மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 7 மே, 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-16)

முந்தைய பகுதிகள்:

           பகுதி-1       பகுதி-2         பகுதி-3            பகுதி-4        பகுதி-5          பகுதி-6           பகுதி-7    


ம்பேத்கார் வண்டியை நிறுத்தவும் 'இதுவரையும் எதுவும் பேசாமல் வந்தவன் இங்க நிப்பாட்டி திட்டப் போறானோ...?' என்று நினைத்த கண்ணன் “என்னடா...” என்றபடி இறங்கினான் .

“ம்... தம் அடிக்கணும்... சாப்பிட்டது ஒரு மாதிரி இருக்கு...” என்றவன் அவனின் பதிலுக்கு காத்திருக்காமல் சிகரெட் வாங்கி அவனுக்கு ஒன்றை நீட்டினான்.

“வேணான்டா...” என்றவன் வண்டியில் சாய்ந்து நின்று கொண்டான். அம்பேத்கார் சற்று தள்ளி நின்று சிகரெட்டை இழுத்தான்.

“டேய்... என்னடா எதுவுமே பேசமாட்டேங்கிறே...?” கண்ணன்தான் ஆரம்பித்தான்.

“என்ன பேசணும்...?”

“இல்ல நான் செஞ்சது தப்புன்னு எங்கிட்ட நீ பேசமாட்டேங்கிறே...? அப்படித்தானே...?”

“அப்படி என்ன செஞ்சிட்டே... நண்பனுக்கு வாக்கப்பட வேண்டியவளை நீ கட்டிக்கிறேன்னு சொல்லியிருக்கே... இது நட்புக்கு செய்யும் மிகச் சிறந்த செயல்தானே.... இதுல நான் என்ன பேச வேண்டியிருக்கு... அவளுக்கு தயிர் சாதம் சாப்பிடுற அம்பியைவிட மாமிசம் சாப்பிடுற இந்த தம்பியை பிடிச்சிருக்கு... நான் என்ன சொல்லட்டும்... அதான் பூ வச்சி விட்டாச்சே... பின்ன என்ன... நடக்கிறது நடக்கட்டும்...”

“பூ நா... எங்கே வச்சேன்...?”

“ம்... இதை காதோரமா வையி அழகா இருக்கும்ன்னு சொல்றதும் ஒண்ணுதான்... வச்சி விடுறதும் ஒண்ணுதான்... அதான் புருஷன் பொண்டாட்டி மாதிரி ஒரசிக்கிட்டு உக்காந்திருந்தியளே...”

நல்லவேளை அவ கையைப் பிடிச்சதை பார்க்கலை போல என நினைத்துக் கொண்டு “செஞ்சது தப்புத்தாண்டா... இனி என்ன பண்ணட்டும்...” என்றான்.

“ஒண்ணும் பண்ண வேண்டாம்... அவ கையை பிடிச்ச உன்னோட கையை ஒரு பத்து நாளைக்காவது தண்ணி படாம பாத்துக்க... இல்லேன்னா அவ வாசம் போயிரும்...” என்றான்.

“டேய்....” எனக் கத்திய கண்ணன் ‘படுபாவி அதையும் பாத்துட்டியா’ என்று மெல்ல முணங்கினான்.

“என்ன... என்ன சொன்னே?”

“ஒண்ணும் சொல்லலையே...”

“தெரியும்டி... உனக்குத்தான் தெரியுமே... நம்ம பக்கம் பொண்ணு பார்த்து பிடிச்சிப் போச்சின்னா பூ வச்சி விட்டுட்டு வருவாங்க... அது நிச்சயம் பண்ணினதுக்கு சமம்... என்ன பெரியவங்க பூ வச்சி விடுவாங்க... இங்க நீயே வச்சி விட்டுட்டு வந்திருக்கே.. அம்புட்டுதான்...”

“என்னடா நீயி...”

“பின்ன என்ன... இறங்கிட்டே... இனி என்ன சொல்றது... படிப்பு முடியிற வரைக்கும் சாரதிக்கோ அவன் வீட்டுக்கோ தெரிய வேண்டாம்... பின்னாடி தெரிய வரும் போது பிரச்சினைகள் எப்படி சுழலுதோ அதுக்கு தகுந்த மாதிரி முடிவெடுக்கலாம்... என்ன மாடு மேய்க்கிறவளை கட்டினா உன்னை மவராசன்னு உங்கப்பா சொல்வாரு... நீ மாமியையில்ல கட்டப் போறே... மல்லாக்கப் போட்டு வெட்டுனாலும் வெட்டுவாரு... பார்க்கலாம் வா...” என்றபடி சிகரெட்டை கீழே போட்டு காலால் நசுக்கினான்.

அவர்களின் காதல் மெல்ல மெல்லப் பயணிக்க, கல்லூரி வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.  கண்ணன் மேலே படிக்கும் எண்ணம் இருந்தாலும் வேலைக்குப் போய்க் கொண்டே படிக்கலாம் என முடிவு செய்து அதற்கான முயற்சியில் இருந்தான். சாரதி மேலே படிக்க விரும்பவில்லை. அம்பேத்கார், பிரவீண், ஜாகீர் மூவரும் ஒரே கல்லூரியில் மேற்படிப்பில் சேர்ந்தனர். சுபஸ்ரீயும் மதுரையிலேயே மேற்படிப்பைத் தொடர்ந்தாள். கண்ணனையும் சேரச் சொல்லி வற்புறுத்திப் பார்த்தாள்... ஆனால் அவன் தனது கொள்கையில் பிடிவாதமாக நின்றான்.

சில மாதங்களுப்பிறகு... சாரதிக்கும் சுபஸ்ரீக்கும் திருமணத்தை முடித்து விடலாம் என்றும் அதன் பின் அவள் தன் படிப்பைத் தொடரட்டும் என்றும் வீட்டில் முடிவு செய்த விவரத்தை கண்ணனிடம் சொல்லி, இனி பேசாமல் இருந்தால் சரி வராது என்று சொன்ன சுபஸ்ரீயிடம் யாரிடம் பேசுவது..? எப்படிப் பேசுவது..? என்றெல்லாம் பேசி முடிவு செய்தான் கண்ணன்.

அந்த நாளும் வந்தது.

வேலாயுதம் வெறி கொண்டு கத்த, பிரச்சினை வேறு கோணத்தில் பயணிப்பதை உணர்ந்த  பஞ்சநாதன், “ஏம்ப்பா விடுங்கப்பா... என்ன இது சின்ன பிள்ளைங்க மாதிரி...  ஏம்ப்பா வாசு... அந்த பய விரும்புன பொண்ணோட சந்தோஷமா வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கான்... ஆணவக் கொலையை எதிர்க்கிற நீ அவனைக் கொல்லச் சொல்றே... இதுதான் நீ வாத்தியாரா இருந்து பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கிற படிப்பா... போப்பா... போயி வேலையைப் பாரு... ஏய் வேலாயுதம் அவன் என்ன சொல்லிட்டான்னு மூத்தவனை வெட்டுவேன் கொத்துவேன்னு... உம் மவன் மனசுக்குப் புடிச்சவளோட வாழுறான்... அவளும் நீ சொன்னியே அந்தப்புள்ளை மாதிரி யாரும் வேணாம்ன்னு எழுதிக் கொடுக்கலை... நாமளும் அப்படி உம் மவனுக்கிட்ட சொல்லி எழுதி வாங்கலை... நீ ஏத்துக்கலை... உனக்குப் பிடிக்கலை... அத்தோட விடு... அதை விட்டுட்டு நாலஞ்சி வருசத்துக்கு அப்புறம் அவன் வந்தா வெட்டுவேன் குத்துவேன்னு சொல்லிக்கிட்டு... பேசாம இருக்கமாட்டே... நீங்க ரெண்டு பேரும் ஊருக்குள்ள சாதிச் சண்டையைக் கொண்டாராம விடமாட்டீங்க போல...” கோபத்தில் கத்தினார் பஞ்சநாதன்.

“என்ன மாமா... இவருக்கு என்னவாம்... எப்பப் பார்த்தாலும் சாதி சாதியின்னு... இவரு மகன் இருக்க எடமெல்லாம் தெரியும்... கையைக் காட்டி விட்டுருவோமா... கூறு போட்டுட்டு வந்திருவானுங்க... “ வெறியோடு பேசினான் அங்கு வந்த ராசு.

“ஏய் சும்மா இருப்பே... நீ அவனை வெட்ட ஆளு விடுவே... அவனுக்கு வேண்டியவன் உன்னைத் தூக்கிப் போட்டு வெட்டுவான்... அப்புறம் உன்னோட அண்ணந்தம்பிங்க இவனை வெட்டுவானுங்க... இப்படி வெட்டிக்கிட்டு சாங்கடா... வயசுப் புள்ளைகளுக்கு இந்த வெறி கூடாதுடா.... வாசு பயலுகளுக்கு சொல்லி வை...”

“அப்புறம் சாதி சாதியின்னா ரத்தத்தைக் கொடுக்கத்தான் வேணும்...”  என்ற ராசுவை “ஏய்... சும்மா இருக்கமாட்டே...  பஞ்சநாதா... நான் கெளம்புறேன்... சொல்லி வையி.... சும்மா சாதி... சாதியின்னு கத்திக்கிட்டு இருக்காம... வாழப்போற கொஞ்ச நாள்ல நல்லது செஞ்சிட்டுப் போனோம்ன்னு இருக்கனுமின்னு... “ என்ற வாசுதேவன் “ராசு... வா.... ஏய் எல்லாரும் வாங்கப்பா..” என்றபடி அங்கிருந்து கிளம்பினார்.

“பாத்தியா... அந்தப் பயலுக வேகத்தை... உனக்குப் பிடிக்கலையா... ஒதுங்கியிரு... அதை விட்டுட்டு... தேவையில்லாத வேலை பாக்காதே... மூத்தவன் ரொம்ப நல்லவன்... அவனை எதுக்கு இழுத்து தெருவுல விடுறே... உனக்கு அவனைப் பிடிக்காட்டி மூடிக்கிட்டு இரு... சும்மா எப்பப் பார்த்தாலும் சாதி... சாதியின்னு... அந்த மசுரப்புடுங்கின சாதியால நீ சாதிச்சது என்ன... சொல்லு... சும்மா பேசிக்கிட்டு... ஊருக்குள்ள நாலு நல்லதைச் செஞ்சு... நாலு பேரு மனசுல நம்ம நினைவை விதைச்சிட்டுப் போகணும்...  மூணு தலைமுறைக்கு முன்னாடி இருந்த பெரியகருப்பனை இன்னமும் இந்த ஊரு கொண்டாடுதே... ஏன்..? அந்தாளு நம்ம சாதிக்குன்னு இல்லை... இங்க இருக்க எல்லாப் பயலுகளுக்கும் உதவியிருக்காரு... இந்த ஊரோட வளர்ச்சியில தன்னோட பேரை பெரிசாப் பதிச்சிட்டுப் போயிருக்காரு... அப்படி இருந்துட்டுப் போகணும்... தயவு செய்து இனி சாதி... சாதியின்னு ஓடாதே...”

“நல்லாச் சொல்லுங்கண்ணே.... என்ன சொன்னாலும் எரும மாடு சேத்துக்குள்ள பெரண்ட மாரித்தான்... எப்பப் பாத்தாலும் சாதி... சாதியின்னு பேசி சண்டயத்தான் இழுக்குறாரு...” என்றபடி வந்தாள் சவுந்தரம்.

“ஆமா... இவுக லாத்திக்கிட்டு வந்துருவா... நீ போலா எனக்குத் தெரியும்...” கடுப்படித்தார் வேலாயுதம்.

“என்ன போலா... வாலான்னுக்கிட்டு... எந்திரிச்சி வாங்க அங்கிட்டு...” கத்திவிட்டு முன்னே நடக்க, “இந்தா வாரேன்லா... சும்மா கத்திக்கிட்டு... “ என்றவர், “எப்பா நடுநிலைவாதி உனக்கு அப்புறமா விளக்கமா பதில் சொல்றேன்... இப்ப அவ கூப்பிட்டு போகலைன்னா மககிட்ட வத்தி வச்சி... அந்தாளு வந்து தையத்தக்கான்னு குதிப்பாரு...” என்றபடி எழுந்து நடந்தார்.

“போடா பொண்டாட்டிக்கு பயந்த பயலே..’ என்று சிரித்தபடி எழுந்த பஞ்சநாதன், “ஏங்க எந்திரிச்சி வாறீங்களா...? காலையிலேயே பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு...” என்ற மனைவியின் குரலுக்கு “இந்தா வந்துட்டேன்...” என்றார்.

வேலாயுதம் வீட்டுக்குள் நுழைந்த போது போன் அடித்தது. “யாரு இந்த நேரத்துல...?” என்றபடி எடுத்து “அலோ” என்றார். எதிர்முனையில் சரவணன் பேசினான். நல விசாரிப்புக்களுக்குப் பின் 'இந்த வார லீவுல ரெண்டு நாள் அங்க வரலாம்ன்னு இருக்கேன்.... நான் மட்டுமில்ல... எல்லாருந்தான்... முக்கியமான ஒரு விஷயம் உங்ககிட்ட பேசணும்... நேர்ல வந்து சொல்றேன்..' என்றவன் அதன் பின்னர் அம்மாவுடன் பேசிவிட்டு போனை வைத்தான்.

கட்டிலில் வந்து அமர்ந்தவர் ‘முக்கியமான விஷயமா..? என்னவா இருக்கும்...? வயவரப்பை அவன் பேர்ல எழுதச் சொல்லப் போறானா...? இல்ல ரோட்டோரமாக் கெடக்க மேட்டு நாத்தங்கால்ல வீடு கட்டலாமான்னு கேக்கப் போறானா...?  என்னவா இருக்கும்...’ என்று யோசித்தவர் மனைவியிடம் “ஏலா உங்கிட்ட எதுவும் சொன்னானா...” எனக் கேட்டார்

“ஆமா... அப்பன் புள்ளைக்கிட்ட ஆயிரம் இருக்கும்... எல்லாத்தையும் எங்கிட்டயா சொல்றீங்க...? அதான் வந்து பேசுறேன்னு சொல்லியிருக்கானுல்ல... வரட்டும்...” என்றபடி வெற்றிலையை மெல்ல ஆரம்பித்தாள்.

 (அடுத்த சனிக்கிழமை தொடரும்...)
 -பரிவைசே..குமார்.

3 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

இடையில் சில பகுதிகளைப் படிக்க வில்லை..

இருப்பினும் - எழுத்து நடை அருமை..
பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருப்பதைப் போன்றிருக்கின்றது..

வாழ்க நலம்..

KILLERGEE Devakottai சொன்னது…

தொடர்ந்து வருகிறேன் நண்பரே.... யதார்த்த பேச்சு அழகு

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

தொடர்கின்றோம் குமார்....