மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 27 பிப்ரவரி, 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-6)

முந்தைய பகுதிகளை வாசிக்க...


பகுதி-1             பகுதி-2            பகுதி-3            பகுதி-4           பகுதி-5

*********
சுபஸ்ரீ ஓடிவந்த வேகத்தில் அபியின் தோள் பிடித்து கண்ணனைப் பார்த்ததும் “என்னங்க நீங்க... அவன்தான் கிண்டல் பண்றான்னா... அதுக்காக கோவிச்சிக்கிட்டு...”

“அலோ... அவரு எப்பவுந்தான் கிண்டல் பண்ணுவார்... அவர் பண்றச்சே எல்லாம் பொறுத்துண்டுதான் இருக்கோம்... அதுக்காக முன்னப்பின்ன தெரியாதவாவை வச்சிண்டு கிண்டல் செய்யலாமோ...?”

“இல்ல... எங்ககிட்ட நீங்க ஜாலியா பேசிக்கிட்டு இருந்தீங்க...? திடீர்ன்னு கோபம் வந்துச்சா அதான் கேட்டேன்...”

“வீட்டுக்கு வந்த மனுசாக்கிட்ட எங்க பாட்டி மாதிரி பேசச் சொல்றீங்களா? அவருக்கு எனக்குந்தான் மேரேஜ்ன்னு வீட்ல பேசி வச்சிருக்கா...? அதுக்காக எப்பவும் கேலி பண்ணிட்டு இருந்தா... இப்ப இருக்கிற மாதிரித்தானே மேரேஜ்க்கு அப்புறமும் இருக்கச் சொல்லும்... அப்ப எங்களுக்குள்ள வீணாவுல பிரச்சினை வராதா...? ஏன் டைவர்ஸ் வரைக்கும் கூட போகலாம்தானே...”

“எதுக்குங்க டைவர்ஸ் அது இதுன்னு... சாரதி ரொம்ப நல்லவன்... யாரையும் கஷ்டப்படுத்த விரும்பமாட்டான்... அத்தை பொண்ணுன்னு ஜாலியா பேசிட்டான் விடுங்க...”
அவள் ஒன்றும் சொல்லாமல் நடக்க, அபி கண்ணனைப் பார்த்து “கண்ணண்ணா... பாட்டி என்ன சொன்னாங்க..?” என்றாள்.

“ஏய் அதெல்லாம் ஒண்ணும் சொல்லலை... “ மழுப்பினான் கண்ணன்.

“இல்லை நீங்க மறைக்கிறீங்க... ஏய் அம்மு பாட்டி என்ன சொன்னா..?” சுபஸ்ரீயைப் பார்த்துக் கேட்டாள் அபி.

“என்னத்தை சொல்லப் போறா... ஆச்சாரம், அனுஷ்டானம்ன்னு அந்தக் காலத்து பல்லவி பாடினா... உடனே உங்கண்ணன் பிரண்ட்... அதான் உங்க கண்ணண்ணனுக்கு கோபம், அப்புறம் அத்தை சமாதானப்படுத்தி இவாளை உள்ளற கூட்டிண்டு வந்தா...”

“அது சரி... எப்பவும் பாட்டிக்கு இதே வேலையாப் போச்சு... சாதி அது இதுன்னு பேசிண்டு... படிக்கிற இடத்துல சாதி பாக்க முடியுமா...?”

“முடியாதுதான்... பெரியவா.... அதுலயே ஊறுனவா... காலையில் எழுந்து குளிச்சிண்டு சூரிய நமஸ்காரம் பண்ணிட்டான்னா பின்னே... ஆத்துக்குள்ள வர்ற ஒவ்வொண்ணையும் கவனிக்க ஆரம்பிச்சிருவா... அவா எல்லாம் அப்படியே வளந்தவாதானேடி... இதுல வருத்தப்பட என்ன இருக்கு...”

“அதுக்காக..?”

“அபி ஒண்ணும் பிரச்சினை இல்லை... பெரிய மனுஷி... என்ன சாதி... என்ன மதம்ன்னு கேட்கிறது தப்பில்லைதானே... அதுதான் பாட்டியும் பண்ணினாங்க... விடு...”

“இந்தப் பெரியவங்கதாண்ணே பிரச்சினையே...”

“எல்லா இடத்திலும் அப்படித்தான்... சாதி, சாதியின்னு சொல்றவங்க இருக்கத்தான் செய்வாங்க... ஏன் இவரு வீட்ல கூட சாதியில ஊறின பெரியவங்க யாராச்சும் இருப்பாங்க... நாளைக்கு நாம அங்க போனா.... இவாள்ளம் எதுக்கு இங்க கூட்டிண்டு வாறேன்னு கத்துவாங்க... எல்லாத்தையும் விலக்கிட்டு நமக்குப் பிடிச்ச பாதையில பயணிக்கணும்... அதுதான் என்னோட பாதை... என்னோட பயணம்... இங்க இவங்களுக்காக ஆச்சாரமா இருக்க நான், கல்லூரி பிரண்ட்ஸ் எல்லோருடைய வீட்டிலும் சாப்பிட்டிருக்கேன்... அது நமக்கான வாழ்க்கை... நண்பர்கள் சூழ் உலகம்... அதுல நீ எஸ்.சியா, நான் எப்.சி என்றெல்லாம் பார்க்க முடியாது... பார்க்கவும் கூடாது. அப்படிப் பார்த்தா அதுக்கு பேர் நட்பே இல்லை... முதல் தடவை என்னோட பிரண்ட் மீனா வீட்டுக்குப் போனப்போ அவங்க அப்பா, ‘தாயி நீயெல்லாம் இங்க வரக்கூடாது’ என்றார். எதுக்கு வரக்கூடாது... என்னோட பிரண்ட் வீடு... அவளோட அப்பா அம்மா எனக்கும் அப்பா அம்மாதான்.... அப்புறம் எதுக்கு வரக்கூடாதுங்கிறீங்க... சாதியால உயர்ந்தவள்ன்னா... அடப்போங்கப்பா... உங்க ரத்தம், என் ரத்தம் எல்லாம் ஒண்ணுதான்... நாளைக்கே நான் அடிப்பட்டுக் கிடந்து ரத்தம் ஏத்தினாலும் அதுல இது எப்.சி. இது பி.சி, இது எஸ்.டி எஸ்.சியின்னோ... இல்ல இது முதலியார், இது யாதவர், இது செட்டியார் அப்படின்னோ எழுதியிருக்கப் போறதும் இல்லை... இது எந்த உடம்புல ஓடுன ரத்தம்ன்னும் யாரும் ஆராயப் போறதுமில்லை... இந்தக் குரூப் ரத்தம் இருக்கான்னுதான் பார்ப்பாங்க... அந்த நேரத்துல அந்த ரத்தம் தேவை அவ்வளவுதான்... குப்பனோட ரத்தம் குருக்களுக்குப் பொருந்தலாம்... குருக்களோட ரத்தம் ஆல்பர்ட்டுக்குப் பொருந்தலாம்... ஆல்பர்டோட ரத்தம் முகமதுக்கும் பொருந்தலாம்... அப்ப நமக்கு சாதியும் மதமும் பெரிசாத் தெரிவதில்லை... உயிர்தான் பெரிசாத் தெரியும்... சாகக்கிடக்கிறவன் இந்துன்னு சொல்லி முஸ்லீமோ, கிறிஸ்டியன்னு சொல்லி இந்தோ ரத்தம் கொடுக்க மறுப்பதில்லை... நான் கொடுக்கிறேன்னு சாதி மதம் கடந்து நிறையப் பேர் முன்னால வருவாங்க... இது எல்லாத்திலும் இருந்தா நல்லாயிருக்கும்... அப்படின்னு பேசினதும் என்ன அழகாப் பேசுறேம்மா... ஆனா ஊரு உலகம் என்ன பேசும் தெரியுமா? என்றார் ஆற்றாமையுடன். யார் பேசினா என்னன்னு நான் அவங்க வீட்டில் சாப்பிட்டேன். எனக்கு ஒண்ணும் ஆகலையே... அதான் சொல்றேன் பெரியவங்க அவங்க பாதையில பயணிச்சு நிறுத்தத்தை நெருங்கிக்கிட்டு இருக்காங்க.. அவங்க சாதி, மதத்தை சுமந்தது சுமந்ததுதான் போகும்போது நம்மக்கிட்ட இறக்கி வச்சாலும் அதை நாம தூக்கி சுமக்காம இறக்கி வச்ச இடத்திலேயே விட்டுட்டு போய்க்கிட்டே இருக்கணும்...” சுபஸ்ரீ நீளமாய் பேசி முடித்தாள்.

“அடேயப்பா... இப்படி நீ பேசினா அப்புறம் உனக்கு பரிசு கிடைக்காம வேற யாருக்குடி கிடைக்கும்... பாவம் எங்கண்ணன்... அவன் உன்னைக் கேலி பண்ணினா நீ அவனை பேசியே கொன்னுருவேன்னு நினைக்கிறேன்.... நீ சொன்னது எல்லாம் உண்மைதான்டி அம்மு... உன்னை மாதிரித்தான் நானும் சாதி மத வட்டத்துக்குள்ள உக்காரப் பிடிக்காதவள்...”

‘என்னமாப் பேசுறா...? எப்ப்ப்....பா... பேசினாள்ன்னா மெய் மறந்து கேட்டுக்கிட்டே இருக்கலாம் போலவே’ என்று நினைத்தபடி, ‘உண்மைதாங்க... அருமையாப் பேசினீங்க... இந்தா இங்க வந்திருக்கானே அம்பேத்கார்... அவங்க ஊர் திருவிழாவுக்குத்தான் முதல்ல போனோம்... சாரதி வரலை... மத்தவங்கதான் போனோம்.... எல்லாருக்கும் கலர் கொடுத்தாங்க... நான் சாப்பாடு இல்லையான்னு கேட்டதும்... தம்பி நீங்கள்லாம் நம்ம வீட்டுல.... அப்படின்னு இழுத்தாங்க... அட போங்கங்க அங்கிட்டு சாப்பாட்டைப் போடுங்கன்னு பந்தியில போயி உக்காந்தா... சாப்பாடு போடுறவன்ல இருந்து எங்களைச் சுத்தி நின்ன அவனோட சொந்தங்கள் எல்லாம் எங்களை புதுசாப் பாக்குற மாதிரி பார்த்தாங்க... அதுல ஒரு பொம்பளை...” பேச்சை நிறுத்தி சுபஸ்ரீயைப் பார்த்தான். அவள் ஒன்றும் பேசாமல் நடக்க, “சாரிங்க... எப்பவும் போல பொம்பளைன்னு சொல்லிட்டேன்... நீங்களெல்லாம் டீசெண்டா பேசுற ஆளுங்க... எங்க ஸ்லாங்க் அப்ப அப்ப இப்படித்தான்... ஒரு லேடி... பாருவே... அவனுங்கதான் சாப்பிடுறேன்னு சொன்னா இவங்க போடலாமா அப்படின்னு எங்க காதுபடவே சொன்னுச்சு... நாங்க வயிறு முட்ட சாப்பிட்டு கிளம்பினோம். நான் வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி எங்கப்பாவுக்கு செய்தி போயாச்சு.... சாமி குத்தம் ஆயிடும்... நீ எப்படி அங்க சாப்பிடுவே.... முதல்ல குளிச்சிட்டு உள்ள வான்னு ஒரே கத்தல்... நானும் உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி எதிர் பாட்டுப் பாடிப் பார்த்தேன்... முடியலை... தோளுக்கு மேல வளர்ந்த புள்ளையை அடிக்காதீங்க... என எங்கம்மா சொல்லும் வரை நீடித்தது. அப்புறம் அப்பாவுக்கும் எனக்கும் ரொம்ப பேச்சு வார்த்தை இல்லை... ஆனாலும் நான் பிரண்ட்ஸ் வீடுகளுக்குப் போறதோ... சாப்பிடுறதோ குறையலை.... எதுக்காக நான் மாறணும்... சாதி சாதியின்னு திரியிற இந்த சமூகம் மாறட்டும்... இந்தச் சமூகத்தை மாற்றுவதில் என்னோட பங்கு சிறதளவேணும் இருக்கணும்ன்னு ஆசைப்படுறேன்... பார்க்கலாம்”

“ம்... ரெண்டு புரட்சியாளருக்கு இடையில் நான் மாட்டிக்கிட்டேன்...” என்று அபி சிரிக்க, சுபஸ்ரீ எதுவும் பேசாமல் நடக்க, சாரதி ‘கண்ணா வேகமாக வாங்கடா... அப்புறம் பேசிக்கலாம்’ என்று கத்த, நடையின் வேகம் கூடியது.

பெருமாள் கோவில் கோபுரம் விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்தது.


சுதந்திரத்துக்குப் போராடி, தன்னுயிரை பீரங்கிக் குண்டுக்கு இரையாக்கிய வீரனின் படம்... சீறும் சிங்கம்... சாதிக்கட்சிக்கான கொடி... அந்தச் சாதியைச் சேர்ந்த சினிமா நடிகரின் படம் என எல்லாம் வரையப்பட்டு முக்கியஸ்தர்களின் பெயரையும் சுமந்து புதிய மாலை போடப்பட்ட அந்த சாதிச் சங்கப் பலகை ஜொலித்தது. அருகே கொடி மரத்தில் கட்டப்பட்ட கொடி காற்றில் பறந்தது.

“எனக்கு இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா... நம்ம சாதிப் பசங்க இவ்வளவு ஆர்வமா சாதியை கொண்டாடுறதே பெருமைதானே... இன்னைக்கு அம்புட்டுப் பயலுக வண்டியிலயும் சாதியும் அரிவாளும் தலைவரோட படமுமா இருக்கு...  அன்னைக்கு கல்யாணப் பத்திரிக்கையில பேர் போட்டா போதும்ன்னு சொன்னோம்... இன்னைக்கு இருக்கிற இளைய தலைமுறை சாதியோட போடுது... சாதி உயிர்ப்பா இருக்கணும்ய்யா... இங்க இந்த போர்டு வைக்க ரொம்ப தீவிரமா முயற்சி செய்தது நம்ம வேலாயுதம்தான்... அவரு நம்ம சாதிச் சங்கத்துக்கு இந்த ஊரு தலைவரா இருக்கது பெருமையான விஷயம்... இனி நம்ம சாதித் தலைவரோட ஒவ்வொரு பிறந்தநாளையும் நீங்க மிகச் சிறப்பாக் கொண்டாடணும்...” என்று பிரசிடெண்ட் பேசிக் கொண்டிருக்க, அப்போது வேகமாக வண்டியில் வந்த மற்றொரு சாதிப் பசங்க மூணு பேர் “ டேய் மாப்ள... அந்த இடத்தைப் பாரு... சரியா வருமா... நம்ம போர்டு சும்மா அங்க இருந்து பாத்தாலே தெரியணும்... கரெக்டா இடம் பாரு... “ என்று சொல்லியபடி இறங்க, அவர்களின் பைக்கில் இன்னுமொரு சுதந்திரப் போராட்ட வீரர் சாதித் தலைவராய் சிரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கீழே ரத்தச் சிவப்பில் ‘.................’வன்டா என எழுதப்பட்டிருந்தது.
-‘பரிவை’ சே..குமார்.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

அனார்கலி (மலையாளம்)

னார்கலி...

ஒரு காதலை... அதுவும் வருடக் கணக்கில் காத்திருக்கும் காதலை... மதம் கடந்த காதலை... எந்த ஒரு வன்முறையும் இல்லாமல், மதத்தை அதிகம் தூக்கிச் சுமக்காமல்... வலிகளை மட்டுமே சுமந்து... கேமரா சிறை பிடித்த இலட்சத்தீவின் அழகோடு ரசிக்க வைக்கும் படம்.

அழகானதொரு காதலை இவ்வளவு நேர்த்தியாக, குறிப்பாக வெட்டுக் குத்து என எதுவும் இல்லாமல்... வில்லனை சாதி, மதம் குறித்தெல்லாம் பேச வைக்காமல் எடுக்க மலையாளிகளால் மட்டும் எப்படி முடிகிறது..?நம்மவர்களால் இப்படி ஒரு கதையை  ஏன் எடுக்க முடிவதில்லை என்ற கேள்வி நமக்குள் எழாமல் இல்லை... மேலும் இதை தமிழில் எடுக்கிறேன் என கொல்லாமல் விட்டாலே போதும் எனத்தான் தோன்றுகிறது. இங்கு சாதி, மதம் வாழணும்... மதுரையைக் களமாகக் கொண்ட படங்கள் எல்லாமே வன்முறையைக் களமாக்கியவைதான்... ஏன் மதுரையில் வேறு நல்ல கதைகளே இல்லையா...? தமிழகத்தின் மற்ற இடங்களில் எல்லாம் வன்முறைகள் இல்லையா..? 'வந்தேன் வெட்டியேபுடுவேன்..' என்று மதுரைத் தமிழ் பேசினால்தானா...? வாஞ்சையாக 'நல்லாருக்கியா?'ன்னு பேசினால் படம் ஓடாதா...? இங்கே காதல் என்றாலும் மோதல் என்றாலும் சாதியும் மதமும் இருக்க வேண்டும். அங்கோ சாதியும் மதமும் இருந்தாலும் காதல் அவற்றைக் கடந்து ரத்தம் சிந்தாமல் வாழ வேண்டும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் அனார்கலி.

மேஜரின் மகளைக் காதலிக்கும் ராணுவவீரன், நீச்சல் குளத்தின் உடைமாற்றும் இடத்தில் வைத்து முத்தம் கொடுக்க முனைய, அந்த நேரத்தில் அங்கு வரும் மேஜர், பதினைந்து வயதுப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றான் என இராணுவ விசாரணைக் கமிஷனுக்கு கொண்டு போகிறார். விசாரணையின் போது அவனைக் காதலிப்பதாக சாட்சி சொல்கிறாள் அந்தப் பெண். அதன்பின் அவளிடம் பேசும் அதிகாரி, பதினைந்து வயதில் வருவது காதல் அல்ல.. இன்னும் ஐந்து வருடங்கள் கழிந்தால் இவனை நீ மறப்பாய் என்று சொல்ல, இதே காதலுடன் ஐந்து வருடங்கள் கழித்து உங்களைச் சந்திக்கிறேன் அங்கிள் என உறுதியுடன் சொல்கிறாள். ராணுவ வீரனுக்கும் அவனுக்கு உதவினான் என அவனின் நண்பனுக்கும் பதவி இறக்கம் செய்யபடுகிறது. வேறு வேறு இடங்களுக்கு பயணிக்கிறார்கள்.

(பிரியல் கோர்)
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவளைத்தேடி வருகிறான்... அவனைப் பார்த்ததும் அவளுக்கு சந்தோஷம். இருவரின் சந்தோஷத்துக்கும் 'நீங்க இருவரும் சேர நான் சம்மதிக்கமாட்டேன்' என மீண்டும் செக் வைக்கிறார் மேஜர் அப்பா. 'உங்க அனுமதி இல்லாம அவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்... நீங்க எங்களுக்கு ஓகே சொல்லாம செத்தாக்கூட அவரோடு நினைப்புலதான் வாழ்வேன்... அவரோட சேரமாட்டேன்...' என்று அப்பாவுக்கு பதிலடி கொடுத்துவிட்டு 'எனக்காக... நம் காதலுக்காக காத்திரு...' என அவனை அனுப்பி வைக்கிறாள். அதன் பின் அடிக்கடி சிடியில் பேசி அனுப்புகிறாள். அதுவே இவர்களின் காதலை வளர்க்கிறது... இன்னும் இறுக்கமான காதலாகிறது. அதற்கும் வேட்டு வைக்கும் விதமாக அவள் பேசுவதைக் கேட்டு அவளை மிரட்டி, அதை உடைக்க வைத்து  'அவள் இனி உன்னை நினைக்கமாட்டாள், மறந்துவிடு' என்று தானே பேசி, மகளை அனுப்பச் சொல்கிறார். பின்னர் வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு கிளம்ப, அவருடன் வர மறுத்து டீச்சர் வேலை கிடைத்திருப்பதாகச் சொல்லி அஜ்மீருக்குப் பயணிக்கிறாள். அதன் பின்னர் அவனுடன் அவள் தொடர்பில் இல்லாமல் போகிறாள்.  அவளின் காதலுக்கு தம்பி ஆதரவாக இருக்கிறான்.

அவளைத் தேடி அலுத்துப் போய், நீச்சலில் கின்னஸ் சாதனை புரிந்து பத்திரிக்கைகளில் எல்லாம் போட்டோவுடன் செய்தி வர வைக்கிறான். அப்படியாவது அவள் தன்னைத் தொடர்பு கொள்வாள் என்று நினைக்கிறான். அதுவும் தோல்வியே... அதன் பின்னர்தான் அவன் தன் நண்பனையும் மற்றொருவனையும் தேடி லட்சத்தீவுக்கு நீச்சல் பயிற்சியாளராக வருகிறான். அங்கு அவர்கள் இருவரையும் சந்தித்தானா? இறுதியில் காதல் வெற்றி பெற்றதா இல்லையா...? என்பதை லட்சத்தீவின் அழகோடு அருமையான படமாகத் தந்திருகிறார்கள்.

லட்சத்தீவில் அவனுக்கு உதவும் ஸ்போர்ட்ஸ் கிளப் செகரெட்டரி தோமாவின் தங்கைக்கும் இது போல் ஒரு காதல், ஒவ்வொரு முறை அவள் காதலனைத் தேடி கொச்சிக்கு கிளம்பும் போது அண்ணனால் தடுக்கப்படுகிறாள். அவளின் காதலும் கைகூடியதா இல்லையா...? டாக்டராக வரும் மியாவிடம் எப்போதும் சீண்டி விளையாடும் ப்ரித்விராஜ் மீது அவர் காதல் கொண்டாரா? நண்பனை அவனால் சந்திக்க முடிந்ததா..? அவன் தேடி வந்த மற்றொரு நபர் யார்..? அந்த நபரால் இவனது காதலுக்கு உதவி கிட்டியதா..? இப்படி நிறைய கேள்விகளை லட்சத்தீவில் இருக்கும் கவரெட்டி என்ற அழகிய ஊரில் வைத்து மிக அழகாக நகர்த்தியிருக்கிறார்கள்.

(மியா ஜார்ஜ்)
ப்ரித்விராஜூக்கு இப்போ சுக்ர திசை போலும், சென்ற வருடத்தில் ஆரம்பித்து இப்போ வந்திருக்கும் 'பாவாட' வரை வந்த எல்லாப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட். இடையில் 'டபுள் பேரல்' மட்டுமே கொஞ்சம் சறுக்கியது ஆனாலும் ப்ளாப் ஆகவில்லை. தனக்கான கதைகளை மிக அழகாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ராணுவ வீரனாய் காதலியின் பின்னாலே திரியும் போது செம ஹுயூட்... காதலியை தேடி அலையும் போது காதலின் வலியை சுமந்து திரிந்தாலும்... லட்சத்தீவில் லேசான தாடியுடன் நாம் எப்பவும் பார்க்கும் ப்ரித்விராஜை பார்க்க முடிகிறது. மியாவிடம் குறும்பு செய்யும் கலகலப்பான மனிதராய்... நீச்சல் பயிற்சி அளிக்கும் மனிதராய்... பன்முகம் காட்டுகிறார். 40வயசுல காதலியை தேடுறே... என நண்பன் கிண்டல் அடிக்க, இருக்காளா... இல்லையான்னு தெரிஞ்சா ஷட்டரை மூடிடலாம்ல்ல... அதுக்காகத்தான் அவளைத் தேடுறேன் என்று சொல்லும் போது காதலின் வலி அவர் முகத்தில்... மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

பிரியல் கோர் ... குஜராத் இறக்குமதி, சிரிப்பால் கொள்ளை கொள்ளும் அழகி, இந்தியில் ஒன்று, தெலுங்கில் ஒன்றென இரண்டு படங்கள் முடித்த இந்த தொலைக்காட்சித் தொடர் நடிகைக்கு மலையாளத்தில் இது முதல் படம். தன் காதலைச் சுமந்து அப்பாவை எதிர்த்து நிற்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். என்ன டிரஸ்ஸிங்க் சென்ஸ்.... அவரது உடைகள் எல்லாமே அழகு.. நிச்சயம் ரொம்பப் பேரின் தூக்கத்தைக் கெடுத்திருப்பார்.

நண்பனாக வரும் பிஜூ மேனன், ராணுவ வீரராக வரும் போது கலகலக்க வைக்கிறார்... லட்சத்தீவில் சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி, லேசான தாடியுடன் லைட் ஹவுஸில் பணியில் இருக்கும் போது தேடி வரும் நண்பனைக் கண்டு ஒளிந்து திரிவது, அவனின் கதையைக் கேட்டதும் அவனுக்கு உதவ நினைப்பது, இறுதிக் காட்சியில் சோகமும் சந்தோஷமுமாய் கலந்து கட்டி  நண்பனின் நிலை கண்டு கதறுவது என  ப்ரித்விராஜை தூக்கிச் சாப்பிடும் அலட்டலில்லாத நடிப்பு.

(சம்ஸ்க்ருதி)
இரண்டாவது கதாநாயகியாக, லட்சத்தீவு மிலிட்டரி மெடிக்கல் சூப்பரிண்டென்ட்டாக வரும் மியா... எல்லாருக்கும் உதவி செய்யும் பாஸிட்டிவ் மனிதராக வருகிறார். ப்ரித்விராஜ் அவரை கலாய்ப்பதும்... அவர் ப்ரித்விராஜை கலாய்ப்பதும் செம... கடைசிக் காட்சியில் ராணுவ அதிகாரியிடம் சண்டையிட்டு ப்ரித்விராஜைக் காப்பாற்ற முயற்சிக்கும் இடத்தில் கலக்கியிருக்கிறார். பிரியல் கோர் இடத்தில் இவர் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணத் தோன்றும் அழகி.

ப்ரித்விராஜின் லட்சத்தீவு நண்பர்களாக வரும் ஆத்திகோயா (சுரேஷ் கிருஷ்ணா),ராஜீவ் (அருண்), நாயகியின் அப்பா (கபீர் பேடி), தம்பி (சுதேவ் நாயர்) என எல்லாரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கோமாவின் தங்கையாக வரும் சம்ஸ்க்ருதி  எல்லாரையும் கவர்வார் என்பதில் சந்தேகமில்லை. ஆ ஒருத்தி பாடலில் 'காக்கு நின்டோ நீ... காத்திருப்போம் யாம்...' என்ற வரிகளைப் பாடும்போது அண்ணனைப் பார்த்து யாரும் பார்க்காத வண்ணம் கண்ணீரைத் துடைக்கும் போது அவளின் காதலும் சேர வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

திரைக்கதை ஆசிரியராய் நீண்ட காலம் பயணித்து இயக்குநராக களம் இறங்கை இருக்கும் சாச்சி,  நல்லதொரு காதல் கதையை, மிக நேர்த்தியான கதைக்களத்தில் தேர்ந்தெடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார். வித்யாசாகர் அருமையான இசை விருந்து படைத்திருக்கிறார். பாடல்கள் அருமை... சுஜித் வாசுதேவ் தனது ஒளிப்பதிவில் லட்சத்தீவின் அழகை கண் முன்னே நிறுத்துகிறார்.


மொத்தத்தில் 'அனார்கலி' திகட்டத் திகட்ட காதலையும் அதன் வலியையும் ஒரு சேர கொடுத்தபடம்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 24 பிப்ரவரி, 2016

நானே முதலாளி

"என்ன வேலை அதிகமோ?"

"ஆமாங்க... கொன்னு எடுக்குறானுங்க.. எல்லாமே நானேதான் பாக்க வேண்டியிருக்கு"

"உங்க வேலையை மட்டும் பாருங்க... எதுக்கு எல்லாத்தையும் இழுத்துப் போட்டு பார்க்கிறீங்க..?"

"எங்கங்க இழுத்துப் போட்டுப் பார்க்கிறேன்... நாலு டெண்டர் வந்திருக்கு... இதை இதை இப்படிப் பண்ணினால் போதும்ன்னு சொன்னா எவன் கேக்குறான்..."

"ம்ஹூம்... அதெல்லாம் நீங்கதான் பாக்கணுமா... என்ன?"

"எனக்கு எல்லாந் தெரியுங்க... சொன்னா கேக்க மாட்டானுங்க... எனக்குத் சொல்லித்தாறியான்னு சொல்லிட்டு சாயந்தரமா வந்து இதை எப்படிச் செய்யலாம்ன்னு கேப்பானுங்க... எப்பவும் இதே வேலையாப் போச்சு..."

"அது சரி... இதெல்லாம் உங்ககிட்ட கேப்பாங்களா...? அப்ப நீங்கதான் எல்லாமே அப்படித்தானே...”

“எதை எதை எப்படிப் பண்ணலாம்ன்னு எனக்குத் தெரியாததா... எத்தனை கம்பெனி பாத்திருப்பேன்...”

“ம்...”

“நேத்துக்கூட முதல்ல கேக்க மறுத்தவன், சாயந்தரம் வந்து நீ சந்தோஷமா இருக்கியான்னு கேட்டான்... ஆமான்னு சொன்னதும் நீ சந்தோஷம்ன்னா நானும் சந்தோஷம்தான்... டெண்டர் இன்னும் தயாராகலையில்லன்னு சொல்லி சிரிச்சிட்டுப் போறான்... ரெடி பண்ண வேண்டிய டெண்டர் டேபிள்ல சிரிச்சிக்கிட்டு கிடக்கு... இனி நாளைக்குப் போயி நாந்தான் எல்லாம் பாக்கணும்”

“பாருங்க... நீங்க செய்யலைன்னதும் அவரும் செய்யலை... மொத்தப் பொறுப்பும் உங்க தலையில... கம்பெனியில இருக்க எல்லா மேனேஜருமே நீங்க சொன்னா செய்யிற மாதிரி இருந்தா எப்படி... அவனவன் வேலையை அவனவன் பாக்க வேண்டாம்... எல்லாத்தையும் ஒராளு மேல  அள்ளிப் போட்டா எப்படி... நியாயமா  இது..? நீங்க ஏன் மூளையைப் போட்டு கசக்கி வேலை பாக்குறீங்க...  கொடுக்கிற சம்பளத்துக்கு வேலை பார்த்தா போதும்... உங்க உடம்புதாங்க உங்களுக்கு முக்கியம்... கம்பெனி செய்யாட்டி பொயிட்டுப் போகுது... யாருக்கு நஷ்டம்... என்ன நாஞ் சொல்றது...”

“நமக்கு அப்படி யாரோ செய்யட்டும்ன்னு பார்த்துக்கிட்டு இருக்கிற மனசில்லைங்க... எல்லாத்தையும் நான் இழுத்துப் போட்டு செஞ்சிருவேன்...”

“அதுக்காக டெண்டர் வேலை எல்லாம் மேனேஜருங்க.. அதுக்குன்னு உள்ள ஆளுங்க தயார் பண்ணனும் நீங்க எப்படி..?”

“எல்லாமே எனக்குத் தெரியுங்க... என்ன காலம் வெள்ளலை... அவன் முதலாளியா இருக்கான்... நான் இப்படி கெடந்து கஷ்டப்படுறேன்....”

“ம்... சரிங்க.... வொர்ரி பண்ணிக்காதீங்க... ரொம்ப கெரங்கிப் போயிட்டீங்க... எதையும் நெனச்சு  கவலைப்படாதீங்க... டெண்டர் விஷயாம ரொம்ப திங்க் பண்ணாதீங்க... நல்லா சாப்பிடுங்க... சுகர் மாத்திரை.. பிரஷர் மாத்திரை எல்லாம் ஒழுங்காச் சாப்பிடுறீங்களா?”

“ம்...”

“விடாம சாப்பிடுங்க... அடிக்கடி டெஸ்ட் பண்ணிக்கங்க... பொறிச்ச அயிட்டங்களை சாப்பிடாம கொறச்சிக்கங்க... எல்லாத்துக்கும் மேல டென்சனைக் குறைங்க... நா அடுத்த வெள்ளிக்கிழமை வர்றேன்.... நாளைக்கு வேலை... இனி இங்கிருந்து முஸாபா போறதுக்குள்ள தாவு தீந்திரும்... சரி... அப்பக் கெளம்பவா...?”

“இருங்க... நானும் பஸ் ஸ்டாப் வரைக்கும் வாறேன்...”

“வேண்டாம்... எதுக்கு லிப்ட்ல எறங்கினா... இதே பில்டிங்குக்கு கீழே பஸ் ஸ்டாப்... வீணாவுல நீங்க எதுக்கு எறங்கி ஏறுறீங்க... நாங்க போயிருவோம்..."

“சரி பின்னே... பாத்து போங்க... பொயிட்டு போன் பண்ணுங்க...”

“சரி...”

புதிதாக அறைக்கு வந்திருந்த நண்பனை அபுதாபி போலாமென கூட்டி வந்திருந்தான். லிப்டுக்கு நிற்கும் போது அவன் மெதுவாக "ஏங்க... உங்க சொந்தக்காரர்தான் பெரிய வேலையில் இருக்காருல்ல... பின்னே ஏன் நீங்க டிகிரி முடிச்சிட்டு ஆபீஸ் பாயா டீக்கிளாஸ் கழுவுறீங்க... இவருக்கிட்ட சொல்லி இவங்க ஆபீசிலேயே நல்ல வேலைக்கு ஏறலாமே..." என்றான்.

"அட நீங்க வேற...  இந்தாளு பாக்குறது டாக்குமெண்ட் கண்ட்ரோலர் வேலை... பேசுறது மட்டும் பெரிசா... இன்னும் உக்காந்திங்கன்னா உங்ககிட்டா ஊர்ல இருக்கும் போது கலெக்டருக்கு சந்தேகம் வந்தா வண்டியை எடுத்துக்கிட்டு என்னைத் தேடித்தான் வருவாருன்னு சொல்வாரு... எல்லாம் கேட்டுக் கேட்டு எனக்கு பழகிடுச்சு... வாய் இருக்க வேண்டியதுதான்... அதுக்காக இப்படி இருக்கக்கூடாது... இது சும்மா இருந்தா நிம்மதியா வேலையைப் பாத்துட்டு சந்தோஷமா இருக்கலாம்... இதுவே எல்லாத்தையும் தூக்கிச் சுமக்குது" எனச் சிரிக்க, அவர் அதுக்குப் பின் முஸாபா வரைக்கும் பேசவே இல்லை. அடுத்த முறை வரமாட்டார்ன்னு நினைக்கிறேன்.

********
றவுகளே பிரதிலிபி 'கொண்டாடப்படாத காதல்கள்' போட்டியில் எனது சிறுகதையும் இருக்கு. அதற்கு கிடைக்கும் மதிப்பெண் அடிப்படையில்தான் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அங்கு சென்று 'விமர்சனம் எழுத' என்ற பட்டனைச் சொடுக்கி, பிரதிலிபியில் உறுப்பினராக இல்லை என்றால் முகநூல் நுழைவு முகவரியைக் கொடுத்து உள் சென்று கருத்து இடவில்லை என்றாலும் கதையைப் படித்து மதிப்பெண் கொடுங்கள். மறக்காதீர்கள்... உங்கள் நட்புக்களுக்கும் சொல்லுங்கள்... என் கதை மட்டுமல்ல மற்ற நல்ல ஆக்கங்களுக்கும் உங்கள் மேலான மதிப்பெண்ணை அளியுங்கள். நன்றி.

நீங்கள் அளிக்க இருக்கும் மதிப்பெண்ணுக்கு இப்பவே நன்றி...!

-'பரிவை' சே.குமார்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..!

பிரதிலிபியின் 'கொண்டாடப்படாத காதல்கள்' போட்டியில் எனது கதையும் இருக்கு. அதை நீங்களெல்லாம் கொண்டாடினால் பரிசை வெல்லும் படைப்புகளுடன் போட்டியாவது போட முடியும். அதற்கு தாங்கள் செய்ய வேண்டியது கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கி பிரதிலிபியில் கதையை வாசித்து உங்கள் கருத்தையும் மறக்காமல் மதிப்பெண்ணையும் அளியுங்கள். கதை குறித்து உண்மையான கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.


படத்தைக் கிளிக்கியும் கருத்தைச் சொல்லலாம்


***
பிப்ரவரி - 16 அகல் மின்னிதழில் 'எங்கள் அமீரகம்' என்னும் தலைப்பின் கீழ் எனது கட்டுரையின் முதல் பகுதி வெளியாகி இருக்கிறது. அதன் இரண்டாம் பகுதி வரும் மார்ச் இதழில் வெளியாகும். அகலில் கட்டுரை வாசிக்க கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்குங்கள். கட்டுரை குறித்து தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரையை பிரதிலிபியிலும் படிக்கலாம்.

அகலில் வாசிக்க :  எங்கள் அமீரகம் - 1

பிரதிலிபியில் வாசிக்க :  எங்கள் அமீரகம் - 1

அகல் நண்பர்கள் வட்டம் முகநூல் பக்கம் பார்க்க படத்தை கிளிக்குங்கள்


***
வேலைப்பளு கூடுதல் மற்றும் சில பல காரணங்களால் வலைப்பக்கம் அதிகமாக வருவதில்லை. நண்பர்களின் எழுத்துக்களை விடுமுறை தினங்களில் வாசித்து விடுவேன். கருத்து இடுவதில் சிக்கல் இருக்கிறது. சிலரின் பதிவுகளுக்கு பிரச்சினை இல்லை. பலரின் பதிவுகளில் 'நீ ரோபோ இல்லை'ன்னு சொல்லு என்று கேட்கிறது. சொன்னால் ரைட்டு என கருத்து இட அனுமதிக்கிறது. அதிலும் ஒரு சிக்கல் என்னன்னா நாலு பேருக்கு அந்த மாதிரி உள்ள போயி கருத்து இட்டால் ஐந்தாவது நண்பரின் தளத்தில் ரோபோ இல்லைன்னா... படங்களைக் கொடுத்து மரங்களை தேர்ந்தெடு, ஆற்றை தேர்ந்தெடு, புல்வெளியை தேர்ந்தெடு, தெருவைத் தேர்ந்தெடு, டாக்ஸியை தேர்ந்தெடுன்னு கொடுத்து சரியாச் சொன்னாத்தான் உள்ளே போகுது. இதில் கடுப்பாகி வாசிப்பதுடன் வெளியில் வந்துவிடுவதுண்டு. இந்தப் பிரச்சினை எனக்கு மட்டும்தானா இல்லை எல்லாருக்கும் இருக்கான்னு தெரியலை. தனபாலன் அண்ணா வேற ரொம்ப பிஸி போல, அவர் இப்போ அதிகம் வருவதில்லை இல்லேன்னா அவர்கிட்ட கேட்டுக்கலாம். தெரிந்த நண்பர்கள் அதை எப்படி சரி செய்யலாம் என்று சொல்லுங்கள்.


***
பாக்யாவில் மக்கள் மனசு மற்றும் வாசகர் வாய்ஸ்-ல் தொடர்ந்து எனது கருத்துகளையும் தேர்ந்தெடுத்து வெளியிடும் பாக்யா ஆசிரியர் குழுவுக்கு நன்றி. மக்கள் மனசில் ஒரு சில வாரங்கள் தவிர்த்து ஒரு வருடமாக தொடர்ந்து எழுதியிருக்கிறேன் அதுவும் பிரசுரமாகியிருக்கிறது என்பதை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.


*** 
ம்மாவின் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மிக தீவிரம் அடைந்து நாட்டுக்காக உயிரிழந்து, தேசியக்கொடியைப் போர்த்தி மரியாதை செய்யப்பட்ட ராணுவவீரனின் மீது ஸ்டிக்கரை வைத்த ஸ்டிக்கர் பாய்ஸின் செயல் வேதனைக்குரியது... கேவலமானது. நேற்று ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது... அதில் மரணமடைந்தவரின் வீட்டில் அழுது கொண்டு நிற்கும்பெண்ணிடம் அம்மாவின் அல்லக்கைகள் காவிரித்தாயின் போட்டோவைக் காட்டி... சை... இவர்களுக்கு எப்படி மனசு வருகிறது... இப்படிப்பட்ட கேவலமான செயலை இறந்தவர்களின் வீட்டிலும் செய்ய இவர்களால் எப்படி முடிகிறது. இந்த மானங்கெட்ட பொழப்புக்கு நாண்டுக்கிட்டு சாகலாம் அல்லக்கைஸ்... ஆணவம் பிடித்த தங்கத்தாரகை இதையெல்லாம் ரொம்ப விரும்பும் போல... புகழ் விரும்பி... மமதை பிடித்த மக்கள் தலைவி... யோசித்து வாக்களித்து வெளியில் தூக்கி வீசணும் தமிழக ஸ்டிக்கர் முதலமைச்சரை.... இல்லையேல் எல்லாருடைய வீட்டிலும்.... எல்லாப் பொருளிலும்... இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள்... அதற்கான கடன் அடுத்த ஐந்தாண்டில் மில்லியன்களின் கூட இருக்கலாம். தமிழனை கேவலப்படுத்தவே  இந்த ஈனப்பிறவிகள் பதவியில் இருக்கிறார்கள் போல.

***
பாப்பா மதிய சாப்பாட்டை சில தினங்களாக சாப்பிடுவதே இல்லை... டிபன் பாக்ஸ் அப்படியே வருது... தினமும் கஷ்டப்பட்டு விதவிதமாச் செஞ்சு கொடுத்துவிட்டா... சாயந்தரம் கோழிக்குத்தான் கொட்ட வேண்டியிருக்குன்னு மனைவி சொல்ல, நான் பாப்பாவிடம் என்ன..? ஏன்..? என்று கேட்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது விஷால், 'இவுகளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டா பாவம் கோழிங்க பசியா இருக்கும்ன்னு அப்படியே கொண்டாந்துடுறாங்க... இனிமே இதுக்கு கொடுத்து விடுறதுக்குப் பதிலா காலையிலயே கோழிக்கு போட்டிடலாம்... சூடாவாச்சும் சாப்பிடுங்க' என்று சிரிக்காமல் சொல்லிவிட்டு படுத்துக் கொண்டான். இப்படி அப்பப்ப நிறைய டைமிங்கா பேசிக்கிட்டே இருப்பான்... எல்லாத்தையும் பதிஞ்சு வைக்கணும்.


***
நாம் மனசுக்குள் யோசித்து வைத்து... அதை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி ஒரு பதிவாக்கினால் காப்பி செய்யும் நபர்கள் ஏதோ தாங்கள் எழுதியது போல் பல தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். 'தேவதா தமிழ்' கீதா அக்கா, 'ஆல்ப்ஸ் தென்றல்' நிஷா அக்கா என நிறையப் பேர் தங்கள் பதிவுகள் பல தளங்களில் வேறு பெயரில் பதிவாகியிருக்கு என்று சொல்லியிருந்தார்கள். அவர்கள் படைப்பு மட்டுமில்லை... பலரின் படைப்புக்கள் அப்படித்தான் வலம் வருது. ஒரு முறை 'RSS Feed' என்னும் தளத்தில் எனது பதிவுகள் இன்னும் நம் நட்பின் பதிவுகள் எல்லாம் அனுமதியில்லாமல் மொத்தமாக பதியப்பட்டிருந்தன. நான் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி எனது பதிவுகளை நீக்கினேன். நாம் பெற்ற பிள்ளைக்கு வேறொருவன் உரிமை கொண்டாடுவது எப்படி நியாயம்..? எனவே இனிமேல் மனசு தளத்தில் கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள் எல்லாம் நிறுத்திவிட்டு  மனசில் பட்டது, மனசு பேசுகிறேன், மனசின் பக்கம், சினிமா என எழுதலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன். எதுக்குங்க கஷ்டப்பட்டு சிறுகதை எழுதி நாளைக்கு எவனாச்சும் அதை புத்தகமாப் போடுவான்... என்னைக்காச்சும் வாசிக்க நேர்ந்தால் என்ன இது எல்லாமே நம்மளோட கதை மாதிரி இருக்குன்னு புலம்பினாலும் அவனை ஒண்ணும் செய்ய முடியாதுதானே... எனவே இப்போ நான் தீவிர யோசனையில்... இல்லேன்னா பேசாம மனசு வலைப்பதிவுக்கு மூடுவிழா நடத்திடலாமான்னு கூட யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க..?

***
ன்னைக்கு காலையில வேலைக்கு போகும் போது சிக்னலில் ரெண்டு மலையாளி பசங்க பேசிக்கிட்டு நின்னாங்க... ஒருத்தன் மற்றவனிடம் 'பெல்ட் போடாம இன் பண்ணக்கூடாதா என்ன?ட என்றான். 'ஏன்... பண்ணலாமே...? யார் பண்ணக்கூடாதுன்னு சொன்னா... போலீஸ்காரனா...?' மற்றவன் அப்பாவியாய்க் கேட்டான். 'அட நீ வேற... வர்றப்போ எதிரே போன பிலிப்பைனி பொண்ணுங்க ரெண்டு கெக்கே பிக்கேன்னு சிரிச்சிக்கிட்டு போகுதுங்க...'என்றான். உடனே மற்றவன் அவனை ஏற இறங்கப் பார்த்துட்டு 'மூதேவி... முதல்ல சிப்பைப் போடு... இன் பண்ணின சட்டை அதுவழியா வெளியே வந்திருக்கு பாரு... அப்புறம் சிரிக்காம என்ன பண்ணுவாளுங்க' என்றதும் 'அய்யே...' என அவன் வேகமாக ஜிப்பை இழுக்க நான் சிரித்துக் கொண்டே கடந்தேன்.


***
ன்னைக் கவர்ந்த பாடலாக அனார்கலி படத்தில் இருந்து 'ஆ ஒருத்தி அவளோருத்தி...'  அருமையான பாடல்... இது கண்டிப்பாக உங்களையும் கவரும்... என்னது படம் குறித்தா..? அதை அடுத்த பதிவுல விரிவாச் சொல்றேன்... இப்ப பாட்டைக் கேளுங்க...


-'பரிவை' சே.குமார்.

சனி, 20 பிப்ரவரி, 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-5)

முந்தைய பகுதிகளை வாசிக்க...

பகுதி-1             பகுதி-2            பகுதி-3            பகுதி-4

*********

வேலாயுதம் தன் கோபத்தை மாப்பிள்ளையிடம் காட்ட முடியாமல் சாப்பாட்டில் காட்டிவிட்டு எழுந்து சென்றதும், கணவன் ராமநாதனுக்கு கை துடைக்க துண்டு எடுத்துக் கொடுப்பது போல் அவனருகில் போய் ‘என்னங்க நீங்க அவருக்குத்தான் அவனைப் பற்றி பேசினால் கோபம் வரும்ன்னு தெரியும்ல… அப்புறம் எதுக்கு சொன்னீங்க… சாப்பிடாமப் பொயிட்டாரு பாருங்க…”

“சாதி வீம்பு தண்ணி ஊத்தாதுன்னு உங்கப்பாக்கிட்ட சொல்லு செல்வி…” சத்தமாகப் பேசினான்.

“எதுக்கு கத்துறீங்க..? மெதுவாப் பேசுங்க…”

“ஆமா… ஆ…ஊன்னா என்னைய அடக்கப்பாரு… இந்த வயசுல இந்தாளு சாதியைத் தூக்கி சுமந்துக்கிட்டு என்னத்தை அள்ளிக்கிட்டுப் போகப்போறாரு… ஆமா… அவனை மொத்தமாவே அறுத்துக் கழுவிறனுமின்னு நினைக்கிறாரா..? “

“அது எதுக்குங்க இப்ப… கொஞ்சம் சும்மா இருங்களேன்… இந்தாங்க வெத்தலை… வாய்க்குள்ள வச்சி அமுக்குங்க… அப்பத்தான் எதுவும் பேசமாட்டீங்க…” என வெத்தலையை நீட்ட, “ஆமாடி எதாச்சும் கொடுத்து என் வாயை அடைச்சிரு…” என்றபடி வாங்கிக் கொண்டு அங்கு கிடந்த கட்டிலில் அமர்ந்தான்.

‘கேட்டது மாப்பிள்ளையாப் போச்சு... இல்லேன்னா இன்னைக்கு உண்டு இல்லைன்னு பண்ணியிருப்பேன்’ என்று மனசுக்குள் பொருமிக் கொண்டே கையில் எடுத்து வந்த வெற்றிலையை துண்டில் தேய்த்து... காம்பு கிள்ளி... நரம்பு எடுத்து... அதன் பின்புறத்தில் சுண்ணாம்பை நாலைந்து இடத்தில் தடவி... கொட்டப் பாக்கை வைத்து மெல்லச் சுருட்டி வாய்க்குள் அதக்கிக் கொண்ட வேலாயுதம்... அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்... நிலவைச் சுற்றி ஒரு வட்டம் தெரிந்தது... ‘கோட்டை கட்டியிருக்கு... இனி மழ பேஞ்சு என்னாகப் போகுது... கோடையா போடப் போறானுங்க....’ என்று நினைத்து சிரித்தபடி நட்சத்திரங்களை ரசிக்கலானார்.

மாடுகளிடம் கிடந்த வைக்கோலை ஓரிடத்தில் குவித்து... அவற்றை ‘இஞ்சே... ம்ம்ம்.. ‘ என்று வாலை முறுக்கி எழுப்பி விட, அவை முதுகை வளைத்து ஒரு நெளி நெளித்துவிட்டு ‘சர்...’ என மூத்தரத்தைப் பெய்ந்தன. ‘புது வக்க... உங்களுக்கு இறங்க மாட்டேங்குது...’ என்று திட்டிக் கொண்டே நகர்ந்த பஞ்சநாதன் வாசலில் தனியே அமர்ந்திருந்த வேலாயுதத்தைப் பார்த்ததும் அங்கு வந்தார்.

“என்ன வேலாயுதம்... பலமான யோசனையா இருக்கு?” என்று சிரித்தார்.

“ஆமா கோட்டை கட்டப் போறேன் பாரு... சாப்பிட்டு வெத்தல போட்டுக்கிட்டு இங்கிட்டு காத்தாட வந்து ஒக்காந்தேன்.... வானத்தைப் பாத்தேன்... கோட்டை கட்டியிருந்துச்சு... அப்படியே நச்சத்திரங்களை எண்ணிக்கிட்டு ஒக்காந்திருக்கேன்... ஒக்காரு... சாப்பிட்டியா...? கோழிக் கொழம்பு... கொஞ்சம் சாப்பிடு...”

“சாப்பிட்டேன்... படுக்கப் போனேன்... ஒண்ணுக்குப் பொயிட்டு படுக்கலாம்ன்னு வந்தேன்... மாடுக புது வக்கல்ல... அதான் திங்காம இழுத்துப் போட்டு படுத்திருந்துச்சுக... எழுப்பி விட்டு குமிச்சி வச்சிட்டு வாறேன்... ஆமா அறுப்பெல்லாம் முடிச்சிட்டே... இனி சின்னவன் வீட்டுக்கு அரிசி கொண்டுக்கிட்டு ஓடுவியே...?”

“ஆமா... செல்வி இருக்கும்போதே அவிச்சிரலாம்ன்னு பாத்தேன்... நாளக்கி காலயிலதான் அவிக்கணும்... சாதிச் சங்க போர்டு வேற வைக்க வர்றாக...”

“நானும் கேக்கணுமின்னு நினைச்சேன்... இந்தப் பயலுக வண்டியில் முன்னாடி பின்னாடியெல்லாம் சாதி பேரைப் போட்டு ஒரு மார்க்கமாத் திரியிறானுங்க... இதுல தலைவர் படம் வேற... அவரு சுதந்திரத்துக்கு போராடுன மனுசன்... அவரை சாதிக்குள்ள கொண்டு வர்றது நல்லாவா இருக்கு... இதுல சாதிப் போர்டு வேற... நல்லாயிருக்க ஊருக்குள்ள நாமளே எதுக்கு ஏழரையை இழுத்தாரணும்...”

“என்ன எழரையை இழுக்கிறோம்.... மத்த சாதிக்காரனுக தலைவரா வச்சிருக்கிற எல்லாருமே நாட்டுக்காகவும் சுதந்திரத்துக்காகவும் போராடுனவுகதானே... நம்ம பயக வச்சா தப்பா.... நம்ம சாதிக்குன்னு சங்கப் போர்டு வைக்கிறதுல என்ன தப்பு இருக்குன்னேன்... இப்பத்தான் ஒருத்தரு எனக்கு பாடம் சொன்னாரு... அடுத்து நீயா...?” வேலாயுதம் கோபமாக் கேட்டார்.

“யாரு செல்வி வூட்டுக்காரரா...? அவருக்கிட்டயும்  சாதிக்காக சண்டை போட்டியா... ஏம்ப்பா.... அந்தாளு இங்க வந்து மாங்கு மாங்குன்னு வேல பாக்கணுமின்னு என்ன இருக்கு... சின்னவனுக்குத்தானே அரிசியெல்லாம் போவும்... அவன் வந்தானா... தேவையில்லாம உனக்கு ஓடியாந்து பாக்குற மனுசனுக்கிட்ட எதுக்கு சத்தம் போடுறே...?”

“அட நீ வேற... இதே வேற யாராச்சும் எங்கிட்ட பேசியிருந்தா வேற மாதிரி நடந்திருக்கும்.... மாப்ள பேசினாரு... பேசாம வந்துட்டேன்... ஆனா எனக்கு சாதியும் கௌரவமுந்தான் முக்கியம்... உனக்கு சாதி தேவையில்லை... எனக்கு அது தேவை...”

“சரி விடு... படுக்கப் போகயில எதுக்கு உங்கிட்ட தர்க்கம் பண்ணிக்கிட்டு... ஆமா பெரியாண்ணன் பொண்டாட்டி செத்துப் போச்சாமேப்பா... “

“ஆமா... கேள்விப்பட்டேன்... நாளைக்கி பத்து மணிக்கு மேல போயிட்டு வருவோமா...?”

“சரி போவோம்... எனக்கு ஒறக்கம் வருது... “ என்றபடி பஞ்சநாதன் கிளம்ப, திண்ணையில் சாய்ந்து கைகளை தலைக்கு வைத்தபடி வானம் பார்த்தார்.  விண்மீன்கள் சில மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. மேகத்தோடு நிலவு கண்டொழிந்து விளையாடியது. ஒரு ஏரோப்பிளேன் சிவப்பு விளக்கு மினுங்க போய்க் கொண்டிருந்தது.


ப்பத்தாவின் கத்தலை பொருட்படுத்தாமல் உள்ளே சென்ற அபி, ‘கண்ணண்ணா... ‘ என்று அவனருகில் அமர்ந்து மற்றவர்களை ‘வாங்கண்ணா’ என்றாள்.

“வந்ததும் உன்னைத்தான் கேட்டேன் தெரியுமா..? நீ டியூசன் பொயிட்டேன்னு அம்மா சொன்னாங்க...”

“நான் எங்கே போனேன்... அம்மாதான் விரட்டி அடிச்சாங்க... ஆமா எங்க பாட்டி எதாச்சும் சொல்லியிருக்குமே...?” என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணும் சொல்லலை... “ வேகமாகச் சொன்னான் அம்பேத்கார்.

“ஏய்... போய் காலம்பிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிண்டு வாடி...” அவளை விரட்டினான் சாரதி.

“எங்கடா... அம்மு பொயிட்டாளா?” என சாரதியிடம் கேட்டாள் அபி.

“அவதான் போறா... இங்க உக்காந்து கதை அடிச்சிண்டிருந்டா... சும்மா வம்பிழுத்தேன்... முஞ்சியை தூக்கி வச்சிண்டு உள்ளாற பொயிட்டா... அம்மாவும் பின்னாலயே போயாச்சு...”

“எப்பப் பார்த்தாலும் அவ கூட சண்டை போட்டிண்டே இரு...” என்றபடி உள்ளே போனாள்.

“அதென்னடா... அம்மு..?” மெல்லக் கேட்டான் ஜாகீர்.

“எங்க வீட்ல எல்லாருக்கும் செல்லப் பேர் இருக்கு... அவளை எல்லாரும் அம்முதான் கூப்பிடுவாங்க...”

“அம்மு... கும்முன்னுல்ல இருக்கா...?” வேகமாகச் சொன்னார் பிரவீன்.

கண்ணன் முறைக்க, “சும்மா ஜாலிக்காகச் சொன்னேன்டா... அவங்க இனி அண்ணி... கேலியெல்லாம் பண்ணமாட்டேன்... ஆமா சாரதி... உனக்கென்னடா செல்லப் பேர்..?”

“நான் சொல்ல மாட்டேன்... அப்புறம் காலேசுல அதைச் சொல்லி கூப்பிடுவீங்க...”

“இல்ல சுபஸ்ரீ பார்த்தசாரதியை விட.... அம்முவோட உன்னோட செல்லப்பேரைச் சேர்த்தா நல்லா வருதான்னு பார்க்கத்தான் கேட்டேன்...”

“எம் பேரு பார்த்தாடா...? போதுமா..?”

“இதுல என்ன செல்லம் இருக்கு...? எம்பேரு அம்பேத்கார்... எங்க வீட்ல அம்பேத்துன்னு சுருக்கி கூப்பிடுவாங்க... நீங்க அம்பேத்.. அம்பேத்துன்னு சொல்லுவீங்க... பார்த்தசாரதி... பார்த்தா.... செல்லப் பேராம்...” எனச் சிரித்த அம்பேத்கார்.... “அம்மு பார்த்தா... ஆத்தி... சொன்னா வேற மாதிரியில்ல அர்த்தம் வருது...” என்று சிரிக்க எல்லாரும் சிரித்தனர்.

“ஏய் அபி... அங்க என்னடி பண்றே...? கோவில் பக்கம் போறோம்... வாறியா... இல்லையா..? வர்றதா இருந்தா அவளையும்  கூட்டிண்டு வேகமா வாடி...” சாரதி கத்த, எல்லாரும் எழுந்து வீதிக்கு வந்தனர்.

கொஞ்ச நேரத்தில் அபி வெளியில் வந்தாள். “எங்கடி அவ...? வரலையாமா...?” வருத்தத்தோடு கேட்டான் சாரதி.

“வரலைன்னு சொல்லிட்டா... நீ அவளை ரொம்பத்தான் படுத்துறே... பார்த்தா அங்கயும் போயி என்னைக் கேலி பண்ணிண்டு இருப்பான்... நான் எங்க ஆத்துக்கு போறேன்னுட்டா....” வருத்தமாய்ச் சொன்னாள் அபி.

“டேய்... ரொம்ப ஜாலியாப் பேசினாங்கடா... எதுக்குடா தேவையில்லாம கேலி பண்ணி அவங்களை கோபப்பட வச்சே.... போ... போய் நீ கூப்பிட்டா அவங்க வருவாங்க... போடா...” என்றான் கண்ணன்.
“அடப்போடா... ரொம்ப சீன் காட்டுறா... வாங்க நாம போவோம்...” என்று சாரதி நடக்க, மற்றவர்கள் அவன் பின்னே நடக்க... அபியும் கண்ணனும் சிரித்தபடி பேசிக்கொண்டு நடக்க....

சுபஸ்ரீ வேகமாக ஓடிவந்து அபியின் தோள் பிடித்துச் சிரித்து கண்ணனைப் பார்த்தாள்.

நன்றி : படத்தை வரைந்த ஓவியருக்கு... இணையம் கொடுத்தது.

(அடுத்த சனிக்கிழமை தொடரும்)
-‘பரிவை’ சே..குமார்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

தேர்தல் வருது தெய்வானை..!


தேர்தல் வருது...
தேர்தல் வருது...
சேதி தெரியுமா..?
தெய்வானை சேதி தெரியுமா...?

தேடி வருவாங்க...
தெய்வானை ஓடி வருவாங்க...
கூடி வருவாங்க
தெய்வானை நாடி வருவாங்க...

அம்மா தாயின்னு
கால்ல விழுவாங்க...
நம்மகூட களையும்
எடுப்பாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

குடிசைக்குள்ளாற
வந்து குந்தி
கஞ்சி குடிப்பாங்க...
நம்மகூட கல்லும்
சுமப்பாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

பக்கத்துல உக்காந்து
பாசத்தோடு
பேசுவாங்க...
நம்மகூட பல்லாங்குழியும்
ஆடுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

ரோடு... தண்ணி...
தேடிவரும்பாங்க...
உன்னை தெய்வம்ன்னு
சொல்லுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

இலவசம் தருவாங்க...
கைச் செலவுக்கு
காசும் கொடுப்பாங்க...
கௌரவம் பாக்காம
காலில் விழுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

எம்.எல்.ஏ.வும் எம்.பியும்
சேர்ந்து வருவாங்க...
நிறைய சேதி
சொல்லுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

கோரிக்கை எழுதி
கேட்பாங்க...
கொண்டு போய்
குப்பைத் தொட்டியில்
போடுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

பல்லை இளிப்பாங்க
பசங்க குண்டியும்
கழுவுவாங்க...
பாலுக்கு அழும்
குழந்தையை தோளில்
சுமப்பாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

பணத்துக்கும்
இலவசத்துக்கும்
மயங்கிக் கிடந்தது
போதும்  தெய்வானை
நாம் மதி கெட்டதும்
போதும் தெய்வானை..!

அடிமையாய் கிடந்து
போதும் தெய்வானை...
அடங்கிக் கிடந்ததும்
போதும் தெய்வானை...

பொய்யர்களை விரட்ட
பொதுவாய் சிந்திப்போம்
வாடி தெய்வானை...
வேலு நாச்சியாராய்
வீறு கொண்டு
விரட்டியடிப்போம்
வாடி தெய்வானை....
'பரிவை' சே.குமார்

புதன், 17 பிப்ரவரி, 2016

மனசு பேசுகிறது : வந்தவன் தமிழன்னா...


ன்று குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. மாலை அலுவலகத்தில் இருந்து வேகவேகமாக நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என்னருகில் வந்து "ஒரு நிமிடம்... நீங்க மலையாளியா?" அப்படின்னு கேட்டார். "இல்ல தமிழ்..." என்றதும் "தமிழா... நானும் தமிழ்தான்..." என்றவர் "இங்க பாஸ்போர்ட் ரினிவல் பண்ணி வாங்குற இடம் எங்க இருக்கு" என்றார். "இங்கயா... பாஸ்போர்ட் ரினிவல் என்றால் போஸ்ட் ஆபீஸ்ல போயி வாங்கணும்... இல்லேன்னா உங்க ஆபீஸ்க்கு வரும்... அங்க போயில்ல வாங்கணும்... இந்த ஏரியாவுல போஸ்ட் ஆபீஸ் இல்லையே" என்றேன். "இல்ல எங்க இந்திக்கார டிரைவர் இங்க இறக்கி விட்டுட்டு அந்தப் பக்கம் இருக்கு போய் வாங்கிக்கன்னு சொல்லிட்டுப் போனான்" என்றார். "எங்க இருந்து வாறீங்க...?" என்றேன். "நான் இருக்கது பெத்தாசயீது... போட்ல போயி மீன் பிடிக்கிற வேலை... நாலைந்து பேர் சேர்ந்து கடலுக்குள்ள போவோம்... பத்து வருசம் முடிஞ்சிருச்சு... பாஸ்போர்ட் ரினிவலுக்கு கொடுத்தேன்" என்றார். "நல்லாக் கேட்டீங்களா? இங்கதானா...?" என்றதும் ஒரு நம்பருக்கு போன் செய்து 'இவரும் எங்க டிரைவர்தான்... மலையாளி... தமிழ் பேசுவார்... எனக்கு இங்க இடமெல்லாம் தெரியாது... கொஞ்சம் விசாரிங்க" என்றார். நானும் அந்த டிரைவருடன் பேச, "இப்ப எவட இருக்கு?" என்றான். "அல்மசூத் ஆட்டோ மொபைல்ஸ்கிட்ட சிக்னல் முன்னாடி நிக்கிறார்..." என்றதும் "அப்படியெ ஸ்ட்ரைட்டா வரச்சொல்லு... சிக்னல்தாண்டி இருக்கிற பஸ் ஸ்டாப்புக்கு வரச்சொல்லு நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" என்றான். "சரி வாங்க போகலாம்... நானும் அந்தப் பக்கம்தான் போறேன்..." என அவருடன் பேசியபடி வர, ஊர் இராமேஸ்வரம்... மீன் பிடிக்கிறதுதான் எங்க தொழில்... அதனால இங்கயும் அது பிரச்சினையில்லாம இருக்கு..." என்றார். "ம்... நான் தேவகோட்டை" என்றேன். "அப்படியா... எனக்கு இந்த ஏரியா தெரியாது... கொண்டாந்து இறக்கிவிட்டுட்டு வாங்கிக்கிட்டு வான்னு சொல்லிட்டுப் பொயிட்டான்... நீங்க வந்தஹ்டு நல்லதாப் போச்சு" என்றார். "உங்களுக்கு இங்க பக்கத்துல ஆபீஸ் இருக்கும் போல அங்கதான் வாங்க வேண்டி வரும்.." என்றேன். "தெரியலைங்க... மீன் பிடிக்கிறோம்... எங்களுக்கு எது ஆபீஸ்... அது எங்க இருக்குன்னு எல்லாம் தெரியாது..." என்றார். சிக்னல் கடந்து அவன் சொன்ன பஸ்ஸ்டாப் அருகில் வந்து "இங்கதாங்க வரச்சொன்னான்... இங்க நில்லுங்க வந்து பிக்கப் பண்ணிப்பான்" என்றபடி நகர்ந்தேன். "நான் அவனைக் கூப்பிட்டு எப்படிப் பேசி... நீங்களே மறுபடியும் அதே நம்பர்ல ஒரு வார்த்தை கேளுங்களேன்..." என்றார். மீண்டும் மலையாளிக்கு போன்... ரிங்க் போனது... "அண்ணா... எங்கேருக்கு...?" என்றான். "ஆளு இவட நீ சொன்ன பஸ் ஸ்டாண்டிலானு... நீ பிக்கப் செய்யுமோ... அவருக்கு ஏரியா அறிஞ்சிட்டில்லா..." என்றேன். "எவடன்னு ஸ்தல் பரை..." "ஏ... நீ பறைஞ்ச ஸ்தலமான்னு... நேஷனல் பெயிண்ட் ஷாப் இருக்குல்ல... அவடயானு..." என்றதும் "அண்ணா... இவட நோக்கு... யான் கை ஆட்டுது பாரு... கண்டுட்டுண்டா..." என்றான். நானும் அவனைப் பார்த்து கையை அசைத்து "ஆளு அவட வரும்... ஒகே" அப்படின்னு சொல்லி போனைக் கட் பண்ணினேன். "அந்தா நிக்கிறான் பாருங்க... அவந்தான் உங்க மலையாளி டிரைவர்... அவன் நிக்கிற கடைதான் உங்களுக்கு விசா போட்டிருக்கும் கடைபோல... அங்கதான் பாஸ்போர்ட் இருக்கும்... போய் வாங்கிக்கிட்டு பத்திரமாய் போய் சேருங்க..." என்று சொல்ல, "எனக்கு இவ்வளவு தூரம் உதவியதற்கு ரொம்ப நன்றிங்க..." என்றபடி ஓடினார். அந்த மலையாளி சொன்ன கடை சிக்னலுக்கு அருகில் இருந்தது. நானும் என் வழியில் நடந்தேன்... நானும் அவர் பெயரைக் கேட்கவில்லை... அவரும் என் பெயரைக் கேட்கவில்லை... தமிழன் என்ற உணர்வு மட்டுமே... # இதை முகநூலில் பகிரலாம் என அங்குதான் எழுதினேன்... ரொம்ப நீளமாப் போனதால் இங்கும் பதிவாக்கிட்டேன்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 15 பிப்ரவரி, 2016

மதிப்பெண்களை நோக்கி...

ட்சங்களில் செலவு பண்ணி படித்தால் நாமக்கல்லில்தான் படிக்கணும் என்று சொல்லும் பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். 'எங்க பள்ளியில் 400 மார்க்குக்கு மேல் இருந்தால்தான் 11வது வகுப்பில் சேர்த்துக் கொள்வோம்' என்று சொல்லும் தலைமை ஆசிரியர்களையும் பார்த்திருக்கிறோம். '480 வரும்ன்னு பார்த்தேன்... 465 மார்க்தான் வந்திருக்கு' என்று புலம்பும் மாணாக்கர்களையும் பார்த்திருக்கிறோம். இவர்கள் எல்லாமே மதிப்பெண்களை மட்டுமே குறியாகக் கொண்டு அதன் பின்னே ஓடும் கூட்டம்தான். இவர்களால் என்ன பயன்..? இவர்கள் இப்படி இருப்பது சரிதானா..? 

எங்க குட்டீஸ் நீண்ட தூரம் பயணித்து படித்து வந்தார்கள். பள்ளியில் சரியான ஆசிரியர்கள் இல்லாது பிள்ளைகளின் படிப்போ ஏனோ தானோ என போய்க் கொண்டிருக்க, சென்ற வருடம் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் ஒரு பள்ளியில் சேர்ப்பதற்காக, தலைமை ஆசிரியர் அறையில் அமர்ந்திருந்தோம். அப்போது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து மாவட்டத்தில் முதலிடத்தை மற்றொரு பள்ளியுடன் பங்கு போட்டிருந்த நேரம் அது. அங்கு படித்த மாணவர்களுக்கு பதினோராம் வகுப்பில் சேர முன்னுரிமை கொடுக்கும் பள்ளிதான் அது என்றாலும், இப்பத்தான் 400களும் 450களும் ரொம்ப சுலபமான இலக்காகி விட்டதே... ஒரு மாணவன் தன் தாயுடன் வந்தான். அவன் எடுத்திருந்தது 350க்கு கீழ்தான்... அவர்கள் கேட்டது ஒரு பிரிவு... தலைமை ஆசிரியர் சொன்னதோ மற்றொரு பிரிவு. அவனின் அம்மா 'இவன் நல்லா படிப்பானுங்க... பரிட்சை அப்போ உடம்பு முடியலை... அதான் மார்க் குறைஞ்சிருச்சு...' என்று கெஞ்ச, 'முதல் மதிப்பெண் வாங்கியிருக்கிற பெண் இவன் கிளாஸ்தான்...  அவளும் உடல் நலமில்லாததோடுதான் எழுதினாள்... மார்க் வாங்கலை...' என்று சொல்லி இந்தப் பிரிவுன்னா சேருங்க... இல்லேன்னா டிசியை வாங்கிட்டுப் போங்க என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

மற்றொரு பள்ளி... இன்றைய நிலையில் மக்கள் அதிகம் விரும்பும் பள்ளி... நாமக்கல் பள்ளிகளுக்கு நிகரான பள்ளி... காரைக்குடியில் இருக்கிறது. இங்கு 10ம் வகுப்பு ரெண்டு வருசம்... 12ம் வகுப்பு ரெண்டு வருசம்தான். இவர்கள் மட்டுமல்ல பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இப்படித்தான் நடக்கிறது. இது அரசுக்குத் தெரிந்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. பத்தாம் வகுப்பில் 485 மதிப்பெண் பெற்ற எங்க சொந்தக்காரப் பெண்ணுக்கு கட்டணச் சலுகையுடன் அந்தப் பள்ளியில் 11ம் வகுப்பில் இடம் கிடைத்தது. முதல் வருடத்தின் முடிவில் மாணவர்களின் படிப்பை வைத்து தரம் பிரிக்கப்பட்டார்கள். 'ஏ' பிரிவில் 90%க்கு மேல் வாங்கும் மாணவர்கள்... 'பி' பிரிவு 80%... இப்படியாக 50% க்குள் வாங்கும் மாணவர்கள் கடைசிப் பிரிவில் வைக்கப்பட்டார்கள். இது வருடா வருடம் நிகழும் நிகழ்வுதானாம். முதல் இரண்டு பிரிவு மாணவர்களை உரு ஏற்றி மாவட்டத்தில் முதல் இடத்தை பிடிக்க வைத்து கடைசிப் பிரிவில் இருக்கும் மாணவர்கள் பாஸ் பண்ணினாலே போது 100% தேர்ச்சி பெற்ற பள்ளி வரிசையில் இடம் பிடித்துவிடலாம் என்ற எண்ணம்தான் அவர்களின் இந்தப் பிரிவினைக்கு காரணம். 

இதில் அந்தப் பெண் வருத்தத்தோடு சொன்ன விஷயம் என்னவென்றால் எல்லாரும் அன்பா பழகிட்டு இப்ப நான் ஏ கிளாஸ்லயும் என்னோட டியரஸ்ட் பிரண்ட் ஈ கிளாஸ்லயும் இருக்கோம். நாங்க அவங்க கூட பேசக்கூடாதாம். ரொம்பக் கொடுமையா இருக்கு... பார்த்துச் சிரிச்சாக்கூட 'உன்னோட வேலை படிக்கிறது... அவளுக்கு பாஸானாப் போதும் எதுக்கு அவகிட்ட பேசுறே...' என்று ஆசிரியர்கள் சத்தம் போடுகிறார்கள். ஏன்டா இந்தப் பள்ளியில் சேர்ந்தோம்ன்னு இருக்கு... அவங்களைப் பார்க்கும் போது பாவமாய் இருக்கு என்று சொன்னது. தாங்கள் சம்பாதிக்க கல்வி கூடத்துக்குள் ஏற்றத் தாழ்வுகளை பழகிக் கொடுக்கும் இந்தப் பாதகர்களால் கல்வி எப்படி சிறப்பானதாக அமையும். சொல்லுங்கள்.

தேவகோட்டைக்கு அருகில் ஆறாவயலில் இருக்கும் ஒரு அரசு உயர்நிலைப் பள்ளி வருடா வருடம் 100% தேர்ச்சியுடன் மிகச் சிறந்த மாணவர்களை வெளியில் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த தனியார் பள்ளிகளுடன் இவர்கள் போட்டியிடுவதும் இல்லை... இவர்களைப் போல் இரண்டு வருட வகுப்புக்கள் நடத்துவதும் இல்லை... அரசுப் பள்ளிகளில் மிகச் சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள்... நல்ல தேர்ச்சி விகிதத்தையும் கொடுக்கிறார்கள். நாம்தான் ஆங்கில மோகத்தில் அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து தனியார் வசம் போகிறோம். நானும் அப்படித்தான்... என் பிள்ளைகளும் தனியார் பள்ளியில்தான் படிக்கிறார்கள். 

இப்போதெல்லாம் அரசுப் பள்ளியில் படிக்கட்டும் என்று நாம் நினைத்தாலும் குடும்பத்தில் யாரும் விரும்புவதில்லை. இதோ விஷாலைக் கூட ஊட்டியில் சேர்க்க வேண்டும் என்று மாமா சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார். நாந்தான் இங்கிருந்து அங்கா... அவன் வீட்டுக்குப் பக்கத்தில் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் இதே பள்ளியில் 12வது வரை படிக்கலாமே... பிறகெதற்கு ஊட்டி எல்லாம் என்று சொல்லி வருகிறேன். எனக்கு கிறிஸ்டியன் பள்ளிகளின் நடைமுறைகள் ரொம்பப் பிடிக்கும். நான் படித்த தே பிரித்தோவில் கூட நாங்கள் படிக்கும் போது மாணவர்களை குழுவாய் பிரித்து படிக்க வைப்பார்கள். மூன்று நல்லாப் படிக்கும் மாணவர்களுடன் மூன்று படிப்பு ஏறாத மாணவர்களை குழுவாக்கி படிக்க வைத்து வெற்றி பெற வைப்பார்கள். இப்போது எப்படி என்று தெரியவில்லை.

என்னடா இவன் பள்ளிகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறான் என்று யோசிக்கிறீர்கள்தானே... அது ஒண்ணுமில்லைங்க... நம்ம முத்து நிலவன் ஐயாவின் 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!' என்ற புத்தகத்தை வாசித்தேன். அதன் தாக்கம்தான் இது... மார்க்கை நோக்கி ஏரில் பூட்டப்பட்ட மாணவர்களையும் நமது கல்வி முறையையும் குறித்த, பல்வேறு பத்திரிக்கைகள் மற்றும் வலையில் வெளிவந்த 18 கட்டுரைகளின் தொகுப்புத்தான் இந்தப் புத்தகம். மிக அருமையான கட்டுரைகள்... கல்வி நிலை குறித்து எவ்வளவு விளக்கங்கள்... எத்தனை அழகான கட்டுரைகள்... உண்மையிலேயே ஐயாவின் சிந்தனையில் பூத்திருக்கும் இத்தொகுப்பு மிகச் சிறப்பான தொகுப்புத்தான்... என்னமாய் எழுதியிருக்கிறார்... உண்மையில் அவரின் உழைப்பு என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போல் படிப்பு மட்டுமே வாழ்க்கையாகாது... மனிதர்களைப் படித்தால்தான் உலகில் உன்னால் வாழ முடியும் என மகளுக்கு கடிதத்தில் சொல்லும் கட்டுரையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பாக இருக்கிறது. மெக்காலே கல்வி திட்டத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து கல்வித் துறையில் இருப்பவர்கள் தவிர்த்து நாமெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. அது குறித்து... அதன் விளைவுகள் குறித்து அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார். மேலும் சமச்சீர் கல்வி குறித்து... அதனாலான நன்மைகள் குறித்து...  தனியார் பள்ளி நிர்வாகிகள் அதை எதிர்க்க காரணம் என்ன என்பது குறித்து... பாடநூல் எழுதும் ஆசியர்களின் செயல் குறித்து... பேப்பர் திருத்தும் நிலை குறித்து... அதில் அரசின் செயல்பாடு குறித்து... இப்படி நிறைய... நிறைய... நிறைய விஷயங்களை நிறைவாய்ப் பேசியிருக்கிறது இந்தப் புத்தகம்.

ஒரு திருக்குறள் மனப்பாடம் பண்ண முடியாத மாணவனால் ஒரு சினிமாப் பாடலை முழுமையாக மனப்பாடம் பண்ணி பாட முடிகிறதே அது எப்படி.? மாணவர்கள் மத்தியில் எதையெல்லாம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்... எப்படி அவர்களை வளர்க்க வேண்டும்.., அவர்களின் வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கோடு பெற்றோரின் பங்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் கட்டுரைகளில் எழுதியிருக்கிறார் நம்ம முத்து நிலவன் ஐயா.


புத்தகத்தில் இருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு...

'ஓடி விளையாடு பாப்பா' என்ற பாரதி பாட்டை ஓப்பிக்காமல் - விளையாடப் போன குழந்தைக்குக் கடுமையான தண்டனை தரும் நமது பள்ளிக் கூடங்களால் மன அழுத்தம் வராதா என்ன? அந்த அழுத்தம் கட்டாயப்படுத்தி சிரித்துக்கூடப் பேசாத ஆசிரியர்களால் அதிகமாகாதா என்ன?

இன்ஜினியரிங் படிப்பைவிட எல்.கே.ஜி.க்கு கூடுதல் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளின் கல்விச் சாதனையெல்லாம் சாதனை - மாணவர்களைக் காட்டி நடத்தும் விளம்பர வேலையின்றி வேறென்ன...?

ஆட்சி மாறினால், தலைவர் மாறுவது அரசியலுக்குப் பொருந்தலாம். பாடம் வைக்கப்படும், போது தலைமுறை கடந்த தலைவர்களையே பாடநூலில் இடம் பெறச் செய்ய வேண்டும் எனும் அக்கறை வேண்டாமா?

தமிழால் என்ன பயன்? என்று கேட்பதும், தாயால் என்ன பயன்? என்று கேட்பதும் ஒன்றே அல்லவா? இது நம் தமிழர்களுக்கு எப்போது புரியப் போகிறது? இந்த அலட்சியம் பள்ளி மாணவர்களிடம் வளர்வது எவ்வளவு ஆபத்து?

ஜெயகாந்தன் எட்டாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். கண்ணதாசனும் அவ்வளவுதான்,  கந்தர்வன் பள்ளிப்படிப்பு மட்டும்தான்! சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி  3 ஆம் வகுப்புத்தானாம்! ஆனால் இவர்கள் எழுத்துக்களை ஆய்வு செய்த படிப்பாளிகள் பல நூறு பேர் முனைவர் (டாக்டர்) பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் முனைவர் படிப்பைவிட இந்தச் சிந்தனையாளர் தம் அறிவு மனிதர்களைப் பற்றியதாக இருக்கிறது என்பதல்லவா பொருள்?

ஆங்கிலேயர் ஆட்சியில் கூட 13 வயதில்தான் ஆங்கிலம் அறிமுகமானது, தமிழர் ஆட்சியிலோ 3 வயதிலேயே அறிமுகப்படுத்துகிறோம்! அரசனை விஞ்சிய அரசு விசுவாசம்!

கிராமங்களில் அதிலும் குறிப்பாக ஏழை உழைப்பாளி மக்களிடம்தான் இன்னும் நம் பண்பாட்டு வேர்கள் அறுபடாமல் இருக்கின்றன என்பது, என் மாணவப் பிள்ளைகளால் நான் கற்றுணர்ந்த கல்வி!

இப்படி இன்னும் நிறைய அடுக்கலாம்... அரிச்சந்திரன் குறித்து... கண்ணகி குறித்து... இன்னும் புராணங்கள் எல்லாம் பற்றிப் பேசியிருக்கும் நிலவன் ஐயா, பாடங்களில் பெரியார் குறித்து... இலக்கணம் குறித்து எல்லாம் மிகச் சிறப்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மேலும் தனது மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று வந்ததையும் அவர்கள் நடந்து கொண்ட விதத்தையும் சுவராஸ்யமான கட்டுரை ஆக்கியிருக்கிறார்கள்.  

தமிழ் குறித்து வாயார பேசும் நாம், அதன் துறைசார் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியதை விடுத்து 'செயல் மறந்து' வாழ்த்திக் கொண்டிருக்கிறோம். சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்திய நாம் செயல் புரிந்து வாழ்த்தியிருக்கலாமே என்கிறார். ஆஹா... நம் தமிழ்த்தாய் வாழ்த்தின் செயல் மறந்த வரிகள் குறித்து ஐயாவின் சிந்தனையைப் பாருங்கள்.

சிலாகித்து எழுதினால் பதிவின் நீளம் பார்க்காது எழுதிக் கொண்டே போவேன்... இவனைக் கட்டுரை எழுதச் சொன்னா... தேர்தல் அறிக்கை மாதிரி நீ....ள...மா...க... எழுதுவானேன்னு நினைப்பீங்க. தேர்தல் அறிக்கை ஏமாற்று வேலை... இது என்னைக் கவர்ந்த எழுத்தின் வேலை... இரண்டுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கு. பொறுமையாகப் படித்த அனைவருக்கும் நன்றி.

அப்புறம் நண்பர்களே... யாருக்கேனும் புத்தகம் பரிசு கொடுப்பதென்றால் 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!' என்பது உங்களின் முதல் சாய்ஸ்சாக இருக்கட்டும்.

எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் என பண்முகப் படைப்பாளி ஐயாவின் கட்டுரைகளை விமர்சனம் செய்யும் அளவுக்கு நானெல்லாம் வளரவில்லை... அந்த எழுத்து என்னை ஈர்த்தது அதற்காக எழுதினேன்... அவ்வளவே.


முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! - ஆசிரியர். நா.முத்து நிலவன் - அகரம் வெளியீடு - விலை : 120.

முத்து நிலவன் ஐயா அவர்கள் வலைத்தளத்தில் மிகவும் பிரபலம்... அவரின் வலைத் தளத்தை வாசிக்க...


சொல்ல மறந்துட்டேனே... யான் பெற்ற இந்த இன்பம் குமாரும் பெறட்டும் என தான் படிக்கும் புத்தகங்களை எல்லாம் எனக்கு கொண்டு வந்து கொடுத்து வாசிக்கச் சொல்லும் அண்ணன் கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

உன் பேரைச் சொல்லும் போதே...


'மாப்ள அவ உன்னோட நெருங்கிப் பழகுறா... உங்கிட்ட ஒருநாள் கூட பேசாம இருந்ததில்லை... எனக்கென்னவோ அவ உன்னை விரும்புறான்னு நினைக்கிறேன்... பேசாம நாளைக்கு காதலர் தினத்துல புரப்போஸ் பண்ணிப் பாருடா' என்று நண்பன் ஜவகர் சொன்னதை மீண்டும் மீண்டும் நினைவில் ஓடவிட்டபடி 'உன் பேரைச் சொல்லும் போதே...' பாடலை ரசித்துக் கொண்டிருந்தான் சுபாஷ்.

சுபாஷூம் ஜவகரும் ஒரே வீதிதான்... இருவரின் வீட்டுக்கும் இடையில் மூன்று வீடுகள்தான்... முதல் வகுப்பில் இருந்து இருவரும் சேர்ந்தே படிக்கிறார்கள். எட்டாவது வரை அன்னாசி அரசு நடுநிலைப்பள்ளியில் படித்தவர்கள். பின்னர் ஒன்பதாம் வகுப்பில் அந்தோணி மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்கள். இப்ப இருவரும் பனிரெண்டாம் வகுப்பு... இரண்டுமே இருபாலர் பள்ளிதான். ஜவகர் எப்போதும் இவர்கள் வீட்டில்தான் கிடப்பான். இன்று பள்ளியில் இருந்து வரும்போதுதான் இப்படி ஒரு சின்ன நெருப்பை பற்ற வைத்துவிட்டுச் சென்றான். அது சுபாஷூக்குள் பிடித்து எரிய, கணிப்பொறி திரையில் அஞ்சலி மீண்டும் மீண்டும் 'உன் பேரைச் சொல்லும் போதே'க்கு ஆடிக் கொண்டிருந்தாள்.

'இவன் சொல்றான்னு இறங்கலாமா..?' என்று யோசித்தான். அதற்கும் காரணம் இருக்கு... இவனுக எட்டாம் வகுப்பில் படிக்கும் போது கூடப் படித்த சுவாதி, அதுவும் இவனுக வீதியிலதான் இருந்தது. அதனால் இவனுககிட்ட நல்லாப் பேசும். 'டேய்... இன்னைக்கு எங்கப்பா கடலை மிட்டாய் வாங்கியாந்தாருடா... இந்தாங்கடா'ன்னு இவனுகளுக்கு கொடுக்கும். எதாயிருந்தாலும் இவனுககிட்ட சொல்லும். நாளைக்கு படத்துக்குப் போறோம்ன்னு இன்னைக்கே சொல்லிச் செல்லும். அது எந்தப் படத்துக்குப் போகுதுன்னு பார்த்து இவனுகளும் அங்க போயிருவானுங்க... அதுக்கும் சந்தோஷமா இருக்கும். இடைவேளையில தின்னுறதுக்கு வாங்கும் போது அம்மாக்கிட்ட சொல்லி இவனுகளுக்கும் பாப்கார்ன் வாங்கிக் கொடுக்கும். இதெல்லாம் இவனுக மண்டைக்குள்ள வேற மாதிரி சுத்த ஆரம்பிச்சிருச்சு... எல்லாம் சினிமாவும் டிவியும் கத்துக் கொடுக்கிறதுதானே... 

'டேய் அந்தப்புள்ள நம்மள விரும்புதுடா... அதுக்கு லவ் லெட்டர் எழுதுவோமுடா'ன்னு ஜவகர் ஏத்திவிட, இவனுகளும் காயே... கனியேன்னு எல்லாம் கிறுக்கி ரெண்டு பேரு பேரையும் எழுதி சுவாதிக்கிட்ட கொடுத்துட்டானுங்க... என்னடான்னு வாங்கிப் பார்த்த புள்ள... காய்.. கனியெல்லாம் படிச்சிட்டு எதுக்கு எழுதியிருக்கானுங்கன்னு யோசிக்க... 'அறியாத மனசு... புரியாத வயசு...' பாட்டு மனசுல வந்து சம்மட்டி அடிக்க 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சிருச்சு. இவனுகளுக்கு என்ன செய்யிறதுன்னு தெரியலை. ஓடிடலாம்ன்னு பார்த்தா கரெக்டா எட்டாப்பு சார் ஏழுமலை அங்க வந்துட்டாரு... எதுக்கு அழுகிறேன்னு கேட்க, அது லெட்டரை அவருக்கிட்ட கொடுத்திருச்சு... வாங்கி வாசிச்சாரு... எழுத்துப் பிழையும் அடித்தலும் திருத்தலுமாய் ஒரு லவ் லெட்டர்... கீழ ரெண்டு பேரு பேரும் வேற.... சொல்லவா வேணும்..?

சுவாதியை நீ போன்னு சொல்லிட்டு ரெண்டு பேரு காதையும் பிடிச்சி கிள்ளியே பொத்தல் போட்டவரு... இந்த வயசுல காதல்... அதுவும் ஒரு புள்ளைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து லெட்டர் எழுதுறீங்க... படிங்கடான்னு சொன்னா... இதுதான் பண்ணுறீங்களா... அப்படியே இன்னும் மூணு பேரைச் சேர்த்து அஞ்சு பேரா எழுதியிருந்தா நீங்க பாண்டவர்களாவும் அந்த புள்ள பாஞ்சாலியாவும் ஆக்கியிருக்கலாம்... மூதேவிகளான்னு சொல்லி, அவரோட பேவரேட்டே புளியங்குச்சிதான்... அதால விளாசு விளாசுன்னு விளாசி...அன்னைக்குப் பூராம் முட்டி போட வச்சிட்டாரு... அதுக்கப்புறம் சுவாதி இவனுகளை திரும்பிக்கூட பார்ப்பதில்லை... அப்பா வாங்கியாந்த பலகாரம் எல்லாம் கொடுக்கலை, சினிமாவுக்கு போறதைச் சொல்லலை, பாப்கார்னும் கிடைக்கலை... பத்தாவது முடிச்சதும் அவங்க அப்பாவுக்கு வேலை மாறிடுச்சுன்னு மதுரைப் பக்கம் போயிருச்சு. அந்த அடியை நினைச்சாலே இன்னும் அவனுக்கு வலிக்கும்... அதுக்கப்புறம் சில அடி வாங்கியிருந்ததாலும் மறுபடியும் அடி வாங்க வச்சிட்டான்னா... அதனால ரொம்ப யோசிச்சான்... எந்த முடிவுக்கும் வர முடியாம திணறினான்.

கணிப்பொறி திரையில் அஞ்சலி மீண்டும் மீண்டும் ஆடினாள். "என்னடா லவ்வு கிவ்வு வந்திருச்சா... இந்தப்பாட்டே இருபது தடவைக்கும் மேல ஓடுது..." அவன் பின்னே வந்து மெல்லக் கேட்டாள் கல்லூரியில் படிக்கும் அக்கா புவனா.

"ஆமா அஞ்சலியைக் காதலிக்கிறேன்... நீ யாரை சூர்யாவையா..?" என்று கேட்டதும் "ஆளைப்பாரு... படிக்கிறது பிளஸ்டூ... அதுக்குள்ள லவ்வைப் பத்திப் பேசுது... இதெல்லாம் உருப்பட..." என திட்டியவள் தான் கேட்டதால்தானே அவன் பேசினான் என்பதை மறந்து "அம்மா... உம்மகன் அஞ்சலியை லவ் பண்றானாம்... அவ இப்ப ஆந்திராப் பக்கம் பொயிட்டா... நீ அங்க போயி பேசி முடிச்சிட்டு வா" என்று கத்தினாள்.

"ஆமாம்மா... அப்படியே சென்னையில இறங்கி சூர்யா வீட்டுக்குப் போயி ஜோதிகாவை டைவர்ஸ் பண்ணச் சொல்லு... நம்ம வீட்டு அனார்கலி சூர்யாவை லவ் பண்றாளாம்" இவனும் பதிலுக்கு கத்தினான்.

"மூதேவிகளா... படிக்கிறதை விட்டுட்டு லவ்வு கிவ்வுன்னு பேசிக்கிட்டா இருக்கீக... வந்தேன்னா வெளக்குமாத்துக் கட்டை பிஞ்சு போயிரும்..." என அம்மா அடுப்படியில் இருந்து கத்த, புவனா அவனுக்கு பழிப்புக்காட்டி விட்டு அங்கிருந்து அகன்றாள்.

'ஜவகர் சொன்னது மாதிரி அவ என்னைத்தான் விரும்புறாளா..? சொன்னா ஏத்துப்பாளா...? இல்ல ஊரைக் கூட்டி பிரச்சினை ஆக்கிடுவாளா...?' என்று யோசித்துக் கொண்டிருந்தான். 'புரப்போஸ் பண்ணலாம்... ஒகேன்னா ஓகே... இல்லேன்னா பிரண்டா இருந்துப்போம்...' என்று நினைத்தான். இப்படித்தான் ஒன்பதாவதில் உமாக்கிட்ட காதலிக்கிறேன்னு சொல்லி, அவ போடான்னு மறுக்க ஓகே நாம பிரண்ட்ஸ் அப்படின்னு சொன்னான். பத்தாவதில் பானுக்கிட்ட சொல்லி அவ கொடுத்த அறைக்கு அப்புறமும் அவளோட பிரண்டா இருக்கிறான். பதினோராவதுல ஜெனிபர்கிட்ட சொல்ல, அவ அண்ணன் வந்து உதைச்சிட்டுப் போனான். இவன் மட்டும்தான் உதை வாங்குவான்னு இல்லை... எல்லா உதையிலயும் ஜவகருக்கும் பங்கு இருக்கும். அதனால கூட அவன் இவனை மாட்டிவிடப் பார்க்கலாமேன்னும் யோசிச்சான். 'சேச்சே... அவன் என்னோட நண்பேன்டா...' அப்படின்னு மனசைத் தேத்திக்கிட்டு பேப்பரை எடுத்தான். கணிப்பொறி திரையில் அஞ்சலி ஆடிக் கொண்டிருந்தாள். இவன் 'அன்பே அஞ்சலி' அப்படின்னு ஆரம்பித்தான்.

றுநாள் காலை...

"ஹாய்... நான் உன்னைப் பார்க்கணுமே..?" என அஞ்சலிக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினான். 'இன்னைக்கா?' என உடனடியாக பதில் செய்தி வந்தது. அப்போது அவனின் அப்பா பார்த்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி செய்தியில் 'இன்று காதலர்கள் கோவிலுக்கு வந்தால் பிடித்து தாலி கட்டி வைப்போம்' என ஒரு அமைப்பு சொன்னதாகச் சொல்லவும் 'இவனுகளுக்கு வேற வேலை இல்லை' என்றார் அப்பா.

'ஆமா... எவனோட பிள்ளைகளுக்கோ இவனுக கல்யாணம் பண்ணி வைப்பானுங்களாம்... இதே இவனுக பிள்ளைகளா இருந்து மாட்டினா... வீட்டுக்கு இழுத்துக்கிட்டு பொயிட்டு அது கூட வந்ததை அடிச்சித் தூக்கி தண்டவாளத்துல போட்டுருவானுங்க... ஏன் அதுகளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதானே...' என்று முணங்கியபடி "ஆமா... முக்கியமாப் பேசணும்..." என அஞ்சலிக்கு செய்தி அனுப்பினான்.

"என்ன அப்படி முக்கியம்..? சும்மா சொல்லேன்..." இது அஞ்சலி.

"நேர்ல பேசணும்..." 

"அப்படியா... ஈவ்னிங் பார்க்கலாமா..? இன்னைக்கு லவ்வர்ஸ் டே..." அங்கிட்டு இருந்து பதில் வர, 'அதுக்குத்தானேடி பேசணுங்கிறேன்'னு முணங்கியபடி "அதுதான் நான் இன்னைக்கு பேசணுங்கிறேன்..." என டைப்பினான்.

"நாங்கூட இன்னைக்குத்தான் எனக்குப் பிடித்தவர்கிட்ட புரபோஸ் பண்ணப் போறேன்... காலையில அவரை பூங்காவுல பாக்குறதா ராத்திரி அவருக்கு செய்தி அனுப்பினேன்... ஓகேன்னு சொல்லியிருக்கார்... சக்சஸ் ஆகும்ன்னு நினைக்கிறேன்... நீயும் என்னோட பிரண்ட்தானே... என்னோட காதல் சக்ஸஸாகனும்ன்னு வேண்டிக்கடா... ப்ளீஸ்... ஆள் யார்ங்கிறது இப்போதைக்கு சஸ்பென்ஸ்... ஒகே ஆனதும் உங்கிட்டதான் முதல்ல சொல்லுவேன்..."

அந்தச் செய்தி பார்த்ததும் அவனுக்கு இடி விழுந்தது போல் ஆனது... 'எவன்டா அவன்... நம்ம லைன்ல கிராஸ் ஆனது... நானும் ஜவகரும்தான் இவகிட்ட பிரியாப் பேசுவோம். மாப்ளயா இருந்தா இந்நேரம் போன் பண்ணியிருப்பானே... நாங்க இல்லாம இடையில வந்த அவன் யாரா இருப்பான்... ம்.... எப்படியோ நமக்கு அஞ்சாவதும் போச்சு... இனி காதலும் வேண்டாம்... கத்திரிக்காயும் வேண்டாம்...' என முடிவெடுத்தபடி "ஓகே" என அனுப்பிவிட்டு மொபைலை சுவிட்ஸ் ஆப் பண்ணி வைத்துவிட்டு குளிக்கப் போனான்.

"அம்மா... நான் ஜவகர் வீட்டு வரைக்கும் பொயிட்டு வாறேன்..." என்றான்.

"என்னடா எழுதுன லெட்டரை கிழிச்சிட்டே... புட்டுக்கிச்சா" என்று சிரித்த அக்கா, வேகமாக ஸ்கூட்டியை எடுத்தாள். 'போ உனக்கெல்லாம் எவனோ ஒருத்தன் மாட்டியிருக்கான்... நீங்கள்லாம் இன்னைக்கு லவ்வர்ஸ்டே கொண்டாடுறீங்க... வெட்டிங்க்டே இவன் கூட கொண்டாடுவீங்களான்னு பாப்போம்... அப்ப எந்த இளிச்சவாயன் வந்து மாட்டுறானோ...' என்று மனசுக்குள் திட்டியபடி ஜவகர் வீட்டை அடைந்தான்.

"யாரோ முக்கியமான பிரண்டைப் பார்க்கப் போறேன்னு ஜவா டிப்டாப்பா கிளம்பிப் போயிருக்கான்... உனக்குத் தெரியாதா..? உங்கிட்ட சொல்லாமயா போனான்... உன்னை விட்டுட்டு அவனுக்கு மட்டும் யாரு பிரண்ட்... சரி...உள்ள வா சுபாஷ்" என்றாள் ஜவகரின் தங்கை காவ்யா.

எதுவும் பேசாமல் உள்ளே போய் சோபாவில் அமர்ந்தான். அஞ்சலி சொன்னதும் ஜவகர் போனதும் ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தம் ஆக, 'அடப்பாவி எங்கிட்ட சொல்லாம மறைச்சிட்டியேடா...' என மனசுக்குள்ளேயே நண்பனைத் திட்டினான். 

"இந்தா காபி... நானே போட்டது... அம்மா, அப்பா அத்தை வீட்டுக்குப் போயிருக்காங்க... இப்ப வந்துருவாங்க... நானே உன்னைப் பாக்க வரணும்ன்னு நினைச்சேன் தெரியுமா..?" என்றபடி "இந்த ஒத்தை ரோஜா எனக்கு நல்லாயிருக்கா?" எனக் கேட்டு வெட்கமாய்ச் சிரித்தவள் ஆரஞ்சுக் கலர் சுடியில் இருந்தாள். தொலைக்காட்சியில் 'உன் பேரைச் சொல்லும் போதே...' பாடல் ஓட, காவ்யா டிவியின் சப்தத்தை அதிகமாக்கினாள். அவனுக்குப் புரிய அவள் கொடுத்த காபி சுவைத்தது.

******
சென்ற ஆண்டு எழுதிய காதலர் தின சிறுகதை அனுராக் வாசிக்க...

-'பரிவை' சே.குமார்.

சனி, 13 பிப்ரவரி, 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-4)

பகுதி-1               பகுதி-2            பகுதி-3                    

‘இது என் அத்தை பொண்ணுடா...’ என்று சாரதி சொன்னதும் கண்ணன் ஒன்றும் சொல்லவில்லை. 

“என்னடா... பதிலைக் காணோம்..?” சாரதியே மீண்டும் கேட்டான்.

“என்ன சொல்லணும்... படபடன்னு பேசுதே... யார் இந்தப் பொண்ணுன்னு பார்த்தேன். உடனே நீ அத்தை பொண்ணுன்னு சொன்னே... அப்புறம் என்ன... சரி சரி... என்ன எதிர்பார்க்கிறேன்னு தெரியுது... உன் வருங்காலம் அழகா இருக்காடா...” என்றான் மெதுவாய்.

“வருங்காலமா... யாரு...? இந்த வாயாடியா...? சரித்தான்... இதைக்கட்டிக்கிட்டு நான் முடியைப் பிச்சிக்கிட்டு நிக்க வேண்டியதுதான்...”

“அதான் நிறைய இருக்கே... பிச்சுக்கிட்டு நில்லு...” என்று சிரித்தான் கண்ணன்.

“என்னங்கடா... ரகசியம் பேசி சிரிக்கிறீங்க..? எங்ககிட்ட சொன்னா நாங்களும் சேர்ந்து சிரிப்போம்ல...” என்றான் அம்பேத்கார்.

“ஒண்ணுமில்லடா... சும்மாதான்...” என்றான் சாரதி.

“என்ன மிஸ்டர் சாரதி, உங்க பிரண்டு யாருடா இந்த அழகின்னு என்னைப் பற்றித்தானே கேட்டார்...” என சுபஸ்ரீ கேட்கவும், “ஆமா இவ ஊர்ல இல்லாத அழகி. உன்னையப் பற்றி ரகசியம் பேச என்ன இருக்கு... உனக்கு மட்டுந்தான் நீ அழகின்னு கர்வம்... மத்தவா சொல்லணும்... அழகியா இல்லையான்னு...” சாரதி சிரித்துக் கொண்டே சொன்னான்.

“அலோ சார்... நாங்க அழகிதான்... இவா சொல்லாட்டி என்ன... எங்க காலேசுல இருக்கா ஆயிரம் பேரு என்னை அழகின்னு தாங்க...”

“அவாளே தாங்கட்டும்... நாங்க தாங்க நினைக்கலை... வெட்டிப் பந்தாவை விட்டுட்டு வேலையைப் பாருடி...”

“டேய்... ஏன்டா... சும்மா அவங்கிட்ட சத்தம் போடுறே... விடுடா...” என்றான் கண்ணன்.

“அது...” என்று இழுத்தவள், “அவாளுக்குத் தெரிஞ்சதுகூட எங்க சாரதி சாருக்கு தெரியலை பாருங்க அத்தை... இதைக் கட்டிக்கிட்டு என்னைய என்ன பண்ணச் சொல்றேள்... நான் மாட்டேன்...”

“ஆமா இவளைக் கட்டிக்கிறேன்னு இவ ஆத்துல வந்து கிடையாக் கிடக்கேன் பாரு... எவளாவது ஏழைப் பிராமணத்தியை கட்டிக்கிட்டு வருவேனே ஒழிய... இந்த வாயாடியை நான் ஆத்துக்காரி ஆக்கிக்கமாட்டேன்...”

“ஆமா நாங்களும் இவாள்தான் வேணுன்னு இங்க வந்து கிடக்கோம் பாருங்க... “
“ஏய் எதுக்குடி இப்ப ரெண்டு பேரும் வாய்க்குவாய் பேசறேள்... ஏன்டா சாரதி எப்ப அவகிட்ட வம்பு பண்ணுறதுன்னு இல்லையா... வந்தவா என்ன நினைப்பாங்க... தினமும் சண்டைதான் போடுறீங்க... உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் கட்டி வச்சுண்டு சண்டை தீர்க்கிறதே எங்க வேலையா இருக்கும் போல... ரெண்டு பேரும் சித்த சும்மா இருங்கோ...”

“பின்ன என்ன அத்தை... சாரதி சார்தானே இப்படிப் பேசுறார்... அவருக்கு பிரண்ட்ஸ் எல்லாம் இருக்கான்னு தைரியம்...”

“விடுங்கங்க... அவன்தான் கிண்டலா பேசுறான்னா... நீங்களும் வருத்தப்பட்டுக்கிட்டு... நாங்க ஒண்ணும் நினைக்கலை... டேய் சாரதி... பாவம்டா அவங்க... எதுக்கு இப்ப சண்டை போடுறே..?” என்று கண்ணன் சமாதானம் பேச, அதை சட்டை செய்யாமல் சுபஸ்ரீ கோபமாக எழுந்து உள்ளே போனாள். சுபத்ராவும் “டீ... சுபா... அவன் கிடக்கான்... நீதான்டி எம் மருமகள்... கோபிக்காதேடி... என் செல்லம்ல்ல....” என பின்னாலே போனாள்.

“எங்கடா படிக்கிறாங்க...? மெதுவாகக்  கேட்டான் பிரவீண்.

“ஏன் அங்க இவங்க அழகியா... இல்லையான்னு போய் பார்க்கவா...?” என்றான் ஜாகீர்.

“என்னடா... அவ... இவன்னு சொன்னீங்க... இப்ப அவங்கன்னு மரியாதை எல்லாம் வருது... மதுரை யாதவா காலேசுல படிக்கிறா... இப்ப லீவுல்ல அதான் வந்திருக்கா... அவங்க வீட்ல இருக்கதைவிட எங்க வீட்லதான் அதிகம் இருப்பா... எங்க அம்மா செல்லம்... எங்க அத்தை கூட அவளுக்கு நீதான் அம்மான்னு சொல்லிச் சிரிப்பாங்க... சும்மா அவளை வம்பிழுப்பேன்... எல்லார்க்கிட்டயும் ரொம்பச் ஜாலியாப் பேசுவா... பிறத்தியார்ன்னு எல்லாம் பார்க்கமாட்டா... அவளுக்கு கூட்டமா உக்காந்து ஜாலியாப் பேசினா ரொம்பப் பிடிக்கும்... முற்போக்கு சிந்தனைவாதி... கல்லூரி பட்டிமன்றப் பேச்சாளர்... நிறைய கவிதை எழுதுவா... போட்டிகளில் ஜெயிச்சு பிரைஸ் வாங்கி குவித்து வைச்சிருக்கா... எந்த பிரைஸ் வாங்கினாலும் முதல்ல அம்மாக்கிட்ட கொண்டு வந்து கொடுத்து ஆசி வாங்கிக்குவா... அம்மாவுக்கும் அவ ஒருநாள் போனில் பேசலைன்னாலும் மனசு சரியில்லைன்னு புலம்பிடுவாங்க... அதனால எத்தனை மணியா இருந்தாலும் அவ வீட்டுக்குப் பேசுறாளோ என்னமோ அம்மாக்கிட்ட பேசிருவா... சில சமயம் அத்தை அவ பேசினாளான்னு அம்மாக்கிட்ட வந்து கேட்டுட்டுப் போகும்... அவ ரொம்ப நல்லவடா... வெகுளி... யாரும் அவ முன்னாடி சோகமா இருக்கக்கூடாது... அவளுக்கு எல்லாரும் சந்தோஷமா... மகிழ்ச்சியா... இருக்கணும்.” சாரதி நீளமாய் பேசி முடித்தான்.

“அது சரி... அப்புறம் என்ன... ரொம்ப நல்ல பொண்ணா இருக்காங்க... என்ன கேட்டே... ஏன்டா அவங்க... இவங்கன்னு பேசுறீங்கன்னுதானே... உன் மனைவியா வரப்போறவங்க... எங்க சிஸ்டர்... சோ இனி அவங்க... இவங்கதான்...” சொல்லிச் சிரித்தான் அம்பேத்கார்.

“அடப்போங்கடா... காலம் என்ன நினைக்குதுன்னு பார்ப்போம்...” என்றான் சாரதி.

“சுபஸ்ரீதான் சாரதிக்குன்னு எழுதிவச்சி ரொம்ப நாளாச்சு... இனி காலம் என்ன மாத்துறது...” என்றான் கண்ணன்.

அப்போது...

“கண்ணண்ணா...” என வாசலில் இருந்து கூவியபடி அபி உள்ளே நுழைய, “வயசுக்கு வந்த பொம்மனாட்டிக்கு அடக்கம் ஒடுக்கம் வேண்டாம்... வீதியில நின்னுன்டு கத்துறே... “ திண்ணையில் இருந்து கத்தினாள் பாட்டி.

ருதறுப்பு முடிந்த இரவில்....

“ஏத்தா... மாப்பிள்ளைக்கு நாட்டுக்கோழி ரசம்ன்னா ரொம்பப் பிடிக்கும்ல்ல... இன்னும் கொஞ்சம் ஊத்து...” சாப்பிட்டுக் கொண்டே சொன்னார் வேலாயுதம்.

“அடி ஆத்தி... போதும்... வயிறு புல்லா இருக்கு....” என்று மறுத்தான் ராமநாதன்.

“காலையில சீக்கிரமே போகணுமாப்பா... பத்து மணி வாக்குல போகலாம்ல்ல... உங்களுக்குப் புடிக்குமேன்னு குழிப் பணியாரத்துக்கு போட்டு ஆட்டி வச்சிருக்கேன்... சாப்பிட்டுப் போகலாம்ல்ல...” மெதுவாகக் கேட்டாள் சவுந்தரம்.

“காலையில கடைக்குப் போயாகணும்... நாளை மறுநாள் முகூர்த்தம் நாள்.... நிறைய பாத்திரம் கொடுக்கணும்... செல்வி இருந்துட்டு வரட்டும்...”

“ஏம்ப்பா... சாப்பிட்டு போங்க... ஒம்போது மணி வாக்குல நம்ம பிரசிடெண்ட் தம்பி வர்றேன்னு சொல்லியிருக்கு... நாளைக்கு நம்மூருல சாதிச் சங்க போர்டு வைக்கிறோமுல்ல...”

“எனக்கு வேலை இருக்கு மாமா... நாலு சாதி இருக்க ஊர்ல எதுக்கு மாமா சாதிச் சங்க போர்டு அது... இதுன்னு... தாயாப்பிள்ளையா பழகுற இடத்துல இதெல்லாம் நுழைஞ்சா பிரச்சினைக்குத்தானே வழிவகுக்கும்.”

“அதுக்காக... நாலு கட்சிக் கொடி பறக்குற இடத்துல நம்ம சாதிப் போர்டு வச்சா என்ன தப்புங்கிறேன்... எந்தச் சாதிக்காரன் வேணுமின்னாலும் வச்சிக்கட்டும்... அதுபோக நாம வக்கிறதுக்கு முன்னால வேற யாராச்சும் வச்சிட்டானா... நமக்கு அசிங்கமில்லையா...?”

“என்னமோ மாமா... உங்க அளவுக்கு எல்லாம் எங்களால சாதியை தூக்கிச் சொமக்க முடியலை... எங்கயாச்சும் கேட்டாலும் எவனாச்சும் பேசினாலுந்தான் எனக்கெல்லாம் சாதியே ஞாபகத்துல வரும்...”

“நம்ம சாதிக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்லப்பா... அதை கீழ போட்டு உடைச்சிடக்கூடாது... இன்னைக்கு இருக்க தலமுறை அதைத்தான் பண்ணுது... அதான் அவனுகளுக்கும் சாதி உரத்தை ஏத்தத்தான் இதெல்லாம்... பாருங்க... இப்ப அம்புட்டுபய வண்டியிலயும் நம்ம சாதிச் சிங்கம் போட்டா ஓட்டிக்கிட்டு திரியிறானுங்க...”

“என்னமோ போங்க... நானெல்லாம் சாதி சாதியின்னு நின்னா என்னோட பாத்திரக்கடை தொழிலெல்லாம் படுத்திருக்கும். வர்ற சமையக்காரன் எல்லாம் நம்ம சாதிக்காரனா வர்றான்... இன்னொன்னு தெரியுமா மாமா... நம்ம ஆளுக பூராம் எங்கே நா நல்லா வந்துருவேனோன்னு செட்டியார்கிட்டதான் பாத்திரம் எடுக்குறானுங்க... இந்த சாதியை எல்லாம் நான் வீட்டை விட்டு வெளிய போகும் போது எறவாரத்துலயே  விட்டுட்டுப் போயிடுவேன்... எனக்கு வேண்டாம் இதெல்லாம்... சாதி... சாதியின்னு பேசித்தான்... இன்னைக்கு வேற சாதியில இருந்து ஒருத்தி நம்ம வீட்டுக்கு மருமகளா வந்திருக்கா... விட்டுட்டு வேலையைப் பாருங்க மாமா...” எதார்த்தமாய்ச் சொல்லியபடி எழுந்து போனான் ராமநாதன்.

வேலாயுதம் சவுந்தரத்திடமும் செல்வியிடமும் கத்துவதைப் போல் கத்த முடியாமல் தட்டில் இருந்த சாப்பாட்டின் மீது  கை கழுவிக் கொண்டிருந்தார்.

(அடுத்த சனிக்கிழமை தொடரும்)

-‘பரிவை’ சே.குமார்.