மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 ஜனவரி, 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-2)


-------------

ன்னபூரணி பாட்டி சொன்ன வார்த்தைகள் கண்ணனின் கோபத்தை இன்னும் அதிகமாக்க, "உங்களுக்குன்னு ஆச்சாரம் இருக்கு பாட்டி... எங்களுக்குத் தெரியும்... அதான் சாமி கூட கற்பக்கிரகத்துக்கிட்ட உங்களை விடுது... நாங்க கற்பக்கிரகம் தாண்டியிருக்கிற வாசல்வரைதான் வரமுடியும்… இன்னைக்கு நிலமையில  காசு கொடுத்தா சாமியை கொஞ்சம் கிட்டப்போய் பார்க்கலாம்… கொடுக்கலைன்னா தர்ம தரிசனமுன்னு ரொம்பத் தூரம் தள்ளி நின்னுதான் பார்க்கணும்… சாமியை காட்சிப் பொருளாக்கி பணம் பறிக்கிற கூட்டத்துக்கு அடிபணிஞ்சி போற உங்க ஆச்சாரமும் அனுஷ்டானமும் எங்களுக்கு வேண்டாம்.  ஆமா…  கோவில் வருமானம்தானே உங்களுக்கு சோறு போடுது… அங்க காசு போடுறவனெல்லாம் உங்க சாதிக்காரந்தானா…? அதுல மட்டும் சாதியெல்லாம் வந்து ஒட்டிக்கலையா…? நாங்க நின்ன இடத்துல மட்டும் வந்து ஒட்டிக்கிச்சாக்கும்… கழுவச் சொல்றீங்க..? என்ன ஆச்சாரம் இது…. பால்க்காரர்கிட்ட பால் வாங்கி காபி போட்டு பேஷ் பேஷ் நல்லாயிருக்குன்னு குடிக்கிறீங்களே... அது யாரு உங்க சாதிக்காரன் கறந்தானா..? எங்கள்ல ஒருத்தன்தானே கொண்டாந்து தர்றான்…  ஏன் இன்னைக்கு வெண்டைக்காய் பொறியல் வை... கத்திரிக்காய் கூட்டு வையின்னு வகை வகையா வச்சி சாப்பிடுறீங்களே... அதை விளைவிச்சவன் யாரு... உங்க சாதிக்காரனா... இல்லையே.... பாட்டி... எஞ்சாதிகாரன் கொடுத்தாத்தான் சாப்பிடுவேன்னா நாமெல்லாம் சாப்பிடாம சாக வேண்டியதுதான்… எல்லாரும் சேந்தாத்தான் எல்லாம் கிடக்கும். தெரிஞ்ச்சிக்கங்க... சாரதி நாங்க வெளிய நிக்கிறோம்... நீ அப்புறம் வா..." என கத்தினான்.

"ஏன்டாம்பி உனக்கு இம்புட்டுக் கோபம்... இதெல்லாம் நன்னாயில்லை பார்த்துக்கோ... ஒருத்த ஆச்சாரம்ன்னு சொன்னா அவா சொல்றதை ஏத்துக்கிட்டு  போறதுதான் சிறியவாளுக்கு அழகு..." பாட்டி தன் கருத்தில் நிலையாக நின்றாள்.

"என்னால எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு போக முடியாது பாட்டி.... தப்புன்னா கத்துவேன்... அது என்னோட குணம்... வாங்கடா..." என்றபடி கண்ணன் வேகமாக வெளியேற, அவன் பின்னால் மற்றவர்களும் வெளியேறி நிறுத்தி வைத்திருந்த சைக்கிள்களில் ஏறி, மௌனமாய் அமர்ந்து இருந்தனர்.

“டேய் கண்ணா... என்னடா இது... நாம வந்திருக்கிறது நம்ம சாரதிக்காக... அவன் என்னைக்காச்சும் நம்மகிட்ட சாதி பார்த்திருக்கிறானா என்ன... நம்ம சாப்பாட்டை அவன் தினமும் சாப்பிடுறான்... நீ இப்படிக் கோபப்பட்டா அவனுக்கு கஷ்டமா இருக்காதா..? விடுடா...”  என அந்த மௌனத்தை உடைத்தான் அம்பேத்கார்.

“அதுக்காக..?” எகிறினான் கண்ணன்.

“நமக்கு சாரதிதான் முக்கியம் தெரிஞ்சிக்க... வந்த இடத்துல அவனோட அம்மா, தங்கச்சி எல்லாம் என்ன நினைப்பாங்க... எல்லாத்துக்கும் இப்படி கோபப்பட்டியன்னா இந்த உலகத்துல உன்னால வாழவே முடியாது...” என்றான் பிரவீண்.

கண்ணன் பதில் சொல்லும் முன்னே, "பாட்டி... அம்மாக்கிட்ட சொல்லிட்டுத்தான் கூட்டியாந்தேன்... படிக்கிற இடத்துல சாதி, மதமெல்லாம் பாத்துப் பழக முடியாது... அவன் கடிச்சிக் கொடுத்ததை நான் திம்பேன்... நான் கடிச்சிக் கொடுத்ததை அவன் திம்பான்... இதுதான் நட்பு... சும்மா இருக்க மாட்டீங்களா...? உங்க ஆச்சாரத்தை எல்லாம் நீங்க உக்காந்திருக்க திண்ணையோட வச்சிக்கங்க… எங்க காலத்துல அதை உள்ளாற கொண்டு வராதீங்க…” என பாட்டியிடம் கத்திய பார்த்தசாரதி வெளியே வந்தான்.

“டேய் சாரிடா… அவங்கள்லாம் அதுலயே ஊறுனவங்க… ஏன் உங்க வீட்டுக்குப் போகும்போது அப்பா நீ என்ன சாதி… நீ என்ன சாதியின்னு எல்லாரையும் கேட்கலையா..? அப்ப எல்லாரும் சொல்லிட்டுத்தானே வந்தோம்… அவங்க தலைமுறை சாதிக்குள்ள சிக்கியிருக்கு… நாம அப்பயியில்லையில்ல… ப்ளீஸ்… நீங்க வாறீங்கன்னு அம்மா, தங்கச்சிக்கு எல்லாம் அவ்வளவு சந்தோஷம்… டேய் கண்ணா நீ வந்தாத்தான் மத்தவங்க வருவாங்க… உள்ள வாங்கடா…”

“இல்லடா… வேண்டாம்… கோவில் பக்கம் பொயிட்டு வரலாமே?” என்றான் கண்ணன்.

“அது போகலாம்… இப்ப உள்ள வாங்கடான்னா… எனக்கு நீங்க குடுக்கிற மரியாதை இதுதானா… இந்த ரெண்டு வருசத்துல என்னைக்குடா நான் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டு இருக்கேன்… எங்க பாட்டி சாதியின்னதும் நானும் அந்த ஆச்சாரத்துல சிக்கிட்டேன்ல்ல…”

“டேய் என்னடா நீ… அப்படியெல்லாம் இல்ல… கண்ணா… பெரியவங்க உலகம் வேற… நட்புங்கிற உலகம் வேற… இதுக்குள்ள சாதிச் சாக்கடைக்கெல்லாம் இடமில்லை… அவன் வருந்துறான் பாரு... எந்திரிடா…” என்றான் அம்பேத்கார்.

“நான் சொன்னா வரமாட்டீங்க... இருங்க… அம்மா பாருங்கம்மா வீட்டுக்குள்ள வரமாட்டேன்னு ஸ்டிரைக் பண்ணுறானுங்க… எல்லாரும் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறோம்" உள்பக்கமாகப் பார்த்துக் கத்தினான் பார்த்தசாரதி

"என்னடா நீங்க… அத்தை சித்த சும்மா இருங்கோ… ஆச்சாரத்தையெல்லாம் அப்புறம் பார்க்கலாம்… பிள்ளைங்க பர்ஸ்ட் டைம் ஆத்துக்கு வந்திருக்கா… சும்மா பேசிண்டு… உங்க ஆச்சாரத்துக்கு எதுவும் வராது…” என்றபடி சேலைத் தலைப்பால் கையைத் துடைத்துக் கொண்டே வந்த சுபத்ரா “கண்ணா... என்னப்பா இது... அவங்க பெரியவங்க... அப்படித்தான் இருப்பாங்க... பூஜை புணஷ்காரம்ன்னு ஊறிப்போனவங்க.... இதுக்கெல்லாம் கோபப்பட்டுக்கிட்டு… உள்ள வாங்க… முற்றத்துல தண்ணி இருக்கு காலம்பிட்டு உள்ளே உக்காருங்க…"

"இல்லம்மா... பரவாயில்லை... அப்படியே கோயில் பக்கமா பொயிட்டு..."

“என்னப்பா நீயி… சந்தோஷமா வந்த பிள்ளைங்க சங்கடமா போறதுதான் எங்க ஆத்துக்கு நல்லதில்லை… புரிஞ்சிக்கோ…”


"அட என்ன மிஸ்டர் சாரதி உங்க பிரண்ட்ஸ்க்கு எல்லாம் பாரதியை விட கோபம் அதிகமா வர்றது… அவன் கூட மீசை வச்சிண்டு காக்கை குருவி எங்கள் சாதியின்னான்… சாதியில்லையின்னு அன்னைக்கே பேசின பார்ப்பனன் அவன்… அன்னைக்கே மீசை வச்சிண்டு மனைவி தோள்ல கை போட்டுக் கூட்டிக்கிட்டு போனவன் அவன்... எங்க பாரதி... எங்கள்ல சாதி... ஆச்சாரம்… அனுஷ்டானம்ன்னு பேச ஆளுங்க இப்ப நிறைய இருக்கா… ஆனா சாதியாவது மண்ணாவதுன்னு அன்னைக்கே ஒத்தப் பிராமணன் அடிச்சிச் சொல்லிட்டுப் போயிருக்கா… ஆனா இன்னமும் இந்த சாதிச் சாக்கடை மறையலை... ஆமா இதுல சும்மா படபடன்னு லெக்சர் கொடுத்த புள்ளையாண்டான் யாருன்னு காமிங்க மிஸ்டர் சாரதி…. பேரை கண்ணன்னு வச்சதுக்கு பாரதின்னு வச்சிருக்கலாம் அவர் பேரண்ட்ஸ்… ஹலோ ப்ரண்ட்ஸ்… எங்க பாட்டி அப்படித்தான்… அவங்க அப்படியே வளர்ந்து வாழ்ந்தும் முடிக்கப் போறாங்க… எங்க வீட்டைப் பொறுத்தவரை எல்லாமே திருமதி. சுபத்ராதான்…. அவங்க சொல்றதுதான் இங்க சட்டம்… “ படபடவெனப் பேசிய அவள் “அட வாங்கன்னா வாங்கப்பா…. இன்னாத்துக்கு முர்ச்சிக்கின்னு நிக்கிறீங்க… இன்னா  சாரதி நைனா… அப்பால கட்டம் போட்ட சொக்காதான் தலீவரு கண்ணனா…” என சென்னை மொழியில் பேசிச் சிரித்தாள்.

அவர்கள் ஒன்றும் பேசாமல் உள்ளே செல்ல அவள் வழி விட்டு ஒதுங்கி நின்றாள். அவளின் பார்வை மட்டும் கண்ணனின் மீது இருந்தது.

***
“ஏய் எம்பேத்திக் குட்டிக்கு மீன் வையேன்….” என்றார் வேலாயுதம்.

“ஆமா அவ தின்னுட்டாலும்…” என்றாள் சவுந்தரம்.

“ஏம்பா அறுவடைக்கு கூட சரவணன் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வரக்கூடாதாக்கும்… அறுத்து… அவிச்சி… அரிசி மூடைய கொண்டு போய் கொடுக்கணுமாக்கும்” என்றாள் செல்வி.

(பகுதி -3 சனிக்கிழமை தொடரும்) 

படம் இணையத்தில் சுட்டது.
-'பரிவை' சே.குமார்.

புதன், 27 ஜனவரி, 2016

நேத்துப் பூத்தவளே..!


கொக்குப் பறக்கும்
குளக்கரையில் நானிருக்கேன்
குறுக்குச் சிறுத்தவளே
பறந்தோடி நீயும் வாடி..!

மீன்கள் விளையாடும்
ஊரணியில் நானிருக்கேன்
தூண்டில் விழியாளே
துள்ளிக்குதித்து நீயும் வாடி..!

மயில்கள் நடனமிடும்
மாந்தோப்பில் நானிருக்கேன்
கார் கூந்தலாளே
குதித்தோடி நீயும் வாடி..!

குயில்கள் கூத்தாடும்
வேம்போரம் நானிருக்கேன்
கொஞ்சும் குரலாளே
பட்டெனவே நீயும் வாடி..!

தும்பி பறக்கும்
துளசியோரம் நானிருக்கேன்
துரத்தும் அழகாளே
துரிதமாய் நீயும் வாடி..!

கிளிகள் கீதம் இசைக்கும்
பனங்காட்டில் நானிருக்கேன்...
கோவைப்பழச் சிவப்பழகி
கோவிக்காம நீயும் வாடி..!

மாடுகள் மேயும்
திடலில் நானிருக்கேன்...
பாதக் கொலுசழகி
பதறாம நீயும் வாடி..!

வாடி... வாடியின்னு
வழி பார்த்து வாடிப்போனேன்...

காத்திருந்து... காத்திருந்து
கண் பூத்துப் போனதடி...

நேத்துப் பூத்தவளே...
நித்தம் என்னைச் சாச்சவளே...
பாத்து நாளாச்சு...
பாக்க மனம் ஏங்குதடி...

ஏக்கப் பெருமூச்சு
என்னை எரிக்கும் முன்னே...
வாசக் கறிவேப்பிலையே
வந்து என்னை காத்திடடி....
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 26 ஜனவரி, 2016

பாரதி : கண் திறந்திட வேண்டும் - 3

பாரதி நட்புக்காக பட்டிமன்றத்தின் முதல் இரண்டு பகிர்வுகளை வாசிக்க கீழே இருக்கும் இணைப்பில் செல்லுங்கள்.



முனைவர் விஜயசுந்தரி பேசி முடித்ததும் அவர் சொன்ன வரலாற்றுக் கருத்துக்கள் குறித்து சிறிது விளக்கம் சொன்ன நடுவர் அவர்கள், வழக்கறிஞர் சுமதி அவர்களைப் பேச அழைத்தார். இவர் மேடையேறும் போது திரு. கனவுப் பிரியன் என்னை அழைத்தார். இணையத்தின் மூலமே அறிந்தவரை நேரில் சந்திக்கும் பொருட்டு நான் எழுந்து பின்பக்கம் செல்ல, அங்கே அவரும் ஆரஞ்சுக்கலர் டீசர்டில் நின்று கொண்டிருந்தார். முதல் சந்திப்பில் இருவரும் ஒரே கலர் டீசர்ட்டில் இருந்தது சிறப்புத்தானே... சிறிது நேர பேச்சுக்குப் பிறகு கில்லர்ஜி அண்ணாவையும் போனில் அழைக்க அவரும் வந்து சேர மூவரும் பேசி, போட்டோ எடுத்து மைத்துனரையும் அழைத்து டீ சாப்பிட போய்விட்டோம். மேடையில் வழக்கறிஞர் சுமதி பேசிக் கொண்டிருந்தார்.

வழக்கறிஞர் சுமதி : என்னோட அப்பாவுக்கு உடம்புக்கு முடியாம ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கிறோம்... பக்கத்து இருக்கையில் ஒரு இளைஞர் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அருகில் அவரது இளம் மனைவி அழுதபடி இருக்கிறாள். அவளைப் பார்த்து ஏன் இப்படி அழுது கொண்டிருக்கிறாய்? என்று கேட்டேன். அவள் அவருக்கான வியாதியைச் சொல்லி,  இன்னொரு மருத்துவமனை பெயரைச் சொல்லி இவரை அங்கு கொண்டு சென்றால் கண்டிப்பாக காப்பாற்றிவிடலாம் என்றாள். பின்னே என்ன அங்கு கொண்டு செல்ல வேண்டியதுதானே என்றேன். பணம் அதிகம் சிலவாகும் என்றாள். உன்னால் பணம் ரெடி பண்ண முடியுமா என்றேன். என்னால் முடியும் என்றாள்... பின்னே என்ன அதற்கான வேலையைப் பாரு என்றதும் என் மாமியார் விடமாட்டார் என்றாள். இங்கபாரு கண்டிப்பாக பிழைக்க வைக்க முடியும்ன்னு உனக்கு நம்பிக்கை இருக்குல்ல என்றதும் இருக்கு என்றாள். அப்ப எதுக்கு அடுத்தவங்களைப் பற்றி யோசிக்கிறே.. முதல்ல பணத்தை ஏற்பாடு பண்ணு... மற்ற வேலைகளை நான் பார்க்கிறேன் என்றேன். அப்படி அந்தப் பெண்ணுக்குச் செய்த உதவி சிறியதாகினும் மன நிம்மதி, ஒரு சந்தோஷம் கிடைத்தது என்றார்.

மேலும் சின்ன வயதில் சினிமாவுக்குச் செல்லும் போது வேலைக்காரரின் பெண்ணையும் அழைத்துச் சென்று தாங்கள் இடைவேளையில் வாங்கித் தின்ன வைத்திருந்த காசில் டிக்கெட் எடுத்ததையும், அந்தப் பெண் சந்தோஷமாய் படம் பார்த்ததையும் மகிழ்வோடு சொன்னார். இன்னா, இஸ்துக்கின்னு என சென்னைத் தமிழ் குறித்தும் பேசினார்.  

இவரது பேச்சும் மற்றும் இவருக்கு பின்னே வந்த திரு.மோகனசுந்தரம் அவர்களின் பேச்சையும் உட்கார்ந்து கவனிக்கவில்லை என்பதால் மேலோட்டமாகத்தான் எழுத முடியும். இங்கு எழுதும் எந்த வார்த்தையும் குறிப்பெடுத்து எல்லாம் எழுதவில்லை என்பதால் வழக்கறிஞர் சுமதியின் பேச்சு குறித்த எழுத்தில் தவறும் இருக்கலாம் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

நடுவர் திரு.சுகி சிவம் அவர்கள் இறுதிப் பேச்சாளராக திரு. மோகன சுந்தரம் அவர்களை அழைத்தார். இவர் இதற்கு முன்னர் பாரதி நடத்திய திரு.லியோனி அவர்களின் பட்டிமன்றத்தில் பேசியவராக இருக்குமோ என்று ஒரு சிறு சந்தேகம். சரி விடுங்க... பேசி சிரிக்க வைத்தாரான்னு பார்ப்போம்.

திரு. மோகனசுந்தரம் : இவரின் பேச்சும் பின்னால் அமர்ந்திருந்த எங்களுக்கு சரியாக கேட்கவில்லை.... இருப்பினும் விமானத்தில் வரும்போது விமானப் பணிப்பெண் இவரைக் கேட்டதாகச் சொன்ன செய்தியில் நடுவரை நீங்க பிஸினஸ் வகுப்பில் இருந்ததால் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றார். என்ன விஷயம் என்பதை சரியாக கவனிக்கவில்லை... ஆனால் விவரம் தெரிந்த அரங்கம் சிரித்தது. 

தன் நண்பனுக்கு பைக் ஓசியாக கொடுத்த கதையைச் சொன்னார். வண்டியைக் குடுடா இப்பக் கொண்டாந்து தாறேன்னு சொல்லி வாங்கிட்டுப் போனவன் வரவேயில்லை என்னடா இப்ப வாறேன்னு சொன்னான்... இன்னும் வரலையின்னு பார்த்தா... ராத்திரி நடந்து வர்றான்... எங்கடா வண்டியின்னு கேட்டா போலீஸ் ஸ்டேசன்ல இருக்கு போயி எடுத்துக்கன்னு சொன்னான்... என்னடா நீ போலீஸ் ஸ்டேசன்லயா என்றதும் ஆமா போலீஸ்காரன் பிடிச்சிட்டான்... குடிச்சிட்டு வண்டி ஓட்டுனேன்... குடிச்சிருந்தியா...? ஆமா லைசென்ஸ் கேட்டான்... கொடுக்க வேண்டியதுதானே... அதுதான் இல்லையே.. என்னது இல்லையா... ஆமா வண்டியே இல்லாத எனக்கு எதுக்கு லைசென்ஸ்ன்னு நான் எடுக்கலை... அது சரி... ஆர்.சி.புக் கேட்டான்... அதெல்லாம் தெரியாது வண்டியை வச்சிக்க... வண்டிக்காரனை வந்து வாங்கிக்கச் சொல்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் என்றானே பார்க்கலாம் உதவி செய்யப் போயி நான் போலீஸ் ஸ்டேசன்ல போயி நிக்க வேண்டியிருந்துச்சு என்று வேடிக்கையாகச் சொன்னார்.

இந்த மழை வந்தது ரொம்பப் பாதிப்புத்தான் என்றாலும் எனக்கு ஒருவகையில நல்ல சாப்பாடு கிடைக்க வழி செஞ்சிட்டுப் போயிருச்சு.. ஆமா மழையில எங்க வீட்டு பிரிட்ஜ், ஓவன் எல்லாம் போயிருச்சு... இப்ப மூணு நேரமும் சூடா சாப்பாடு பண்ணிப் போடுறா... முன்னால எல்லாம் பிரிட்ஜ்ல வச்சு வச்சு... ஓவன்ல சூடு பண்ணிப் போடுவா.... ஆனா இப்ப அதெல்லாம் இல்லை... போனவாரம் மெதுவா ஏங்க பிரிட்ஜ் என்றாள். அதெல்லாம் நிவாரணத்துல கொடுப்பாங்க... அப்படியும் இல்லையின்னா ஆறு மாசத்துல தேர்தல் வருதுல்ல... அப்ப ரெண்டு கட்சியில ஏதாச்சும் ஒரு கட்சி விலையில்லாத பிரிட்ஜ், விலையில்லாத ஓவன் எல்லம் கொடுப்பாங்கன்னு சொல்லி வச்சிருக்கேன் என்று சொன்னபோது அரங்கமே கைதட்டலிலும் சிரிப்பொலியிலும் அதிர்ந்தது.

சந்தோஷமே... சங்கடமே... என இரு அணிகளும் தங்கள் வாதத்தை முன் வைக்க, நடுவர் திரு. சுகிசிவம் அவர்கள் தீர்ப்புச் சொல்லும் பொருட்டு தனது இருக்கையில் இருந்து எழுந்து 'சங்கடமே' என்ற அணியினர் பேச வைத்திருந்த மைக்கின் முன் வந்தார்.

இரண்டு பக்கமும் தங்களது வாதத்தை அருமையாக எடுத்து வச்சிருக்காங்க...  அப்துல்கலாம் அவர்கள் 380 கிராமில் செய்த செயற்கைக்கால்தான் அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது என்பதையும்... அன்னை தெரசா ஒரு கையில் பணக்காரன் துப்பிய எச்சிலை வாங்கிக் கொண்டு மறு கையை நீட்டி எனக்கு கொடுத்துவிட்டாய் என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடு என்று சொன்னதையும் சொல்லி இதுதானே சந்தோஷம் என அழகாக அவர்களின் கருத்தைச் சொல்லியிருக்காங்க... அதேபோல் மக்களுக்காக போராடிய வ.உ.சி. வேதனையோடு எழுதிய கடிதம், தில்லையாடி வள்ளியம்மை பூட்ஸ்காலால் மிதிபட்டது, சென்னைப் பெரும் வெள்ளத்தில் என் வீட்டில் வந்து தங்குங்கள் என்று சொன்ன வீடுகளில் போய் அவர்களை கட்டிப் போட்டுவிட்டு மூன்று இடத்தில் கொள்ளை அடித்த சம்பவம் எனச் சொல்லி இதெல்லாம் உதவி செய்யப்போய் பெற்ற சங்கடங்கள்தானேன்னு இவங்க சொல்லியிருக்காங்க. 

என்னோட மனைவிக்கிட்ட ஒரு பழக்கம் தலைவலி வந்தா தலையில தலைப்பாக் கட்டிருவா... (இந்தப் பழக்கம் எனக்கும் இருக்கு... துண்டை எடுத்து இறுக்கமாக கட்டிக் கொண்டு படுத்துவிடுவேன்... நான் மட்டும்தான் அப்படின்னு நினைச்சேன்... திருமதி சுகிசிவமும் அப்படித்தானாம்) அன்னைக்கும் அப்படித்தான் காபி கேக்கலாம்ன்னு போனா, தலையில தலைப்பாக் கட்டிட்டா... சரி இனி கேக்க கூடாதுன்னு என்னம்மா தலைவலியா... என்றேன்... ம் என்று பதில் வந்தது. சரி நான் வெளியில போறேன் ஏதாவது வாங்கிக்கிட்டு வாறேன்... நீ சமைக்க வேண்டாம் எனச் சொல்லிவிட்டு கிளம்பிப் போனேன். என் வேலைகளை முடித்து விட்டு சாப்பாட்டுக்கு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வர்றேன் என்னை பஜ்ஜி வாசம் வரவேற்குது. என்னடா இது முடியலைன்னு சொன்னாளே... என்று எட்டிப்பார்த்தால் அடுப்படியில் தலைப்பாக் கட்டோடு பஜ்ஜி சுட்டுக்கிட்டு இருக்கா... ஏய் முடியலைன்னு சொன்னே.... இப்ப பஜ்ஜி சுடுறே... இல்ல அந்தப் பய (என் பேரன்) வந்திருக்கான்... எப்பவும் கேக்கமாட்டான்... இன்னைக்கு பாட்டி பஜ்ஜி சுட்டுத்தாயேன்னு கேட்டான்... அதான்... என்றாள். பாருங்க பேரன் என்றதும் தலைவலி போச்சு... நாம காபி கேட்டா... ம்ன்னு பதில் வரும். இருந்தாலும் எனக்கு கோபம் வரலை... காரணம் என்னன்னா தனக்கு முடியாட்டியும் பேரன் கேட்டதுக்காக செஞ்சா பாருங்க அதுலதான் சந்தோஷம் இருக்கு.

ஒரு தடவை பெர்னாட்ஷாவுக்கு உடம்பு முடியலை... உடனே டாக்டருக்கு போன் பண்ணினார். அதுக்கு டாக்டர் சரி கிளம்பி வாங்க என்றார். இவருக்கு கோபம் வந்தாச்சு... என்னால எந்திரிக்க முடியலை... எனக்கான டீக்கூட போட்டுக் குடிக்க முடியலை என்னைப் போயி அங்க வரச்சொல்றீங்களே என்றதும் அப்படியா சரி நான் வர்றேன் என வந்த டாக்டருக்கு அவரை விட வயது அதிகம்... வயதானவர்... மேலே மாடியில் இருந்தவரை பார்க்க படியேறியவருக்கு பாதிப்படி ஏறும் போது மயக்கம் வந்து விழுந்திட்டார். சப்தம் கேட்டு மெல்ல எழுந்து வந்த பெர்னாட்ஷா, டாக்டர் மயங்கியிருப்பதைப் பார்த்து டீப் போட்டுக் கொண்டு வந்து கொடுக்க, குடித்து விட்டு எழுந்தவரிடம் இப்பப் பரவாயில்லையா என்றதும் ம் சரியாயிருச்சு எனச் சொல்லி தன்னோட பில்புக்கை எடுத்து 30 பவுண்டு எழுதி பெர்னாட்ஷாக்கிட்ட கொடுக்க என்ன விளையாடுறீங்களா... என்னை எப்போது செக்கப் பண்ணினீர்கள்... உங்களுக்குத்தானே நான் பணிவிடை செய்தேன் என்றதும் நீங்க என்ன சொன்னீங்க படுக்கையை விட்டு எழ முடியலை.... என்னால நடக்க முடியலை... ஒரு டீக்கூட போட முடியலைன்னுதானே... இப்ப எழுந்தீங்க... நடந்தீங்க... டீப்போட்டு எனக்கு கொடுத்தீங்க... உங்க வியாதி போச்சா.... அதுக்குத்தான் பில் என்றதும் ஒன்று பேசாமல் கொடுத்தாராம். வியாதி மனதில் இல்லை என்றும் சொன்னார்.

அப்பொதெல்லாம் 16 முழ வேஷ்டி, அதாவது 10 முழம் வேஷ்டியாகவும் 6 முழம் துண்டாகவும் உடுத்துவார்கள். பாரதியின் நண்பர் ஒருவர் அவருக்கு 16 முழ வேஷ்டி கொடுத்து கட்டிக்கொள்ளச் சொல்ல, இவரும் கட்டிக் கொண்டு வெளியே போயிருக்கிறார். அப்போது குளிரில் நடுங்கியபடி ஒருவன் படுத்திருக்க, அதைப் பார்த்த பாரதி ஆறு முழ துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு 10 முழ வேஷ்டியை அவனிடம் கொடுத்திருக்கிறார். இடுப்பில் இருந்த வேஷ்டியைக் கொடுக்காமல் துண்டை அவனிடம் கொடுத்திருக்கலாம் ஆனால் பாரதி அப்படிச் செய்யவில்லை. இடுப்பில் கட்டிய துண்டோடு வீட்டுக்குப் போக, அவரின் நண்பர் வேஷ்டி எங்கே என்றதும் ஒருவன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான் அதான் அவனுக்கு கொடுத்திட்டேன் என்று சொன்னாராம். துண்டைக் கொடுத்திருக்கலாமே ஏன் வேஷ்டியைக் கொடுத்தே என்றதும் துண்டைவிட அந்த வேஷ்டிதான் அவனுக்கு சரியாக இருக்கும் என்பதாலேயே கொடுத்தேன் என்றாராம். நீ உதவி செய்வேன்னு தெரியும் அதுக்காக இப்படியா என்றபடி இன்னொரு வேஷ்டியை எடுத்துக் கொடுத்து கட்டிக் கொள்ளச் சொல்ல, பார் ஒன்றை கொடுத்தால் ஒன்றைப் பெற முடியும் என்று சொல்லி சிரித்தவர் வேஷ்டியைக் கொடுத்தேன் வேறு வேஷ்டி கிடைத்துவிட்டது பார் என்று சொன்னாராம். எனவே நாம் பிறருக்கு ஒன்றைச் செய்தால்தான்  நமக்கு மற்றது கிடைக்கும். தானம் செய்வோமா என யோசித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக நமக்கு எதுவும் கிடைக்காது. காற்று வீட்டுக்குள் வந்தால் வெளியே போவதற்காகத்தான் வீடுகள் கட்டும் போது முன்பக்கமும் பின்பக்கமும் கதவு நேராய் வருவது போல் கட்டுவார்கள்... இல்லையேல் சன்னலாவது வைப்பார்கள். அப்படி இல்லை என்றால் காற்று உள்ளே வராது. அதேபோல்தான் செல்வமும்.... சேர்த்து வைத்தால் பயனில்லை என்றார்.

கர்ணனிடம் கண்ணன் போர்க்களத்தில் தர்மம் கேட்க, அவனோ தனது குருதியைப் பிடித்துக் கொடுத்தான் என்ற கதையையும், ரத்தக் கண்ணீர் படத்தில்  எம்.ஆர்.ராதாவை உதைப்பது போல் நடிக்க மறுத்த ராஜம் அவர்களை வாங்கிற காசுக்கு நீ மிதிக்கணும் நான் வாங்கணும் என்று எம்.ஆர்.ராதா அவர்கள் சொன்னதையும், சென்னை வெள்ளத்தில் கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றி பிரசவத்திற்கு மருத்துவமனையில் சேர்த்த முஸ்லீம் இளைஞர் குறித்தும்... இன்னும் பல கதைகளை கருத்தாய்ச் சொல்லி உதவுவதில் சங்கடம் இருந்தாலும்... சங்கடம் ஏற்படாமல் எந்த சந்தோஷமும் இல்லை என்பதால் சந்தோஷமே கிடைக்கிறது என்று சொல்லி முடித்தார். அவர் சந்தோஷமே என்று சொன்னது சங்கடமே அணியினரின் பக்கம் இருந்த மைக்கில்தான் என்றாலும் அருமையான நிறைவான தீர்ப்புத்தான். உண்மையில் உதவி செய்வதில் சங்கடம் இருக்கிறது என்பதற்காக உதவாமல் இருந்தால் அது சரியில்லை... எப்படி சங்கடம் வந்தாலும் உதவிய திருப்தியில் சந்தோஷமே விஞ்சி நிற்கும் என்பதை நாம் அறிவோம் அல்லவா..? எனவே இதுவும் அதுவும் என்று நடுநிலையில் நிற்காமல் நல்லதீர்ப்பை நல்ல கருத்துக்களுடன் சொன்ன நடுவர் திரு. சுகிசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


அதன் பின் நன்றி நவிலலுடன் விழா இனிதே முடிவடைய, நாங்கள் மெல்ல நடையைக் கட்டினோம். கனவுப் பிரியன் அவர்கள் டாக்ஸியில் செல்வதாகச் சொல்ல, நாங்களோ மீண்டும் அரசியல் பேசியபடி அறைக்கு வந்து சேரும் போது இரவு 11 மணிக்கு மேலாகியிருந்தது.

சந்தோஷமே அணியினர் அவ்வளவு நகைச்சுவையாக பேசவில்லை... சங்கடமே அணியினர் நகைச்சுவையில் தல தோணியின் சிக்ஸர் அடித்து ஆடினர். இரண்டு குழுவையும் கலவையாய் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. ஏனென்றால் சந்தோஷமாக பேச வேண்டிய அணியினர் மூவருமே பொறுமையாகப் பேச, அரங்கில் கொஞ்சம் சலிப்பு மழை பெய்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

இருப்பினும் அருமையான பேச்சு... அழமான கருத்துக்கள்... அழகான பட்டிமன்றம்... ஏற்பாடு செய்து மிகச் சிறப்பாக நடத்திய பாரதி நட்புக்காக நண்பர்களுக்கு எல்லாருடைய சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொசுறு : இன்னும் சில நகைச்சுவைகள் இருக்கு, பதிவின் நீளம் கருதி இங்கு பகிரவில்லை என்றாலும் என்னோட மனசின் பக்கத்தில் அப்பப்ப வரும்... நமக்கு சிரிப்புக்கு சிரிப்பும் ஆச்சு.. பதிவுக்கு செய்தியும் ஆச்சுல்ல...

பொறுமையாக மூன்று நீளப் பகிர்வுகளையும் வாசித்து கருத்தும் அளித்த நட்புக்களுக்கு நன்றி.

வருடா வருடம் அமீரகம் வாழும் எங்களுக்கு தமிழ் அமுது பருகிடக் கொடுக்கும் பாரதி நட்புக்காக அமைப்புக்கும் எனக்கு அழகிய போட்டோக்களை உடனே கொடுக்கும் அண்ணன் புகைப்படக் கலைஞர் திரு. சுபஹான் அவர்களுக்குமாய் ஒரு பூங்கொத்து...


பாரதி நட்புக்காக குழுமத்தின் முகநூல் பக்கம் செல்ல இங்கு கிளிக்குங்கள்.

சுபம்.
-'பரிவை' சே,குமார்.

திங்கள், 25 ஜனவரி, 2016

பாரதி : கண் திறந்திட வேண்டும் - 2


முதல் பகுதி எல்லாரும் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். படிக்காதவங்க மேல இருக்க இணைப்பில் சென்று படியுங்கள். மற்றவங்க வாங்க நாம சண்முகவடிவேலு ஐயாவைப் பின்தொடர்வோம். நேற்றே அவர் திருக்குறள் வகுப்பெடுத்த கதையைச் சொல்றேன்னு சொன்னேன்தானே அது என்னன்னா..


திருக்குறள் வகுப்பெடுத்த கதையை அவர் பெரிதாகச் சொன்னார்... அப்படியே சொன்னால் இந்தப் பதிவில் முடிக்க முடியாது... அதனால் அதைச் சுருக்கிச் சொல்றேன்... ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் வளாகத்தில் 40 பேருக்கு திருக்குறள் வகுப்பெடுக்கச் சொன்னார்களாம். சரியின்னும் இவரும் போயிருக்கார். முதல் வாரம் 40 பேரும் இருந்தானுங்களாம்... அடுத்த வாரங்களில் அது குறைஞ்சி... குறைஞ்சி 13 பேருக்கு வர எங்கய்யா மத்தவனுங்க எல்லாம் என்றதும் அவனுங்க முக்கிய வேலையா போயிருக்கானுங்க... நீங்க நடத்துங்கன்னு சொன்னானுங்களாம். அதாவது அவனுகளுக்கு முக்கியமான வேலையிருக்கு... நமக்கு வேலையில்லை எனபதைச் சொல்லாமல் சொன்னார்கள் என்றவர், யாரைக் கேட்டாலும் முக்கியமான வேலை அப்படின்னு சொல்றாங்களே அப்படி என்ன முக்கியமான வேலை... நம்ம ஆவுடையப்பன் மகளுக்கு கல்யாணம் வச்சிருந்தார். எனக்கு பத்திரிக்கை கொடுக்கலை... பார்த்தப்போ என்ன எனக்குச் சொல்லலைன்னு கேட்டதுக்கு முக்கியமான ஆளுகளை மட்டுந்தான் கூப்பிட்டோம் என்றார். அப்ப நானெல்லாம் முக்கியமில்லை என்பதை சொல்லாமல் சொன்னார் என்று அவரைச் சீண்டி சிரிக்க வைத்தார். 

சரி திருக்குறள் கதைக்குப் போவோம்... அவனுகளுக்கு முக்கிய வேலை இருந்தா எனக்கு இல்லையா... இனி வகுப்பு கிடையாதுன்னு கோபமாச் சொல்லிட்டு கிளம்ப, அங்கிருந்த கோவில் நிர்வாகி ஒருவர் அவனுகளுக்காக நீங்க நிப்பாட்டிட்டா... எங்களுக்கும் திருக்குறள் கத்துக்க ஆசை இருக்கு... எங்களுக்காக நடத்துங்க... உங்களுக்கு கூட்டந்தானே வேணும் அதை நான் கூட்டுறேன் என்றார். ஆஹா நமக்கிட்ட கத்துக்க ஒரு கூட்டத்தைக் கூட்டுறேன்னு சொல்றாரேன்னு சரியின்னு சொல்லிட்டேன். மறுநாளே ஞாயிறு தோறும் கோவில் வளாகத்தில் திருக்குறள் வகுப்பு நடைபெறும் என என்பெயர் போட்டு விளம்பரம் வைத்திருந்தார். அதில் கீழே கோடு போட்டு பொங்கல், புளியோதரை விநியோகம் உண்டுன்னு போட்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை நான் போறேன்... அந்த இடமே கூட்டத்தால் நிரம்பி இருக்கு... நூறு பேர் உக்கார்ற இடத்துல ஒருத்தர் மேல ஒருத்தர் அடுக்கி வச்சதுமாதிரி இருநூறு பேருக்கு மேல இருக்காங்க... நான் போனா உள்ளே விடலை... ஒருத்தர் இங்க உக்காரு எல்லாருக்கும் கிடைக்கும் என்றார். நான் மீண்டும் உள்ளே போகணும் என்று சொல்ல, அங்க பாரு அண்டா நிறைய இருக்கு... கண்டிப்பாக கிடைக்கும் என்றார். 

நாந்தான் திருக்குறள் வகுப்பெடுக்க வந்திருக்கேன்னு சொன்னதுக்கு இப்படித்தான் ஏழெட்டுப் பேரு சொல்லிட்டு முன்னால பொயிட்டானுங்க... இங்கயே உட்கார் என்றார். அப்ப அந்த நிர்வாகி பார்த்துட்டு தம்பி இங்க வாங்க என்று கூப்பிட, நீதான் வகுப்பெடுக்க வந்த ஆளா, முன்னாடியே சொல்ல வேண்டியதுதானேன்னு சொல்லி என்னைப் போகச் சொல்ல எப்படியே உட்கார்ந்திருந்த ஆட்களின் தோள் மீது ஏறி ஏறி முன்பக்கம் வந்து சேர்ந்தேன். ஒரு வழியா வகுப்பெடுக்க ஆரம்பிச்சு மூணு குறள் நடத்திட்டேன். அப்ப ஒருத்தர் சீக்கிரம் முடிங்க என்றார்.. சரியின்னு சொலலிட்டு தொடர, இன்னும் எத்தனை இருக்குன்னு கேட்டார். ஏழு இருக்குன்னு சொன்னதும் மூணுக்கே அரைமணி நேரம் ஆக்கிட்டே,.. ஏழுக்கு..? என்றார். நான் வேகமா முடிச்சிடுறேன்னு சொன்னேன். அதுக்கு அவர் உன்னைய யாரு எடுக்க வேண்டான்னு சொன்னா... விநியோகம் பண்ணிட்டு எடு... இல்லேன்னா ஆறிப் போயிரும்... அப்புறம் நல்லாயிருக்காது என்றார். அதன் பின் அவர் இந்தக் கதையை இன்னும் சுவராஸ்யமாய் விளக்கி அரங்கத்தை சிரிக்க வைத்து இனிமேல் வகுப்பெடுப்பதில்லைன்னு முடிவு பண்ணினேன் என்று சொல்லி உதவி செய்வதால் சங்கடமே என்று சொல்லி முடித்தார்.

இந்த நகைச்சுவையை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன்.... எப்பக் கேட்டாலும் என்னால் சிரிப்பை அடக்க முடிவதில்லை.... இது ராமகிருஷ்ணன் போன்றோரின் நேயர் விருப்பம் வேறு என்று சொன்னவர், இவரைப் போல் இளைஞர்களும் நகைச்சுவையாய் ஆழ்ந்த கருத்தோடு பேச வரவேண்டும். அப்படி ஒருத்தர்தான் மணிகண்டன் எனச் சொல்லி அவரை சந்தோஷமே அணிக்கு பேச அழைத்தார்.

திரு. மணிகண்டன் : இவர் பேச வரும்போதே கோபமாய் வருவது போல் தெரிந்தது. காபி கொடுக்க வந்தவரை, காபி கொடுப்பதாக இருந்தால் எல்லாருக்கும் கொடுங்கள்... எனக்கும் கொடுங்கள்... ஏன்னா என்னோட ராசியோ என்னவோ எப்ப நான் பேச எழுகிறேனோ அப்போதுதான் காபி கொடுப்பார்கள். எனக்கு காபி வேண்டும். இந்த ஆறு பேருக்கும் நான் பேசி முடித்ததும் கொடுங்கள் என்று சபையில் பட்டென்று சொல்லி சந்தோஷத்துக்கு பேச ஆரம்பித்தார். தன் மகள் ஸ்கூலுக்குப் போகும் போது அப்பா நான் ஹேர் கட்டிங் பண்ணிக்கவா என்றாள். சரியென்று சொல்ல, கடைக்குப் போனதும் மொட்டை போட்டுக்கிறேன் என்றாள். என்னடா இது... மொட்டை போடுறேன்னு சொல்றாளேன்னு நானும் நடுவர் அவர்களைப் போல்தான் பிள்ளைகளை அடிப்பதோ திட்டுவதோ இல்லை. அதனால் சரியென்று சொல்லிவிட்டேன். பள்ளிக்கு போகிறேன்... அவளது வகுப்புத் தோழியும் மொட்டை அடித்திருந்தாள். என்னடா ரெண்டு பேரும் சொல்லி வச்சி மொட்டை போட்டீங்களா என்று கேட்க, அப்பா எங்க வகுப்புத் தோழி க்கு (ஒரு பெண் பெயரைச் சொல்லி) கேன்சராம்... டிரீட்மெண்ட் எடுக்கிறாளாம். டிரீட்மெண்ட் எடுத்தா தலை முடியெல்லாம் கொட்டிடுமாம். அதான் அவ மொட்டையா இருக்கதால மத்தவங்க கேட்டு அவ பீல் பண்ணாம இருக்க இந்த ரெண்டு மாசமும் எங்க கிளாஸ்ல எல்லாரும் மொட்டை போட்டுக்கிறதா பேசியிருக்கோம் என்றாள் என்றதும் அரங்கம் கைதட்டலால் நிரம்பியது.

அதன் பின் அவர் அப்துல்கலாம் குழந்தைகள் எடை அதிகமான செயற்கைக்காலைத் தூக்கி நடக்க சிரமப்பட்டதைப் பார்த்து தானே நாற்பெத்தெட்டு மணி நேரம் தொடர்ந்து முயற்சித்து விமானம் பறக்க இலகுவாக இருக்கும் அலுமினியத்தில் 400 கிராமுக்கு குறைவான செயற்கைக்காலை தயாரித்து அதை அந்தக் குழந்தைக்கு பொறுத்தி அது நடந்ததைப் பார்த்து நான் சந்தோஷப்பட்டதே எனக்கு கிடைத்த பெரிய சந்தோஷம் என்று அக்னிச் சிறகில் சொல்லியிருப்பதை எடுத்துக்கூறி, அன்னை தெரசா காளி கோவில் பூசாரி மயங்கிக் கிடந்த போது உதவியதை, ஆஸ்ரமக் குழந்தைகளுக்காக பணக்காரன் ஒருவனிடம் உதவி கேட்டு அவன் எச்சிலைத் துப்ப அதை ஒரு கையால் வாங்கிக் கொண்டு மறு கையை நீட்டி எனக்கு கொடுத்து விட்டீர்கள் என் குழந்தைகளுக்கு என்று கேட்டதை, இன்னும் சிலவற்றைச் சொல்லி சந்தோஷமே அணிக்கு வலு சேர்த்து 'ஜெய்ஹிந்த்' என்று சொல்லி அமர்ந்தார்.

அவரின் பேச்சைச் சிலாகித்த நடுவர், அடுத்து 'இவர் அருமையாகப் பாடுவார்.. ரொம்ப நன்றாகப் பேசுவார்... எப்பவாச்சும் பசங்களுக்கு வகுப்பும் எடுப்பார்' என்று சொல்லி முனைவர் விஜயசுந்தரி அவர்களை அழைத்தார்.

முனைவர் விஜயசுந்தரி : தனது கணீர் குரலில் பாடி ஆரம்பித்தவர், பாரதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களைவிட அவர் மீது மொய்த்த ஈக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை எடுத்துச் சொன்னார். பாரதி உதவி செய்ததால்தான் அவரை எல்லாருக்கும் பிடிக்கவில்லை என்றார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிறையில் இருந்த போது அவரின் சகோதரர மனநிலை சரியில்லாமல் தெருவில் திரிவதைக் கேள்விப்பட்டு ஒரு கடிதம் எழுதினார். அதில் என் சகோதருக்கு உணவளியுங்கள். நான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அந்தக் கடனை அடைத்து விடுகிறேன் என்று மக்களைப் பார்த்து கேட்டிருந்தார் என்று வருத்தமாய்ச் சொன்னவர் மக்களுக்காக சிறைக்கு போன அவருக்கு கிடைத்தது என்ன... என்று கேள்வி கேட்டார்,  தில்லையாடி வள்ளியம்மை வயிற்றில் இருக்கும் போது அவரது குடும்பம் தென் ஆப்பிரிக்கா செல்ல, அங்கு பிறந்தாலும் இந்தியா மீது கொண்ட பற்றுதலால் வெள்ளையரை எதிர்த்துக் குரல் கொடுத்தாள் அந்த இளம்பெண். அதற்கு அவளுக்கு கிடைத்த பரிசு வெள்ளையனின் பூட்ஸ்காலால் வயிற்றில் கிடைத்த உதை. அவள் சாகும் தருவாயில் கிடக்க அவரைப் பார்க்க காந்தியடிகள் போனார். அவள் யார் தெரியுமா? நம் தில்லையாடி வள்ளியம்மைதான். அவளுக்கு கிடைத்த பரிசு என்ன என்று மீண்டும் கேட்டார்... மேலும் சில வரலாற்றுச் செய்திகளுடன் பாடல்களும் அழகாகப் பாடி கணீரெனப் பேசினார். இவர் இன்னொன்றும் சொன்னார்... அதாவது பாரதி தன்னோட முடி நரைக்கும் முன்னரே இறந்து போனான் ஏன் தெரியுமா..? அவனது தலை முடியில் கூட ஒரு வெள்ளையன் நுழைந்து விடக்கூடாது என்று நினைத்தான் என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது. பேசியவர்களில் வரலாற்றுச் செய்திகளுடன் கணீரெனப் பேசினார் பார்க்க சிறிய உருவமாக இருந்த இந்தப் பேராசிரியை... வாழ்த்துகள் அம்மா.

பதிவு எழுதினால் ரொம்ப போய்க்கிட்டே இருக்கேன்னு குறைத்தாலும் நீளத்தை கட்டுப்படுத்த முடியவில்லை... பொறுமையாக வாசித்த அனைவருக்கும் நன்றி. வழக்கறிஞர் சுமதி என்ன பேசினார் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.


கொசுறு : நிஷா அக்கா சேனையில் தலைவலியுடன் பார்த்தே இவ்வளவா என்று சொல்லியிருந்தார். உண்மைதான் அக்கா.... இன்னும் தலைவலி தொடரத்தான் செய்கிறது. இந்த முறை செல்லும் எண்ணமே இல்லை.... கில்லர்ஜி அண்ணா அறைக்கு வந்ததால்தான் கிளம்பினேன். இல்லையேல் படுத்து உறங்கியிருப்பேன். இதுவரை பகிர்ந்தது சரிதான்.. இனி வரும் பேச்சாளர்களின் பேச்சை எல்லாம் அதிகம் கவனிக்கவும் முடியாமல் தலைவலி தொடரத்தான் செய்தது. தலைவலி மற்றும் அலுவலக காரணிகளால் பதிவாக பகிரும் எண்ணமும் இல்லை என்பதே உண்மை. திரு. சுபஹான் அண்ணன் அவர்கள் என்னாச்சு... எழுதலையா... என்று கேட்டதற்கு இணங்கவே பதிகிறேன்... சென்ற வருடங்களைப் போல் நிறைவாக எழுதவில்லை என்பதை நான் அறிவேன். இருப்பினும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறார்கள் என்பதாலே எழுதுகிறேன். உங்களிடம் சொன்னபடி இரண்டில் முடிக்க முடியவில்லை... இன்னும் ஒரு பகிர்வும் இருக்கு....

நன்றி.

படங்கள் உதவி : திரு. சுபஹான் அண்ணா.

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

பாரதி : கண் திறந்திட வேண்டும் - 1


வெள்ளி மாலை பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பாக புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவான 'கண் திறந்திட வேண்டும்' அபுதாபி இந்தியன் சமூக கலாச்சார மையத்தில் நடைபெற்றது. அண்ணன் கில்லர்ஜி அவர்கள் முத்துநிலவன் ஐயாவின் புத்தகத்துடன் மாலை 4 மணிக்கு மேல் அறைக்கு வந்தார். பின்னர் ஒரு சுலைமானியுடன் விருந்தோம்பலை(?) முடித்துக் கொண்டு மைத்துனனையும் அழைத்துக் கொண்டு மூவருமாய் ISC நோக்கி உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசியபடி நடையைக் கட்டினோம். நாங்கள் சென்றபோது அரங்கு ஓரளவு நிரம்பியிருந்தது. சரி முன்னால் உட்கார்ந்து கேட்கலாம் என்று போனால் அங்கு எல்லாம் VIP களுக்கான இருக்கை... சுற்றி மீண்டும் பின்னால் வந்தால் முன்னால் வேகமாகப் போனதைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் கேலியாக ஏதோ பேசினார்கள். சரி நமக்கெதுக்கு அதெல்லாம் என உதறிவிட்டு இருக்கை தேடி அமர்ந்தோம். எங்களுக்கு பின்னால் ஒரு பத்து இருக்கைகளை இரண்டு குழந்தைகள் முன்பதிவு செய்துவிட்டு விழா ஆரம்பித்த பின்னர் ஆடி அசைந்து வந்த குடும்பத்தாருக்காக பட்ட கஷ்டம் இருக்கே அது வேறு கதை... அதில் ஒரு சின்னக்குட்டி நான் அழுதுடுவேன்னு முழிச்ச முழியிருக்கு பாருங்க அதை அருகில் இருந்து ரசித்தால்தான் உணர முடியும். அப்புறம் எல்லாரும் பொங்கல் வாங்கி சாப்பிட, அட (இலவசமாய்) பொங்கல் கொடுத்திருக்கிறார்களே ஆஹா பொங்கப் போச்சே என்று யோசித்ததை பக்கத்து இருக்கை நண்பர் கேட்டிருப்பார் போல அவர் வைத்திருந்த ஒரு பார்சலை நம் பக்கம் திருப்பிவிட கில்லர்ஜி அண்ணா பெரிய மனிதராய் பிளாஸ்டிக் ஸ்பூனில் எடுத்துக் கொடுக்க, நமக்கு சொல்லவா வேணும்... வேண்டாம் வேண்டாம்ன்னு போயிக்கிட்டே இருந்துச்சு... எப்படியோ இலவசத்தையும் வாங்கியாச்சு.

விழா சொன்ன நேரத்தில் ஆரம்பித்தது... கடவுள் வாழ்த்துக்குப் பின் எப்பவும் போல் தலைவர் இராமகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பின்னர் இந்த வருடத்தில் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை அறிமுகம் செய்தார்கள். அதன் பின் புரவலருக்கும் ISC பெரியவர்களுக்கும் மரியாதை செய்தார்கள். வெள்ள நிவாரணத்துக்கு உதவியதில் பெரும்பங்கெடுத்த சிலருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார். பின்னர் குழந்தைகளில் நடனம்... எப்பவும் போல் திருமதி. ஆஷா நாயரின் அழகான நடன அமைப்பில் அற்புதமாய் ஆடினார்கள்.  'வீணையடி நீ எனக்கு' ஆடிய இரண்டு பேரும் அழகான சிற்பங்கள் அசைவது போல் கலக்கலாய் ஆடினார்கள். வாழ்த்துக்கள் குட்டீஸ்...'பராசக்தி' பாடலுக்கு ஆடிய குழந்தைகளையும் குறை சொல்வதற்கில்லை.


பின்னர் மேடை பட்டிமன்றத்துக்கு தயாரானது... பாரதி அமைப்பின் நண்பர் ஒருவர் பட்டிமன்ற பேச்சாளர்களை அழகான தமிழில், கவிதை நடையில் கணீர்க்குரலில் அறிமுகம் செய்து வைத்தார். பட்டிமன்றத்தின் நடுவராக திரு. சுகி சிவம் அவர்கள். இன்றைய சூழலில் உதவி செய்வது சந்தோஷமே... சங்கடமே என்பதுதான் பட்டிமன்றத்தின் தலைப்பு. தலைப்பு விழாவிற்குச் செல்லும் வரை தெரியாது. ஏனோ இந்த முறை அழைப்பிதழில் தலைப்பு போடப்படவில்லை. சந்தோஷமே என்ற அணிக்கு தலைவராக திரு. ஆவுடையப்பன் இருக்க, அவருக்கு வலு சேர்க்க திரு. மணிகண்டன் மற்றும் வழக்கறிஞர் சுமதி ஆகியோர் பேசினார்கள். சங்கடமே அணிக்கு திரு.சண்முக வடிவேலு தலைவராக இருக்க, அவருக்கு வலு சேர்க்க முனைவர் விஜய சுந்தரி மற்றும் திரு. மோகன சுந்தரம் ஆகியோர் பேசினார்கள்.


முதலில் பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு சால்வை மற்றும் அழகிய பூமாலையால் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் நடுவர் வசம் மேடை கொடுக்கப்பட, 'ஆஹா... என்ன அழகா மாலை பாருங்க... நம்ம ஊர்லயும் மாலை போடுவாங்க... இருக்கதுலயே சின்னதா... போடும் போதே எனக்கு பயமா இருக்கும்... எப்படியும் கண்ணாடியை தட்டி விட்டு விடுவார்கள்... அதைப் போட்டதும் அதில் இருக்கும் ஈரம் ஆடையில் பட்டு அது ஒரு கலராகிவிடும்... இந்த மாதிரி மாலை போடுவார்கள் என்று தெரிந்தால் நான் இன்னும் ஒருமுறை அறுபதாம் கல்யாணம் பண்ணியிருப்பேன்' என்றபடி ஆரம்பித்து உடம்பில் இருக்கும் உயிர் பற்றி எல்லாம் பேசி, நாம் பார்க்கும் வேலையை மதிக்க வேண்டும் என்று சொல்லி அதற்கு உதாரணமாக தன் மகள் கற்றுக் கொடுத்த பாடத்தையும் சொன்னார். 

ஒருநாள் வீட்டின்கீழ் தளத்தில் அமர்ந்திருக்கும் போது மாடியில் அவரது அறையில் இருந்த கண்ணாடி தேவைப்பட, மேலிருந்து இறங்கி வந்த 7 வயது மகளிடம் (இப்போ 35 வயது என்றும் சொன்னார்) 'டேய்... அப்பாவோட கண்ணாடியை எடுத்துக்கிட்டு வாடா...' அப்படின்னு சொன்னாராம். இப்போது இடை நிறுத்தி  'பொம்பளைப் பிள்ளைங்களை டா போட்டுக் கூப்பிடுறதுல இருக்க சுகமே தனிதான்... அதே நேரத்துல பயலுகளை டீ போட்டுக் கூப்பிட முடியாது... கூப்பிட்ட அது வேற மாதிரி போயிரும்... நல்லாவும் இருக்காது' என்று சொல்லி கைதட்டலை பெற்றுக் கொண்டார். அவர் கண்ணாடி கேட்டதும்  'அட போங்கப்பா... 17 படி ஏறிப் போயி எடுக்கணுமாக்கும் என்னால முடியாது'ன்னு சொல்லிட்டு வெளிய போயிருச்சாம். இவர் எதுவும் பேசலையாம்... ஏன்னா எப்பவாச்சும்தான் வீட்ல இருக்கோம்.... அப்பவும் அந்தப் பிள்ளைங்களை திட்டினா... என்னைக்காச்சும் வர்றாரு... வரும்போதும் திட்டுறாருன்னு நினைச்சுக்கங்க என்பதால் எப்பவும் திட்டமாட்டேன் என்றார். இது உண்மை... நானும் அனுபவித்திருக்கிறேன்... இப்ப எங்க அறையில் ஒருத்தர் இருக்கார் 7வது படிக்கிற மகனை போட்டு தினமும் 2 மணி நேரம் வறுத்தெடுக்கிறார். எங்க விஷால் படிக்கிறது ரெண்டாவதுதான்.. எதாவது சொன்னா ' ஏய் என்ன... வந்தேனாத் தெரியுமான்னு' மதுரை பாஷையை குழந்தை மொழியில் பேசி சிரிக்க வச்சிடுறான். 

சரி வாங்க சுகி சிவம் ஐயா பின்னாடி போவோம்... கண்ணாடி எடுக்காத மகள் தன் பிரண்டோட மாடிப்படியில் மேலும் கீழுமாக 17 தடவை ஏறி இறங்கியிருக்கு... பொறுமையா பார்த்துக்கிட்டு இருந்தவர் ஒரு கட்டத்தில் கடுப்பாகி, தலைமுடியை கொத்தாகப் பிடித்து 'ஏன்டா... நான் கண்ணாடி கேட்டதுக்கு பதினேழு (இழுத்துச் சொல்லி) படி ஏறணுமான்னு கேட்டே... இப்போ பதினேழு (இப்பவும் இழுவை) தடவை ஏறி இறங்கியிருக்கே... அதை எடுத்துக் கொடுத்தா என்ன'ன்னு கேட்டாராம். அதுக்கு 'அது வேலைப்பா... இது விளையாட்டுப்பா' என்ற அவரின் மகள் 'இதையெல்லாம் வேலை இல்லாதவங்கதான் எண்ணிக்கிட்டு இருப்பாங்க'ன்னு சொல்லிட்டுப் போச்சாம்... இதைச் சொல்லி 'நம் வேலை நாம்தான் பார்க்க வேண்டும்... அதுவும் ஒரு ஈடுபாட்டோடு பார்க்க வேண்டும்' என்பதை அன்று கற்றுக் கொண்டேன் என்று சொன்னார். இன்னும் சில கதைகள் சொல்லி சந்தோஷமே அணித் தலைவர் திரு. ஆவுடையப்பன் அவர்களை பேச அழைத்தார்.

திரு. ஆவுடையப்பன் : ''ஒருத்தரை எதிரே பார்த்த ஒருவன் உங்களை எங்கயோ பார்த்திருக்கிறேனே... பேஸ்புக்ல இருக்கிங்களா... டுவிட்டர்ல இருக்கீங்களா... வாட்ஸ் அப்ல இருக்கீங்களான்னு கேட்டானாம்... அவரு அதுக்கெல்லாம் இல்லை இல்லைன்னு சொன்னாராம்... இல்லை எங்கயோ பார்த்திருக்கிறேன் என்றதும் நீ இருக்கிற அபார்ட்மெண்ட்லதான் நானும் ஒரு வருசமா குடியிருக்கிறேன்டா என்றாராம். உலகம் ரொம்ப சுருங்கிப் போச்சு... இப்ப எல்லாமே கைக்குள்ள வந்திருச்சு... யாரும் யாருக்கிட்டயும் கேக்கிறதுல்ல... வழி கூட நடுரோட்டுல நின்னுக்கிட்ட் மொபைல்ல பார்த்து அது சொல்றபடி போக ஆரம்பிச்சிட்டாங்க... என்றெல்லாம் பேசி சந்தோஷத்துக்கு காரணங்களை அடுக்கினார். 

இப்பல்லாம் பஸ், இரயிலில் எல்லாம் யாரும் யாருடனும் பேசுவது கூட இல்லை... ஒருமுறை நான் திருச்சியில் இருந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸில் போனேன். பக்கத்தில் இருந்த பெரியவரிடம் மெதுவாக பேச ஆரம்பிக்க, அவரோ பதில் சொல்லவில்லை.. பேசினா என்னங்கன்னு கேட்கவும் இப்ப நீ என் பேரைக் கேப்பே... அப்புறம் நான் உன் பேரைக் கேப்பேன்.. வர்ற நிறுத்தத்துல நீ காபி குடிக்கலாமான்னு கேப்பே... நானும் சரிம்பேன்... அடுத்த நிறுத்தத்துல நான் டிபன் பண்ணலாமான்னு கேப்பேன் நீ சரிம்பே... இறங்கும் போது அட்ரஸ் கேப்பே... கொடுப்பேன்... அடுத்த நாளே வந்து நிப்பே... எனக்கு வயசுக்கு வந்த மகள் இருக்கு... அதுவும் நீயும் காதலிப்பீங்க... கூட்டிக்கிட்டு ஓடிப்போவே... நான் மருந்தைக் குடிச்சிட்டு செத்துப்போவேன்... இதெல்லாம் வேண்டாம் தம்பியின்னு சொல்லிட்டாரு என்றார். எது எப்படியிருந்தாலும் பிறருக்கு உதவுவது சந்தோஷமே என்று சொல்லி அமர்ந்தார்.

அவரின் பேச்சுக் குறித்து சில விளக்கங்கள் கொடுத்த சுகி சிவம் அவர்கள் சங்கடமே அணித் தலைவரை அழைத்தார். அவரும் தன் பக்கம் இருந்த மைக்கை மறந்து எதிரணிப் பக்கமாக நடக்க எதிரணியினர் உங்க பக்கம் மைக் இருக்கு அங்க போங்க என்றதும் திரும்பி அங்கு சென்றார்.

திரு. சண்முக வடிவேலு : 'பாவம் எதிரணியினர் அவர்களுக்கு உதவலாம் என்று போனால் அங்கிட்டுப் போன்னு திருப்பி விட்டுட்டாங்க' என்று தான் மறந்து போனதை சமயோகிதமாக நகைச்சுவை ஆக்கினார். இதுதான் ஒரு பேச்சாளனின் திறமை. இவரின் பேச்சில் நகைச்சுவை சும்மா துள்ளலாட்டம் போட்டது. அரங்கம் மட்டுமின்றி நடுவர் கூட சிரித்து சிரித்து மண்டையில் ஏறிவிட்டது. திருவள்ளுவர் வழியில் நடக்கச் சொல்றாங்க... நான் அப்படி நடப்பவன்தான் அதுனால எனக்கு கிடைத்தது சந்தோஷமா இல்லையே சங்கடம்தானே... ஒருநாள் இப்படித்தான் வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தேன். எதிரே ஒருத்தன் வந்தான். நீதானே சண்முகவடிவேலு அப்படின்னு கேட்டான். ஆமா என்றதும் அருகில் வா என்றான்... போனேன்... இன்னும் அருகில் வா என்றான்... சரி எதோ கொடுக்கப் போறாரு போலன்னு கிட்டப் போனேன்... இன்னும் வா என்றான்... என்னடா நம்ம காது எட்டலை போல என்று அருகே போக, சட்டுன்னு ஒரு அறைவிட்டான். எதுக்கு அடிச்சான்னு தெரியலை... கேட்டாலும் பதில் இல்லை... சரியின்னு வேலைக்குப் போனாலும் எதுக்கு அடிச்சிருப்பான்னு ஒரே யோசனை நாமதான் திருவள்ளுவரை பின்பற்றுபவராச்சே... 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' அப்படிங்கிற குறளுக்கு இணங்க அவனுக்கு ஏதாவது நல்லது செய்ய நினைச்சேன். அது அன்னைக்கு சாயந்தரமே நடந்தது... 

நான் வேலை விட்டுப் போறேன் அவனைப் போட்டு ஒருத்தன் அடிச்சிக்கிட்டு இருக்கான்... சரி நம்மளை அடிச்சவன் அடிவாங்குறான்னு சந்தோஷமில்லை... காரணம் நாந்தான் திருவள்ளுவரைப் பின்பற்றுபவனாச்சே... ஏன்யா அடிக்கிறேன்னு கேட்டதும்... நீ யாருய்யா கேக்க என்றான்... சொல்லுய்யா ஏன் அடிக்கிறே என்றேன் மறுபடியும்... பத்து ரூபாய் வாங்கி ரெண்டு வருசமாச்சு... இந்தாத்தாரேன்... அந்தாத்தாரேன்னு இழுத்தடிக்கிறான் என்றதும் பத்து ரூபாய்தானே நான் தர்றேன் என்று கொடுத்ததும் அவன் போய்விட, இவன் காலையில் அடித்ததற்கு வருந்துவான் என்று பார்த்தால் பக்கத்தில் இருந்த நண்பனிடம் சொல்றான் 'இந்தாளு இருக்கது தெரியாம கண்டவங்கிட்டயும் பணம் வாங்கி அடிவாங்குறேன். இந்தா காலையில ஒரு அடி விட்டேன்... இப்ப பத்து ரூபாய் கொடுக்கிறார்... அப்ப இருபது ரூபாய் வேணுமின்னா 2 அடி கொடுத்தா போதும்... சாயந்தரம் இருபது ரூபாய் கொடுத்துட்டுப் போவாரு... முப்பதுன்னா மூணு, 50 ரூபாய் வேணுமின்னா 5 அடிதான் என்றானே பார்க்கலாம் என்றபோது அரங்கமே அதிர்ந்தது.

இவர் சொன்ன திருக்குறள் வகுப்பு எடுத்த கதைக்குத்தான் நடுவருக்கு சிரிச்சி சிரிச்சு புரை ஏறியது... அது அடுத்த பதிவில்...


நட்புக்காக ஒரு வேண்டுகோள் : குழந்தைகளை வீட்டில் இப்படித்தான் விடுவார்களா என்று தெரியவில்லை... ஆனால் விழா அரங்கில் சந்தைக்கடை போல கத்தவிட்டுவிட்டு பெற்றவர்கள் அமர்ந்திருக்க, அவர்களின் விளையாட்டுச் சத்தத்தில் ஒன்றும் கேட்கவில்லை என்ற நிலை... அப்போது நடுவரிடமும் ஒரு சீட்டு கொடுக்கப்பட, அதை வாசித்து இதெல்லாம் நடக்கிற கதையா... நாம அவர்களை அடக்க முடியுமா.. முடிந்தால் பெற்றோர்கள் கொஞ்சம் பாருங்கள் என்றார். ஆனால் எந்தப் பெற்றோரும் பார்க்கவில்லை... கனவுப்பிரியன் அண்ணன் வந்தபோது வெளியே போய் டீ சாப்பிட்டுவிட்டு இனி இருக்கைக்கு போவது என்பது சிரமம் என்பதால் பின்னால் நின்றோம்.. பின்னர் கடைசி இருக்கை காலியாக அமர்ந்தோம்... பிள்ளைகள் ஓடிப்பிடித்துத்தான் விளையாண்டார்கள்... என்ன காட்டுக் கத்தலோடு... பின் வரிசையில் இருப்பவர்களுக்கு ஒன்றுமே கேட்கவில்லை என்பதுதான் உண்மை. இது வருடா வருட நிகழ்வுதான் என்றாலும் முன்னிருக்கையில் அமரும் பாரதி அங்கத்தினர் சிலர் பின் வரிசைகளில் அமர்ந்து கொஞ்சமே கொஞ்சமேனும் சப்தத்தைக் குறைக்கலாமே... ஏன் எல்லாருமே முன் வரிசைக்கு ஆசைப்படுகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. பெரும்பாலும் விழா நடத்துபவர்கள் அரங்கில் சுற்றிலும் இருப்பார்கள்... தேவகோட்டை பாரதி கலை இலக்கியப் பெருமன்ற விழாக்களில் நாங்கள் இப்படித்தான் செய்வோம். அடிகளாரின் பேச்சுக்கு எல்லாம் அரங்கமே அமைதியாக இருக்கும்... அதனால் சொல்கிறேன். இனி வரும் நிகழ்வுகளில் இதைச் செய்தால் மகிழ்ச்சியே...

படங்கள் உதவி : திரு. சுபஹான் அவர்கள்.

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

சனி, 23 ஜனவரி, 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-1)

"என்ன வேலாயுதம்... பொங்கல் முடிஞ்சிருச்சு இன்னும் மடக்கரைச் செய்யை அறுக்காம போட்டு வச்சிருக்கே..." என்று கேட்டபடி வந்து திண்டில் அமர்ந்த பஞ்சநாதன், "கொஞ்சம் போயில கொடேன்... வாங்கணுமின்னு நினைச்சித்தான் டவுனுக்குப் போனே... சுத்தமா மறந்துட்டேன்... இப்பத்தான் ராமசாமி மவனுக்கிட்ட காசு கொடுத்து விட்டிருக்கேன்..." என புகையிலையை வாங்கி கையில் வைத்து தேய்த்து வாயில் லாவகமாக அதக்கிக் கொண்டார்.

"தாள் கொஞ்சம் பச்சையா இருக்கு... அது போக வயலும் கொஞ்சம் ஈரமாத்தான் இருக்கு அதான் காயட்டும்ன்னு போட்டு வச்சிருக்கேன். எங்க அண்ணமவன் ரெத்தினமும் நானுந்தானே  களம் ரெடி பண்ணினோம். அவன் மேட்டுச் செய்யி அறுத்திருக்கான்... வேலை முடிச்சு களம் நமக்கு கிடைக்க இன்னும் ரெண்டு நாளாகும். இப்ப அறுத்து அங்க கொண்டு போயிப் போட்டா அவனுக்கும் சிரமம் நமக்கும் சிரமம்... அதான் காயட்டும்ன்னு விட்டு வச்சிருக்கேன்."

"அது செரிதான்... கோயில் மாடு பாக்கணுமேப்பா... அதான் கேட்டேன்..."

"மடக்கரை பக்கந்தானே.... இங்க அவ்வளவு சீக்கிரம் மாடு வராது... இன்னும் நீர்ப்பிடிச் செய்யி பக்கமெல்லாம் அறுக்காம போட்டு வச்சிருக்காங்க... ஆளுகளும் காவலுக்கு போகுதுல்ல... நானும் வயல்லதானே படுக்கிறேன்... இன்னும் ரெண்டு நாள்தானே..."

"ம்... ஆமா சவுந்தரம் எங்கே...? நீ மட்டும் இருக்கே...?"

"மடக்கரை செய்யி அறுக்கும் போது வீட்லயும் ஆளு வேணுமில்ல... அதான்... செல்வி வீட்டுக்கு ஒரு எட்டு பொயிட்டு அதைக் கூட்டிக்கிட்டு வாறேன்னு சொன்னா...  சரி பொயிட்டு வான்னு சொன்னேன்... இப்ப வந்துருங்க... என்ன அவ இருந்தா இருண்ணே காபி போடுறேன்னு சொல்லுவா... நா போயிலதானே கொடுக்க முடியும்..." வேலாயுதம் சிரித்தார்.

"ஏய் அதுக்கு கேக்கலைப்பா... என்னோட சத்தம் கேட்டா வாண்ணேன்னு வந்துருவா... காணாமேன்னு கேட்டேன். ஆமா இந்தப் பொங்கலுக்கும் நீ மூத்தவனைக் கூப்பிடலையா ..?"

"இப்ப எதுக்கு அவன் பேச்சு... இதுக்குத்தான் சவுந்தரம் எங்கேன்னு கேட்டியாக்கும்..?" வேலாயுதம் கோபமாய்க் கேட்டார்.

"இந்தாப்பா... இப்ப எதுக்கு கோபப்படுறே..? எம்புட்டுக் காலந்தான் தள்ளி வைப்பே..? கண்கானாத இடத்துல இருந்தாலும் பரவாயில்லை... திருச்சியிலதானே இருக்கான்... நம்ம பயலுக பூராம் அவனோட பேசுறானுங்க... வயசான காலத்துல பழசை தூக்கி வச்சிக்கிட்டு இருந்து என்ன பண்ணப் போறோம்... சொல்லு..."

"அதுக்காக அப்பனாத்தாவை மதிக்காத  மசுருப்புள்ளையை கூட்டி வச்சி கொஞ்சச் சொல்றியா..?"

"அவனுக்கும் குடும்பம், குழந்தையின்னு ஆச்சு... ஆணொன்னு பொண்ணென்னுன்னு சொன்னானுங்க... ஆமா உனக்குத் தெரியாமயா இருக்கும்... நல்லது கெட்டதுக்கு வாடான்னு சொல்லி அவனையும் சின்னவனையும் சேர்த்து வச்சியன்னா உறவு விட்டுப் போகாம இருக்கும்ல்ல... நாளைக்கி அவனுக ஒருத்தனுக்கு ஒருத்தன் ஆதரவா இருப்பானுங்கதானே..."

'இங்க பாரு... அவனோட முகத்துலே முழிக்கக் கூடாதுன்னு சவுந்தரம் வைராக்கியமா இருக்கா... சின்னவங்கிட்ட சொன்னா எங்களை இந்த வீட்டை விட்டு விரட்டிருவான்... கேடுகெட்ட பய எங்கயோ இருந்துட்டு போகட்டும்... ஆடு பகையாம்... குட்டி உறவாம்... நல்லாயிருக்கே... எதுக்கு இப்ப அவனைப்பத்தி பேசுறே..? இதுக்குத்தான் இங்க வந்தியா..?"

"இப்ப இந்தக் காதல் கத்திரிக்காய் எல்லாம் சகஜம்தானேப்பா... ஏன் நம்ம நாகம்மா மகன்... அதான் அந்த ராம்கிருஷ்ணப்பய... புவனான்னு ஒருத்தியை எவ்வளவு எதிர்ப்புக்கு இடையில் தூக்கிட்டுப் போயி தாலி கட்டினான்.... இப்ப அவன் ரெண்டு சாதிசனத்துலயும் சேந்து நல்லது கெட்டதுக்கு நிக்கலையா..."

"அதுக்காக நம்ம சாதிக்குன்னு இருக்க மரியாதையைக் கெடுத்துட்டு எவளோ ஒருத்திய இழுத்துக்கிட்டு போனா... அந்த நாயை நடுவீட்டுல கொண்டாந்து உக்கார வச்சி சோறு போடணுமா...? இங்க பாரு... எனக்கு சாதிதான் முக்கியம்...எஞ்சாதிக்கு மதிப்புக் குறையிற மாதிரி எது நடந்தாலும் நான் இப்படித்தான்... கோயில்ல கூட பாரு அம்மனும் அய்யனும் கோபுரத்துக்குள்ள இருக்க... உளி வீரன் வெளியிலதான் நிக்கிறான்... அப்படித்தான்... என் சாதி... என் இனம்... இதுல நான் இப்படித்தான்... எதுக்காகவும் என்னை மாத்திக்க முடியாது..."

"என்னப்பா நீ இப்பவும் சாதி சாதியின்னு பேசுறே.... அதெல்லாம் எப்பவோ மல ஏறிப்போச்சு... இப்ப எல்லாரும் ஒண்ணு மண்ணா ஆயிட்டோம். அன்னைக்கு கும்புடுறேன் ஐயான்னு கக்கத்துல துண்டை வச்சிக்கிட்டு வீட்டு வாசல்ல வந்து நின்ன செபத்தியான் மகன் இன்னைக்கு நம்ம ஏரியா தாசில்தாரு... அவரப் பாக்க போயி இப்ப நாம வணக்கந்தம்பின்னு நிக்கிறோம்... இதுதான் உண்மை... சாதியை வச்சி அரசியல்வாதிங்க பொழப்பு நடத்தலாம்... நம்மள மாதிரி மனுசங்க அதுல விழக்கூடாது... அவன் கட்டுனவ ஒண்ணும் குறைச்சலில்லையே... சரி விடு... இனி சாதி அது இதுன்னு பேசாம நாம வாழப்போற கொஞ்ச நாளைக்குள்ள... நமக்கு அறுவடை தேதி வர்றதுக்குள்ள அவனை வீட்டோட சேர்க்கப்பாரு"

"அட சும்மா இருப்பே... நீ வேற... நாஞ் செத்தாக்கூட அவனும் அந்தச் சிறுக்கியும் இந்த வீட்டு படிவாசல் மிதிக்கக்கூடாது...."

"இதுக்கு மேல உங்கிட்ட பேசி காரியம் இல்லை.... விடு.... ஆமா இந்தத் தடவை அம்மா ஜெயிக்குமா...?"

"ஆமா அவளைச் ஜெயிக்க வச்சி இன்னமும் இலவசத்துப் பின்னால போயி இருக்கிறதை எல்லாம் இழக்க வேண்டியதுதான்..."

"நீ ரொம்ப சூடா இருக்கே... நான் அப்புறமா வர்றேன்..." என்றபடி எழுந்து துண்டை உதறினார்.

***

"டேய் உள்ள வாங்கடா..." என்றான் பார்த்தசாரதி.

"இல்லடா... நாங்க இங்க நிக்கிறோம்... நீ போ..." என மறுத்தான் கண்ணன்.

"அட வாங்கடான்னா..." என்று அவன் அதட்ட, அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

"ஏன்டாம்பி இவாள்ளாம் யாரு...? ஆத்துக்குள்ள தபதபன்னு நுழையுறா...?" என்று மறித்தாள் அன்னபூரணி.

"பாட்டி என்னோட பிரண்ட்ஸ்... நாந்தான் வீட்டுக்கு கூட்டியாந்தேன்..." என்றான் பார்த்தசாரதி.

"என்ன குலம்... என்ன கோத்திரம்ன்னு தெரியாம... கண்டவா எல்லாம் உள்ள நுழைய இது என்ன மடமா... ஆச்சாரமான குடும்பம்டா... ஏய் அம்பிகளா சித்த வெளிய நில்லுங்கடா..."

"டேய் அதான் சொன்னேன்.... நீங்கள்லாம் ஆச்சாரம் அந்தஸ்துன்னு பார்க்கிற இடம்... நாங்க வெளிய நிக்கிறோம்..." என்று கோபமாய்ச் சொன்னான் கண்ணன்.

"என்னடாம்பி உனக்கு இப்படிக் கோபம் வர்றது... எங்களுக்குன்னு சில ஆச்சாரம் அனுஷ்டானம் இருக்கோன்னோ... தெரிஞ்சிக்கோ... ஏய் அவா நின்ன இடத்துல ஜலம் எடுத்து தெளியுங்கோ" அன்னபூரணி படக்கென சொன்னாள்.

(பகுதி 2 : சனிக்கிழமை தொடரும்)

(வாழ்க்கயைப் பேச இருக்கும் இந்த புதிய தொடருக்கு உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 22 ஜனவரி, 2016

சினிமா : தாரை தப்பட்டை...


தாரை தப்பட்டை...

விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை கொஞ்சம் கொடூரமாய்ப் பேசும் பாலா, இந்த முறை கையில் எடுத்திருப்பது கரகாட்டக்காரர்களின் வாழ்க்கையை. அவர்களின் வாழ்வியல் போராட்டங்களை அழகாக படம்பிடித்திருக்கும் இயக்குநர் அதே பாதையில் பயணித்திருந்தால் அது பத்தோடு ஒன்றான தமிழ் சினிமா ஆகிவிடும் என்பதை நாம் அறிவோம். ஆனால் அந்த மனிதர்களின் வலியை மிகக் கொடூரமாக திரையில் கொண்டு வந்து பார்வையாளனை பதற வைக்கும் படங்களை பாலாவால் மட்டுமே கொடுக்க முடியும் என்பதையும் நாம் அறிவோம். இது போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களைத்தான் பெறும். அதே நிலைதான் தாரை தப்பட்டைக்கும்.... சிலர் கிழிந்தது தப்பட்டை என்றும் சிலர் ஆட்டம் தூள் என்றும் கலவையாய்த்தான் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

சாமிப்புலவன் (ஜி.எம்.குமார்) என்னும் பழம்பெரும் வாத்தியக்காரரின் மகன் சன்னாசி (சசிகுமார்) நடத்தும் கரகாட்டக்குழுவின் பிரதான ஆட்டக்காரி சூறாவளி (வரலெட்சுமி) மாமா, மாமா என சசிக்குமாரின் மீது உயிரையே வைத்திருக்கிறார். சூறாவளியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வரும் கருப்பையா (ஆர்.கே.சுரேஷ்) அவரின் அம்மாவிடம் பேச, அவரோ எத்தனை நாளைக்குத்தான் அவளை ஆடவிட்டு சம்பாதிக்கப் போறீங்க... அவளும் நல்ல வாழ்க்கை வாழ வேண்டாமா என்று சொல்லி சன்னாசியின் காதலை உடைத்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார். சூறாவளியின் திருமண வாழ்க்கை தென்றலாய் பயணித்ததா... இல்லை சென்னை மழை வெள்ளம் போல் அவளின் வாழ்க்கையை புரட்டிப் போட்டதா என்பதைப் பேசுவதே தாரை தப்பட்டை.

சாமிப்புலவனாய் வரும் ஜி.எம் குமார், பெரும்பாலும் குடித்துக் கொண்டே இருக்கிறார். கலையை கலையாய் பார்க்க வேண்டும்... அதை காலச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அழித்து விடக்கூடாது என்று நினைக்கும் ரகம். ஆரம்பக் காட்சியில் தவில் வாசிப்பதாகட்டும், சூறாவளியுடன் குடிப்பது, மகனிடம் எகத்தாளம் காட்டுவது, வெள்ளைக்காரர்கள் முன்னிலையில் பாடி தனக்கு அளித்த மாலையை திரும்ப அவனுக்கே அளித்து வருவது என தனது பண்பட்ட நடிப்பைக் காட்டியிருக்கிறார். மகன் மீது பாசம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் வைத்திருக்கும் அந்த மனிதர் மகன் காறி உழிந்ததும் குலுங்கிக் குலுங்கி அழுவதில் பாசத்தை பறை சாற்றி, தன்னை கேள்வி கேட்ட மகன் முன்னே சாதித்து வந்த மகிழ்ச்சியில் இறந்தும் போகிறார்.

கருப்பையாவாக வரும் ஆர்.கே. சுரேஷ், கலெக்டரின் டிரைவர் எனச் சொல்லி அறிமுகமாகி சூறாவளியை கரம்பிடிக்க சன்னாசியிடன் அடி வாங்கி, அவளின் அம்மாவை மயக்கி தன்னோட திருமணத்தை முடித்துக் கொள்கிறார். அதன் பின்னான ஆட்டத்தில் அசால்ட்டாய் நடித்து... யார்டா இந்த வில்லன் என எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். முதல் படம் என்பதை நம்மால் நம்ப முடியாத நடிப்பு. தமிழ் சினிமாவுக்கு புதிய வில்லனை தாரைதப்பட்டை கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.

சன்னாசியாக வரும் சசிக்குமார் நீண்ட முடியை கொண்டை போட்டுக் கொண்டு தாடிக்குள் சோகம், சந்தோஷம், வலி என எல்லாவற்றையும் மறைத்து அதை எல்லாம் பார்வையில் காட்டி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். பிணத்துக்கு முன் ஆடும் நிலை வரும்போது வருந்தி, பின்னர் தன்னை நம்பியிருப்போரின் வயிற்றுப் பிழைப்புக்காக ஆடுவது... சூறாவளி நல்லாயிருக்கட்டும் என காதலை விட்டுக் கொடுப்பது... அப்பாவிடம் சண்டையிட்டு எச்சிலை காறித் துப்புவது... அண்ணன் தங்கை போட்ட ஆபாசப்பாடல் ஆட்டத்தைப் பார்த்து குமுறுவது... இறுதிக் காட்சியில் வில்லனை சூரசம்ஹாரம் செய்வது என தன்னோட நடிப்பில் ஜெயித்திருக்கிறார்.

சூறாவளியாக வரலெட்சுமி, அசல் கரகாட்டக்காரியை நினைவு படுத்துகிறார். சன்னாசி மேல் வைத்திருக்கும் காதலை 'என் மாமனுக்கு பசியின்னா நான் அம்மணமாகக்கூட ஆடுவேன்' என்று சொல்லும் ஒற்றை வசனத்தில் நச்சென சொல்லி விடுகிறார். அவர் போடும் ஆரம்ப ஆட்டங்களின் ஒவ்வொரு அசைவும் நிஜ கரகாட்டக்காரிகளின் ஆட்டத்தை அப்படியே பிரதிபலிக்கிறது.(இதற்காகவே ஒரு மாதம் பயிற்சி எடுத்திருக்கிறார்) தன்னை வேறொருவனைக் கட்டிக் கொள்ளச் சொல்லும் மாமனை புரட்டி எடுப்பது, சாமிப்புலவருடன் சேர்ந்து தண்ணி அடிப்பது... பாதிக்கப்பட்ட பெண்ணாய் பதறுவது.... இறுதிக்காட்சி என படத்தின் ஒட்டுமொத்த குத்தகையே இவர்தான். போடா போடி பார்த்த போது இதெல்லாம் எதுக்கு நடிக்க வருது என்று நினைக்க வைத்தவர் இதில் என்னாலும் நடிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். சூறாவளியாய் மிளிரும் வரலெட்சுமிக்கு வாழ்த்துக்கள்.

மேலும் அமுதவாணன், ஆனந்தி, அந்தோணி, சூறாவளியின் அம்மா, சாமியார் என எல்லாரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். அமுதவாணன் - ஆனந்தி வயிற்றுப் பிழைப்புக்காக போடும் ஆபாச குத்தாட்டம் இன்றைய உண்மை நிலையை பிரதிபலிக்கிறது. அதன் பின்னான வசனங்கள் அந்த ஆட்டத்தை நியாயப்படுத்தினாலும்... அண்ணனும் தங்கையும் வயிற்றுப் பிழைப்புக்காக இப்படி ஒரு ஆட்டம் போடுவதை நினைத்து நமக்கும் வலிக்கத்தான் செய்கிறது.

கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வின் இன்றைய நிலையை அப்படியே கண் முன்னே நிறுத்தும் படம். ஆபாசமாக ஆடி அவர்கள் வயிற்றுப் பிழைப்பைப் பார்த்தாலும் நமது பாரம்பரியக் கலை ஒன்று அதன் சுயம் இழந்து ஆபாசக் கூண்டுக்குள் சிக்கிவிட்டதைப் பற்றி படம் பேசும் என்று நினைத்தால் அதை விடுத்து சூறாவளியின் வாழ்க்கைக்குள் நுழைந்து பாலாவின் முத்திரையான கொடூரமான பாதையில் பயணித்து முடிகிறது. 

கரகாட்டக்காரிகளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வருவது... அது ஒரு ஏமாற்று வேலைதான் என்றாலும் இன்றைய உலகில் சாத்தியமில்லாத ஒன்று. அந்தமான் காட்சியில் அந்தப் பெண்களை எங்களுடன் படுக்க அனுப்பு என்று கேட்பதுபோல்தான் பல இடங்களில் ஆடப் போகும் போது அவர்களுக்கு நிகழ்கிறது. அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக பேசும் ஆபாசம்தான் அவர்களின் வாழ்க்கை நிலையும் என்று நினைக்கும் மனிதர்கள்தான் இருக்கிறார்களே ஒழிய ஒரு கரகாட்டக்காரியை மனைவி ஆக்கி சமுதாயத்தில்  ஒருவனாய் வாழ எவனும் முன்வருவதில்லை. எங்கள் ஊருக்கு ஆட வந்த ஒரு பெண் இளம்வயது... ஏற்பாடு செய்து கூட்டியாந்தவன் இளைஞன்... இருவருக்கும் அதன் பின்னான நாட்கள் ரொம்ப காதலால் கசிந்து உருக ஆரம்பித்தது போல் தெரிந்தது. ஆனால் அவள் அவனுக்கு பயன்படும் வரை உருகினான். பின்னர் அவளை விடுத்து தன் வாழ்க்கைப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டான். அவளது வாழ்க்கையோ ஏஜெண்டுகளை நம்பி பயணிக்கும் கரகாட்டக்காரியாய் தொடர்கிறது.

இப்படியெல்லாமா உடை உடுத்தி ஆடுகிறார்கள்... இதெல்லாம் இப்போ மலையேறிப் போச்சு என்கிறார்கள் சில விமர்சகர்கள்... இப்ப இதைவிட மோசமாகவும் உடை உடுத்தி ஆடுகிறார்கள். எங்க மாவட்டத்தில் கரகாட்டம் நடத்த ஏகப்பட்ட கெடுபிடிகள்... பத்து மணிக்கு ஆரம்பித்து மூணு மணிக்கு முடித்துவிட வேண்டும் என்ற கட்டளையுடனும் தலைவர்கள் குறித்து பாடக்கூடாது... ஆபாசமாக ஆடக்கூடாது என்ற ஏகப்பட்ட கெடுபிடிகளுடனும்தான் காவல்துறை அனுமதி வழங்கும். இவர்கள் கரகாட்டம் என்று சொல்லிக் கொண்டு ஆடல்பாடலுக்கு இணையான ஆபாசத்தை மக்கள் முன் இறக்கி வைக்கிறார்கள் என்பதால்தான் இத்தனை கெடுபிடி... ஆடல்பாடலுக்கு இப்போ அனுமதியே இல்லை... 

முதல் காட்சியிலேயே குடிகாரியாக காட்டுகிறார் என்று வேறு குதிக்கிறார்கள்... ஏன் காட்டினால் என்ன தப்பு... அந்த மனிதர்களின் வாழ்க்கையை பேசும் போது உண்மையைக் காட்டுவதில் தவறே இல்லை... சென்ற முறை எங்கள் ஊருக்கு வந்த கரகாட்டக் குழுவினரை நானும் எனது மச்சானும்தான் ஒரு வீட்டு மாடியில் தங்கச் சொன்னோம்.... மாடியில் ஏறும் முன்னர் பாட்டில் எங்கே என்றுதான் கேட்டார்கள். பிரதான தவில் கலைஞர் குடித்துவிட்டு குப்புறப்படுத்து அவரை எழுப்ப நாங்கள் பட்டபாடு தனிக்கதை. எங்க ஆள் ஒருத்தர் வாங்கி வச்சிருக்கிறார்... கொண்டு வந்து தருவார் என்றதும் குறத்தி (தஞ்சைப் பிரபலம்) எனக்கு ஆப் பாட்டில் அப்படியே வேணும் என்று கராராகச் சொல்ல அதையும் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தோம். பின்னர் அவரின் கணவரான குறவன் இதெல்லாம் அவளுக்கு ஒரு சுத்துக்குப் பத்தாது... ராவா ஊத்திக்குவா என்று சொல்லிச் சிரித்தார். எனவே கரகாட்டக்காரிகள் எல்லாம் கலையை வளர்க்க இப்ப அந்தத் தொழிலில் இல்லை... வாழ்க்கையை ஓட்ட மட்டுமே இதைத் தொடர்கிறார்கள்.  சூறாவளி மூணு நிமிடம் ஆடுவது போல் இரவு முழுவதும் ஒரு பெண் ஆடவர்கள் முன்னிலையில் ஆடுவதற்கும் ஆபாசமாய் பேசுவதற்கும் அதுதான் துணை என்ற நம்பிக்கை... சூறாவளி ஆடும் ஆட்டத்தைப் பார்த்தாலே தெரியுமே...

ஒளிப்பதிவு பாலாவின் ஆஸ்தான மனிதரான எங்க சிவகெங்கைக்காரர் செழியன்.... அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

படத்தின் இசை ராஜ்ஜியம் ராசா.... ஆயிரமாவது படம் என்ற அடைமொழியோடு வந்திருக்கிறது. பின்னணியில் எப்பவும் நாந்தான் ராஜா என்று சொல்லும் மனிதர் இதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது. பாடல்களும் அதற்கான இசையும் ராஜா... ராசாதான் என்று சொல்ல வைக்கின்றன. அதுவும் 'பாருருவாய' என்ற திருவாசகம் பாடலாய் நம் முன்னே காட்சிப்படுத்தப்படும் போதும்... 'தகிட தகிடதிமி' ஆட்டத்தில் குதிக்கும் இசையும், 'இடரினும்...' பாடலும் என கலந்து கட்டி ஆடியிருக்கிறார் ராசா... ராசாவின் இசை கேட்டாலே போதும்... அந்த சுகானுபவத்தில் இருந்து மீள்வதென்பது எனக்கெல்லாம் ரொம்பக் கடினம். அப்படித்தான் 'பாருருவாய' என்னுள்ளே பாய்ந்து கொண்டே இருக்கிறது. ரொம்ப எதிர்பார்த்த 'ஆட்டக்காரி மாமன் பொண்ணு' பாடல் நீக்கப்பட்டிருப்பது வருத்தமே.

அந்தமான் காட்சிகள், இடைவேளையில் காட்டப்படும் வில்லனின் முகம், தன்னுடன் படுத்திருப்பவன் கணவன் இல்லை என்பதை அறியாமல் ஒரு பெண் இருப்பது, நேரடியாக சூறாவளி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வீட்டுக்குள் வரும் சன்னாசி, இறுதி சண்டைக்காட்சி என நிறைய காட்சிகளில் படம் தொங்கி நிற்கிறது. எதையும் முழுமையாகச் சொல்லவில்லை.  பாலா விளிம்பு நிலை மனிதர்களைப் பேசும் படம் எனச் சொல்லி அதைவிடுத்து இடைவேளைக்குப் பிறகு வேறு தளத்தில் பயணப்படும் கதையில் இறுதி 20 நிமிடக்காட்சிகள் கொடூரம் என்னும் அவரின் டெம்ப்ளெட் காட்சிகளால் சூழப்படுவதால் நிறையப் பேருக்கு பிடித்திருக்க வாய்ப்பில்லை.

பாலா சார் படிக்கப் போவதில்லை... இருந்தும் நாம ஏதாவது சொல்லித்தானே ஆகணும்... அதுக்காக பாலா சாருக்கு ஒரு கடிதம்....


வணக்கம் பிதாமகனே...

தமிழ் சினிமா கற்பனை உலகுக்குள் கவர்ச்சி ஜிகினா காட்டி நடந்த போது அதை உடைத்து தனக்கென ஒரு பாணியில் வாழ்வியல் பேசி நடந்தவர் உங்கள் குரு... எங்கள் பாலுமகேந்திரா. அதேபோல் 'ஓங்கி அடிச்சான்'னு சுள்ளானெல்லாம் வசனம் பேசி, நடக்காத ஒன்றை நடத்திக்காட்டி மக்களை முட்டாளாக்கி லாபம் பார்த்தோர் மத்தியில் நாந்தான் பாலா... இவன் இப்படித்தான் என அடித்தட்டு மக்களின் வாழ்க்கை சோகங்களை உங்களுக்கே உரிய நகைச்சுவையோடு ஆரம்பித்து... கஞ்சா... கொடூரமான முடிவு எனப் பயணிக்க வைத்து ரசிகர்களின் மனங்களை வென்றவர் நீங்கள். 

எல்லாருமே கனவு உலகத்திலேயே பயணித்தால் யார்தான் உண்மையை உள்ளபடி பேசுவது என நீங்கள் தைரியமாக இறங்கினீர்கள். அந்த உண்மைகளில் இருந்து நீங்கள் எடுத்த கதைக்களங்கள் வித்தியாசமானவைதான். எல்லாருமே சந்தோஷமாய் பயணித்தால் எப்படி இது போன்ற படங்களும் வரத்தான் வேண்டும் என்பதுதான் உண்மையான ரசிகனின் ஆசையும் கூட. அதையும் நீங்கள் சரியாகத்தான் செய்தீர்கள். அப்படியிருக்க உங்கள் படங்கள் பேசும் கொடூரமான வாழ்வியல் படத்துக்குப்படம் கூடிக்கொண்டே போவதுதான் பாலாவை கொடூரமானவன் என்று முத்திரை குத்தி வைத்துவிடுமோ என்று உங்களின் ரசிகனாய் மனதுக்குள் ஒரு பயத்தைக் கொடுக்கிறது. 

எதையும் வாழ்ந்து பார்த்து... அனுபவித்து... ரசித்து படம் எடுக்கும் நீங்கள் உங்கள் மீது விழுந்திருக்கும் இந்த டெம்ப்ளெட் முத்திரையை உடைத்தெறிய இன்னுமொரு விளிம்பு நிலை மனிதர்களின் கதையோடு வாருங்கள்... அது அவர்களின் வாழ்வியலை உங்களின் அழகியலோடு பேசட்டும்... அவர்களின் வாழ்வின் சந்தோஷம், வலி பேசட்டும்... வதைபடுபவைகளை தவிர்த்து... வன்மம் தவிர்த்து... ஒரு சந்தோஷ வாழ்க்கையை வாழட்டும். அதில் கொடூர வில்லன் வேண்டாம்... ரத்தம் குடிக்கும் நாயகனும் வேண்டாம். நாம் நாமாக வாழும் வாழ்க்கையை படமாக்குங்கள். 

கமலஹாசன் செய்வது போல் நடிப்புக்காய் ஒரு படம் என்றால் நகைச்சுவையாய்... பணத்துக்காய்... சில படங்கள் என்ற கொள்கையில் நீங்களும் பயணியுங்கள்... உங்கள் பாணியில் கொடூரமாய் இரண்டு படம் கொடுத்தால் எதார்த்தமாய் ஒரு படமாவது கொடுங்கள்... இப்பவும் சொல்றேன்... நீங்க விளிம்பு நிலை மனிதர்களோடு பயணித்து ஜெயித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்... இந்த வெற்றியில் உங்களின் கொடூர டெம்ப்ளெட்டின் கனம் கூடிக்கொண்டே போவதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். இந்த ஓட்டத்தில் கொஞ்சம் இளைப்பாறுங்கள். விளிம்பு நிலை மக்களின் சந்தோஷங்களோடு உங்கள் டெம்ப்ளெட் கதைக்களத்தினை உடைத்தெறியுங்கள்.

எனக்கு தாரை தப்பட்டை ரொம்ப பிடிச்சிருக்குபாலா சார்...  கொடூரமாய் கடக்கும் காட்சிகள் இறுதி இருபது நிமிடங்களே... மீதமுள்ள நேரங்களில் எல்லாம் கதை நன்றாகவே பயணிக்கிறது. காட்சிப்படுத்துதலில் இருந்த தொய்வுதான் படம் தொடராய் பயணிக்க திணறுவதைக் காட்டுகிறது. இருந்தாலும் கொடூரமாய் ரத்தச் சகதியில் பயணிக்கு கதைக் களத்தை கரகாட்டக்காரர்களின் வாழ்க்கையை அறியாத நகரத்து மனிதர்கள் எத்தனை பேர் விரும்புவார்கள் சொல்லுங்கள். ரத்தவாடைக்குள் இருந்து வெளியே வாருங்கள்... இந்த வெற்றிப் பயணம் தொடரட்டும்.

(பாருருவாய பிறப்பற வேண்டும்)

பொறுமையாய் கரகாட்டகாரர்களின் வாழ்வை அறிய நினைத்தால் கண்டிப்பாக பார்க்கலாம். தாரை தப்பட்டை எனக்கு ராஜாவின் இசை ராஜ்ஜியம்... பாலாவின் பாசங்கற்ற திரைக்கதை.. உங்களுக்கு...?

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 19 ஜனவரி, 2016

மனசு பேசுகிறது : ஒரு நொடி சிந்தித்திருந்தால்...


ன்னைக்கு பேசப்போறது எங்கள் அலுவலகத்தில் சென்ற வாரத்தில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றைப் பற்றித்தான். நாம் எடுக்கும் முடிவுகளில் பெரும்பாலானவை ஒரு நொடியில் முடிவெடுக்கப்படுபவைதான் என்பதை எல்லாரும் அறிவோம். அப்படி எடுக்கும் முடிவுகள் நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும். அதையே கொஞ்ச நேரம் யோசித்து... இதைச் செய்யலாமா... வேண்டாமா... என முடிவெடுத்தால் பல கெட்ட முடிவுகளை நாம் எடுக்காமலே விடமுடியும். ஆனால் அதை நாம் செய்வதில்லை என்பதே உண்மை.

கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு வீடியோ பார்த்தேன்... ஒரு இளம்பெண் இரயில்வே ஸ்டேஷனில் போனில் பேசிக்கொண்டு இங்கும் அங்கும் போய்க் கொண்டிருக்கிறாள். அவ்வப்போது இரயில் வருகிறதா என்றும் பார்க்கிறாள். பார்ப்பவர்கள் எல்லாருமே அவள் இரயிலுக்குக் காத்திருப்பதாகத்தான் நினைத்திருப்பார்கள். அவளும் அதற்காகத்தான் காத்திருந்தாள்... ஆனால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக. ஆம் இரயில் அருகே வர படக்கென்று நடைமேடையில் இருந்து குதிக்கு தண்டவாளத்தில் படுத்துவிட்டாள். பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என்ன செய்வது என்று திகைக்க, சிலர் சிரத்தையாய் வீடியோ எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு லைக்கும் கமெண்ட்டும்தானே மனிதாபிமானம். இரயில் ஏறி அவளை இரண்டு துண்டாக்கிச் சென்றது. எதற்காக இப்படி ஒரு முடிவு... அப்படி என்னதான் பிரச்சினை என்றாலும் பொறுமையாய் சிந்தித்து அதற்கான முடிவை எடுத்தால் எல்லாம் சுகம்தானே. அவசர முடிவால்தான் நாங்கள் ஒருவனை இழந்தோம். அந்த நொடி தற்கொலை முடிவு அவர்களுக்கு சரியானதாகத் தெரிகிறது. ஆனால் அதன் பின்னான வாழ்வில் தினம் தினம் அவர்களின் குடும்பம் செத்துக் கொண்டிருப்பதை அவர்கள் நினைப்பதில்லை. ம்... எல்லாம் அந்த நொடியின் செயல்பாடுகள்தானே.

நாம் ஒரு நொடி சிந்தித்தால் நல்ல அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்திடலாம். நம் குறைகளை ஓரளவுக்காகவாவது நிறைவேற்றும் பஞ்சாயத்து உறுப்பினர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை தேர்ந்தெடுத்திடலாம். வாழவே முடியாது என்ற நிலையில் இருந்து இதிலும் வாழ்ந்து பார்த்திடலாம் என்றும் நினைத்திடலாம். இந்தப் பாடம் அப்படி என்ன பெரிய விஷயம்... என்னால் பாஸாக முடியும் என்று நினைத்தால் கஜினி முகமது படையெடுப்பை கட்டுக்குள் வைத்திடலாம். இப்படி நிறைய விஷயங்களில் நம்மால் ஜெயித்திருக்க முடியும். ஆனால் எதையும் சிந்திப்பதில்லை. காசு கொடுத்தா போதும் அவனுக்கு குத்திட்டு வந்து குத்துதே குடையுதேன்னு கவிழ்ந்து கிடப்போம். காதல் தோல்வியா, பரிட்சை தோல்வியா கயிறையோ மருந்தையோ எடுத்துக்கிட்டு போயி முடிச்சிக்குவோம்.  எல்லாம் ஒரு நொடி முடிவுதானே.

இந்தா கச்சா எண்ணெய் 28 டாலருக்கு வந்திருச்சு. இங்க கம்பெனிக்காரன் எல்லாம் ஆட்டம் கண்டிருக்கிறான். கட்டுமானப் பணியில் அமீரகத்தில் பிரபலமான ETA (இது தமிழரின் கம்பெனி) குழுமம் இன்று தனது பணியாளர்களில் 35% பேரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. இது தற்போது நண்பர் சொன்ன தகவல். இப்படி நிறைய கம்பெனிகள் ஆட்டம் கண்டுபோய் இருக்கின்றன. என்னதான் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் மட்டும் விலை குறையாது. காரணம் தனியார் முதலாளிக்கு சொம்பு தூக்கும் அரசாங்கமே. 127 டாலர் இருக்கும் போது இருந்த விலைக்கும் 30 டாலர் இருக்கும் போது இருக்கும் விலைக்கும் சில ரூபாய்களே வித்தியாசம். இதையெல்லாம் நாம் கேட்கமாட்டோம். ஏனென்றால் நம் சிந்தனையெல்லாம் இதில் மட்டும்தானா..? அவனும் ஒரு ரூபாய் கூட்டினால் 75 பைசா இறக்குவான். விலை கூடும்போது நள்ளிரவு முதல்ன்னு காலையில அறிவிப்பான். பங்குக்காரனும் பெட்ரோல் இல்லைன்னு சொல்லி ஸ்டாக் வச்சி நள்ளிரவுக்கு மேல நல்லாச் சம்பாரிச்சுக்குவான். இப்படித்தான் ஓடுது.... இனியாவது ஒரு நிமிடம் சிந்தித்து செயல்படுவோம் மக்களே... (இது விஜயகாந்த் சொல்லும் மக்களே இல்லைங்கோ)

சரிங்க... என்னடா இவன் ஆபீஸ்ல நடந்த கதையின்னு சொல்லிட்டு என்னமோ பேசுறானேன்னு பார்க்கிறீங்கதானே... இல்லை கச்சா எண்ணெய் பிரச்சினை இங்க கடுமையாத் தாக்கும் போல தெரியுது. எங்க கம்பெனி வேலை எல்லாமே அரசாங்க வேலைகள் என்பதால் பிரச்சினை இல்லை என்ற போதிலும் இப்ப பார்க்கிற வேலைக்குப் பின் புதிய வேலை எதுவும் இல்லை என்பதே உண்மை. அரசு அலுவலகங்கள் புதிய வேலைகளில் இன்னும் துணிந்து இறங்கவில்லை என்பதும் உண்மை. ஒரு வேலை போனால் அதே நிலையில் வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்புதான். அப்படியிருக்க எங்களோடு வேலை பார்த்த ஒருவன் தெளிந்த நீரில் கல்லெறிந்துவிட்டு காத்திருக்கிறான். ஆம் அவன் ஒரு நொடி யோசிக்காமல் செய்த செயல்தான் இதற்கு காரணம் என்றாலும்.... அவன் செய்தது மன்னிக்க முடியாத குற்றமே.

நாங்கள் இப்போது பணி எடுக்கும் அலுவலகம் அபுதாபி தண்ணீர் மின்சாரம் சம்பந்தமான அலுவலகங்களுக்குத் தலைமை அலுவலகம். இங்கு அரபிப் பெண்கள் அதிகம் பேர் வேலை செய்வார்கள். எங்களுடன் இருந்த பாகிஸ்தானி சென்ற வாரத்தில் மதிய சாப்பாட்டுக்குப் பிறகு கிச்சனில் அமர்ந்து கொண்டு அந்தப் பெண்களில் ஒருவரை (இளம்பெண்) தன்னுடைய மொபைலில் போட்டோ எடுத்து இருக்கிறான். அதுவும் முன் பின்னாக... ஒன்றல்ல இரண்டல்ல 17 போட்டோ... அவள் திரும்பும் போது முழுப் போட்டாவாக ஒன்று மொத்தம் 18 போட்டோக்கள். அவள் அதைப் பார்த்து பிடித்துக் கேட்கப் போக, இவன் மழுப்பியிருக்கிறான். இவன் கையிலிருந்து போனைப் பறித்துப் பார்த்திருக்கிறாள். தலை இல்லாத பின்புறங்களின் போட்டோ விடுவாளா.... நேராக அவனின் போனோடு அந்தத் துறைக்கான மேலதிகாரியிடம்  சென்றுவிட, இவன் லிப்டில் இறங்கி எஸ்கேப் ஆயிட்டான். அவள் போய் எங்க கம்பெனி பேரைச் சொல்லி என்னை போட்டோ எடுத்துட்டான் என்று சொல்ல, யாரென்று தெரியாமல் எங்க குழுவின் தலைமைக்கு உடனே போன் வந்திருக்கிறது. அவனுக்கும் யாரென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் நானும் இன்னொரு மலையாளியும் மற்றுமொரு கிச்சனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உடனே எங்கே இருக்கே என எனக்கு போன் அடிச்சிட்டான்...நான் சாப்பிடுகிறேன் என்றதும் எந்த கிச்சன் என்றான்... எப்பவும் சாப்பிடும் இடம் என்றேன். ரியாஸ் (மலையாளி) எங்கே என்றான்... இந்தாத்தான் இருக்கான்... என்னடா விஷயம் என்றதும் ஒண்ணுமில்லை சாப்பிட்டு வான்னு சொல்லி ஆமா பாகிஸ்தானி எங்கே என்றான்... தெரியலை சாப்பிடப் போயிருப்பான் என்று சொல்லி வைத்துவிட்டேன்.

இதன் பிறகு எங்க தலைவன் (நம்ம எகிப்துகாரந்தான்) அலைந்து திரிந்து கீழே நின்ற அவனைப் பிடித்துக் கொண்டு வந்து மேலதிகாரி அறைக்கு கூட்டிச் செல்ல, அங்கு பஞ்சாயத்து.. இங்கு சட்ட திட்டங்கள் எப்படி எனத் தெரியும்... மாட்டினால் அவனோட வாழ்க்கை முடியும்.... இவர்கள் பேச, அந்தப் பெண் விடுவதாக இல்லை... அவளுக்கு மொத்த அலுவலகத்துக்குமான பெரிய ஆள் (முதிர்) சொந்தக்காரனாம். அவனுக்கிட்ட போறேன்னு நின்னிருக்கா. அதற்குள் எங்க அலுவலகத்துக்கு விவரம் சொல்லப்பட, எங்க புராஜெக்ட் மேனேஜர் அடுத்த அரைமணி நேரத்தில் அங்கு வந்துவிட, ஒருவழியாக பேசி அவனை இந்த அலுவலகத்துக்குள் இனி வரக்கூடாது என அனுப்பிவிட்டார்கள். இதெல்லாம் எங்களுக்கு பின்னரே தெரியும். அப்புறம் இந்த விஷயம் லெபனானில் இருக்கும் எங்க அசோசியேட் மேனஜருக்கு போக, அவன் குதியோ குதியின்னு குதிச்சிருக்கான். அதை மேனேஜிங் டைரக்டர் காதுக்கு கொண்டு போக, இதுக்கு உடனே நடவடிக்கை எடுங்கன்னு சொல்லிட்டாராம். அதுபோக அரசு அலுவலகமும் உடனே நடவடிக்கை எடுங்க இல்லேன்னா நாங்க போலீசில் கேஸ் பைல் பண்ணுறோம்ன்னு சொல்லிட்டாங்க. கம்பெனிக்கு கிளையண்ட் வேணும் என்பதால் அவனை தூக்கிவிடுவது என முடிவு எடுத்துவிட்டார்கள். பணி நீக்கம் செய்தால் வாழ்க்கை போகுமே எனச் சொல்லி எங்க HR அதிகாரியான லெபனான் பெண் சாதரண முறையில் வேலையை விட்டு எடுக்கலாம் என்று சொல்லி அதற்கான வேலையில் இறங்கியாச்சு.  இந்தச் செயலில் கம்பெனி துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஏறத்தாழ 20 வருடங்களுக்கு மேலான பந்தம் ஒரு நொடியில் அறுந்து போயிருக்கும். அபுதாபியில் எங்கள் கம்பெனியை இழுத்து மூடியிருக்க வேண்டியதுதான்.

அவன் செய்துட்டுப் பொயிட்டான்... ஆனால் அங்கிருக்கும் ஆட்களை எங்களை கேவலமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் பெண் எங்க அதிகாரியிடம் இனி நான் எப்படி உங்கள் அலுவலக நண்பர்களுடன் சகஜமாக பழகமுடியும் என்று சொல்லியிருக்கிறார். எங்க அலுவலகத்துக்கு வரவைத்து எங்களுக்கு பயங்கர அட்வைஸ் மழை.... அப்படியிருக்கணும்... இப்படி இருக்கணும்... பொண்ணுங்க கூட பழகுறீங்க.. எப்படி இருக்கணுமின்னு தெரியணும். அவங்க உங்களை இனி நம்ப மாட்டாங்க... அப்படின்னு போட்டுத் தாக்கிட்டானுங்க. இதுல கம்பெனிக்கு என்ன வருத்தம்ன்னா ஏறத்தாழ 40 ஆண்டுகால கம்பெனி வாழ்க்கையில் இது முதல் கரும்புள்ளி என்பதுதான். அதனால் அவனுக கத்தத்தான் செய்வானுங்க. என்ன எனக்கு நுங்கு குடிச்சவன் சும்மா இருக்க கொதம்பை நக்கியவன் மாட்டுன கதைதான் ஞாபகத்துக்கு வந்துச்சு. சொல்ல மறந்துட்டேனே... ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வாங்குன சாம்சங் எஸ்-6 மொபைலை அவர்கள் இவனிடம் திருப்பிக் கொடுக்கலை... அதை ஐடியில் இருக்கும் நம்ம திருச்சிக்கார அண்ணன்தான் பார்மெட் பண்ணியிருக்கிறார். மேலதிகாரி அதை உடைக்கச் சொல்லியாச்சாம்... இந்நேரம் உடைத்திருப்பார்கள். இந்த அண்ணனும் அந்தப் பெண்ணிடம் பாவம் குடும்பம் இருக்கு விட்டுடுன்னு தினமும் சொல்றார். அவளும் கொஞ்சம் இறங்கி வந்தாச்சு...போலீசுக்கோ வீட்டிலோ சொல்லவில்லையாம். சொல்லியிருந்தால் அவளின் அண்ணன்காரன் இரண்டு பேர் பெரிய பதவியில் இருக்கானுங்களாம். தூக்கிட்டுப் போய் பாகிஸ்தானியை உப்புக்கண்டம் போட்டிருப்பானுங்க என்றார்

பாவம் பாகிஸ்தானி... மனைவியும் ஒரு வயது குழந்தையும் இங்க இருக்கு... இப்படிப் பண்ணிட்டானேன்னு எனக்கு ரெண்டு நாள் மனசு வதைச்சிக்கிட்டே இருந்துச்சு... ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு... அவனைப் போயி பார்த்தோம்... ஆனா ஆள் அதைப்பற்றி கவலைப்படவே இல்லை. பின்னாலதான் எடுத்தேன்... ஒரு போட்டோவுல மட்டும்தான் முகம் தெரிஞ்சது... அவ பாக்குறான்னு தெரிஞ்சும் அந்த நிமிடம் என்ன நினைச்சேனோ தெரியலை.. எடுத்துட்டேன். அவ விட்டாலும் மேலதிகாரி விடமாட்டேனுட்டான்... அவனும் பாகிஸ்தானிதான் என்பதால் உருதுல கூட பேசினேன்... உதவி செய்ய மாட்டேனுட்டான். நான் இப்படி எப்பவும் எடுத்துட்டு வீட்டுக்குப் போகும் போது அழித்துவிடுவேன்... ஏனென்றால் என் மனைவி என் போனை தினமும் எடுத்துப் பார்ப்பாள் என்று அவன் தன் தவறை சரியென்பது போல் சொன்னதும் இவனுக்கா வருந்தினோம் என்று தோன்ற ரெண்டு விடலாமான்னு யோசிச்சேன். ஆனா இது நம்ம ஊர் இல்லையே தூக்கிப் போட்டு நாலு மிதி மிதிச்சிட்டு போய்க்கிட்டே இருக்க. ஏன்டா நாதாரி உம் பொண்டாட்டிய எவனாவது போட்டா எடுத்தா நீ பரவாயில்லை எடுன்னு பாத்துக்கிட்டு நிப்பியான்னு நாலு கழட்டு விட்டுட்டுத்தான் வந்தேன்.

இப்படி ஒரு செயலைச் செய்ததை நியாயப்படுத்துகிறானே என்று நினைக்கும் போது உண்மையிலேயே அவனுக்காக வருந்தியதற்காக வெட்கப்படுகிறேன். இவ்வளவு பிரச்சினையிலும் அவன் கையில் அதே கலரில் எஸ் 6 போன் புதிதாய் வாங்கி வைத்திருக்கிறான். இப்போ எங்க நண்பர்கள் சிலரின் உதவியில் சில இண்டர்வியூ போயிருக்கிறான். கண்டிப்பாக மனைவியிடம் இந்தக் காரணத்தை சொல்லியிருக்கமாட்டான். ஒரு நொடி சபலத்தால் இப்ப அவன் நடு வீதியில்... நாளையே நல்ல வேலை கிடைக்கலாம். ஆனால் தன் தவறுக்கு வருந்தாதவன் மீண்டும் சிந்திக்காத நொடியை சந்திக்காமலா இருப்பான்...?

மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும்

மிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஏறத்தாழ எல்லா இடத்திலும் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. நம் பாரம்பரியம் சில அந்நியநாட்டு அடிமைகளால் தடுக்கப்படும் போது கட்டவிழ்ந்த காளைகள் போல் மக்கள் சீறிப்பாய்ந்ததைப் பார்க்கும் போது அரசுக்கு எதிரான சங்கு ஊத ஆரம்பித்துவிட்டது என்பதை அறிய முடிகிறது. காரைக்குடியில் 'எங்க ஊரு... எங்க கிராமம் நான் அப்படித்தான் அவிழ்த்துவிடுவேன்... நீ என்னய்யா பண்ணுவே...' என்று அம்மாவின் ஆணைக்கிணங்க வந்த போலீசிடம் சண்டை போடும் ஒருவரிடம் தெரிந்தது தமிழனின் பாரம்பரிய வீரம். இதைக்கூட ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் வீரமா என்று நக்கல் அடிக்கலாம்... எங்களைப் பொறுத்தவரை இது வீரம்தான்... வேலு நாச்சியார் பிறந்த மண்ணின் வீரம் இது. எங்கள் காளைகள் துள்ளிக்குதித்து ஓடி மகிழ்ந்தன என்பதைக் கேட்கும் போது மிகுந்த சந்தோஷம் மனசுக்குள் பொங்கியது என்பதே உண்மை.


ல்லிக்கட்டை எதிர்த்து மாட்டைக் காக்கக் துடிக்கும் பெடா அமைப்பினர் தமிழனிடம் மட்டுமே மாட்டை காப்பாற்ற வேண்டும்... துன்பப்படுகிறது என்று கத்துகிறார்கள். எல்லாமே அவர்களின் வளர்ச்சிக்கான உள்நோக்கமே. இன்று காலை முகநூலில் ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது, என்ன கொடூரம்.. கிரிக்கெட் மைதானம் போல் ஒன்றில் ஒரு மாடு ஆக்ரோஷமாய் ஓடுகிறது. அதற்குள் நீளக்கயிறு கொண்டு கட்டப்பட்ட குதிரையின் மீது அமர்ந்து மாட்டை விரட்டி பிடிக்க முயலும் வீரன். ஒரு கட்டத்தில் மாடு ஆக்ரோஷமாக குதிரையைப் பாய, வீரன் விழுந்தடித்து ஓடிவிடுகிறான்... ஆனால் மாடு கோபத்தோடு கட்டப்பட்டிருக்கும் குதிரையை குத்தி வயிற்றைக் கிழிக்க குடல் மொத்தமும் வெளியே வந்து விட,  அத்துடன் குதிரை ஓட... அதன் குடல் முழுவதும் கீழே விழுகிறது... உயிர்ப் பயத்தில் குடலில்லாமல் ஓடி விழுந்து குதிரை இறக்கிறது. இதற்கு மேல் என்னால் பார்க்க மனது பதறியது. அதனால் இத்தோடு நான் பார்க்கவில்லை... இது குறித்த ஒரு பகிர்வையும் அப்போதே படிக்கவும் நேர்ந்தது. அதில் குதிரை இறந்ததும் ஓடிய வீரன் இன்னும் சில வீரருடன் வந்து அந்த மாட்டை அடித்துக் கொள்கிறானாம். பின்னர் மாட்டை குதிரைகளை வைத்து மைதானத்தை சுற்றி இழுத்துச் செல்கிறார்களாம். இதை பகிர்வாய் எழுதியவர் குதிரைகளுக்கு இதயம் இல்லை ஆனால் மைதானத்தில் அமர்ந்து ஆர்ப்பரித்த மனிதர்களுக்கு இதயம் இருக்கத்தான் செய்தது என்பதாய் எழுதியிருந்தார்... என்ன வலி... எப்படிப்பட்ட மரண வேதனை... இதுவும் விளையாட்டு... இதற்கு பெடா கத்தாது... ஏன்னா நடத்துபவன் வெளிநாட்டுக்காரன்... குறிப்பாக தமிழன் இல்லை. எல்லாரும் அறிய வேண்டும் என்பதற்காக பகிர்வையும் வீடியோவையும் நானும் பகிர்ந்தேன். 


ஞ்சய்தத் நல்லொழுக்கம்(?) அடிப்படையில் தண்டனைக் காலத்துக்கு முன்னரே விடுதலையாகிறார் என்பது எல்லாருக்கும் தெரியும். இதை மத்திய அரசோ மாநில அரசோ செய்யவில்லை... முழுக்க முழுக்க சிறைத்துறை அதிகாரியின் முடிவே என்று சொல்வதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் எப்படி விடுதலை ஆகிறார் என்றும் எந்தச் சட்டத்தில் ஆகிறார் என்றும் அதற்கான தகவலின் நகல் தனக்கு வேண்டும் என்றும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெரறிவாளன் மனு ஒன்றை அளித்து 48 மணி நேரத்திற்குள் விவரம் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். தானும் அப்படியானதொரு சட்டத்தின் வாயிலாக முன்கூட்டியே விடுதலை ஆக மனு செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் எனவும் அதற்கான செலவு தொகையை தந்து விடுவதாகவும் சொல்லியிருக்கிறார். கிடைக்குமா என்பதைவிட தமிழன் என்ற அடையாளம் இருக்கும் வரை இதிலெல்லாம் இவர் விடுதலை ஆக முடியாது என்பதே உண்மை. மேலும் சட்டம் பணம் இருந்தால் மட்டுமே வளைந்து கொடுக்கும். கொலை பண்ணினால் கூட அதுக்கு சாட்சி இல்லைன்னு சொல்லி சல்யூட் அடித்து அனுப்பும். பாவம் பேரறிவாளன்... இவர் கேட்டதும் விட்டுவிடுவார்களா என்ன...


சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணியின் வந்திருக்கும் ரஜினி முருகன் முழுக்க முழுக்க நகைச்சுவைத் தோரணம்தான். கதையும் இல்லை ஒன்றும் இல்லை... வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகம் போல்தான்... வேலை வெட்டியில்லாமல் சுற்றுவதும், விரட்டிக் காதலிப்பதும், அப்பாவை ரொம்ப மரியாதையாக அழைப்பதும். மாமாவுடன் மோதுவதும் என முந்தைய படத்தின் சாயலில்தான் இருக்கிறது. சமுத்திரக்கனி அதிரடியாக அறிமுகமாகி இறுதிக்காட்சியில் 'வவாச' சத்தியராஜைவிட கேவலமான காமெடியன் ஆக்கப்பட்டுள்ளார்... சிரிக்கச் சிரிக்க இரண்டு மணி நேரத்துக்கு மேல போயாச்சு எப்படி படத்தை முடிப்பது என்று தெரியாமலே பஞ்சாயத்தில் இன்னொரு குடும்பம், பேரன் என்றெல்லாம் கதையை சுற்றி நம்மையும் சுற்ற வைத்து முடித்திருக்கிறார்கள். ஸ்ரீதிவ்யா இருந்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும் என தமிழ்வாசி போன்ற நண்பர்கள் வருத்தப்பட்டிருந்தார்கள். கீர்த்தி சுரேஷூம் குறை வைக்கவில்லை... அருமையாக நடித்திருக்கிறார்... அந்த சிரிப்புத்தான் அழகு போங்க... சூரி தனியாக காமெடி பண்ணும் போது நமக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால் சிவாவுடன் இணையும் போது ரசிகர்களுக்கு டபுள் தமாக்காதான்... அதிலும் வாழைப்பழ காமெடி ரொம்பநாள் பேசப்படும். கதை வேண்டாம்... கருத்து மண்ணாங்கட்டியும் வேண்டாம்... அழுகை வேண்டாம்... என்று நினைப்பவர்கள் நம்பி ரஜினி முருகன் போகலாம்... இறுதிவரை சிரித்துவிட்டு வரலாம். பாடல்களும் நல்லாயிருக்கு.


ன்று விஷாலின் பிறந்தநாள்... அவனை வாழ்த்திய உறவுகள், நண்பர்கள், முகநூல் உறவுகள், சேனை நட்புக்கள், மனசு நட்புக்கள் என எல்லாருக்கும் விஷாலின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



ஜல்லிக்கட்டு தொடர்பான எனது பதிவுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்... எனது நண்பர்கள் தவிர நிறையப்பேர் அதை பகிர்ந்து இருந்தார்கள். நான் பகிர்ந்து கொள்ளவா என்று கேட்டும் பகிர்ந்தார்கள். நல்லாத்தான் எழுதுறோமோ என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. அது என்ன மறைந்ததுன்னு நீங்க எண்ணலாம். நாம எழுதுறது நமக்குத் தெரியாதா... முக்கி முக்கி தள்ளினாலும் 250 பேர் படிக்கிறதே பெரிய விஷயம்...அதானால் எழுத்து நல்லாயிருக்குன்னு எல்லாம் இல்லை ஒரு பரபரப்பான விசயத்தை எடுத்துப் பேசும்போது அதற்கான மதிப்பு கூடும் என்பதை அறிய முடிந்தது.

னசில் அடுத்து ஒரு வாழ்க்கையையும் காதலையும் பேசும் கதை எழுதலாம் என்று ஒரு எண்ணம் ரெண்டு நாளா அப்பப்ப துளிர்விடுது. முக்கோணக் காதல்கதை சற்றே வித்தியாசமாய் எழுத நினைத்து அதன் சாரம்சம் ஒத்துவருமா என்பதில் எனக்கும் ஒரு அண்ணுக்குமான பேச்சில் அதைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு சும்மா எப்பவும் போல கிறுக்குவோம். தொடரெல்லாம் வேண்டாமென இருந்தவனை இரண்டு நாளா இப்படி எழுதலாம்.... இப்படி ஒரு வாழ்க்கையை, ஏறத்தாழ வேரும் விழுதுகளும் மாதிரி ஒரு மனிதரின் வாழ்க்கையோடு காதல், அதன் பின்னான நிகழ்வுகளாய் பயணிக்கலாம் என்று தோன்ற இன்று முதல் பகுதிக்கான காட்சிகள் சில மனசுக்குள் வேலை நேரத்தில் வந்து வந்து போயிற்று. சரி எழுதிடலாம்ன்னு வந்தா அறையில் சில வேலைகள்.. மூடு மாறியாச்சு... இனி கதை வருமா... வராதா தெரியலை... ஏன்னா என்னைப் பொறுத்தவரை அழகா முகம் திருத்தி பொட்டு வைத்து பூ வைத்து எழுத நினைத்தால் முடிவதில்லை. உக்கார்ந்து முகமும் கழுவாது பொட்டும் வைக்காது ஆரம்பித்தால் கடகடவென எழுதிவிடுவேன். அப்படித்தான் 'அவ' சிறுகதை... ஆரம்பித்தேன் முடித்தேன் பகிர்ந்தேன்... என்னமோ தெரியலை காட்சிப்படுத்தினால் என்னால் எழுத முடியாமல் தள்ளிப் போய் காணாமல் போய் விடுகிறது. இப்படித்தான் இந்த மாதத்தில் யோசித்த மூன்று சிறுகதைகள் போயே போச்...


து எதுக்குன்னு பாக்குறீங்களா... பாலா படம்... கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கை பேசும் படம்... இந்த வாரத்துக்குள் பார்க்க வேண்டும்.

வெள்ளியன்று வரவேண்டிய மனசின் பக்கம் பொங்கல் கொண்டாட்டத்தால் இன்று மலர்கிறது.

-'பரிவை' சே.குமார்.