரிச்சிப் பாத்ததில்லையே... கோழிக் குழம்பு வச்சாக்கூட நாட்டுக்கோழி ரசம்ன்னா அந்தப்பய நல்லாச் சாப்பிடுவான்னு சொல்லி கத்திக்கிட்டே இருந்து சாப்பிட்டாத்தானே விடுவாரு... நான் ஏன் இப்படி பிரிச்சிப் பாத்தேன்... சை... பொட்டச்சி மனசு எதையுமே யோசிக்கிறதில்லைதான்... எடுத்தோம் கவித்தோம்ன்னு பேசினா... என யோசித்தவள். "சரி விடுங்க... ஏதோ பேசிட்டேன்..." என்றபடி பொங்கலை ஆரம்பிக்க சுப்பியை ஒடித்தவள் கையில் முள் குத்தி ரத்தம் வர. "ஏய் அசடு... கையில முள்ளைக் குத்திக்கிட்டு..." என்று அவளின் விரலை வாயில் வைத்து ரத்தத்தை உறிஞ்சியவன் "நீ தள்ளு நான் அடுப்பை பாக்குறேன்... அரிசியை கலைஞ்சி பாலை எடு..." என இதுவரை எதுவுமே நடக்காதது போல் கண்ணதாசன் பேச, "எப்படிங்க உங்களால் இப்படி இருக்க முடியுது..." என அவன் தலை கலைக்க, அங்கே ஆனந்தப் பொங்கல் பொங்க ஆரம்பித்தது.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

சினிமா: ஆவி முதல் தாமரை வரை

காதல் போயின் காதல்

ண்பர் கோவை ஆவி அவர்களின் முதல் குறும்படம் காதல் போயின் காதல், 10 நிமிட படத்திற்கான கதைத் தேர்வு சிறப்பு. கடந்த காலம் மற்றும் நிகழ்கால காட்சி எடிட்டிங்கில் கலக்கியிருக்கிறார்கள். வலை நட்புக்களால் ஷைனிங் ஸ்டார் என பட்டம் பெற்ற நாயகன் சீனுவுக்கு இரண்டு விதமான கெட்டப்புக்கள்... தனுஷ் பாணி அமுல் பேபியாய் காதலன்... வாழ்வே மாயம் கமல் போல் தாடியுடன் இன்றைய நாயகனாய்... இரண்டிலும் நன்றாகச் செய்திருக்கிறார். பாவம் நாயகி சாக்லெட் சாப்பிடும் போது இவருக்கும் கொடுத்திருக்கலாம். அமுல்பேபி அல்லவா... அதனால் பரிதாபமாய் அமர்ந்திருக்கிறார். 

நாயகி மதுவந்தி நல்ல தேர்வு. முகத்தில் உணர்ச்சிகளை அழகாகக் காட்டுகிறார். ஷைனிங்கை ஓவர்டேக் பண்ணி முதலிடத்தில் அமர்ந்து விடுகிறார் என்பதை சொல்லாமல் விடமுடியாது. நம்ம குடந்தை சரவணன் அண்ணன் காரில் வந்து கோபமாய் பேசுகிறார்... மனசருக்குள் இம்புட்டுக் கோபம் இருக்கா என்று நினைக்கத் தோன்றியது. அப்புறம் துளசிதரன் சார்... பார்க்கில் டீக்கடை வைத்திருப்பவராக... நன்றாகச் செய்திருக்கிறார்... மற்றும் அரசன் உள்ளிட்ட நண்பர்கள் ஆரம்பக் காட்சியில் வருகிறார்கள். படம் முழுவதும் வரும் ஸ்கூல்பையனின் மகன் கடைசியில் ஒரு வரி வசனம்  பேசினாலும் நச். 

ஆரம்பக் காட்சியில் நண்பர்களின் பேச்சு செயற்கையாக இருந்தது. மற்றபடி குறையொன்றும் சொல்ல முடியாத அளவுக்கு கதை நகர்த்தல் அருமை. சரவண அண்ணனின் முதல் குறும்படத்தில் இணைந்த இந்தக் குழு அதில் கொஞ்சம் சறுக்கியிருந்தது. இதில் தங்கள் தவறுகளைச் சரி செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இயக்குநராய் ஜெயித்திருக்கும் ஆவிக்கு இன்னும் நிறைய வெற்றிகள் குவிய வாழ்த்துக்கள். சொல்ல மறந்துட்டேன்... படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் வரும் பாடலை ஆவியும் கீதா மேடமும் பாடியிருக்கிறார்கள்... அருமையான பாடல்...படத்திற்கான இணைப்பு கீழே... கண்டிப்பாக பாருங்கள்... ரசிப்பீர்கள். 



சண்டமாருதம்

வில்லன், கதாநாயகன் என இரட்டை வேடத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். சரத்தின் கதைக்கு க்ரைம் நாவல் நாயகர் ராஜேஷ்குமார் திரைக்கதை, வசனம் எழுதியதால் படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஓவியா, மீரா நந்தன் என இரண்டு நாயகிகள். நாயகனின் நண்பனாக, போலீஸ் ஆபிசராக வந்து வில்லனிடம் குத்துப்பட்டு சாகும் சமுத்திரக்கனி வீணடிக்கப் பட்டுள்ளார். இசை நாயகன் எஸ்.ஜே.சூர்யாவை பைத்தியம் ஆக்குவதற்காக நடக்கும் நாடகங்கள் போல இவரை ஏமாற்ற வில்லனின் நாடகங்கள். அரதப் பழசானவை. வில்லனின் நண்பனாக ராதாரவி  மற்றும் டெல்லிகணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி என நடிகர் கூட்டம். 

அட்டகாசம் செய்யும் வில்லனின் தீவிரவாத செயலை போலீஸ் அதிகாரியான நாயகன் எப்படி முறியடிக்கிறார் என்ற அரதப்பழசான கதையினை ராஜேஷ் குமாரின் அறிவியல் யுக்திகளோடும் பகவத் கீதையினை நுழைத்து ஒரு விறுவிறுப்பான படமாகக் கொடுக்க நினைத்து பழைய படம் பார்ப்பது போன்ற உணர்வை மாற்றமுடியாமல் தோற்றிருக்கிறார்கள். போலீஸாக வரும் ஓவியாவுக்கு சரத்குமாருடன் படுகவர்ச்சியாக ஒரு பாட்டு மட்டுமே... 


படம் வெளிவருமுன்னர் சரத்குமாருடன் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறீர்களே என்று ஒரு பேட்டியின் போது கேட்கப்பட்டது. அதற்கு வில்லன் சரத்குமாரைப் பிடிக்கும் போலீஸ் ஆபீசராக நடிப்பதால் அவருடன் கவர்ச்சியாக ஒரு டான்ஸ், கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன் என்று சொல்லியிருந்தார். ஆனால் படத்தில் திருமணம் நிச்சயம் ஆன போலீஸ் ஆபீசர் சரத்குமாருடன் இவர் ஆடுவதாக காமெடியன் இமான் அண்ணாச்சி கனவு காண்கிறார். இங்கே எங்கே வில்லனைப் பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அரதப்பழசான கதையாக இருந்தாலும் கொஞ்சம் நகைச்சுவை, எனது ஆதர்ஷ எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திரைக்கதை என படம் ஒருமுறை பார்க்கலாம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

அனேகன்

ந்தப் படத்தை அனேகமாக எல்லோரும் பார்த்திருப்பீங்க... முன் ஜென்மக் கதைகளுடன் நிகழ்கால கதையை இணைத்து அருமையான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தனுஷூக்கு நாலு விதமான கதாபாத்திரம்... அதில் 'டங்கா மாரி ஊதாரி...' காளியின் கதாபாத்திரமே முதலிடத்தில்.... மனுசன் புகுந்து விளையாண்டிருக்கிறார். நாயகியைச் சுற்றி கதை பயணிப்பது போல் படங்கள் எல்லாம் இப்போது தமிழ் சினிமாவில் வருவதில்லை. பெரும்பாலும் நாயகிகள் ஊறுகாயாக மட்டுமே வருவார்கள். ஆனால் இதில் கதை நாயகி அமைராவைச் சுற்றியே நகர்கிறது. ஆரம்பத்தில் இவருக்குப் பதிலாக வேறு நடிகையைப் போட்டிருக்கலாமோ என்று தோன்றினாலும் போகப்போக சரியான தேர்வுதான் என்று சொல்ல வைத்துவிடுகிறார். இவருக்கும் காளியின் காதலியாக வரும் ஐயராத்துப் பொண்ணு கதாபாத்திரம்தான் முதலிடம் பிடிக்கிறது. 


வில்லனாக கார்த்திக், அடாவடி வில்லத்தனம் செய்யும் கதாபாத்திரம் இல்லை என்றாலும் நன்றாக செய்திருக்கிறார். கடைசிக் காட்சியில் தனுஷ் இவரை இமிடேட் பண்ணி வசனம்  பேசும்போது மனுசன் உண்மையிலேயே சிரிச்சிக்கிட்டு ரசிச்சிட்டாரு போல... வில்லத்தனத்துக்கு ஒரு குரூரம் வேண்டாம்... சிரிக்கிற கார்த்திக்கைப் பார்த்ததும் நமக்கு 90களின் கதாநாயகன் கார்த்திக் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறார். நானும் நகைச்சுவை நடிகன்தான் எனச் சொல்லிக் கொள்ளும் ஜெகன், வெறுப்பேற்றுகிறார். பாடல்கள் அனைத்தும் அருமை. வித்தியாசமான கதைக்களத்தில் எல்லாக் கதைகளையும் இணைத்து  இரண்டாம் உலகத்தில் செல்வ ராகவன் சொல்லத் தவறியதை எல்லாரும் புரியும்படியாகச் சொல்லி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் கே.வி. ஆனந்த். அனேகன் அருமையான படம். தனுஷூக்கு அமர்க்களமான வெற்றி.

இசை

ரண்டு இசையமைப்பாளர்களுக்கு இடையேயான யுத்தமே படம். ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தாலும் கதை கொஞ்சம் வித்தியாசமாகப் பயணிப்பதால் இசை ரசிக்க வைக்கிறது. பாடல்கள் நன்றாக இருக்கிறது. குஷி, வாலி கொடுத்த எஸ்.ஜே. சூர்யா இயக்குநராக தொடரும் பட்சத்தில் நல்ல படங்களைக் கொடுக்கலாம். இனியும் நாயகன் முயற்சி வேண்டாம் என்றே சொல்லத் தோன்றுகிறது. தகடு தகடு, அல்வா அமாவாசை கதாபாத்திரங்களில் வில்லத்தனம் செய்த சத்தியராஜ்க்கு இதில் அந்தளவுக்கு வில்லத்தனம் இல்லை என்றாலும் தனக்கான இடத்தை அழகாக நிரப்பியிருக்கிறார். அதுவும் கஞ்சா கருப்பிடம் இவர் செய்யும் காமெடி கலந்த வில்லத்தனம் அருமை. நாயகி நல்ல தேர்வு. படமும் போரடிக்காமல் போகிறது.

ஷமிதாப்

மிதாப் - தனுஷ் நடிப்பில் வந்த படம் 'ஷமிதாப்'. சிறுவயது முதலே சினிமாவில் நடித்து பெரியாளாக வரவேண்டும் என்ற வெறியோடு இருக்கும் வாய் முடியாத இளைஞன், அதில் வெற்றி பெற்றானா? எப்படி வெற்றி பெற்றான்? என்பதுதான் படத்தின் கதைக்களம். படம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப கதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தா படத்துக்கு விமர்சனம் எப்ப எழுதுறான் பாருங்கிற விமர்சனம் வரும். இதில் வாய் பேச முடியாத தனுஷூக்கு குரல் கொடுப்பவராக அமிதாப். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஒரு ஈடுபாட்டோடு நடிக்கும் நடிகன் தனுஷ், இதில் அமிதாப்பின் குரலுக்கு அழகான முகபாவனையோடு அவர் வாய் அசைக்கும் போது ஆரம்பத்தில் தனுஷின் குரல் இல்லாமல் வித்தியாசமாகத் தெரிய, பின்னர் அந்தக் குரலும் தனுஷின் நடிப்பும் இணைந்துவிட கலக்கல்தான்... 


அமிதாப் - பரட்டைத் தலையுடனும் அழுக்கு உடையுடனும் சுடுகாட்டில் படுத்திருக்கும் மனிதர், குரல் கொடுக்க வந்து தன்னோட குரலால் அவனுக்கு பணமும் புகழும் கூடுதே.. என்னோட குரல் இல்லை என்றால்... என மனசுக்குள் புழுங்கி, தண்ணி, விஸ்கி பற்றி பேசி... பிரிந்து... மீண்டும் சேருகிறார். மனுசன் நடிப்பில் கலக்கியிருக்கிறார். அதுவும் இறுதிக் காட்சியில் சூப்பர்... அமிதாப்போட்டு போட்டி போட்டு நடித்திருக்கிறார் தனுஷ்... அமிதாப்பை மிஞ்சிவிட்டார் தனுஷ்... என்றெல்லாம் படம் வெளியானபோது விமர்சனங்கள் வந்தன. என்னைப் பொறுத்தவரை அனுபவஸ்தன் அமிதாப் தனது அருமையான நடிப்பால் தனுஷை பின்னுக்குத் தள்ளிவிட்டுட்டார். என்ன நடிப்பு... மனுசனுக்கு அந்த கரகரப்பான குரல்தான் பிளஸ்பாயிண்ட். 

அமிதாப், தனுஷ் என்ற நடிப்புச் சிகரங்களுக்கு இடையே கேபிள் சங்கர் அண்ணா எழுதியது போல நம்ம நடிப்புக்காரன் மகள் தனக்கான வாய்ப்பில் தோணியின் ஹெலிகாப்டர் ஷாட் விட்டிருக்கிறார். இறுதிக் காட்சியில் அமிதாப்பின் தண்ணி, விஸ்கி வசனத்தைப் பேசி அவரைத் திட்டுமிடத்தில் நன்றாகச் செய்திருக்கிறார். பின்னணி இசையில் என்றும் ராசா நம்ம இளையராஜா என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.  தமிழரான பால்கியின் இயக்கத்தில் வித்தியாசமான கதையம்சத்துடன் வெளிவந்த ஷமிதாப் அருமையான படம்.

கவிஞர் தாமரை

ன்னை அறிந்தால் படத்தில் எல்லாப் பாடல்களும் அருமையாக இருந்தாலும் என்னை கவர்ந்த இரண்டு பாடல்கள் 'மழை வரப் போகுதே....' மற்றும் 'உனக்கென்ன வேண்டும் சொல்லு...'. வரிகளுக்கு இடையே புரியாத வார்த்தைகளோ அர்த்தமற்ற வார்த்தைகளோ இன்றி அழகான கவிதை வரிகளைக் கொடுப்பதில் கவிஞர் தாமரைக்கு நிகர் தாமரைதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். கவிஞர் தாமரையை வாழ்த்துவோம்.


-சினிமா செய்திகள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை

நாங்கள் சின்னப் பிள்ளைகளாக இருக்கும் போது எங்கள் ஊரில் இருந்து ஒரு கூட்டமாக பழனிக்கு நடைப்பயணம் செய்வார்கள். தினமும் மாரியம்மன் கோவிலில் பஜனை, அதன் பின் சுண்டலோ, பொங்கலோ அல்லது மிட்டாயோ கொடுப்பார்கள். பழனிக்கு கிளம்புவதற்கு முதல் நாள் இரவு பஜனை முடித்து இரவு சாப்பாடு முடிந்ததும் வீட்டில் சொல்லிக் கொண்டு கிளம்பி மாரியம்மன் கோவிலில் போய் படுத்திருப்பார்கள்.  மறுநாள் அதிகாலையில் எழுந்து குளித்து தீபம் பார்த்து அரோகரா போட்டபடி கிளம்பிப் போவார்கள். எங்க அப்பா தொடர்ந்து பல வருடங்கள் போய் வந்தார். பஞ்சாமிர்தத்துக்காகவும் சுவாமி டாலருக்காகவும் அவர் எப்போது வருவார் என்று காத்திருப்போம். பழனிக்கு மாலை போட்டிருப்பவர்கள் எல்லாரும் மாரியம்மன் கோவிலில் தங்க முடியாது என்பதால் கோவிலை ஒட்டி கொட்டகை போட்டு படுப்பார்கள். மாலை போட்டது முதல் கோவிலில் படுக்கும் சாமிகளும் உண்டு.


தேவகோட்டையில் இருந்து ஏழு நாள் நடைப்பயணம்... முதல் நாள் தேவகோட்டையில் இருந்து கிளம்பி மாலை குன்றக்குடி செல்லும் வரை வழி நெடுகிலும் எதாவது கொடுப்பார்கள். அதை வாங்குவதற்கென்று கையில் மஞ்சள் பையுடன் குன்றக்குடி வரை நடப்பவர்களும் உண்டு. தேவகோட்டையில் இருந்து வரும் நகரத்தார் காவடிக்கு பழனியில் சிறப்பு வரவேற்பும் மரியாதையும் உண்டு. மாலையிட்டவர்கள் ஏழு நாள் நடந்து முருகனைத் தரிசித்து பின்னர் பேருந்தில் திரும்புவார்கள். ஆனால் நகரத்தார் காவடியோ போகும் போது நடப்பது போல் வரும்போதும் நடந்தேதான் ஊர் வந்து சேர்வார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எங்க அண்ணன், செல்வ அண்ணன், பாண்டியண்ணன் மூவரும் பழனிக்குச் சென்று திரும்பிய ரெக்கார்டை இதுவரை எங்கள் ஊரில் யாருமே முறியடிக்கவில்லை. இனிமேலும் முறியடிக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். ஆம் மனுசனுங்க நாலாவது நாள் அதிகாலை ஊருக்குத் திரும்பிட்டானுங்க... ரெண்டாவது நாளே திண்டுக்கல்லுக்குப் பொயிட்டாங்களாம். அப்ப எப்படி நடந்திருப்பாங்கன்னு பாருங்க... இதுல பாண்டியண்ணந்தான் பாவம்... ரெண்டு பேருக்கும் மச்சான் வேற... சொல்லவா வேணும்.. படுத்து பத்து நிமிசத்துல ஏய் ரொம்ப நேரமாச்சு... எல்லாரும் நடக்க ஆரம்பிச்சிட்டானுங்கன்னு கிளப்பி இரவெல்லாம் நடக்க வச்சி... மூணாவது நாள் மலையேறிட்டாங்களாம். பழனியில் மூவரும் எடுத்த போட்டோ எங்க வீட்ல இன்னமும் இருக்கு. பாவம் பாண்டியண்ணன்தான் இப்போ இல்லை.

எங்க அண்ணன் பழனிக்கு போகும் போது இரவு வீட்டில் விருந்து முடிந்து சாமி கும்பிட்டு கிளம்பி கோவிலுக்குப் போக, எங்கக்கா (எனக்கு நேரே மூத்தது - இங்கதான் அக்காவெல்லாம் இதுவரை அக்கான்னு சொன்னதே இல்லை) திண்ணை நிலப்படியில் நின்றபடி வீட்டு வாரத்தில் பனங்கைகளுக்கு இடையே போடப்பட்டிருக்கும் கம்பியைப் பிடிக்க, வெளிக் கொட்டகைக்கு போன கரண்ட் வயறு கட்டாகி கம்பியை மின்சாரக் கம்பியா மாத்தியிருந்திருக்கு.... கம்பியைப் பிடிச்சபடியே கத்துது... எல்லோரும் சாமி வந்திருச்சு போலன்னு நினைக்க, அப்புறம்தான் கைபிடிச்சிருக்கதைப் பாத்து வேகமாக ஓடி லைட்டை அமத்தி அக்காவை கரண்டில் இருந்து காப்பாத்தினோம். உடனே எல்லாரும் அண்ணன் கோயிலுக்குப் போகயில இப்படி ஆயிருச்சேன்னு பயந்தாங்க. ஆனா அவரு மூணு நாள் ரெக்கார்டோட நல்லவிதமாக முருகனைத் தரிசிச்சிட்டு வந்தார்.

அவர்களுக்குப் பிறகு யாருமே பழனிக்குப் போகமல் வருடங்கள் போக, எங்க சித்தப்பாவைக் கிளப்பி நான், சேகர் சித்தப்பு, சுரேஷ் மாமு, முருகன், இளையர் வீட்டு ஐயா, மீனா அயித்தை என ஒரு குழு முதன் முதலாக மாலை போட்டோம். நாங்கள் அதிகம் பஜனை எல்லாம் வைக்கவில்லை. கடைசி நாள் பஜனை வைத்து ஊர் முறைப்படி முதல்நாள் அம்மன் கோவிலில் வந்து படுத்து அதிகாலை அரோகரா கோஷத்துடன் கிளம்ப, ஊரே எங்களை முனியய்யா கோவில் வரைக்கும் வந்து வழியனுப்பி வைத்தது. 

வரிசையாக சாமிகளைக் கும்பிட்டு சிதறு தேங்காய் உடைத்து தேவகோட்டையை அடைந்து சிலம்பணி பிள்ளையாரை வணங்கி, திருப்பத்தூர் சாலையில் சாமிகளோடு சாமியாய் நடக்க ஆரம்பித்து காலை பத்து மணிக்கு மாநகரி ஊரணிக் கரையில் போய் படுத்துவிட்டோம். ,மூன்று மணி வரைக்கும் அங்கு படுக்கை, பின்னர் கிளம்பி குன்றக்குடி போய் மலையைச் சுற்றிக்கொண்டு நேரே பிள்ளையார்பட்டி நோக்கி நடையைக் கட்டினோம். வழியில் ஓரிடத்தில் கல்வெட்டி எடுத்துட்டு தாவாகக் கிடந்த இடத்தில் நல்ல தண்ணீர் நிரம்பிக்கிடக்க, அதில் அசதிபோக நீச்சல் போட்டு குளித்துவிட்டு பிள்ளையார்பட்டி போய் கற்பகவிநாயகரை தரிசிச்சிவிட்டு அங்கேயே படுக்கையைப் போட்டோம். இரண்டு நாளுக்கு தயிர்சாதம், புளியோதரை, லெமன் சாதம் கட்டிக் கொண்டு போயிருவோம். அதைச் சாப்பிட்டு மீண்டும் தூக்கம். பெரும்பாலும் முதல்நாள் தங்கல் குன்றக்குடிதான் ஆனால் நாங்கள் பிள்ளையார்பட்டியில் தங்கினோம்.

இரவு ஒரு மணிக்கெல்லாம் இளையரய்யா, கோழி கூவிருச்சு.... இன்னும் தூங்குறீங்க எந்திரிங்கன்னு கிளப்பி நடக்க விட்டுட்டாரு. திருப்பத்தூர் தாண்டிப் போனாலும் விடியலை... முதல் நாள் தெரியாத வலி இரண்டாம் நாள் இரவு படுத்து எந்திரிச்சி நடக்கும்போது காலில் தெரிந்தது. கொஞ்சத் தூரத்துக்கு தவந்துதான் நடை... அப்புறம் குதிரைக்கு வேர்க்க வேர்க்க வேகமாக ஓடும்ன்னு சொல்லுவாங்கள்ல அது மாதிரி பிக்கப் ஆயிட்டா, ஆட்டம் பாட்டம் அரட்டையின்னு நடை போறதே தெரியாது. 11, 12 மணிக்கெல்லாம் சூடு ஆரம்பித்தது கால் பொறுக்கமுடியாத நிலையில எங்காவது தங்கிவிடுவோம் பின்னர் மாலை மூணு மணிக்கு மேல் நடக்க ஆரம்பித்து எட்டு மணிவரை நடை... இரவு சாப்பாடு... உறக்கம்.. 2 மணிக்கு எழுந்து மீண்டும் நடை... இப்படியே முதல் நாள் இரவு பிள்ளையார்பட்டி... இரண்டாம் நாள் இரவு வெள்ளாளபட்டி.... மூன்றாம் நாள் இரவு திண்டுக்கல்... நான்காம் நாள் இரவு கணக்கம்பட்டி... ஐந்தாவது நாள் காலை பத்து மணிக்குள் பழனியை அடைந்து இடும்பனில் குளித்து அடிவாரத்தை அடைந்து மலையைச் சுற்றி வந்து மடத்தில் அறை எடுத்து பொருட்களை வைத்துவிட்டு சண்முகநதிக்கு பயணமானோம்.

கிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் நடந்துபோய் முதல்வருடம் என்பதால் மொட்டை அடித்து சண்முகநதியில் குளித்து மீண்டும் நடந்து வந்து மலையேறி முருகனைத் தரிசிச்சி, அங்கேயே இருந்து கேரளக் காவடி ஆட்டம் பார்த்து, தங்கத் தேர் பார்த்து இரவு எட்டுமணிக்கு மேல் கீழிறங்கி, பஞ்சாமிர்தம், டாலர் உள்ளிட்ட சாமான்கள் வாங்கிக் கொண்டு பேருந்து நிலையம் சென்று ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று பேருந்து ஏறி மறுநாள் காலை வீட்டிற்குச் சென்றோம். ஏழுநாள் நடக்க வேண்டிய நடைப்பயணத்தை நாலு நாள் நடந்து ஐந்தாம்நாள் ஊருக்குத் திரும்பினோம். 

அந்த வருட நடை என்பது எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது... எங்க சித்தப்பாவும் இளையரய்யாவும் அவர்கள் வயதில் இருந்து இறங்கி வந்து எங்களோடு அரட்டை அடித்தபடி வந்தார்கள். இப்பவும் சேகரிடம் சித்தப்பு கூந்தப்பனை என்றால் போதும் மகனே... அப்படின்னு சிரிக்க ஆரம்பிச்சிருவார். அதன் பிறகு தொடர்ந்து ஆறாண்டுகள் பழனிக்கு நடந்திருக்கிறோம். முருகனைத் தேடி நடந்து சென்ற அந்தத் தினங்கள் என்றும் இனிமையானவை. அதன் பிறகு எல்லாரும் திருமணம், குடும்பம். வேலை என்று சென்றுவிட முருகனை தேடிச் செல்லும் நடைப்பயணம் முற்றுப் பெற்றது.


இந்த வருடம் மீண்டும் சேகர் தலைமையில் பசங்க எல்லாம் கிளம்பி பழனிக்குப் போயிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் அடடா நம்ம இருந்திருந்தால் அந்த அணியில சேர்ந்து முருகனை தரிசிச்சிட்டு வந்திருக்கலாமே என்று நினைக்க வைத்தது. 

கிராமத்து நினைவுகள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

வெள்ளந்தி மனிதர்கள் : 8. அம்மா


நினைவில் நான் மீட்டெடுத்துப் பார்க்கும் வெள்ளந்தி மனிதர்களில் என்னைச் செதுக்கிய, என்னை உறவாய், மகனாய்ப் பார்த்த மனிதர்களைப் பற்றி பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் இன்று அம்மா... இந்த அம்மா எனது பேராசன் மு.பழனி இராகுலதாசன் அவர்களின் துணைவியார். எனக்கு மட்டுமல்ல... ஐயாவின் அன்புக்குப் பாத்திரமான அனைத்து மாணாக்கர்களுக்கும் இவர் அம்மாதான்... என்ன எனக்குத் தெரிந்தவரை இவருக்கு நாங்கள் ரொம்பப் பிடித்தவர்கள். அந்தப் பாசம் இன்று வரை எனக்கு அவரை அம்மாவாகவும் அவருக்கு என்னை மகனாகவும் தொடர வைத்திருக்கிறது.

அம்மா...

கல்லூரி முதலாம் ஆண்டில் இரண்டு செமஸ்டர்களிலும் தமிழ் வகுப்புக்கு ஐயா வந்தாலும் அந்த வருட முடிவில்தான் முருகன் மூலமாக ஐயாவுடன் நெருக்கமாகும் வாய்ப்புக் கிடைத்தது. அவருடன் கல்லூரியில் தினமும் பேசினாலும் வீட்டுக்கு எல்லாம் செல்வதில்லை. ஒரு நாள் ஐயாதான் 'வீட்டுக்கு வாங்க தம்பி' என்று அழைத்தார். பின்னர் முருகனுடம் ஐயா குடியிருந்த தேவி பவனத்துக்குள் அடியெடுத்து வைத்தேன். நாங்க போனபோது அம்மா, வாங்க என்று சொன்னதுடன் அருமையான காபி ஒன்றையும் கொடுத்தார். அதன் பின் தினமும் ஐயா வீட்டில் அரட்டை, அம்மாவின் காபி, சாப்பாடு... ஐயாவுடன் சைக்கிளை உருட்டிக் கொண்டே பேசிக்கொண்டு தியாகிகள் ரோடு, திருப்பத்தூர் ரோடு, கண்டதேவி ரோடு, சில நாட்கள் புதூர் அக்ரஹாரம் பாலு அண்ணா வீட்டு வரைக்கும் பயணித்து இரவு ஏழு, எட்டு மணிக்குத்தான் வீட்டுக்குப் போவேன்.

ஆரம்ப நாட்களில் அம்மாவுடன் அவ்வளவாக பேசுவதில்லை. முருகனைப் போல் எல்லாருடனும் சரளமாகப் பேசமாட்டேன் என்பது என்னுடன் பழகிய அனைவருக்கும் தெரியும். ஐயா கூட தம்பிக்கிட்ட கேட்டாத்தான் பதில் வரும்... முருகனுக்கிட்ட கேட்காமலே பதில் வரும் என்பார். அம்மாவைப் பார்த்து சிரிப்பதோடு சரி... சில விடுமுறை தினங்களில் வீட்டுக்குச் சென்றால் ஐயா வெளிய போயிட்டாங்கப்பா... நீங்க சாயந்தரம் வாறீங்களா? என்பார். 'சரிங்க' என்று வந்துவிடுவேன்.

ஒரு நாளைந்து மாதத்துக்குப் பின்னர் அம்மாவுடன் சரளமாகப் பேச ஆரம்பித்ததும் ஒரு நாள் போகலைன்னாலும் 'என்ன குமார் ஏன் நேற்று வரலை' என்று கேட்க ஆரம்பித்த போதுதான் அவரின் பாசம் புரிந்தது. பின்னர் ஐயா இல்லாவிட்டால் கூட அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு வர ஆரம்பித்த நாட்கள் அவரின் பாசத்தைச் சுமந்து கடந்து சென்றன என்றால் மிகையில்லை. ரெண்டு மூணு நாள் செல்லவில்லை என்றால் 'எங்கே குமாரைக் காணோம்? காலேசுக்கு வந்துச்சா... நீ பாத்தியா...?' என வீட்டிற்கு தினமும் செல்லும் எங்கள் குழு நண்பர்களிடம் கேட்டதும்,. குமார் வரலைன்னா மட்டும் புலம்புறீங்க... நாங்க வரலைன்னா கேக்க மாட்டீங்கதானே என அம்மாவிடம் சண்டை பிடித்து விடுவார்களாம். மறுநாள் போனால் குமாரு வரலைன்னு கேட்டா பண்ணையாருதான் புள்ளையோன்னு சண்டைக்கு வருதுக என்று சொல்லிச் சிரிப்பார்.

விடுமுறை தினங்களில் பெரும்பாலும் ஐயா வீட்டில்தான் எங்கள் குழு அரட்டை அடிக்கும். எங்கள் குழு என்பது அன்பு அண்ணன், முருகன், நான், தமிழ்க்குமரன் (படிக்கும் போதே இறந்துவிட்டான்), பார்த்தீபன் (எப்போதாவது வருவான்), மணிவாசகம் (ஐயா மகன்), மணி மேகலை (ஐயா மகள்), சுபஸ்ரீ, கனிமொழி, அம்பேத்கார் (இவனும் அடிக்கடி வரமாட்டான்), மணி, ஐயா வீட்டின் எதிர் வீட்டில் இருந்த ஜெயலெட்சுமி அக்கா, அவரின் தம்பி சுதந்திரக்குமார், அவரின் தங்கை என பெரிய கூட்டம். நாங்கள்.மாலை எல்லோரும் அங்கு ஆஜராகிவிடுவோம். அம்மா கொடுக்கும் சுவீட், காரம், காபியோட ஐயா தலைமையில் அரட்டை ரெண்டு மணி நேரத்துக்கு மேல களை கட்டும். அம்மா எங்களுடன் அரட்டையில் கலந்து கொள்ள மாட்டார். எனக்குத் தெரிந்து எங்களுக்கு முன்னரோ அல்லது பின்னரோ இப்படி ஒரு அரட்டைக்குழு ஐயா வீட்டில் கூடவே இல்லை. உங்க செட்டுக்கு அப்புறம் அந்த மாதிரி பிள்ளைங்க கூட்டமெல்லாம் வரவேயில்லை என அம்மா இப்போது கூட சொல்லுவார். அப்போத்தான் குமார் வீடே நிறைஞ்சிருக்கும்... எல்லாரும் வருவீங்க... அதுக்கப்புறம் அவ்வளவு பசங்க வரலை.. ஒரு சிலர் தான் வந்தாங்க... என்றும் சொல்வார்.

எனக்கு அப்போது உள்நாக்குப் பிரச்சினை இருந்தது. திடீரென வீங்கி எச்சில் விழுங்க முடியாதவாறு வலி உயிர் போகும். டாக்டரிடம் காண்பித்து மருந்து சாப்பிட ரெண்டு மூணு நாளில் சரியாகும். இதை அறிந்த ஐயா, ஒரு ஞாயிறு அன்று என்னைக் காரைக்குடியில் இருந்த ஆயுர்வேத மருத்துவரிடம் கூட்டிச் சென்றார். அவருக்கு ஐயாவை நல்லாத் தெரியும்... அவர் சின்னச் சின்னதாக மிளகு அளவில் வெள்ளை உருண்டை மாத்திரைகள் கொடுத்தார். அப்போது டீ, காபி, சிகரெட், பீடி, தண்ணி எல்லாம் சாப்பிடக்கூடாது. அப்புறம் மருந்துக்கு பலனில்லாமப் போயிரும் என்றார். டீ, காபி குடிப்பார்.. மத்ததெல்லாம் எம்புள்ளைக்கு இல்லை என்று ஐயா சொன்னார். அத்தோடு இல்லாமல் வீட்டுக்குப் போனதும் மேகலாவிடம் சொல்லி குமாருக்கு இனி டீ, காபி கொடுக்கக்கூடாது. பால் மட்டும்தான் கொடுக்கணுமின்னு அம்மாக்கிட்ட சொல்லுங்க என்று சொல்லி விட்டார். அதன் பின் எனக்கு மட்டும் ஸ்பெஷலாய் பால், பூஸ்ட், ஹார்லிக்ஸ்தான். இங்கு வந்து டீ, காபி சாப்பிட ஆரம்பித்தாலும் இன்று போனாலும் குமாரு டீ காபி சாப்பிடமாட்டாக என்று சொல்லி பால் மட்டுமே காய்ச்சிக் கொடுப்பார்.

எல்லாருக்கும் காபி கொடுத்துவிட்டு எனக்கு மட்டும் பால் கொடுப்பதைப் பார்த்து அதென்ன அவரு மட்டும் ஸ்பெஷல்... தனியா பால் போட்டுக் கொடுக்குறீங்க என சுபஸ்ரீ கேட்க, எம்புள்ள எப்பவும் ஸ்பெஷல்தான் உனக்கு காபியே அதிகம் என்று சொல்ல, அம்மா எல்லாருக்கும் முன்னால சின்னப்புள்ளையில இருந்து உங்க மகளா வர்றவ நாந்தான்... இவுகள்லாம் இப்பத்தான் வந்திருக்காக. பாத்துக்கங்க என்று கோபப்படுவது போல் நடிப்பார். ஆம் மேகலையோட ஆரம்பப்பள்ளியில் இருந்து பனிரெண்டாவது வரை ஒன்றாகப் படித்தவர். கல்லூரிப் படிப்பை மேகலை திருச்சியில் தொடர, இவர் எங்கள் கல்லூரியில் பிஸிக்ஸ் படித்தார். 'பரியன் வயல் பண்ணையார்' என இவர்கள் எல்லாம் கேலி பண்ணினால் என் பிள்ளைய ஏன் கேலி பண்ணுறீங்க? சும்மாவே இருக்க மாட்டீங்களா? என எனக்காக எல்லோரையும் சத்தம் போடுவார்.

என்னோட பிறந்த தினத்தை ஞாபகம் வைத்திருந்து அன்றைய தினம் வீட்டில் எதாவது ஸ்வீட் செய்து வைத்திருப்பார். அவர்களிடம் ஆசி வாங்க நான் வருவேன் என்பது தெரியும். எப்படியும் வந்துருவான் என எதிர் பார்த்திருப்பார். நான் பிறந்தநாளெல்லாம் கொண்டாடுவதில்லை. ஆனாலும் அவர்களின் ஆசி வேண்டிச் செல்வதுண்டு. ஐயா எதாவது புத்தகத்தில் கையெழுத்திட்டு எனக்குக் கொடுப்பார். அம்மா இப்போதும் எனது பிறந்தநாளை நினைவில் வைத்துச் சொல்வார்.

அம்மா அசைவம் சாப்பிடமாட்டார். எங்களுக்காக அசைவம் சமைத்திருக்கிறார்... ஒரு முறை எல்லோரும் காரைக்குடிக்கு சினிமாவுக்குச் சென்றுவிட்டு மதியம் வீட்டுக்குத் திரும்பினால் அம்மா எங்களுக்காக மட்டன் வாங்கி சமைத்து வைத்திருந்தார். ஹாலில் எல்லாவற்றையும் கொண்டாந்து வைத்து விட்டு கிச்சனுக்குள் போய்விட்டார். நாங்களே போட்டுச் சாப்பிட்டோம். இன்றும் வீட்டுக்குப் போனால் எதாவது சாப்பிட வேண்டும். இல்லையென்றால் வந்துட்டு ஒண்ணுமே சாப்பிடாமல் போறீயேப்பா என்பார். என்னிடம் மட்டுமல்ல எனது மனைவி, குழந்தைகள் என எல்லோரிடமும் பாசம் வைத்திருக்கிறார்.

மாலை வேளைகளில் ஐயா பேப்பர் திருத்தும் போதே அல்லது எதாவது மொழிபெயர்ப்புக்காக தயார் பண்ணிக் கொண்டிருக்கும் போதோ நான், முருகன், சுபஸ்ரீ மூவரும் உதவியாக இருப்போம். அப்பொதெல்லாம் எங்களுக்கு இரவு டிபன் அங்குதான். ஏழு மணிக்கு கிளம்பினால் இருங்க தோசை சுட்டுட்டேன். ஆளுக்கு ரெண்டு சாப்பிட்டுப் போங்க என்பார்.

வீட்டுக் கிரகப்பிரவேசத்துக்கு நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பாக வரணுமின்னு சொல்லிட்டு வந்தும் அம்மா மட்டும்தான் வந்தாங்க... ஐயா பெரும்பாலும் எங்கும் செல்வதில்லை... என்னம்மா ஐயா இங்ககூட வரலை என்று கேட்டேன். அவர்கள் தற்போது குடியிருக்கும் அதே வீதியில் கொஞ்ச தூரம் தள்ளித்தான் எங்கள் வீடு... ஐயாக்கிட்ட சொல்லிக்கிட்டுத்தான் இருந்தேன்... ஏதோ அவசர வேலையின்னு பொயிட்டாங்க... என்று சொல்லிச் சென்றார். மறுநாள் பேரன் பேத்திகளுக்கு புத்தகங்களும் ஸ்வீட்டும் வாங்கிக் கொண்டு சைக்கிளில் வந்து இறங்கினார் ஐயா. எனக்கு ஆச்சர்யம்... எப்படி இவர் வந்தார்... அதான் நீங்க பொயிட்டு வந்தாச்சுல்ல அப்புறம் நான் எதுக்கு என்று மறுப்பவர் ஆச்சே என்று நினைத்தபடி 'வாங்கய்யா' என நானும் மனைவியும் அழைத்து அவரை சேரில் அமரவைத்து அவருக்கு அருகே தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

'நேத்துல இருந்து உங்கம்மா குமாரு வீட்டுக்குப் பொயிட்டு வாங்க... புள்ள வந்து சொல்லிட்டுப் போச்சுல்ல... ஊரே சுத்துறீக... இந்தா இருக்கு.. பொயிட்டு வாங்கன்னு' ஒரே புடுங்காப் புடிங்கிட்டாங்க... காலையிலயே சொல்லிட்டாங்க எங்க போனாலும் முதல்ல குமார் வீட்டுக்குப் பொயிட்டுப் போங்கன்னு... அம்மாவுக்கு உங்கமேல ரொம்பப் பாசம்... வரலையின்னா புடுச்சி இழுத்திக்கிட்டு வந்துருவாங்க போலன்னு சொல்லிச் சிரித்தார். அன்று கல்லூரியில் படிக்கும் பையனாக அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது எப்படிப் பார்த்தார்களோ அதே பாசமும் நேசமும் இன்று இரண்டு குழந்தைகளின் தந்தை ஆன போதும் அவர்கள் இருவரிடம் தொடர்வது நான் செய்த பாக்கியம் என்றுதானே சொல்லவேண்டும். எத்தனையோ பிள்ளைகள் அந்த வீட்டுக்கு வந்து மூன்றாண்டுகள் பேசி, மகிழ்ந்து கடந்து செல்ல, அவர்களின் மகனாக உறவைத் தொடரும் சிலரில் நானும் ஒருவன் என்றாகும் போது அதுவும் மாணவனாக எட்ட வைக்காமல் மகனாக அருகே வைத்துக் கொள்ளும் அந்தப் பாசம் எனக்கு கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

என்னை தன் மகனாகப் பாவிக்கும் அம்மாவும் ஐயாவும் நாங்கள் படிக்கும் காலத்தில் பேசிக் கொள்வதில்லை என்பது பழக ஆரம்பித்து சில மாதங்களுக்குப் பிறகே தெரியும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் இருவரும் பேசாமல் வாழ்ந்திருக்கிறார்கள். நாங்களும் அவர்களைச் சேர்க்க முயன்று தோற்றுத்தான் போனோம். அம்மா சமைத்து வைக்கும் சாப்பாட்டை நான் ஐயாவுடனோ அல்லது ஐயா, முருகன், சுபஸ்ரீ, மேகலாவுடனோ எத்தனையோ முறை சாப்பிட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஐயாவுடன் என்றால் நாங்கள்தான் போட்டுச் சாப்பிட வேண்டும் அம்மா வரவே மாட்டார். ஆனால் சாப்பிட்டு எழும்போது 'என்னப்பா அதுக்குள்ள எந்திரிச்சிட்டீங்க... நல்லா சாப்பிட்டீங்களான்னு கிச்சனில் இருந்து கேட்பார். இருவரும் பேசிக்கொண்டது மேகலாவின் திருமணத்தின் போதுதான்.... அவர்கள் பேசிக்கொள்வதைப் பார்த்து எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? அதை எழுத்தில் கொண்டு வரமுடியாது. அந்தளவுக்கு சந்தோஷப்பட்டவன் நான்.

என்மேல் உள்ள பாசத்தால்தான் என்னைக் கல்லூரி விழாவில் மகன் என்று சொன்னார், திருமண வாழ்த்திலும் எங்கள் வீட்டுப் பிள்ளை, எங்கள் மகன் என்று எழுதி நால்வரின் பெயரும் போட்டுக் கொடுத்தார். அப்படிப்பட்ட ஆசான்... எனது ஐயா.. பாசமிகு அப்பா... மூலமாகக் கிடைத்த அம்மா... எனக்கு எப்போதும் எனது ஆசிரியன் மனைவியாகத் தெரியவே இல்லை... என்னைப் பெற்ற தாயாகத்தான் தெரிகிறார். ஆம்.. எனது அம்மா சிவகாமி போல்தான் இந்த அம்மாவும்... முருகனின் அம்மாவும்... இன்னும் சில அம்மாக்களும்...

என்னை மகனாக நினைக்கும் அந்த அன்னை எப்போதும் போல் சந்தோஷமாக நான் அந்த வீட்டுக்குப் போகும்போது குமாரு என வாய் நிறைந்த பாசத்தோடு அழைத்து எப்பவும் போல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை.

வெள்ளந்தி மனிதர்கள் தொடர்வார்கள்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 21 பிப்ரவரி, 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 21)

முந்தைய பகுதிகள் :


இருபதாவது பகுதியின் இறுதியில்...

"ஏங்க... இன்னும் என்னங்க உங்களுக்கு கோவம்... வீட்டுக்கு வந்துட்டு எந்தங்கங்க கண்ணக் கசக்கிக்கிட்டுப் போகுதுங்க... கூப்பிடுங்க... வாங்கன்னு சொல்லுங்க..."

"அப்பா... ப்ளீஸ்ப்பா.. மாமாவைக் கூப்பிடுங்கப்பா... ரெண்டு மாமாவும் அழுதுக்கிட்டு போறாங்கப்பா... மாமாவைக் கூப்பிடுங்கப்பா...ப்ளீஸ்..." அவனை உலுக்கினாள் சுவேதா.

அவர்கள் வண்டிக்கு அருகில் செல்ல, "கண்ணமச்சான்... அவனையும் கூட்டிக்கிட்டு உள்ள வாங்க" மகளை அணைத்துக் கொண்டு அவர்களைக் கூப்பிட்டான் ரமேஷ்.

இனி...

மேஷ் அழைக்கவும் இருவரும் மீண்டும் வீட்டிற்குள் வந்தார்கள். 'உக்காருங்க' எனச் சந்தோஷமாகச் சொன்னாள் கண்மணி. 'மாமா' என வந்து ஓட்டிக்கொண்டாள் ஸ்வேதா. குமரேசன் தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

"கண்ண மச்சான் நான் அப்படி உங்ககிட்ட பேசியிருக்கக் கூடாதுதான். ஆனா நடந்ததெல்லாம் எனக்குள் இன்னும் அப்படியே இருக்கதாலதான் அப்படி... அதுக்காக பொசுக்குன்னு கால்ல விழுந்து என்னைய ரொம்ப சங்கடப்படுத்திட்டீங்க..."

"சரி விடுங்கத்தான்.. உங்க கால்ல நான் விழுந்ததுல இப்ப என்ன வந்திருச்சு... நீங்க நம்ம வீட்டுக்கு வரணும்... பங்கு பிரிக்கும் போது எல்லாரும் சந்தோஷமா இருந்து பிரிச்சி விடணும்..."

"ம்... எப்ப இருந்தாலும் என்னோட கணக்கை பைசல் பண்ணாம விடமாட்டேன்" குமரேசனைப் பார்த்தபடி சொன்னான் ரமேஷ்.

"அத்தான்... எல்லாத்தையும் விடுங்கத்தான்.... எல்லாருமே உங்க மேல நல்ல மரியாதை வச்சிருக்காங்க.... பெரியத்தான் மாதிரி நீங்களும் எல்லாத்துலயும் கலந்துக்கணும்... அதான் எங்களுக்கு வேணும்..." என்றான் கண்ணதாசன்.

"ம்... வர்றோம்..."

"சந்தோசமா இருக்குத்தான்... எல்லாரும் வந்துருங்க..." என்றவன் குமரேசனிடம் மெதுவாக 'நீயும் வாங்கன்னு சொல்லுடா' என்றான்.

"அத்தான் எல்லாரும் வந்திருங்க... அக்கா வந்திரு... பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு வந்திரு..." என்றான்.

"ஆமா... கூடப் பொறந்தவங்களுக்கு உந்தம்பி கெடா விருந்து வைக்கப் போறானுக்கும்..." நக்கலாகக் கேட்டான் ரமேஷ்.

குமரேசன் முகத்தைக் கடுப்பாக வைத்துக் கொண்டு அவரைப் பார்க்க, "கிடாதானே வெட்டணும்... வெட்டிட்டாப் போச்சு... வாங்கத்தான் விருந்துக்கு என்னத்தான்... உங்களுக்கு இல்லாததா..." என்று அந்த சூழல் மீண்டும் எங்கே வம்புக்குள் போயிருமோ என்று சிரித்துப் பேசி மாற்றிய கண்ணதாசன் "சரி... நாங்க கிளம்புறோம்..." என்றான்.

"இருண்ணே.... பொங்க வச்ச சாமி கும்பிட்டுப் போகலாம்..."

"அங்க இந்நேரம் இந்தப் பயக போனவனுங்களைக் காணோமுன்னு அப்பா புடுங்க ஆரம்பிச்சிருப்பாரு.... அங்கயும் போயி பொங்க வச்சி சாமி கும்பிடணுமில்ல... நாங்க கிளம்புறோம்... வாடா..." என்ற கண்ணதாசன் "அத்தான் வர்றோம்த்தான்" என்று கிளம்ப, "வாறேன்... ஸ்வேதாக்குட்டி பை... மாப்ள மாமாவுக்கு ஒரு முத்தம் கொடுங்க.." என்றபடி குமரேசன் குனிய சங்கர் அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.

"பாசம் அப்படியே பொத்துக்கிட்டு வழியுதே... ஏய் மச்சானைப் பாத்துப் போகச் சொல்லுடி... பாசத்துல வழுக்கி விழுந்திடாம.." என்றான் ரமேஷ் கிண்டலாக. இருவரும் ஒன்றும் பேசாமல் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

"என்ன இந்தப் பயலுகளை இன்னும் காணோம்...." வாசலை எட்டிப் பார்த்தபடிக் கேட்டார் கந்தசாமி.

"வந்துருவானுங்க... அந்த ஆளு என்ன முறுக்கு முறுக்கினாரோ... வந்தாத்தானே தெரியும்... அவனுகளை போங்கடா... போங்கடான்னு அனுப்பி வச்சிட்டு இப்ப வீட்டுக்கும் வாசலுக்குமா உலாத்துனா... கொஞ்சம் உக்காருங்க..." கடுப்படித்தாள் காளியம்மா.

"ஆமா... உம்மவன் அங்க போயி ஏழரையை இழுத்துருவானோ என்னமோன்னு பயமா இருக்குலா....கண்ண போனதால கொஞ்சம் நிம்மதி... எங்கண்ணன் மாதிரி பேசியே எதிரியையும் உறவாக்கிருவான்..."

"அதுக்காகத்தானே அந்தப்பயலையும் போகச் சொன்னீக.... எல்லாத்துக்கும் ஓடுறான்... அவனுக்கு நம்ம என்ன செய்யிறோம்?"

"அயித்த... நீங்க என்ன செய்யலை... அவரும் உங்க பிள்ளைதானே... "என்றபடி வந்தாள் கண்ணகி.

"வாத்தா... சித்ரா... இந்தா உங்க தம்பி பொண்டாட்டி வந்திருக்கு பாருங்க..." என்று அடுப்படிப் பக்கம் பார்த்துக் கத்தினார்.

"என்ன கண்ணகி... பயலுக எங்க?" என்றாள் காளியம்மா.

"அதுக டிவியக் கட்டிக்கிட்டுத்தான் அழுகுதுக... மாடு வெயில்ல கெடக்கு... பிடிச்சி தொட்டியில தண்ணி காட்டிட்டு கசாலைக்குள்ள பிடிச்சிக் கட்டுங்கடான்னு சொன்னா எந்திரிக்கலை... நாந்தான் கட்டிட்டு வாறேன்... பொங்க வக்கலாமா மாமா... இவுகளையும் காணோம்..."

"ஆமா... ஆமா... வைக்க ஆரம்பிங்க... அவனுக வந்துருவானுங்க.. கண்ணதாசனுக்கு போனடிச்சுப் பாருவேத்தா..." கண்ணகியைப் பார்த்துச் சொன்னார்.

"அடிச்சுப் பாத்தேன் மாமா... கட் பண்ணி விடுறாக..."

"அப்ப வந்துக்கிட்டு இருப்பானுக... ஏலா மூத்தவன் எங்க பொயிட்டான்..? " காளியம்மாளிடம் கேட்டார்.

"குளிச்சிட்டு வந்தான்... எங்க போயிருப்பான்.... அந்த பாண்டிப்பய வீட்டுக்குப் போயி பேசிக்கிட்டு இருப்பான்... இன்னமும் சின்ன வயசில இருந்த மாதிரித்தான் எந்தப் பொறுப்பும் இல்லாம இருக்கான்..." அலுத்துக் கொண்டாள்.

"நாஞ் சொன்னாத்தான் உங்களுக்கு கோபம் வரும்... இந்தா சின்னவுக அப்படியிப்படி இருந்தாலும் எல்லாத்துலயும் பொறுப்பா இருக்காக.... இவரு இன்னும் இப்படித்தான்..." சித்ரா இடைப் புகுந்தாள்.

"அட விடுக்கா... மாமாவுக்கு என்ன... இப்ப இங்க என்ன வெட்டியா முறிக்கப் போறாக... எப்பவாச்சும் வர்றாக... பாண்டியண்ணனும் மாமாவும் ரொம்ப நெருக்கம்... பேசிக்கிட்டு இருந்துட்டு வரட்டும்..." என்றாள் கண்ணகி.

"அதுக்காக... நல்லநாளு பெரியநாளு இல்லை..."

"நீ வேற... அவனை சின்னப்புள்ளயிலயே ராத்திரி கத்திக்கிட்டே இருந்துதான் படுக்கக் கூப்பிடணும்... இல்லேன்னா ரெண்டு பேரும் என்னதான் பேசுவானுங்களோ.... கோயில்ல உக்காந்துக்கிட்டு பேசிக்கிட்டே இருப்பானுங்க... காலையில எந்திரிச்சி காபி கூட குடிக்க மாட்டான்... அவன் வந்துருவான்... ரெண்டு பேரும் வெளிய பொயிட்டு பல்லுக்குச்சியை வாயில வச்சிக்கிட்டு கம்மா கரையில நின்னு பேசி வீடு வந்து சேர எட்டு மணியாயிரும்... சின்னவன் எப்பவும் எதுலயும் கலந்துக்க மாட்டான்..."

"அதான் இப்ப எல்லாத்துலயும் சேர்றாரு..." அபி சொல்ல, "எம் புள்ளைகளை கரிச்சிக் கொட்டாட்டி உங்களுக்கு தூக்கமே வராது... பொங்க வைக்க அடுப்பெல்லாம் எடுங்க... நீங்க கொஞ்சம் மண் அள்ளியாந்து இப்படிக் கொட்டுங்க... கண்ணகி நீ போயி பொங்க வையி அவன் வந்துருவான்..." என்று காளியம்மாள் சொல்லும் போது மணி வீட்டுக்குள் வந்தான்.

"இன்னும் அவனுக வரலையாப்பா?" என்றான்.

"இல்லப்பா..."

"என்ன இம்புட்டு நேரமாச்சு... அந்தாளு பாட்டுக்கு எதாவது ஏழரையைக் கூட்டிட்டாரா?"

"எங்களுக்கு என்ன தெரியும்... வேணுமின்னா நீங்க போயி பாத்துட்டு வாங்க" சித்ரா நக்கலாகச் சொன்னாள்.

"ஏன் போகமாட்டேனா.... நா போனா ரெண்டு சாப்பாடு கொடுத்துருவேன்னுதான் அப்பா அவனைப் போகச் சொன்னாரு..."

"ஆமா... அடிச்சிக்கிட்டே நில்லுங்கடா... நாங்க செத்தாக்கூட அந்த மனுசன் இந்த வீட்டுப் படியேறாம ஊரைச் சிரிக்க வைக்கட்டும்..." கோபமாச் சொன்னார் கந்தசாமி.

மணி பேசாமல் வீட்டுக்குள் போனவன், மொபைலில் குமரேசனின் நம்பரை அழுத்தினான்.

"அந்தாளுக்கு திமிருண்ணே... நீ போயி அவனோட கால்ல விழுகுறே...?" வண்டியை ஓட்டியபடி கண்ணதாசனிடம் கத்தினான் குமரேசன்.

"விடுடா... வர்றேன்னு சொல்லிட்டாருல்ல... கண்மணிக்காக நாமதான்டா இறங்கிப் போகணும்...."

"அதுக்காக... இவனெல்லாம் திருந்த மாட்டான்... பைசல் பண்ணுறானாமே பைசல்... அன்னைக்குத்தான் இருக்கு அவனுக்கு..." பல்லைக் கடித்தான்.

"உனக்கு ஏண்டா இவ்வளவு கோபம் வருது... கோபத்தைக் குறை..."

அப்போது போன் அடிக்க, பார்த்தவன் " அண்ணன் பேசுது... வர்றோம்ன்னு சொல்லு" என்று போனைக் கொடுத்தான்.

"என்னப்பா... எதுவும் பிரச்சினையில்லையே...?" வண்டியை நிறுத்தும் போதே கேட்டபடி ஓடிவந்தார் கந்தசாமி.

"ஒரு பிரச்சினையும் இல்ல... ஆரம்பத்துல முறுக்கினாரு... அப்புறம் வாறேன்னு சொல்லிட்டாரு.." என்றான் கண்ணதாசன்.

"அதானே... அதுக்குத்தானே உன்னைய போகச்சொன்னேன்... நீதான்டா சரியான ஆளு..." கண்ணதாசனைத் தட்டிக் கொடுத்தவர், "இவரு முகத்தைத் தூக்கிட்டே இருந்தாரா...? இல்ல பேசினாரா...?" என்றார் குமரேசனைப் பார்த்தபடி.

"அவன் எதுவும் சொல்லலை... அத்தான்னு சொன்னான்.... வாங்கன்னு சொன்னான்... அம்புட்டுத்தான்... நாளைக்கி வருவாரு... எல்லாம் சரியாகும் சித்தப்பா... "

"சரியாகணும்ப்பா... எல்லாரும் நின்னு சிறப்பா எங்களை வழியனுப்பணும்.. அதுதான் எனக்கு வேணும்..."

"பொங்கன்னைக்கு என்ன பேசுறீங்க.... போங்கப்பா..." என்றவன் வீட்டுக்குப் போக,  குமரேசன் பேசாமல் வீட்டுக்குள் நுழைந்தான்.

"என்னடா... என்னாச்சு முகத்தை உர்ருன்னு வச்சிருக்கே...?" - மணி.

"ஏய்... ஒண்ணுமில்ல..."

"ஒண்ணுமில்லையின்னா எதுக்கு இப்படி இருக்கே.... அவருக்கிட்ட சண்டை போட்டியா... என்ன...?" கந்தசாமி சத்தமாகக் கேட்டார்.

"என்னங்க ஆச்சு... அண்ணன் எதாவது சொன்னாரா?" அபி அவனிடம் தண்ணீரைக் கொடுத்தபடிக் கேட்டாள்.

"அவரு என்னைக்கு இருந்தாலும் பைசல் பண்ணுவாராம்... அதெல்லாம் எனக்கு பிரச்சினையில்லை... அந்தாளா நானான்னு நான் பாத்துக்கிறேன்..."

"வர்றேன்னு சொல்லிட்டாருல்ல... அதெல்லாம் சரியாகும்... சும்மா மொறைச்சிக்கிட்டு நிக்காதே.... உனக்கு ரொம்பத்தான் கோபம் வருது..." என்றபடி கட்டிலில் அமர்ந்தார் கந்தசாமி.

"என்னப்பா... அவரு சண்டைக்கு வந்தாரா... முகமெல்லாம் சரியில்லையே... இவரு சொன்னாக் கேக்குறாரா... நல்லநாளன்னைக்கி எம்புள்ளைய அந்தாளு என்னமோ சொல்லியிருக்காரு..." காளியம்மாள் அவன் அருகே அமர்ந்து முகத்தைத் துடைத்தாள்.

"அதெல்லாம் இல்லம்மா... சத்தம் போட்டவரு சரியாயிட்டாரு... ஆனா அதுக்காக அண்ணன் அந்தாளு கால்ல..." அழுக ஆரம்பித்தான்.

"ஏய்... ஐயா.. எதுக்கு அழுகுறே.... அண்ணனை கால்ல வந்து விழணுமின்னு சொன்னாரா?"

"இல்லம்மா... கண்ணண்ணே அந்தாளு கால்ல விழுந்து..." அவன் முடிக்கும் முன்னர்...

"என்ன கண்ண கால்ல விழுந்தானா...?" - காளியம்மா

"இவன் எதுக்குடா அவன் கால்ல..." - மணி.

"மாமா... கால்ல விழுந்தாகளா?" - அபி.

"கண்ண மச்சானுக்கு என்ன கிறுக்கா... அந்தாளு வரலைன்னா போகட்டுமே... வந்து என்னத்தை தாங்கப் போறாரு..." - சித்ரா.

"கண்ணா... அடேய் கண்ணா..." வாசலில் நின்று கத்தினார் கந்தசாமி.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

மனசின் பக்கம் : மணம் வீசும் மனசு

புதாபியில் அபூர்வராகத்தில் திரு.டெல்லிகணேஷ் அவர்களின் உரையை தொகுப்பாய் எழுதியிருந்தேன். அதைப் படித்த திரு.டெல்லிகணேஷ் அவர்கள் எனக்கு மின்னஞ்சலில் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதில்...   "உமது பதிவு ரொம்பவும் பிரமாதம். தெளிவாக, விரிவாக, விபரமாக  இருக்கிறது. ரொம்பவும் நன்றி."  என்று எழுதியிருந்தார். எனது பதிவை வாசித்து வாழ்த்தியமைக்கு அவருக்கு எனது நன்றி.
****
லைச்சரத்தில் மீண்டும் ஒருமுறை அறிமுகம்... இந்த முறை எனது அன்புச் சகோதரி ஸஷிகா கிச்சன் திருமதி. மேனகா சத்யா அவர்கள் அறிமுகம் செய்துள்ளார்.  அதில் அவர் தொடர்கதை எழுதுவதில் வல்லவர் என்று சொல்லி எனது முதல் கதைக்கான இணைப்பைக் கொடுத்துள்ளார். ஆத்தாடி வல்லவனெல்லாம் இல்லையம்மா... சும்மா கிறுக்கியதுதான் அந்தக்கதை... நல்ல பதிவர்களையும் என்னையும் அறிமுகம் செய்த சகோதரிக்கு எனது நன்றி.
****
மிழ்மண முன்னணி பதிவர்கள் வரிசையில் கடந்த ஆறு மாத காலமாக 10,11,12-க்குள் மாறி மாறி பயணம் செய்த எனது தளத்துக்கு முதல் முறையாக ஒற்றைப்படையில் (9வது) இடம் கிடைத்திருக்கிறது. வாராவாரம் ஞாயிறன்று பதியப்படும் அந்த  வாரத்துக்கான முதல் இருபது பேர் பட்டியலில் சில வாரங்கள் 5, 8-ம் இடங்கள் கிடைத்திருக்கிறது. இது வலையில் நமது செயல்பாட்டை வைத்தே கணிக்கப்படுகிறது என்பதால் தொடர்ந்து கிடைப்பதில்லை. இருப்பினும் பகவான்ஜி, நம்மள்கி போல முதல் இடத்தை பிடிக்க முடியாவிட்டாலும் முதல் பத்துக்குள் இருப்பது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. இதன் மூலம் என்னோட எழுத்தையும் நிறையப் பேர் வாசிக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா?

****
சென்ற பகிர்வு மனசில் எனது 777 வது பகிர்வாகும். மற்ற வலைப்பூக்களில் தொடர்ந்து எழுதாவிட்டாலும் மொத்தமாகக் கணக்கில் எடுக்கும் போது (778+110+65+20) = 973 பதிவுகள்... கல்லூரியில் படிக்கும் போது ஐயாவின் தூண்டுதலால் சும்மா கிறுக்கி அவர் முயற்சியால் தாமரையில் முதல் கவிதை வெளியாகி, பின்னர் கதைபூமியில் கதைகள், கவிதைகள் என எழுதி பாக்யா, சுபமங்களா, மாலைமலர், தினமணி, தினத்தந்தி என ஒண்றிரண்டாய் கிறுக்கியவன் இங்கு வந்தபின் பத்திரிக்கையில் தொடர முடியாவிட்டாலும் நண்பனின் உதவியால் வலைப்பூ ஆரம்பித்து அதில் கிறுக்கி... பின்னூட்டம் வந்திருக்கிறதா எனப் பார்த்து... பார்த்து.... இன்று 1000 பதிவுகளை நெருங்கியிருக்கிறேன் என்று நினைக்கும்போது எனக்கே ஆச்சர்யமாகத் தெரிகிறது. இதெல்லாம் எப்படிச் சாத்தியமானது. மீள்பதிவு, படித்ததில் பிடித்தது என கொஞ்சப் பதிவுகளைக் கழித்துப் பார்த்தாலும் 1000-த்தை எட்டிப்பிடிக்க காத்திருக்கின்றன எனது கற்பனையில் உதித்த பதிவுகள்... இவையெல்லாம் என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தும் என் அன்பு வலை உறவுகளால் மட்டுமே சாத்தியமானது என்பதை எந்நாளும் மறக்கமாட்டேன். அனைவருக்கும் நன்றி.
****
சென்ற வார பாக்யா மக்கள் மனசு பகுதியிலும் எனது கருத்து வெளியாகியிருந்தது. தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஒரு வெகுஜனப் பத்திரிக்கையில் எனது எழுத்து அச்சேறுவது என்பது தினபூமி-கதைபூமியில் படத்துக்கு எழுதும் கவிதைக்குப் பின்னர் இப்போதுதான் நடந்திருக்கிறது. தினபூமி - கதைபூமியில் படத்துக்கு கவிதை எழுதுவதில் தொடர்ந்து ஆதிக்கம் செய்த சென்னிமலை சி.பி.செந்தில் குமார் அண்ணன் உள்பட சிலரில் நானும் இருந்திருக்கிறேன். அப்போது வியாழக்கிழமை கதைபூமியில் எனது எழுத்து வரும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அந்தச் சந்தோஷம் திரு.பூங்கதிர் அவர்கள் மக்கள் மனசு பக்கத்தை முகநூலில் பகிர்ந்ததைப் பார்த்தபோது கிடைத்தது,  நண்பருக்கு நன்றி.

****
காதலர் தினத்தை ஒட்டி வெளியிட்ட அனுராக் சிறுகதைக்கு சிறப்பான பாராட்டுக்கள் கிடைத்ததில் சந்தோஷம்... ஆனால் ஏன் அனுவைக் கொன்றாய் என்று எல்லோருமே கேட்டார்கள். அனுவின் காதல் உண்மை என்றாலும் ஹேமா...? அவனுக்காகவே அவனையே நினைத்து வாழ்ந்தவள் அல்லவா... அவளின் காதலை உடைக்க மனமில்லை என்பதே உண்மை. மேலும் அனுவைப் பிடிக்காத ஹேமா, மகளுக்கு அனு என்று பெயரிட்டிருப்பதிலும் தன் வீட்டு ஹாலில் அனுவின் போட்டோ மாலைக்குள் சிரிப்பதற்கு அனுமதித்திருப்பதிலும் அனுவின் காதல் எவ்வளவு உயர்வானது என்பதை காட்டிவிடுகிறதே. மேலும் அனு எங்கோ இருக்கிறாள் என்று முடித்திருந்தால் எப்பவும் எழுதும் காதல் கதை போலாகிவிடும் என்ற உணர்வே அப்படி எழுதிய முடிவை இப்படி மாற்ற வைத்தது.  இந்தக் கதையைப் படித்த குடந்தையூர் சரவணன் அண்ணன் இதை இன்னும் விரித்து திரைக்கதை போல் எழுதுங்கள் என்று சொன்னார். என்னால் முடியாது என்று சொன்னதும் நான் உங்களுக்கு உதவுகிறேன் என்றார். அப்படிச் சொன்ன அண்ணனுக்கு நன்றி.

****
லைனில் வேலையை முடிந்துவிட்டோம். இப்போ இந்த மாதம் முடிய வேண்டும் என்பதற்காக அலுவலகம் சென்று எட்டு மணி நேரம் சும்மா இருந்து வருகிறோம். ஒரு படத்தில் வடிவேலு சும்மா இருக்கிறார் என்று திட்டுபவர்களை எங்கே நீ ஒரு மணி நேரம் சும்மாயிருந்து காமி என்று உட்கார வைப்பார். அப்படி ஒரு நிலைதான் இப்போ... சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம்.... முடியலை... அதனால அழகியை பென்டிரைவில் ஏற்றிக் கொண்டு போய் ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த வாரத்தில் மூன்று கதைகள் எழுதியிருக்கிறேன். மூன்றும் என் மனசுக்குப் பிடித்த கதைகளாக அமைந்ததில் திருப்தி. அடுத்த மாதம் மீண்டும் அபுதாபி சென்று விடுவோம் என்று நினைக்கிறேன். அங்கே பொயிட்டா வேலை அதிகம் இருக்கும். சும்மா இருக்கதுக்கு வேலை இருப்பது சுகம்தான்.

****
சுற்றுலான்னு ஒரு படம் பார்த்தேன். ஆரம்பத்தில் நாடகம் போல் நகர்ந்தாலும் இடைவேளையின் போது கொஞ்சம் திரில்லாக நகர நல்லாயிருக்குமோங்கிற நப்பாசையில் பார்த்தா கேம் ஆப் டெத்துன்னு சொல்லிக்கிட்டு கிட்டிப்புல் விளையாண்டுட்டானுங்க.... ஸ்... அப்பா... கிளைமேக்ஸ்ல அம்மா சென்டிமெண்ட் வச்சி நம்மளை டெத் ஆக்கிடுறானுங்க... எப்படித்தான் இப்படியெல்லாம் தோணுதோ தெரியலை. 

****

னேகமா தமிழ் சினிமாவில் நாயகியைப் மையப்படுத்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் படம் அனேகனாத்தான் இருக்கும். ஆரம்பத்தில் அமைரா சாதாரணமாகத் தோன்றினாலும் கதையோடு பயணிக்கும் போது அருமையாக நடித்திருக்கிறார் என்பதை அறியமுடிகிறது. அதிலும் ஐயராத்துப் பெண்.... ம்.... அருமை. தனுஷ் சொல்லவே வேண்டாம். மனுசனின் நடிப்புக்கு தீனி போடும் படம். அடிச்சு ஆடியிருக்கார்... காளி கதாபாத்திரத்தில் டாங்கமாரி...ஊதாரியின்னு பட்டையைக் கிளப்பியிருக்காரு... இது குறித்து மற்றொரு பகிர்வில் பேசலாம்.

மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை' சே,குமார்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

அபுதாபியில் அபூர்வராகம் - 3

முதல் பகுதியில் திரு. ராஜேஷ் வைத்யாவின் இசை, குழந்தைகள் நடனம், திரு. மோகன், திரு. யூகிசேது ஆகியோரின் பேச்சுக்களின் தொகுப்பை வாசிக்க...


ரண்டாம் பகுதியில் திரு.டெல்லிகணேஷ் அவர்களின் கேபி சார் குறித்த சுவையான பேச்சின் தொகுப்பை வாசிக்க....


************************
னி விழாவின் முக்கிய நிகழ்வான இயக்குநர் சிகரம் பற்றி இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் பேச்சில் இருந்து தொகுப்பாய் சில...

(சிகரம் பற்றி இமயம் பேசிய போது)
வெள்ளை ஜீன்ஸ், வெள்ளை டீசர்ட்டில் வந்திருந்த பாரதிராஜா அவர்கள், தன்னைப் பேச அழைத்ததும் கையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு மைக்கின் முன்னால் வந்தார். அவருக்கே உரித்தான கரகரப்பான குரலில் 'என் இனிய தமிழ் மக்களே..' என்று ஆரம்பித்து .'பாலசந்தர் அவர்களுக்கு வெளிநாடுகளில் முதன் முதலில் விழா எடுப்பவர்கள் அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பினர்தான்... அதற்கு நன்றி" என்றவர் சபை நாகரீகம் கருதி சில விஷயங்களைப் பேசினார்.

கேபியோட இழப்பைப் பற்றிச் சொன்னவர், அவரோட மறைவுக்குப் பின்னால எனக்கு படுத்தா தூக்கம் வரலைங்க... அவரோட நினைவுகள் போட்டு வாட்டுது. அதுக்கான காரணத்தையெல்லாம் வெளிய சொல்லமுடியாது. பா வரிசையில ரெண்டு பேரை இழந்துட்டோம்... அந்த வலி எனக்குத்தான் தெரியும் என்று வருந்தினார்.

"இங்கே மோகன் பேசியது மனசில் இருந்து வந்தது. என்னை ஐயா கைபிடித்து இனி எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார் என்றான். உண்மை... அது உண்மையான பாசம்.. கண்டிப்பாக உணருவான். இவனை மாதிரி ஒரு உதவியாளன் எனக்கு இல்லையேன்னு வருந்தியிருக்கேன். இவனை கேபியின் நிழல்ன்னு சொல்றாங்க... இவன் நிழல் இல்லை நிஜம். ராஜேஷ் என்னமா வாசிக்கிறான்ய்யா.. வாசிக்கும் போது அவன் முகத்தில் இருந்து கண்ணை அகற்றவே முடியலை... எவ்வளவு எக்ஸ்பிரசன்ஸ்.. கலக்கிட்டான்... யூகி சொல்லவே வேண்டாம்.. நிறையப் படிச்சவன்... அறிவாளி... பாருங்க... ஏதோ ஒரு காலேஜ் புரபஸர் மாதிரி பேக்கெல்லாம் எடுத்துக்கிட்டு வந்து பக்கம் பக்கமா எழுதிவச்சிப் பேசுறான்... உலக விஷயங்கள் எல்லாம் அறிந்தவன். விவரமான ஆள்... சினிமாவுக்காக நிறைய உழைக்கிறான்.  நானெல்லாம் காகிதத்தில் குறிப்பெடுத்து வந்து பேசுறேன்... ஆனா டெல்லி... நகைச்சுவையாய் எந்தவித குறிப்பும் இல்லாம சரளமாப் பேசுறார்... என்ன ஒரு பேச்சு... என்ன ஒரு தெளிவு... இவங்க நவீன நாகேஷ்ன்னு சொன்னது சரிதான்... அருமையாப் பேசினார்."

"எதிர் நீச்சல் படத்தை சைக்கிள்ல போயி பாத்துட்டு வந்து அதோட பாதிப்புல கொஞ்ச நாள் தூங்கவே இல்லை. என்ன ஒரு படம். காமெடியனா இருந்த நாகேஷ்க்கிட்ட இருந்த குணச்சித்திர நடிப்பை அழகா வெளியில கொண்டாந்திருப்பார். பாத்த வேலையை விட்டுட்டு நான் சென்னைக்கு கிளம்பினேன். இதெல்லாம் வேண்டாத வேலையின்னு எல்லோரும் சொல்ல, எங்கம்மா மட்டுந்தான் எனக்கு 200 ரூபாய் பணம் கொடுத்து அனுப்பி வச்சாங்க.. லாரியில ஏறி சென்னை வந்தேன். என்னோட குறிக்கோளெல்லாம் பாலசந்தர் சாரைப் பார்க்கணும்... சிவாஜியைப் பார்த்து அவரு மாதிரி நடிகராகணுங்கிறதுதான்.. அதுக்காகத்தான் சென்னை வந்தேன்..."

"ஒரு கதை எழுதிக்கிட்டு பாலசந்தர் சாரைப் பாக்கப்போனேன். அவரு இங்கிலீஸ்லதான் பேசுவாருன்னு நினைச்சேன். எனக்கு அப்ப இங்கிலீஸ் தெரியாது. அதனால ஹிந்துல வேலைபார்த்த நண்பரை துணைக்கு அழைத்துக் கொண்டு போய் பார்த்தேன். கதையைச் சொன்னதும் கை விரல்களை இப்படிச் செய்தபடி கேட்டவர் எழுந்து வெளியில் நடக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு ரொம்ப வருத்தமாப் போச்சு. முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. பின்னர் நான் உதவி இயக்குநராய் பலரிடம் பணி புரிந்தேன். பாலசந்தரிடம் பணி புரியவில்லை."

"நான் இயக்குநராகி 16 வயதினிலே படம் எடுத்து முடிச்சேன். முக்கியமானவங்களுக்கு படத்தை போட்டுக்காட்டும் போது கமல் கேபியை கூப்பிடுகிறேன் என்றான். எனக்குப் பயம்... அந்தாளு வருவாரா... வந்து என்னய்யா படம்ன்னு சொல்லிட்டா என்று யோசித்து அவரு வருவாரா? என்றேன். கமல் கூட்டி வந்தான். வந்து படம் பார்த்தார். நான் அவர் முகத்தில் வரும் உணர்ச்சிகளையே கவனித்துக் கொண்டிருந்தேன். இடைவேளையில் ஒன்றும் பேசாமல் வெளியே போய் வந்தார். படம் முடிந்ததும் என்னை அழைத்து 'நல்லா பண்ணியிருக்கே... நல்லா வருவே...' என்று முதுகில் தட்டிக் கொடுத்தார். யார் படம் என்றாலும் நன்றாக இருந்தால் வாழ்த்துவதுடன் அடுத்தநாளே கடிதம் எழுதுவார். எனக்கும் கடிதம் எழுதினார்."

"எங்களுக்குள் நட்பு இறுக்கமானது. ஒரு முறை இரவு அவருடன் நானும், நாகேஷூம் பேசிக்கொண்டிருந்தோம்.வெளியில ஒரு ரவுண்ட் பொயிட்டு வரலாம்ன்னு சொன்னப்போ நீங்க போங்க... நான் வரலை என்று சொல்லிவிட்டார். நானும் நாகேஷூம் அப்படியே நடந்து போய் நிறைய விஷயங்கள் பேசி அரட்டை அடித்துத் திரும்பினோம். நான் ரொம்ப கரடுமுரடானவன்... காடு மாதிரி.. ஒழுங்கில்லாதாவன்... ஆனா அவரு பூந்தோட்டம் மாதிரி.. அழகாச் செதுக்கி செதுக்கி வாழ்ந்தவர். இதை பலமுறை அவரிடம் சொல்லியிருக்கேன்... பெரும்பாலும் இது போன்ற அரட்டைகளைத் தவிர்த்து விடுவார்."

"அவரோட அவள் ஒரு தொடர்கதை படம் வெளியானதும் பார்த்துட்டு ஒவ்வொரு சீன் குறித்தும் விரிவாக கடிதம் எழுதினேன்... சில வருடங்களுக்கு முன் அவர் வீட்டுக்குப் போனபோது உங்களுக்கு நான் எழுதிய கடிதம் ஞாபகம் இருக்கா... இன்னும் இருக்கிறதா என்றேன். இருக்கு காட்டவா என்றார். அதுதான் கேபி. பத்திரமாக வைத்திருப்பார். எனக்கு அவர் எழுதிய கடிதமும் பத்திரமாக இருக்கு."

"சபையில் சொல்லக்கூடாதுதான் இருந்தும் சொல்றேன்... என்னை அவர் எப்போதும் தேவரே என்றுதான் அழைப்பார். நான் அவரை ஐயரே என்றுதான் சொல்லுவேன். பதினைந்து வருசத்துக்கு முன்னர் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும் போது நான் முன்னாலயின்னா நீதான் தேவரே என்னைத் தூக்கணும் அதே மாதிரி நீ முன்னாலயின்னா நான் வந்து தூக்குவேன் என்றார். நான் உடனே ஐயரே, நான் முன்னாலயின்னா நீங்க வந்தா எங்க பயலுக கரடுமுரடானவனுங்க ஏதாச்சும் சொல்லுவானுங்க.. ஆனா உங்க ஆளுங்க ரொம்ப நல்லவங்க என்னை ஒண்ணும் சொல்லமாட்டாங்கன்னு சொல்லிச் சிரித்தேன்."

"அவரின் குசேலன் படவிழா...எல்லோரையும் மேடைக்கு அழைத்தார்கள்... நான் ஒரு மூலையில் அமர்ந்திருந்தேன். எனக்கு ஒரே நண்பன் பாரதி, பாரதி நீ மேடைக்கு வா என்று என்னை மேடையேற்றிய பெருந்தன்மைக்காரன் அவர். சக கலைஞரை மதிக்கத் தெரிந்தவர்.... இன்று அவனா எப்போ ஒழிவான் என்றுதான் காத்திருக்கிறார்கள். ஆனால் என்னை என்னோட நண்பன் என்று சொல்லி மேடையேற்றியவர் அவர்."

"இங்கு நடனமாடிய குழந்தைகள் என்ன அழகாக வெஸ்டர்னையும் கிளாஸிக்கையும் கலந்து ஆடினார்கள். காஸ்ட்யூம்ஸ் சூப்பர். அவங்களுக்கு நடனம் அமைத்தவரை எப்படிப் பாராட்டுவது.  பாரதி நட்புக்காக அமைப்பினர் எவ்வளவு சிரத்தையுடன் இந்த நிகழ்ச்சியை அமைத்திருக்கிறார்கள். பாரதி நட்புக்காக விழாவில் நான் கலந்து கொள்வது மூன்றாவது முறை, என்னைத் தம்பி முனி... அழைத்தபோது... முனியப்பனை நான் முனி என்றுதான் கூப்பிடுவேன். பாலசந்தருக்கான விழா என்றதும் உடனே சரியென்றேன். கடல் கடந்து அந்த மனிதருக்கு நடக்கும் முதல் நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்."

(திரு. பாரதிராஜா அவர்கள் பேசும்போது)
"மனோகரா, சின்னப்பான்னு எத்தனையோ நாடக்குழு அப்போ நாடகம் போடுறதுல பிரபலமா இருந்தாங்க., மனோகராவெல்லாம் சீன் செட்டிங்குன்னு பிரமாண்டமாக இருக்கும். எம்.ஆர்.ராதா ஒரு ஸ்கிரீனைக் கட்டிட்டு நாடகம் போட்டுருவாரு.... அந்தக் காலத்துல நாடகத்துக்கு ஹவுஸ்புல் போர்டு போட்டு நடத்துன ஒரே ஆள் பாலசந்தர்.. ராஜா அண்ணாமலை மன்றத்துல நீர்க்குமிழி நாடகம், ஹவுஸ்புல்.. டிக்கெட் வாங்கிட்டும் ரொம்ப பேர் இடமில்லாம நின்னுக்கிட்டு பாத்தாங்க. அப்ப பிளாக் டிக்கெட் இருந்தாக்கூட வாங்கியிருப்பேன். ஹவுஸ்புல்லுன்னாலும் எனக்கு அங்கு வேலை பார்க்கும் ஒருத்தனைத் தெரியும் என்பதால் அவனிடம் கேட்டு நின்று கொண்டே பார்த்தவர்களில் நானும் நின்றே அந்த நாடகத்தை கடைசிவரை பார்த்துத் திரும்பினேன். என்ன ஒரு நாடகம்.. எல்லாருடைய நாடகத்துக்கும் கூட்டம் வரும் என்றாலும் ஹவுஸ்புல் போட்டு நாடகம் நடத்திய ஒரே ஆள் கேபிதான்..."

"டெல்லி எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு... உன்னைய கூப்பிடலையேன்னு நினைக்காதே ஏனோ தோணலை... நீ அருமையான நடிகன்... ஆனா நீ சொன்னமாதிரி இறைவன் என்ன நினைக்கிறானோ அதன்படி தானே நடக்கும். எனக்கு மனோரமாவை நான் அசிஸ்டெண்ட் டைரக்டரா இருக்கும் போதே தெரியும். ஆனா அவங்களையும் இதுவரை நடிக்க கூப்பிடலை. அந்தம்மா பாக்குற நேரமெல்லாம் பாரதி எங்களை எல்லாம் உங்களுக்குத் தெரியாதேன்னு சொல்லும். ஆனா என்னன்னே தெரியலை... கூப்பிடத் தோணலை. இவ்வளவு ஏன் சிவக்குமார் எங்க வீட்டுக்குப் பக்கத்து வீடு.. தினம் பேசுவோம். அப்ப சூர்யாவெல்லாம் சின்ன பசங்க... எங்க வீட்டுப்பிள்ளைங்களும் அவங்களும் விளையாடுவாங்க... 20 வருசப் பழக்கம்... ஏனோ சிவக்குமாரை நடிக்கிறியான்னு கேக்கத் தோணலை... பசும்பொன் கதை அவனுக்கு சரியா இருப்பதாகத் தோண, அவனுக்கிட்ட போயி கேட்டேன். இத்தனை வருசத்துக்கு அப்புறம் இப்பத்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கு என்றவன் நடிக்க மாட்டேன் என்றிருந்த தன்னோட விரதத்தை எனக்காக முடித்துக் கொண்டு நடித்தான். டெல்லி நீ சொன்ன மாதிரி 'Gods almighty'தான் இதுக்கெல்லாம் காரணம் என்றார்.

"இந்த வாழ்க்கையில் எல்லாம் சேர்த்தாச்சு... இந்த வீடு, கார் எதுவுமே நம்மது இல்லை... எல்லாத்தையும் சேர்த்துட்டு எதையும் எடுத்துக்கிட்டுப் போகப்போவதில்லை. நாம இங்க வாழ்ந்ததுக்கு அடையாளமாக படைப்பை விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். ஒரு விதையை விதைத்துவிட்டுச் செல்ல வேண்டும். நாம் மறைந்தாலும் அது பேசிக்கொண்டிருக்கும். ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும் அதைக் கண்டுபிடித்து அந்தப் படைப்பை நாம் வாழ்ந்த உலகுக்கு விட்டுச் செல்ல வேண்டும். எங்க வீட்ல ஆறு பேர்ல எல்லாருக்கும் இறைவன் வாய்ப்புக் கொடுத்தானா என்றால் இல்லையே... எனக்கு அந்த வாய்ப்பை கடவுள் கொடுத்தான். வாழும் வரை அடுத்தவனை எப்படிக் கெடுக்கலாம்... அவன் எப்படி நல்லாயிருக்கலாம் என்று நினைக்காமல் நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக எதாவது படைப்பை விட்டுச் செல்ல வேண்டும். கேபி விட்டுச் சென்றிருக்கிறார். அவர் மறைந்ததாக நான் நினைக்கவேயில்லை."

"அவர் உடல் நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் இருக்காருன்னு மோகன் போன் பண்ணியதும் அங்கே போனேன். புஷ்பா பாரதி வந்திருக்கார்ன்னு சொன்னுச்சு... கண்ணே திறக்கலை... பாரதி வந்திருக்கேன்னு சொன்னேன்... ரொம்ப நேரம் கழிச்சி மெதுவாக கண்ணைத் திறந்து என்னைப் பார்த்து 'பாபாபா...ர.....தி....ரா...ஜா' என்றார். தண்ணி கேட்டாரு.. உடனே புஷ்பா தண்ணியை எடுத்து எங்கையில கொடுக்க நான் அவருக்கு கொடுத்தேன்... குடிச்சாருய்யா... அதுதான் அவராக் குடிச்ச கடைசித் தண்ணீர்... அதுக்கப்புறம் அவரு தண்ணியே குடிக்கலையாம்... ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சம் ஊற்றினார்களாம் மோகன் சொன்னான். அந்த மனுசனுக்கு நான்தான் கடைசித் தண்ணீர் கொடுத்தேன்யா..." என்றபோது குரல் கம்மி தழுதழுத்தார்.

"அவர் இறந்துட்டாருன்னு செய்தி வந்தபோது நான் இலங்கையில் இருந்தேன். ஸப்னாவில் இருக்கும் போதுதான் மோகன் போன் பண்ணினான். அப்போ அங்கே சரியான மழை... வெள்ளக்காடா இருந்துச்சு... இந்த மழையில போகவே முடியாதுன்னு சொன்னாங்க... எப்படியாச்சும் நான் உடனே போயாகணும் என்று சொல்லிவிட்டேன். பிறகு ஏற்பாடு பண்ணி கிட்டத்தட்ட மூண்றரைக் கிலோமீட்டர் தண்ணிக்குள்ளயே காரை படகு மாதிரி ஓட்டிக் கொண்டு வந்து என்னை ஏர்போர்ட்டில் கொண்டு வந்து விட்டார்கள். நீ செத்தா நான் தூக்குவேன்யான்னு சொன்னதை நிறைவேற்ற வேண்டும் எனத் தவித்தேன்... அவரிடம் சொன்னது போல் அவரை நான் என் தோளில் தூக்கினேன்...."

மீண்டும் திரு. யூகிசேது, திரு. மோகன், திரு. ராஜேஷ் வைத்யா பற்றி பேசும் போது ஒரு மேடையில் பாரதி என்னைவிட சின்னவனாப் பொயிட்டான்... இல்லைன்னா அவன் கால்ல விழுந்திருப்பேன்னு கே.பி. சொன்னாருய்யா... அது மாதிரி தம்பி ராஜேஷ் வயசில் சின்னவனாப் பொயிட்டான். இல்லேன்னா அவனோட கால்ல விழுந்திருப்பேன். என்னமா வாசிக்கிறான்... 'hats of you' என்றார்.

"என்னையைப் பொறுத்தவரை மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி சொல்லிவிடுவேன். அதுவே பல நேரம் பிரச்சினை ஆகிவிடுகிறது. அதற்காக வருத்தப்படுவதில்லை.... புகழ் ஒரு போதை... அதை தலைக்கு ஏற்றாதீர்கள். மனதில் உள்ளதைப் பேசுங்கள்... இந்த வாழ்க்கையை இங்கு வாழ்ந்ததன் அடையாளமாக எதையாவது அழுத்தமாகப் பதிந்து செல்லுங்கள். இப்படித்தான் ஒருத்தன்கிட்ட புகழைத் தூக்கி தலையில வச்சிக்காதே... கக்கத்துல வச்சிக்கன்னு சொன்னேன்... மேடையிலிருந்து இறங்கிப் பொயிட்டான்ய்யா... " என்றார். 

பாரதிராஜா பேச ஆரம்பிக்கும் போது 10 மணிக்கு மேலாகிவிட்டதால் அரங்கம் மெல்லக் காலியாக ஆரம்பித்து அவர் முடிக்கும் போது பாதி அரங்கத்துக்கு மேல் காலியாகிவிட்டது. தனக்கும் பாலசந்தருக்குமான நட்பை அவருக்கே உரிய பாணியில் ஒளிவு மறைவின்றி அழுத்தமாக இந்த விழாவில் பகிர்ந்தார். அதன் பின்னர் நன்றியுரை வழங்கி, நாட்டுப் பண் இசைக்க விழா சிறப்பாக நடந்து முடிந்தது.

(எனது அண்ணன் திரு. ஜோதிஜி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க குமார் உங்கள் பார்வைக்காக - திரு. டெல்லி கணேஷ் அவர்களுடன்)
மனசின் துளிகள் சில :

* திரு. கேபி அவர்களுக்கு பாராட்டு விழா எடுத்த பாரதி நட்புக்காக அமைப்பு அவரின் நினைவைப் போற்றும் விதமாக வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் அமைப்புகளில் முன்னோடியாக இந்த அபூர்வராகம் நிகழ்ச்சியை நடத்தியது. எளிமை... இனிமை.. புதுமை.. என்று சொல்லும் இவர்கள் மிகச் சிறப்பான ஆட்களை வரவழைத்து கேபிக்கு மரியாதை செலுத்தி அந்தக் கலைஞனின் ஆத்மாவிற்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்... அதற்காக வாழ்த்துவோம்.

அலைனில் இருந்ததால் இந்த முறை விழாவுக்குச் செல்லும் எண்ணமில்லை... அப்படியிருந்தும் என்னை நீ கண்டிப்பாக வர்றே என்று அன்போடு அழைத்த அண்ணன் சுபஹான் அவர்கள் திரு.கலீல் ரஹ்மான் அவர்களுடன் அறிமுகம் செய்து வைத்தார். விழா மேடையில் அவருக்கு அழைப்பு வர, கை கொடுத்து எப்படியிருக்கீங்க என்றதுடன் அவசரமாக மேடையேறியவர் ஞாயிறன்று எனது மொபைல் நம்பர் வாங்கி போன் செய்து பேச முடியாமல் போனதற்கு வருத்தப்பட்டார். மேன்மக்கள் மேன்மக்களே...

* மேடையில் அமைப்பின் முந்தைய விழாச் செயல்பாடுகளை திரையில் காட்டுவதோடு மட்டுமில்லாமல் விழாவின் ஆரம்பத்தில் இந்த ஆண்டில் பாரதி என்ன செய்தது என்று ஆண்டறிக்கை போன்று ஒன்றை வாசிக்கலாமே. அனைவரும் அறிந்து கொள்ள உதவுமே. இல்லை என்றால் வருடம் ஒருமுறை திரைத்துறை சம்பந்தப்பட்டவர்களை மட்டுமே வைத்து விழா எடுப்பார்க்களே அந்த அமைப்பா என்ற நிலையில்தான் பெயர் இருக்கும்.

* கேபியின் உதவியாளர் திரு. மோகன் அவர்கள் மேடையில் ஏற்றப்பட்டு கௌரவிக்கப்பட்டு உடனே பேச அழைக்கப்பட்டு, பேசியதும் கீழிறங்கிவிட்டார். அவரை மேடையில் அமர வைக்கவில்லை. மேடையில் அவருக்கும் ஒரு நாற்காலி போட்டு அமர வைத்திருக்கலாமே என்று தோன்றியது. இருப்பினும் அவர் பேசியதை வைத்துப் பார்க்கும் போது ஜாம்பவான்களின் மத்தியில் சாமானியன் அமர்வதா என்று அவர் மறுத்திருப்பாரோ என்றும் தோன்றியது.

* திரு. ராஜேஷ் வைத்யா அவர்கள் கௌரவிக்கப்பட்டபோது மிகவும் அழகாக, ராஜேஷின் வீணைக்கு பக்கபலமாக இசை வார்த்த அவரின் இசைக் குழுவினர் நால்வரையும் கௌரவித்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை.. இவ்வளவு செலவு செய்தவர்கள் அதில் ஏன் கவனம் கொள்ளவில்லை.

* விழா 6.45க்கு ஆரம்பித்ததற்குப் பதில் 6 மணிக்கு ஆரம்பித்திருந்தால் திரு. பாரதிராஜா பேசும் போது கூட்டம் அப்படியேஇருந்திருக்கும் அவரும் நமக்கு இன்னும் விருந்தளித்திருப்பார். திரு. யூகி சேது அவர்களின் ஆழமான பேச்சையும் திரு. டெல்லி கணேஷ் அவர்களின் நகைச்சுவையான பேச்சையும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரசித்திருக்கலாம். திரு. பாரதிராஜா அவர்களும் இன்னும் பேசியிருப்பார் என்று நினைத்தேன். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 6 மணிக்கே ஆரம்பிக்க தயாராய் இருந்தும் ஒரு சில நடைமுறைச் சிக்கலால் 6.45க்கு ஆரம்பித்ததாகச் சொன்னார்கள். அது உண்மைதான் நடைமுறைச் சிக்கல் என்பது நாட்டில் மட்டும்தான் என்றில்லை அல்லவா?

நன்றி.

எனது எழுத்தையும் விரும்பி என்னை ஊக்குவிக்கும் பாரதி நட்புக்காக அமைப்பு நண்பர்களுக்கு இந்த மூன்று பகிர்வும் சமர்ப்பணம்.

-:முற்றும்:-

படங்கள் உதவி : திரு. சுபஹான் அண்ணன்  அவர்க்களுக்கு நன்றி.

இத்தனை வருட எழுத்தில் முதல் முறையாக தமிழின் முன்னணி பதிவர்கள் வரிசையில் ஒற்றை இலக்கத்தில் (9 வது) இடம் அளித்த தமிழ்மணத்துக்கு நன்றி. 
-'பரிவை' சே.குமார்.