மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 28 ஜனவரி, 2017

மனசு பேசுகிறது : ராஜமுத்திரையில் சோழன் கனவு

ண்பன் தமிழ்வாசியுடன் முகப்புத்தகத்தில் இணைந்து இன்று மூன்றாம் வருடமாம்... அதற்கு முன்னரே வலைச்சரம் மூலமாக எங்கள் நட்பு ஆரம்பித்திருந்தது... ஆனாலும் வந்தியத்தேவனை வாசிக்க வைத்த போதுதான் இன்னும் இறுக்கமானது. அவர் நிறைய புதினங்களை வாட்ஸ்-அப் மூலமாக அனுப்பி, முகநூலில் பேசி, வாசித்த புதினத்தைப் பற்றி முகநூலில் கிறுக்கி, அங்கு தினேஷ், நிஷா அக்கா, கணேஷ்பாலா அண்ணன் எனக் கூடி விவாதித்து இப்படியாக நம்மை நிறைய வாசிக்க வைத்தார் என்று சொல்வது மிகப்பெரிய சந்தோஷம்.

Image result for ராஜமுத்திரை

பல நேரங்களில் மனச்சுமைக்கு மருந்தாய் இந்த வாசிப்பு இருந்திருக்கிறது... இப்பவும் இருக்கிறது. சில பல காரணிகளால் மிகுந்த சோர்வு, எழுத்தில் நாட்டமில்லாத மனம், சல்லிக்கட்டு போராட்டம் என கடந்த சில வாரங்கள் கடந்தாலும் பேருந்தில் அலுவலகம் செல்லும் போதும் திரும்பி வரும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து சாண்டில்யனின் ராஜமுத்திரையை வாசித்து முடித்து அதன் பின் கல்கியின் குமாரர் எழுதிய ரவிகுலதிலகன் வாசித்து தற்போது விக்கிரமனின் சோழ இளவரசன் கனவு வாசித்துக் கொண்டிருக்கிறேன்,

ராஜ முத்திரை பாண்டியர்களின் கதைக் களம்... வீரபாண்டியனுக்கும் சேரன் வீரரவிக்கும் நடக்கும் பிரச்சினைகளே கதைக்களம்...  இதில் மதுரை மன்னனும் வீரபாண்டியனின் அண்ணனுமான ஜடாவர்மன் சாதாரண மன்னனாக சேரனின் முன் நின்று சக்கரவர்த்தியாக திரும்புவதாய் கதை சுபம் பெறுகிறது. அவரின் மகள் முத்துக்குமரியை கடத்திச் சென்று சிறை வைக்கிறான் வீரரவி, முத்தை மட்டுமல்ல முத்துக் குமாரியையும் கவர்வதே அவனுக்கு எமனாகிறது. இலங்கை மன்னன் வீரரவிக்கு உதவியாய் இருக்கிறான் என்ற போதிலும் அவனின் மைந்தனும் இளவரசனுமான இந்திரபானு  வீரபாண்டியனின் மீது கொண்ட பற்றுதலால் அவனின் படைத்தளபதியாய் பயணித்து முத்துக்குமரியை காதலித்து அவளுக்காக சேரநாட்டில் பரதப்பட்டன் என்னும் துறவி (வீரரவி மதிக்கும் குரு) உதவியால் முகம் மாற்றி... வேவு பார்த்து...  சிறைப்பட்டு... முத்துக்குமாரியை மீட்டு வீரபாண்டியனுக்கு போரில் உதவி பரலியைக் கைப்பற்றி, பரலியின் நிர்வாகத்தோடு முத்துக்குமரியையும் மன்னனின் அனுமதியுடன் கரம்பிடிக்கிறான்.

படைத்தலைவன் மகளாக வந்து வீரபாண்டியனுக்கு உதவப் போய் வீரரவியிடம் மாட்டி அதிலிருந்து தப்பி, வீரபாண்டியனுக்கு காதலியாய்... படைத்தலைவியாய்... மனைவியாய்... இரண்டு போரில் துணை நின்று வெற்றி பெற்றுக் கொடுத்து பரலி நோக்கிச் செல்லும் போது கர்ப்பிணியான காரணத்தால் போருக்கு வரவேண்டாம் என மீண்டும் கோட்டைக்குத் திருப்பி அனுப்புவதால் கோபம் கொண்டு தனியே குதிரையில் பயணிக்கும் இளநங்கை இறுதியில் வெற்றிவாகை சூடிவரும் கணவனுடன் கொஞ்சி மகிழ்கிறாள். வீரபாண்டியனுக்கு இளநங்கை மற்றும் இந்திரபானு உதவியுடன் மிகப்பெரிய உதவியாய் மலைசாதிப் பெண் குறிஞ்சி இருக்கிறாள். மருத்துவம் தெரிந்த அவள் அவனுக்காக ஒற்றன் வேலை பார்க்கிறாள்.வீரரவியிடம் வேலைக்குச் சேர்ந்து ஒற்றறிகிறாள்.  எங்கே தன் கணவனைக் கொத்திப் போய் விடுவாளோ  என்று இவள் மீது இளநங்கைக்கு வெறுப்பு... இருந்தாலும் குறிஞ்சி முத்துக்குமரியின் பணிப்பெண்ணாக பரலியில் தங்கிவிட இவளுக்கு மகிழ்ச்சி.

ராஜமுத்திரை கதை மிகவும் விறுவிறுப்பாக நகரும். சாண்டியல்யனுக்கே உரிய போர்த் தந்திரக் காட்சிகள் இதிலும் அழகிய விவரணைகளுடன்... இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிகழ்வு நம்ம ஜல்லிக்கட்டு போல் செண்டு வெளிக்களியாட்டம்... இதைப்பற்றி 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அண்ணன் தனிப்பதிவே எழுதியிருந்தார். அர்த்தச் சந்திர வடிவம் கொண்ட செண்டு வெளிக்குள் வீரர்கள் குதிரையில் இறங்கி சுற்றி வந்தபடி பாண்டிய மீன் கொடியின் மீது (எதாவது இரு இலக்கு இருந்திருக்கும்... இது பாண்டியருக்கும் சேரருக்குமான மோதல் கதை என்பதால் பாண்டியக் கொடி என்று எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்) வேலெறிவார்கள்... அதில் வென்றால் பின்னர் அதன் எதிர்த்திசையில் இருக்கும் பாண்டிய முத்திரை மீது வேலெறிவார்கள். வேல் குறி தவறும் பட்சத்தில் இன்னும் சில வீரர்கள் இறங்க, தோற்றவர்களுக்கும் ஜெயித்தவர்களுக்கும் செண்டு வெளிக்குள் சண்டை போட, மாடு முட்டி ரத்தம் சிந்தும் வீரர்களை தூக்கிச் சென்று மருத்துவம் பார்ப்பது போல் இவர்களைத் தூக்கிச் சென்று மருத்துவம் பார்ப்பார்களாம்.

Image result for ரவிகுல திலகன்

ராஜமுத்திரைக்குப் பின் வாசித்தது  கல்கி இராஜேந்திரனின் ரவிகுலதிலகன், விஜயாலயச் சோழனின் வரலாற்றைப் பேசியது... பல்லவர்களுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்த சோழர்களின் ராஜ்ஜியத்தை பேரரசாக்க விரும்பும் இராசகேசரி குமாரங்குசன் தன் மகன் விஜயாலயனை மிகுந்த வீரம் மிக்கவனாக வளர்க்கிறான். பதின்ம வயதில் ஒரு தீ விபத்து ஏற்பட மக்களைக் காக்க அனுப்புகிறான்... விஜயாலயனின் அன்னையோ அதை எதிர்க்கிறாள்... தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் போது ஒரு சிறுமியையும் சிறுவனையும் காப்பாற்றி அவர்களின் அன்னையை காப்பாற்றச் செல்லும் போது தீயால் தாக்கப்படு தலைமுடி இழந்து ஒரு பக்க கண்ணையும் இழக்கிறான். அவனுக்கு தஞ்சையை ஆளும் முத்தரையர் மகள் உத்தமசீலி மீது ஆசை, அவளோ இவனை வெறுக்கிறாள். அந்தக் கோபம், சிற்றரசான சோழ அரசை சாம்ராஜ்யமாக மாற்ற வேண்டும் என்ற வெறி என பல்லவர்களுக்குத் தெரியாமல் வீரர்களை தயார் செய்து தஞ்சையைப் பிடிக்கிறான்... அவனுக்கு உதவியாய் காட்டுவாசிப் பெண்ணும் மருத்துவச்சியுமான குவளை இருக்கிறாள். உத்தமசீலியை கரம் பிடிக்கும் முன்னர் குறிஞ்சியை விரும்புகிறான். ஆண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு உத்தமசீலி இறப்பதுடன் கதை முடிகிறது.

அதன் தொடர்ச்சியாய் தாத்தாவின் கனவின்படி தஞ்சையைப் பிடித்து அதில் கோட்டை கட்டி, பல்லவனுக்குப் பிடித்த மன்னனாக வாழும் விஜயாலயனின் மகன் ஆதித்தன் பல்லவர்களை எதிர்த்து தங்கள் அரசை பேரரசாக நிர்மாணிக்க முயலும் கதைத்தான் விக்கிரமன் எழுதியிருக்கும் சோழ இளவரசன் கனவு... பல்லவநாட்டைப் பற்றி நேரில் பார்த்து அறிய நண்பன் விக்கியண்ணனுடன் செல்லும் ஆதித்தனுக்கு இளங்கோபிச்சி என்னும் மனைவி இருக்கிறாள்... இருந்தும் நடனப்பெண், சிற்பி மகள், பல்லவ இளவரசி என சாண்டில்யன் கதை போல் ஒரே பெண்கள் மயம்... பல்லவ நாட்டைப் பற்றி அறிந்து அவர்கள் மீது போர்தொடுத்து ஆதித்தன் வென்றானா...? தாத்தாவின் கனவுப்படி, தந்தையின் ஆசைப்படி சோழ பேரரசை கட்டமைத்தானா...? என இப்போதுதான் ஆவலோடு வாசித்துக் கொண்டிருக்கிறேன். எனவே இன்னுமொரு பதிவில் பார்ப்போம்.

-'பரிவை' சே.குமார்,

வெள்ளி, 27 ஜனவரி, 2017

அனிதாவை வாழ்த்துவோம்

னிதா ராஜ்...

எண்ண ஓவியம் என்ற வலைப்பூவில் எழுதி வந்தவர்... (கவனிங்க) ஆமா இப்ப எழுதுவதில்லை. சிங்கப்பூரில் இருக்கும் போது எண்ணச் சிதறல்களை எல்லாம் எண்ண ஓவியமாய் பகிர்ந்து கொண்டவர். குட்டிக் குட்டியாய்... அழகாய்... அருமையாய்... கருத்துள்ளதாய் பதிவுகள் எழுதுவார். ஸ்கைப் மூலமாக அவருக்கு தெரிந்த ஒரு ஆசிரியரை வைத்து உலகம் முழுவதும் இருக்கும் நட்புக்களை இணைத்து வாராவாரம் வகுப்பெடுக்க வைத்தவர். நானும் சில வாரங்கள் அந்த ஜோதியில் இணைந்திருந்தேன். மிகச் சிறந்த இலக்கியவாதி. இவரின் கதைகள் மிகவும் அருமையானவை... ஆனால் அதிகம் கதைகள் எழுதுவதில்லை... சின்னச் சின்னதாய் நம்மைக் கவரும் கவிதைகள்தான் இவரின் ஸ்பெஷல்.

'வலைச்சர ஆசிரியராய்' ஒரு வாரம் சீனா ஐயாவின் அழைப்பில் எழுதிய போது முதல் பதிவான அவரைப் பற்றிய அறிமுகத்தில்....

”ஸ்ங்கீத் ராஜ் அம்மா நான்”. இதை சொல்லிக்கொள்வதில் அத்தனைப் ஆனந்தம் எனக்கு. எனது முழு உலகம் அவனை சுற்றி மற்றுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்புறம்  ஒரு புத்தகப் புழு. பசியே எடுக்காது புத்தகத்தை கையில் கொடுத்துவிட்டால் போதும். பரிட்சைக்கு முன்னால் கூட நாவல் படிச்சுட்டு போகற ஆளு நான்…  எதிர் கேள்வி கேட்டே பொழப்ப ஓட்டும் ஆள்... சோம்பேறித்தனத்தால் நிறைய எழுதாமல் விட்ட ஜீவன் நண்பர்களைப் பாடாய் படுத்தும் இராட்சசி(”கொடூர“ சேர்த்துக்க சொல்லி  மனுதாக்கல் பண்ணியதை தள்ளுபடி செய்துட்டேன்) இப்படி என்னைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். என்னை நன்றாக தெரிந்தவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை ”பாவம் மோகன்”...

என்பதாய்த் தொடரும்... இதில் மோகன் யாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். முழுப்பதிவும் படிக்க வலைச்சரம் போங்க. இங்க முழுப்பதிவும் போட்டா நான் எழுத நினைத்ததை எழுத முடியாமப் போயிடும்.

நண்பன் தமிழ்காதலன் மற்றும் காயத்ரி அக்கா மூலமாக என்னை அறிந்து இணைய அரட்டையில்தான் தொடர்பில் வந்தார். குமார் என்று அழைத்து தன் அன்பை.... பாசத்தை... நேசத்தை... முதல்நாளே எனக்குத் தெரிய வைத்தவர். வலைச்சரத்தில் நண்பர்களுக்கான பதிவில் அவர் என்னை தனது அண்ணனாகச் சொல்லியிருப்பார். இதைவிட வேறென்ன வேண்டும் இந்த எழுத்துக்கு... சொல்லுங்க... உலகம் முழுவது உறவுகளால் நிரப்பி வைத்திருக்கிறது அல்லவா இது.

சிங்கப்பூரில் இருக்கும் வரை எழுதிக் கொண்டிருந்தார் என்றாலும் அவர் சொல்லியிருப்பது போல் பெரிய சோம்பேறிதான்... முகநூலில் எழுதிய மௌனச் சிதறல்களை எல்லாம் தொகுத்துத் தரச் சொன்னார்... நானும் ரொம்பப் பொறுமையாத் தொகுத்துக் கொடுத்தேன். புத்தகமாகக் கொண்டு வரணும் குமார் என்று சொன்னார்... சொன்ன ஆண்டு 2013. பாத்துக்கங்க... என்னோடு சேர்றவங்க எல்லாம் என்னைப் போலவே சோம்பேறியாவே இருக்காங்க அதுதான் ஏன்னு தெரியலை... நிஷா அக்கா போன்ற சிலர் இதில் விதிவிலக்கு. சிங்கப்பூரில் இருந்து  சென்னைக்கு சென்ற பின்னர் முகநூலிலும் வலையிலும் அதிகம் காண முடிவதில்லை. சல்லிக்கட்டு போராட்டத்தின் போது முகநூலில் ஒரு பகிர்வு பார்த்தேன்.

சிங்கப்பூரில் 'சிங்கப்பூர் கிளிஷே' என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த போது எனது கதையையும் ஒரு முறை அதில் பிரசுரித்தார். எனது கதைகள் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பல கதைகள் குறித்து பெரிய விவாதமே செய்திருக்கிறார். சிறந்த படைப்பாளி என்பதைவிட மிகச் சிறந்த படிப்பாளி... எதாவது வாசித்துக் கொண்டே இருப்பார்... அப்பல்லாம் நான் புத்தக வாசிப்பின் பக்கமே செல்வதில்லை. அதை வாசித்தேன்... இதை வாசித்தேன் என்று சொல்லி, நீங்களும் வாசிங்க என இணைய முகவரி எல்லாம் அனுப்புவார்... நான் அதெல்லாம் வாசிப்பதில்லை என்பதைத் சொல்லியா தெரியவேண்டும். அதேபோல் இப்பவும் வாசிப்பில்தான் இருப்பார் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என்னை வந்தியத்தேவன் மூலம் வாசிப்பிற்குள் அழைத்து வந்தவர் சகோதரர் தமிழ்வாசி. இப்ப நிறைய வாசிக்கிறேன் என்பது அவருக்குத் தெரியாது.

ஈரோடு கதிர் அண்ணன் அவர்களின் 'அப்பா' சிறுகதையை தனது குரலில் கதைக்கு ஏற்ப, ஏற்ற இறக்கத்தில் மிக அழகாக ஒலிப்பதிவு செய்திருப்பார். அதைக் கேட்டுவிட்டு ரொம்ப அருமையா இருக்கு என்ற போது உங்களது கருத்தப் பசு கதை என்னை ரொம்ப கவர்ந்திருக்கு... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதையும் ஒருநாள் ஒலிப்பதிவு செய்து அனுப்புறேன்னு சொன்னார்.... சொன்னார்தான்... அதிகமில்லை ஒரு ஐந்து வருடத்துக்குள்தான் இருக்கும்... இன்னும் ஆவலாய்த்தான் இருக்கிறேன். அனுப்பத்தான் காணோம்.

இப்ப எப்பவாவது முகநூலில் பதிவு போடுவார்... லைக் பண்ணுவதுடன் சரி... சிங்கையில் இருக்கும் போது நிகழ்ந்த விவாதங்கள் எல்லாம் இல்லை என்றாலும்...  தற்போது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தாலும் ... இன்னும் அன்புத் தங்கையாய் என் மனசுக்குள்... நானும் அண்ணனாய் அவர் மனசுக்குள் இருப்பேன் என்பது மட்டும் உண்மை.

இன்று அந்த அன்புத் தங்கை அனிதா ராஜ் அவர்களுக்கு பிறந்தநாள்.

என் இனிய வாழ்த்துக்களுடன்... உங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் அவருக்குச் சொல்லுங்கள் என்று அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.

அனிதாவிடம் ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டும்... அது மீண்டும் எழுதுங்கள் என்பதே...


சாதாரணமானது கூட அதீத
அழகுடன் திகழ்கிறது அன்பெனும்
கண்ணாடி வழி காணும் போது
                                                                 -அனிதா ராஜ்

வாழ்க வளமுடன் நலமுடன்....
-'பரிவை' சே.குமார்.

புதன், 25 ஜனவரி, 2017

2. 'என்னைப் பற்றி நான்' - மீரா செல்வக்குமார்

ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்பவர் அன்பு அண்ணன் கவிஞர் மீரா செல்வக்குமார்  அவர்கள். இவர் 'நான் ஒன்று சொல்வேன்' என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார். இவர் 'அன்பின் சக்தி' என்று ஆரம்பித்து எழுதும் கட்டுரைகள் தன் மகளுக்கு எழுதுவதாய் சமூகம் குறித்து இன்றைய நிலை குறித்து மிக அழகாய், அருமையாய் இருக்கும். மிகச் சிறந்த கவிஞர்... அருமையான சிந்தனையாளர்... அவருடன் ஒரு முறை பேசியிருக்கிறேன். புதுக்கோடைக்கு எப்ப வருவீங்க என்று கேட்கும் நட்புக்களில் இவரும் ஒருவர். அவரைப் பற்றி நாம் அறிய அவர் தருவது என்ன... பார்ப்போம் வாங்க...



"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்"

து ஆலைத்தொழிலாளர்கள் நிறைந்திருந்த காலனியின் பூமி..

தமிழகத்தின் எல்லா திசைகளிலிருந்தும்..பஞ்சம் பிழைக்க வந்தேறிய ஒரு ஈச்சம்புதர்களின் முன்னால் காடு..

மதுரையை பூர்வீகமாக கொண்ட ஒரு கும்பல் குடும்பம் குடும்பமாய் நடந்து வந்து சேர்ந்தது 80 ஆண்டுகளுக்கு முன்னால்...

ஆலை அடிக்கடி சீக்குப்பிடிக்க ஆரம்பித்த 1970 களில் நான் ஒரு குடும்பத்தின் மூத்தவனாக பிறந்தேன்...

அடுத்தடுத்து ஆறு பிள்ளைகள் பிறக்குமளவுக்கு பொழுது போக்கும்,அறிவும் இருந்த நாட்கள்..

உள்ளூரின் தொடக்கப்பள்ளி,மேல்நிலைப்பள்ளி என கல்விக்கடன் கழிந்தது..

ஆலை என்றால் சங்கம் இல்லாமலா?

வழுவழு தாளில் சோவியத் நாட்டின் புத்தகங்களில் படம்பார்க்க நுழைந்த கால்கள்...வாசிக்கவும் ஆரம்பித்த நாள்கள்.

பள்ளி முடிந்ததும் வேலைக்கான தேடல்..

ஒரு பெட்ரோல் நிலையத்தில் 6 ரூபாய் தினக்கூலி..

பில் போட அழைத்துச் சென்றவர்கள்..ஒரு துடைப்பத்தை கையில் கொடுத்து வீதியே கூட்டச்சொன்னார்கள்..

பெட்ரோல் நிலையத்தில் ஆரம்பித்த அம்பானிக்கனவு அம்போவென ஒரு நாள் முடிந்தது..

பண்டக சாலையொன்றில் வேலையிருக்கிறது எனச்சொல்லி கொஞ்ச நாள் அவர் கடையில் வேலை பார்க்க சொன்னார் ஒரு பெரியவர்..

சம்பள உயர்வு 8 ரூபாயானது..

காலையில் 100 லாட்டரி சீட்டு கொடுப்பார்கள் பேருந்து நிலையத்தின் ஒவ்வொரு பேருந்தாய் ஏறி சத்தம்போட்டு விற்கவேண்டும்..விற்றுமுடியவில்லை எனில் முதலாளி முறைப்பார்..சில நாள் சம்பளம் குறைப்பார்..

இந்த கோடைகாலத்தில் நான் என் துணையை சந்தித்தேன்..

அழகாகவும், ஆசிரியையாகவும் ஆகிவிட்டிருந்தார். என் ஆசை அவரை ஹெலிகாப்டர் வைத்தாலும் எட்ட முடியாத அளவில் தான் இருந்தது..

1986 களில் கலை இலக்கிய பெருமன்ற  மாதாந்திர கூட்டங்களில் அவர் கலந்து கொள்வார் என்ற துப்பு கிடைத்ததும்..சில வரிகளை கவிதை என்ற பேரில் எழுதிக்கொண்டு நல்ல கைலியை கட்டிக்கொண்டு காலையிலேயே போய்விடுவேன்.

கூட்டம் முழுவதும் ஒரு சொப்பன உலகில் உலவினானும் சம்பளம் கிடைக்காத சோகமும் இருக்கும்..

முக்கியமாய் என் வரிகளை சிலாகிக்கும் சில இதயங்களால் நான் ஆசிர்வதிக்கப்பட்டேன்.

வாழ்க்கைக்கான தேடலை விட என் துணையை அடைய வேண்டும் என்ற ஆவலாதியில் 21 ரூபாயுடன் வெளிநாடு போகும் உற்சாகத்தில் திருப்பூர் போய்விட்டேன்..

எனக்கான நேரம் எனக்கு முன்னே அங்கே சென்று காத்திருந்து என்னை கைபிடித்து அழைத்துப்போய் ஒரு பிரிண்டிங் ஆலையில் விட்டது..

வாரம் 50 ரூபாய் சம்பளம்.அதற்குள்ளே சாப்பாடு..எல்லாம்..

கண்ணின் அவளை பார்த்துவிட்ட நாள்களில் என்னை நரகத்துக்கு அனுப்பி வேலை செய்யச்சொல்லியிருந்தாலும் பார்த்திருப்பேன்.

முழுக்கையிலும் தேங்காய் எண்ணெய் தடவி விட்டு சாயம் கலக்கச்சொல்வார்கள். சரியான நிறம் எடுக்கும் அவரின் மூடுக்கேற்ப சில சமயம் ஐந்து நிமிடத்திலும் பல நாள்கள் பலமணி நேரங்களும் கை கலக்கிக்கொண்டிருக்கும். 

ஒரு வருடம் கழித்து ஒரு கம்பெனியில் கணக்கப்பிள்ளை என அழைத்து டீவாங்கித்தரும் வேலை...சம்பளம் 75 ரூபாய் வாரத்திற்கு..

சக்கையாய் விழும் இரவெல்லாம் கனவுகளில் காதலிக்க ஆரம்பித்து விடுவேன்..

இடையில் காதலி 5 புத்தகங்கள் போட்டு ஹெலிகாப்டர் தூரத்தை இன்னும் அதிகப்படுத்தி இருந்தார்..

நான் இன்லேண்ட் கடிதம் 10 எழுதினால் ஒரு அஞ்சலட்டையில் நன்றி என ஒரு பதில் வரும்.. அவர் நூல் வெளியிடும் நாள்களை நான் ஊருக்கு வரும் நாளாய் அமைத்துக்கொண்டு கம்பீரமாய் வந்து தலைகாட்டிவிட்டு கிளம்பி வருடம் முழுவதும் வைத்து சாப்பிடுவேன்.

நாள்கள் ஓடிய வேகத்தில் நான் சூப்பர்வைசர் ஆகி என் தம்பிகள், குடும்பம் என எல்லாரையும் திருப்பூர் அழைத்துச்சென்று விட்டேன்..

ஒரு தம்பி கணினி பயின்றான்...மற்ற தம்பி வேலைக்குப்போனான்..

குடும்பம் கொஞ்சம் தலையெடுக்க ஆரம்பித்த வேளையில் தம்பி நல்ல பழக்கங்களை மேம்படுத்தி ஒரு நிலைக்கு வந்துவிட்டான்..

வெறுமென விசாரிப்புகளாய் இருந்த என் கடிதங்களில் நான் என்னை உறுத்தாத அளவுக்கு வெளிப்படுத்தும் அளவில் வளர்ந்திருந்தேன்..

அவரை சந்தித்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தேவகணத்தில் என் நேசத்தை சொன்னேன்..

மறுத்து..பின் நீண்ட யோசனைக்குப் பிறகு சம்மதித்த அந்த நிமிடங்களின் நினைவு எப்போதும் மறக்க முடியாது.

அப்புறம் என்ன போராட்டம் தான்...

வீட்டில் மறுப்பு...திருமண எதிர்ப்பு எல்லாம் கடந்து கைபிடித்த நாளும் வந்தது..

தம்பி ஒரு திரைப்பட தயாரிப்பாளனாகி விட்டிருக்கிறான். இரண்டு தங்கைகள் மணமுடித்து விட்டார்கள்.

கடைசி தம்பி மாதம் 2 லட்சம் தரும் கணினிப் பணியில் இருக்கிறான்..

தங்கை சி.ஏ.முடித்து விட்டார்.

இரண்டு பெண்கள் எங்கள் தோளுக்கு வளர்ந்து விட்டார்கள்..

எழுத்துகளை கிட்டத்தட்ட மறந்திருந்த வேளைகளில் முத்துநிலவன் அய்யாவின் தொடர்ந்த தூண்டுதலால் எழுத ஆரம்பித்தேன்.

வலைப்பூவில் எழுத எழுத என் நட்புகள் விரிய ஆரம்பித்தது.

நான் உண்டு என் வேலை உண்டென உருண்ட நேரங்களை மாற்றிவிட்டது அன்பின் வலிமை.

முன்பு சில நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளனாய் போகும் போது எந்த அடையாளமுமில்லாத ஒரு ரசிகனாய் இருந்து வந்த என்னை, இப்போதெல்லாம் சிலரேனும் பார்த்து முறுவலிக்கிறார்கள்.

பரிசோதனையாய் சிலர் விழாக்களில் பங்குபெறவும் வைக்கிறார்கள்..

**மிக நீளமாய் எழுத வைத்திருந்த என் இதயக்குளத்தில் எறியப்பட்ட கற்களை சின்ன தூண்டில் மூலம் வளையங்களை ஏற்படுத்தி இருக்கிறார் .பரிவை.சே.குமார்.

சொல்வதற்கும்..வெல்வதற்கும் ஆலோசனைகள் ஏதுமில்லை என்னிடம்..

பிடித்தமான ஒரு குறள் உண்டு..

"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்"

முடியாதென எதையும் நினைக்காதீர்கள்... எல்லாம் முடியும்..

அன்புடன்..
மீரா செல்வக்குமார்.
www.naanselva.blogspot.com

செல்வக்குமார் அண்ணன் அவர்களின் 'என்னைப் பற்றி நான்' வாழ்க்கையை எதார்த்தமாய் பேசியது... நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் மனசுக்குள் சுழலவைத்தது.

நன்றி செல்வக்குமார் அண்ணா.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 20 ஜனவரி, 2017

வாடிவாசலுக்கு வாறீகளா...?

Image result for வாடிவாசல்
வாடி வாசலை முதல்வர் திறக்க வேண்டும் என்பதே தவறு... நானே திறப்பேன் என்பது அரசியல்...

இந்த போராட்டத்துக்கு அரசு என்ன செய்தது..?

என்ன செய்து கொண்டிருக்கிறது...?

இதே அவசர சட்டத்தை பொங்கலுக்கு முன்னர் கொண்டு வந்திருந்தால் நீங்கள் வாடிவாசலை திறப்பேன் என்று சொல்லும் முன்னர் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா?

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது ஆங்காங்கே உங்கள் ஆதரவு தந்தி டிவி சொல்வது போல் லேசான தடியடி (அதைக்கூட நீங்கள் சொல்லலைங்கிறது வேற விஷயம்) நடத்தி விட்டு நாங்களும் ஆதரவு என்றீர்களே... உண்மையான ஆதரவு கொடுத்திருந்தால் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா?

மெரினாவில் போராடியவர்களை அடித்து விரட்ட விளக்கை அணைத்து கேவல அரசு செய்தீர்களே... அங்கு விளக்கு வசதி செய்து கொடுத்திருந்தால் உங்களை நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா...?

அருகிலிருக்கும் கழிவறைகளை எல்லாம் பெண்கள் பயன்படுத்துகிறார்கள் என அவற்றை எல்லாம் மூடச் சொன்னீர்களே... மெரினாவில் கழிவறைகள் கட்டிக் கொடுத்திருந்தால் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா..?

மெரினாவுக்கு வாருங்கள் என்ற போது பதில் சொல்லாமல் தில்லிக்கு ஓடினீர்களே... மெரினா வந்து மக்களோடு மக்களாக இருந்து பேசிச் சென்றிருந்தால் உங்களை நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா..?

அலங்காநல்லூரில் போராடியவர்களுக்கு சாப்பாடு கொடுக்க விடாமல் தடுத்தீர்களே... அறப்போட்டத்துக்கு நாங்கள் ஆதரவு என சாப்பாடு கொடுக்காவிட்டாலும் கொடுக்க நினைத்தவரகளை தடுக்காமல் இருந்திருந்தால் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா...?

இவ்வளவு போராட்டம் நடக்கும் போது ஏதோ ஒரு தேசத்தில்... எங்கோ ஒரு மூலையில் நடப்பது போல் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தீர்களே... என் இனத்துக்கான போராட்டம் இது... இதில் வென்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம் என்று சொல்லியிருந்தீர்கள் என்றால் நாங்களே அழைத்திருப்போம்...

எங்களில் ஒருவராக கோடிகளை என்ன என் சொத்தையே தருகிறேன்... போராடுங்கள் என தனது கேரவான் வண்டிகளை மெரினா கொண்டு வந்து கழிவறைக்காக நிறுத்தி, போராட்டக் களத்தில் இதுவரை துணை நிற்கும் லாரன்ஸ் அவர்கள்...

உங்கள் அரசியலை கிழி கிழி என்று கிழித்து மக்களோடு மக்களாக இருந்து மெரினாவில் விளக்குமாறு பிடித்துக் கூட்டிய மன்சூர் அலிகான் அவர்கள்...

போராட்டக் களங்களில் பகல் இரவு பாராது கைக்குழந்தைகளுடன் கிடக்கும் எம் தாய்மார்கள்...

அரசியலோ என்னவோ சென்ற ஆண்டு ஒருவனாக போராடி இந்தாண்டு மக்களோடு நிற்கும் சீமான் அவர்கள்....

தன் சொத்தை விற்று சல்லிக்கட்டுக்காக போராடிய ஐயா ராஜசேகர் அவர்கள்...

சல்லிக்கட்டு என்பது தென்னகத்துக்கானது மட்டுமல்ல.. நம் பாரம்பரியம் அதன் அழிவு நாட்டு மாடுகளை அழித்து.. கார்ப்பரேட் களவாணிகளைக் உள்ளே கொண்டு வரும் என்பதை நகரங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சென்று இன்று தன் அரசுப் பதவியை ராஜினாமா செய்திருக்கும் சேனாதிபதி அவர்கள்...

அலங்காநல்லூரில் விதைத்த சிறு விதையை விருட்சமாக்கி, இது சல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல... எங்கள் விவசாயிகளின் இறப்பு, காவிரி, முல்லைப் பெரியாறு என எங்களை வஞ்சிக்கும் எல்லாவற்றுக்குமான போராட்டம் என்று சொல்லி போராட்டக் களத்தில் கிடக்கும் லட்சோப லட்சம் இளைஞர்கள், இளைஞிகள், பெரியவர்கள், பெண்கள், மாணவர்கள், மாணவிகள், குழந்தைகள் இவர்களை எல்லாம் விடுத்து மானங்கெட்ட நாங்கள்... உங்களை வாடி வாசலுக்கு அழைப்போம் என்று நினைத்தீர்களா...?

உயிரைக் கொடுத்து போராட்டம் நடத்தும் இந்த லட்சோப லட்சத்தில் மதம், சாதி பாராது... பனியில் பூத்துக் கிடந்த, கிடக்கின்ற எம் ரத்தங்களில் எவரேனும் சிலருக்கே இந்த வருட வாடி வாசல் திறப்பு என்பது கொடுக்கப்பட வேண்டும்... கொடுக்கப்படும்...

உங்களுக்கு...
அவசர சட்டம் என்பதை விடுத்து சல்லிக்கட்டுக்கான நிரந்தர தடையை நீங்கி, நம் தமிழினத்தின் பெருமையை நிலைநாட்டும் பட்சத்தில் சின்னம்மாவின் முதல்வர் ஆசையில் இருந்து தப்பித்து முதல்வராகத் தொடர்ந்தால் நிரந்த முதல்வராக மட்டுமல்ல அடுத்தாண்டு வாடிவாசல் திறக்க உங்களை மலர்தூவி அழைப்போம்...

செய்வீர்களா...? செய்வீர்களா...?

மக்களே தில்லி போய் 9 நிமிடம் பேசி ஒருநாள் உக்காந்து அவசரசட்டம் ஒரிரூ நாளில் கொண்டு வரப்படும் எனச் சொல்லும் நம் முதல்வரை வாடி வாசல் திறக்க அழைப்போம் என்பதை தயவு செய்து மனதிலிருந்து அகற்றுங்கள்... முதல்வர் வரவேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் அவர் பின்னே நாங்கள்தான் சல்லிக்கட்டு அவசரசட்டம் போட்டோம் என பொன்னாரும் தமிழிசையும் மரியாதை வேண்டி மல்லுக்கு நிற்பார்கள்... வேண்டாம் இந்த அரசியல்... மக்கள் எழுச்சி நாயகர்களை முன்னிறுத்துங்கள்...

நம் போராட்டக்களத்தில் இருக்கும் இனமான உறவுகளுக்கு உங்கள் அழைப்பைக் கொண்டு செல்லுங்கள்...

இதையெல்லாம் விட நாளைய இளைய சமுதாயம்... சல்லிக்கட்டு வேண்டும் என்று தங்கள் தாயின் தோளில் சாய்ந்து கொண்டு பேசிய மழலைச் செல்வங்களுக்கு உங்கள் முன்னுரிமை இருக்கட்டும்....

நன்றி.
-'பரிவை' சே.குமார்

புதன், 18 ஜனவரி, 2017

நாளைய விடியல் நமதாகட்டும்...

சிறு விதை மிகப்பெரிய அறப்போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருப்பது தமிழனாய் நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். கடலலை போல் மக்கள் வெள்ளம்... எங்கு நோக்கினாலும் 'சல்லிக்கட்டு வேண்டும்' என்ற குரல்கள்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருவில் இறங்கிப் போராடுவது சல்லிக்கட்டுக்காக மட்டும் என்று நினைத்தால் நினைப்பவருக்கு ஏமாற்றமே... இந்தப் போராட்டம் வைக்கும் தீ இனி தமிழினத்துக்கு எதிராக எது வந்தாலும் பற்றி எரியும் என்பதில் மாற்றமில்லை.

Image result for மெரினா போராட்டம்

தொடரும் அறப்போராட்டத்தில் சில இடங்களில் டவர்களிலும் கட்டிடங்களும் ஏறி 'சல்லிக்கட்டுக்கான தடையை உடை...' என்று தற்கொலை முயற்சியில் இறங்க முயல்கிறார்கள்... அப்படி நினைக்காதீர்கள். உயிரை விடுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை... நம் உரிமை... நம் பண்பாடு... நம் கலாச்சாரம்... என்பதில் உறுதியாய் இருங்கள்... உங்கள் உயிரை இழந்துதான் உரிமையைப் பெற வேண்டும் என்பதில்லை.... உங்கள் உயிரைக் கொடுத்து உரிமையைப் பெற நினைத்து பெற்றவர்களை தவிக்க விட்டுச் செல்லாதீர்கள். போராட்டம் என்பது உயிரினை வைத்து அல்ல... நம் உணர்வை வைத்துத்தான் செய்ய வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் நம் அறப்போராட்டத்தின் வேகத்தைத் தடுத்து வேறு பாதையில் பயணிக்க வைத்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்... நம் அறப்போராட்டம் இன்னும் தீவிரமாகட்டும். 

எம்.ஜி.ஆர். மீது நமக்கும் பற்றுண்டு... அவரின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நடக்க வேண்டும்தான்.... அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லைதான்... இருந்தாலும் தமிழகமே இரண்டு நாட்களாக தெருவில் கிடக்க, ஒரு அரசுக்கு... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு... மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொல்லி வோட்டு வாங்கி அரசமைத்த மறைந்த முதல்வரின் அன்புக்குப் பாத்தியமான நம் முதல்வர் மக்களுக்காக நான் என்பதை மறந்து தன் பதவியைக் காத்துக் கொள்ள, சின்னம்மா காலில் விழுந்து கிடப்பது மட்டுமல்ல, உரிமைக்காக மக்கள் போராடும் போது ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் எப்படி மக்களுக்கான முதல்வராக இருப்பார். போராட்டக் களத்துக்கு வரமுடியாத அளவுக்கு அவருக்கு அப்படி என்ன வேலை... இன்று தில்லி செல்கிறேன்... உரிமை மீட்டு வருவேன் என்று சொல்வதை எப்படி ஏற்பது...? அதைவிடக் கொடுமை தமிழர்களின் உணர்வுகளுக்கு எப்போதும் துணை நிற்போம் என்று பல நாள் போராட்டத்துக்குப் பின் இன்று சொல்வது நகைப்புக்குரியதுதானே... இதில் என்ன உணர்வு இருக்கிறது...?

நாங்களும் போராட்டத்தில் கலந்து கொள்வோம்... மக்களுக்கு ஆதரவா இருப்போம் என்று சொன்ன எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் எங்கள் பண்பாட்டுக்கு... எங்கள் உணர்வுக்கு... எங்கள் உரிமைக்கு மதிப்பில்லாத நாட்டில் எனக்கெதற்கு பதவியும் பவுசும் என்று சொல்லி ராஜினாமா செய்து விட்டு வந்து மக்களோடு மக்களாக உரிமை மீட்க உட்கார முடியலை... எனக்கு பதவி வேண்டும்... பணம் வேண்டும்... என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் இருந்து தெரியவில்லையா அவர்களுக்கு பண்பாடும் உரிமையும் தேவையில்லை... பணமும் பகட்டும்தான் தேவை என்பது. இதற்குத்தான் அலங்காநல்லூரில் இன்று மதியம் வைத்தான் ஆப்பு... இன்று அவசர சட்டம் போடு... இல்லையேல் எல்லாரும் ராஜினாமா பண்ணுன்னு வாடிவாசல்ல வச்சி வச்சான் ஆப்பு... நம்ம ஆட்கள் பண்ணுவானுங்க... ஒரு பய வாடி வாசல் பக்கம் போகமாட்டானுங்க... மக்கள் நல்ல யோசிக்கிறாங்க. இந்த வேகம்... இந்த விவேகம் இனி எல்லாத்திலும் தொடரணும்.

நடிகர்களில் சிலர் உண்மையிலேயே இன உணர்வோடு போராட்டக் களத்துக்கு வருகிறார்கள்.... ஆனால் இருபதாம் தேதி போராட்டம் பண்றோம்ன்னு அறிக்கை விடும் நடிகர்கள் இதுவரை வாய் திறக்காமல் இப்போதுதான் வாய் திறக்கிறார்கள்... காரணம் அவர்களின் படம் ஓடவேண்டுமே... பொழப்பு நடக்கணுமே... என்பதால்தான்... இன்று நியூஸ்-7 தொலைக்காட்சியில் பேசிய  இயக்குநர் பாண்டிராஜிடம் அரசியல்வாதிகளை ஏற்காத மக்கள் திரையுலகினரை ஏற்கின்றனரே என்ற கேள்வி கேட்கப்பட்டபோது அவர் சொன்னது, எங்காளுக பலரை விரட்டிட்டாங்க.. அவங்களுக்கு இவன் உண்மையோட வர்றான்... இவன் பேர் வாங்க வர்றான் தெரியுங்க... என்றார். என்னங்க நீங்களே இப்படிச் சொல்றீங்க என்றபோது அதுதாங்க உண்மை... நான் கூட இங்க இயக்குநர் பாண்டிராஜாவாக வரச் சொன்னால் வந்திருக்கமாட்டேன்.... விவசாயி பாண்டிராஜாத்தான் வந்திருக்கிறேன்... அதைத்தான் ஆரம்பத்தில் சொன்னேன் என்றார். அதுதான் உண்மை... அவரின் பேச்சில் கலப்படம் இல்லை. அதேபோல் ராகவா லாரன்ஸ், மன்சூர் அலிகான், இயக்குநர் அமீர், போன்றவர்களின் நெஞ்சத்தில் போராட்ட குணமிருக்கு...  தன்மான உணர்வோடு பேசுகிறார்கள்... ஆனால் விஜய், விஷால், தனுஷ் என சிலரோ இப்போது வேகவேகமாக ஆதரவுக்கரம் நீட்டுவது எதற்கு என்பதை பாண்டிராஜ் சொன்ன வார்த்தைகளின் மூலம் அறியலாம் அல்லவா..?

Image result for சல்லிக்கட்டு போராட்டம்

போராட்டக்களத்தில் இளைஞர்களும் மாணவர்களும் கேட்கும் கேள்விகள் சாட்டையடி... சல்லிக்கட்டுப் பிரச்சினை என்றில்லை... எந்த ஒரு பிரச்சினைக்கும் இப்படி ஒரு அறப்போராட்டத்தைக் கையில் எடுத்தால் உலகமே திரும்பிப்பார்க்கும் என்பதை உணர வைத்த போராட்டம் இது. எத்தனை தில்லாலங்கடி வேலைகள்... மூன்று நாட்களாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு ஆங்காங்கே தடியடி நடத்தச் சொல்லி விட்டு இன்று உங்கள் போராட்டத்தில் நாங்களும் கை கொடுப்போம்... உங்களின் உணர்வுகளுக்கு அரசு எப்போது ஆதரவுக் கரம் நீட்டும் என்றெல்லாம் நீலிக்கண்ணீர் விட்டு நல்லவன் போல் நடிப்பதை என்ன சொல்வது..? பிரதமருக்குத்தான் தமிழகம் இருப்பது தெரியவில்லை... முதல்வருக்கு தமிழகத்தில் இருப்பதே தெரியவில்லை போலும்... எங்கள் களத்துக்கு வாருங்கள் என்று மெரினாவுக்குத்தானே கூப்பிட்டார்கள்... அலங்காநல்லூருக்கு இல்லையே... அப்படியிருந்தும் அவரால் போராட்டக்களம் செல்ல முடியவில்லை என்பது கேவலமானது. தன் இனம் போராடும் போது மற்ற நாட்டில் மக்கள், தலைவர்கள்... இங்கு வந்து கிரிக்கெட் மட்டும் விளையாடிச் செல்லும் வீரர்கள் உரிமையோடு குரல் கொடுக்கும் போது இவரால் செல்ல இயலவில்லை... உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டாம்... உணர்வுக்கு மதிப்பளிக்கலாமே... அப்படி மதிப்பளித்து இருந்தால் இன்று போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று சொன்னதும் அவனவன் கிளம்பியிருப்பானே... இப்ப என்ன சொல்றான் நீ செய்யி நான் கிளம்புறேன்னு இன்னும்  தீவிரமாக்கிவிட்டான் போராட்டத்தை.

அடிக்கடி சொல்வதுதான் நம் போராட்டம் அறப்போராட்டம்... தற்கொலை முயற்சிகளை...வீண் விவாதங்களை முன்னெடுக்காதீர்கள்... அரசியல்வாதிகளை அண்ட விடாதீர்கள்... சினிமாக்காரனை தரம் பிரியுங்கள்... தனக்கான பெயரை தக்க வைக்க வரும் எவனையும் உள்ளே விடாதீர்கள்... குளிரில் கொசுக்கடியில் கைக்குழந்தைகளுடன் கிடக்கும் தாய்மார்களைப் போல்... கல்லூரி மாணவ மாணவிகளைப் போல்... இளைஞர்களைப் போல்... இளைஞிகளைப் போல்... பெரியவர்களைப் போல்... எந்தப் பிரபலத்தாலும் அரசியல்வாதிகளாலும் கிடக்கமுடியாது என்பதை உணருங்கள். இது தானாக சேர்ந்த கூட்டம் முன்னெடுத்த... உலகையே வியக்க வைத்த மாபெரும் போராட்டம்... இதை அரசியல்வாதிகள் கூத்தாடிகள் கையில் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்காதீர்கள்.

போராட்டக்களத்தில் இன்னும் இன்னுமாய் நம் சொந்தங்கள் கூடிக்கொண்டுதான் இருப்பார்கள்... ஒரு நல்ல முடிவு கிடைக்கும் வரை... உலகம் சுற்றும் வாலிபனைப் பார்க்கப் போன ஆயிரத்தில் ஒருவன் நல்ல முடிவோடு வரும்வரை யாருக்கும் அடிபணியாதீர்கள்... அராஜகத்தை கையில் எடுக்காதீர்கள்... போராட்டக்களம் உலகை வியக்கச் செய்யட்டும்.. நம்மில் விலகி நின்று கைகொட்டிச் சிரிக்கும் நம் தமிழர்களின் நெஞ்சங்களில் தமிழுணர்வை விதைத்துச் செல்லட்டும்...

நாளைய விடியல் நம்பிக்கையான விடியலாய்... நமக்கான உரிமையை... உணர்வை மீட்ட விடியலாய் அமையட்டும்...
-'பரிவை' சே.குமார்.

திமிலில் துள்ளும் வீரம்


ல்லிக்கட்டுக்கான போராட்டம் பல நாட்களாகத் தொடர்ந்தாலும், பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆங்காங்கே சல்லிக்கட்டுகள் தடையை மீறி நடத்தப்பட்டன. இது பீட்டாவுக்கு செருப்படிதான் என்றாலும் நம் கலாச்சார, பண்பாட்டின் அடையாளத்தை யாரோ ஒருவருக்காக பயந்து பயந்து ஒளிந்து ஓடி நடத்தியதில் மானத் தமிழனாய் மார்தட்டிக் கொள்ள முடியவில்லை. எங்கள் உரிமை... எங்கள் பாரம்பரியம்... நாங்கள் ஏன் அவர்களுக்குப் பயப்படணும்... அடங்கிப் போகணும்... என அலங்காநல்லூர் வாடிவாசலில் திங்களன்று கூடிய சிறு கூட்டத்தின் மீது போலீஸ் தடியடி நடத்தி தொடங்கி வைக்க, மாணவர்கள் விதைத்த விதை நேற்று வேர்விட்டு இன்று விருட்சமாக வளர்ந்து தமிழகமெங்கும் வேள்வித் தீயில் தகித்துக் கொண்டிருக்கிறது.

வன்முறை சிறிதும் கலக்காமல் மிகவும் அமைதியாக அறவழிப் போராட்டத்தைக் கையில் எடுத்த மாணவர்கள், மாலை ஐந்து மணிக்கு மேல் கேட்டதெல்லாம் இரண்டு வருடமாக வாடிவாசலில் மாடு விடப்படலை... ஐந்து மாடுகளை மட்டும் அதன் மூலம் அவிழ்த்து மட்டும் விடுங்கள் போதும் என்றார்கள். மேலும் நேரம் செல்லச் செல்ல இரண்டே இரண்டு மாடுகளை வாடிவாசல் வழியாக பிடித்து வந்தால் போதும் என்றார்கள். எதற்கும் அசையாத போலீஸ்... அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை... ஆளுபவன் சொல்வதைச் செய்ய வேண்டியது அவர்களின் வேலை... தலையெழுத்து... தமிழுணர்வு உள்ளவன் எல்லாம் தடியைத் தூக்கிக் கொண்டு நிற்க வேண்டிய நிலை என்ன செய்வான்..? ஆளும் அரசில் யார் முதல்வர் என்ற போட்டியோடு, மத்திய அரசுக்கு சாமரம் வீசிக்கொண்டு கர்நாடகக்காரன் காவிரியில்  நீதியை மதிக்க மாட்டான்... கேரளக்காரன் முல்லைப் பெரியாரில் நீதியை மதிக்கமாட்டான்... ஆனால் நாங்கள் மட்டும் நீதியை மதிப்போம்... ஏனென்றால் எங்களுக்கு சொத்துக் குவிப்பு வழக்கு இருக்கே என்று செத்துக் கிடக்கும் அரசு எதையும் செவி சாய்க்கவில்லை.

போராட்டக் களத்தில் இருந்தவர்களை அதிகாலையில் அள்ளிக் கொண்டு போகச் சொன்ன அரசு, மாணவர்கள் கையில் எடுத்த பிரச்சினை எப்படிப் பரவும் என்பதை அறியாமலா இருந்திருக்கும். என்ன செய்யப் போகிறார்கள்... நாம் ஊமையாய் இருப்போம்... புரட்சித் தலைவர் நூற்றாண்டில் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்ப்போம் என சென்று விட்டார் வேலைக்காரி காலில் விழும் முதல்வர்... இவர் பேசுவதில் தனியொருவன்... செயலில் ஆயிரத்தில் ஒருவன் கூட இல்லை என்பதை நாம் அறிவோமே... நேற்றுக் கைதான மாணவர்களை விடச் சொல்லி மெல்ல மெல்ல மெரினாவில் கூடிய மாணவர்களுக்கு ஆதரவாய் தமிழகமே திரள, எல்லா இடமும் போராட்டகளம் ஆனது. எங்கள் உரிமையை மீட்டெடுத்துத் தாறேன் என்று சொல்லுங்கள் என்ற கோரிக்கையை கேட்க நாதியில்லை... நம் நாதியற்ற தமிழகத்தில்....இந்த அறப்போராட்டம் இன்னும் வீரியம் எடுக்கக் கூடாது என்பதற்கான முயற்சியில் அரசும் அதிகாரிகளும்... இந்த வீரியத்தை கட்டுக்குள் வைக்க விடமாட்டோம் என்று மாணவர்களும் இளைஞர்களும் ஆண்களும் பெண்களும் ஏன் குழந்தைகளும் வீதியில்...

பொங்கல் வரை நீங்க நடத்துங்க நாங்க இருக்கோம் என்றவனெல்லாம் திங்களன்று வெளியில் வரவில்லை... நான் மத்திய அமைச்சர்... நான் போராட்ட களத்துக்கு வரமுடியாது என்கிறான் ஒருவன்... பீட்டாவுக்கு அனுமதி அளித்து பணம் பண்ணிக் கொண்டவன் நாங்கள் ஆட்சியில் இருந்தால் நடத்துவோம் என்கிறான்... நாங்கள்தான் மக்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கிறோம் என்கிறாள் ஒருத்தி... இப்படிப் பேசும் இவர்கள் எல்லாம் எங்கள் பாரம்பரியம் காக்கப்படவேண்டும்... நாங்களும் போராட்டக் களத்தில் இருப்போம்... எங்களுக்கு இந்த எம்.பி., எம்.எல்.ஏ பதவியெல்லாம் வேண்டாம்... நான் தமிழன் என்று எவனும் இதுவரை இறங்கி வரவில்லையே... இவனுக எல்லாம் மக்கள் பிரதிநிதியாம்... கேட்டால் பணம் வாங்கிக் கொண்டுதானே ஓட்டுப் போட்டீர்கள் என்கிறார்கள்... அவன் சொல்வதும் சரிதானே... நம் தலையில் நாம்தானே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டோம். இனியாவது விழித்துக் கொள்வோம்.

மாணவர் பிரச்சினையில் தாங்களும் ஆதரவு அளிப்பது போல் உள் நுழைந்து தங்கள் பதவியையும் பவுசையும் தக்க வைத்துக் கொள்வோம் என்ற மனப்பால் குடித்து வந்த ஸ்டாலின், சரத்குமார் போன்றோரை இது மாணவர்களின் போராட்டக்களம்.... இங்கு நுழைந்து அரசியல் களம் ஆக்காதீர்கள்... உங்கள் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்று சொன்ன என் தமிழ் இளைஞனை... என் சொந்தத்தை... என் இன ரத்தத்தின் திமிலை... திணவெடுக்கும் திமிரைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு போராட்டம் தொடரும் வரை இருக்கட்டும். எந்த பச்சோந்தியையும் நமக்குள் நுழைய விடாதீர்கள். இங்கு அவர்களுக்கு ஆதரவில்லை அங்கு ஆதரவுண்டு என்ற நிலைப்பாட்டுக்கு வராதீர்கள்... எல்லா இடத்திலும் அரசியல்வாதி, பிரபலங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள்... அலங்காநல்லூரில் அனுமதி... மெரினாவில் மறுப்பு என்பதையும் அரசியலாக்குகிறார்கள் சில முகநூல் நண்பர்கள். நமக்கு நாம்தான் எதிரி என்பதை உணருங்கள்... தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான முன்னெடுப்புக்களை வையுங்கள். இன்று ஆடு நனையுதேன்னு வருத்தப்படும் பச்சோந்திகள் நம்மை வைத்து தன்னைக் குளிர்வித்துக் கொள்ள நாடகம் போடுகிறது. விடாதே தமிழா.

நான் ஆதரவு... நான் எங்கே எதிர்த்தேன்... தமிழுணர்வு என்னக்குள்ளும் இருக்கு... என்று நேற்று போட்டி போட்டி பேட்டி கொடுத்த நடிகனின் ஆசை வார்த்தைக்கு அடிபணிந்து விடாதே என் தமிழா... அவனெல்லாம் இவ்வளவு தூரம் வரும் என்று நினைக்கவில்லை... பீட்டாவுக்கு ஆதரவு என்பது என் சொந்த நிலைப்பாடு... சல்லிக்கட்டு என்று வரும்போது நான் பீட்டா இல்லை என பீலா விடுகிறான்... பீட்டாவை விட்டு வெளியேறிவிட்டேன் என எந்த நாயும்.. மன்னிக்கவும் நாய் நன்றியுள்ள விலங்குதானே... இவனுகளுக்கு தேவை பணம்... அவன் படம் வரும்போது கட் அவுட் வைக்கவும் பாலாபிஷேகம் பண்ணவும் ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்துப் பார்க்கவும் மட்டுமே நாம் வேண்டும்... இந்தப் போராட்டம் தொடர்ந்து எழுச்சி பெற்றால் நம்ம பொழப்பு நாறிப் போயிரும் என்பதால் இப்போது நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஆதரவு என அள்ளிவிடுகிறார்கள்... நம்பி விடாதீர்கள்... அரசியல்வாதிகளை தள்ளி வைத்தது போல் இவர்களின் கரங்களையும் தட்டிவிடுங்கள்... பீட்டாவை எதிர்க்கிறோம் என்று சொல்லும் இவர்கள் இதுவரை தங்கள் உறுப்பினர் அட்டையைத் தூக்கி எரியலையே.. பின்ன என்ன எதிர்ப்பு...  நம் உரிமை... நமக்கான போராட்டம்... எவன் தயவும் நமக்கு வேண்டாம்... நாம் நாமாகவே போராடுவோம்.

கரண்டை நிறுத்துவது... மிரட்டுவது.... அடிப்போம் எனச் சொல்வது இதெல்லாம் மிரட்டி நம்மைப் பணிய வைக்கச் செய்யும் முயற்சிகள். நாம் இனமானத்தோடு சாதி, மதம் துறந்த தமிழர்கள்... எதையும் எதிர்க்கொள்வோம். துணை ராணுவம் வருகிறது என்கிறார்கள்...தஞ்சாவூர் பகுதி போலீசாரெல்லாம் சென்னை வரவேண்டும் என்ற செய்தியெல்லாம் பரவிவருகிறது... இதையெல்லாம் செய்ய முடிந்த அரசு, மாணவர் போராட்டத்தைக் கணக்கில் கொண்டு அவசர சட்டம் கொண்டு வரும்படி மத்திய அரசை கேட்க முடியாதா என்ன...? வழக்கு நீதி மன்றத்தில் இருந்தால் என்ன... ஒரு இனமே போராடும் போது அதன் தலைமையும் அந்த மாநிலத்தின் மீடியாக்களும்...(நியூஸ் 7 நீங்கலாக) மௌனம் சாதிப்பது எதற்காக,,,? யாருக்காக...? விஜயகாந்த் துப்பியதில் தவறேயில்லை...

முதல்வர் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சொல்கிறார்... முதல்வர் என்ன கோமாவிலா இருக்கிறார்... இல்லை சின்னம்மா காலில் விழுந்து அறிக்கை விடலாமா எனக் கேட்டுக் கொண்டிருக்கிறாரா...? வெட்கக்கேடு. மாணவர்களை விடுவித்து விட்டோம் என போலீசார் சொல்வதையும் நம்பாதீர்கள். அந்த மாணவர்கள் வந்தால் மட்டுமே உறுதி செய்யுங்கள். அமைச்சர்களை தேடிச் செல்லாதீர்கள்... அவர்கள் நம்மைத் தேடி வரச் செய்யுங்கள்.

தேசியக்கொடியை எரிப்போம்... இந்தியாவை வெறுப்போம் என்பதெல்லாம் வேண்டாம்... இதுபோல் நம் போராட்டம் திசை திருப்பப்படுமானால் அது தமிழ்த் தீவிரவாதிகள் என்ற நிலைக்கு கொண்டு வந்துவிடும்... இது நம் பண்பாடு, பாரம்பரியம் காக்க அறவழிப் போராட்டம் இதை இந்த வழியிலேயே நகர்த்தி வெற்றி பெறுவோம். ஒருவேளை வெற்றி கிடைக்கவில்லை என்றால் வரும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு கருப்பு தினமாக  அனுசரிப்போம், அப்போது தெரியும் தமிழன் யார் என்பது.. அதுவரை அறவழிப் போராட்டத்தை அறவழியிலேயே கொண்டு செல்வோம்.

அரசியல்வாதிகளை நம்மோடு அமர விட வேண்டாம்...

நடிகனை நமக்காக குரல் கொடுக்கச் சொல்ல வேண்டாம்...

தேசியக் கொடியை அவமதிக்க வேண்டாம்...

அமைச்சர்களிடம் பேசுகிறோம் என்று அவர்களை நாடிச் செல்லாதீர்கள்...

யாராகினும் பொதுவெளியில் வந்து பேசச் சொல்லுங்கள்.

நாம் வீரத்தமிழர் பரம்பரை என்பதை இந்த வீரியமிகு போராட்டத்தில் காட்டுவோம்...

மறத்தமிழன் மட்டுமல்ல... மானத் தமிழன்... வீரத்தமிழன்... உலகையே ஆண்ட வெற்றித் தமிழன் நாங்கள் என்பதை உலகுக்கு நிரூபிப்போம்.

மாட்டை துன்புறுத்துபவன் நாங்கள் அல்ல... எங்கள் வீட்டுச் செல்லங்களின் திமிலைத் தடவி ஏறு தழுவுதல் நடத்துபவர்களே நாங்கள் என்பதை நிரூபிப்போம்.

சிங்கத்தை அடக்கி ஆண்ட பரம்பரைதான் நாங்கள் என்பது இப்போராட்டத்தில் நிரூபிப்போம்...

தமிழனின் போராட்டம் வெல்லட்டும்... நம் பாரம்பரியம் காக்கப்படட்டும்... இந்த விதை சல்லிக்கட்டோடு மட்டும் நிற்காமல் விவசாயிகள் சாவு, மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை ஒழித்தல், நதிநீர் பிரச்சினைகள் என எல்லாவற்றிற்கும் வேர் விடட்டும்...

-'பரிவை' சே,குமார்.

தற்போதைய சூழல் தமிழனுக்கான குரல் கொடுக்கும் நேரம் என்பதால் இந்த வாரம் போட வேண்டிய 'என்னைப் பற்றி நான்' வெள்ளி அல்லது சனியில் பதியப்படும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளி, 13 ஜனவரி, 2017

சல்லிக்கட்டு நம் உரிமை


ஞ்சு விரட்டு...

எருது கட்டு...

வடமாடு...

ஏறுதழுவுதல்...

மாடுபிடி விழா...

என ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமாக அழைத்தாலும் எல்லாமே ஒன்றுதான் அது ஆண்டாண்டு காலமாய் தமிழர்கள் விளையாடும் வீர விளையாட்டு. நம் மண்ணின் கலாச்சாரம்... உலகாண்ட மன்னர்கள் போற்றிக் காத்த வீர விளையாட்டு. இந்த விளையாட்டை ஒட்டுமொத்தமாக சல்லிக்கட்டு என்று சொல்லவது வழக்கு. இது நம் மாநிலத்தின் அடையாளம்... வந்தேறிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது நம் மண்ணின் அவமானம். தமிழனின் கலாச்சாரம் வேண்டாமென்றால் அவன் மூலமாக வரும் வருமானம் மட்டும் வேண்டும் என்று சொல்லும் பஞ்சம் பிழைக்க வந்த பக்கத்து மாநிலத்து மனிதப் பதர்கள் எல்லாம் நம் கலாச்சாரம் அறியாது எதிர்ப்புக் குரல் கொடுப்பதுடன் கருத்துச் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

நாட்டு மாடு... அது நம் வீட்டு மனிதர்களில் ஒன்று என்பதை அதனுடன் சிறுவயதில் இருந்து பழகிய, பாசத்துடன் நேசித்த ஒருவனுக்குத்தான் தெரியும். களத்தில் மூர்க்கமாய் நின்று விளையாடும் மாட்டை ஒரு சிறு குழந்தை பிடித்து அதன் மீதேறி விளையாடுவதைப் பார்த்து ரசித்து அனுபவித்திருந்தால்தான் தெரியும். எங்கள் மாடுகள் எங்கள் குழந்தைகள் என்று ஒவ்வொரு விவசாயியும் மாடுகளுடன் உறவாடுவதை நேரில் பார்த்திருந்தால் தெரியும் மாட்டுடனான நாட்டானின் நேசம்.  தன் நாவால் முகத்தில் நக்கிக் கொடுக்கும் மாட்டின் அன்பை அனுபவித்திருந்தால்தான் தெரியும் அவர்களுடன் அவை கொண்டிக்கும் அன்பின் ஆழத்தை... குடும்பத்தில் ஒருவனாய் / ஒருத்தியாய் வளர்க்கப்படும் மாட்டோடு கொண்டுள்ள பிணைப்பை எழுத்தில் கொண்டு வருவது சாத்தியமில்லை.

சல்லிக்கட்டு வேண்டும் என்று தமிழன் உலகமெங்கும் போராடுகிறான். சல்லிக்கட்டு நடக்கக்கூடாது என பீட்டா என்றும் விலங்குகள் நலவாரியம் என்றும்  சொல்லிக்கொண்டு ஒரு மக்களின் கலாச்சாரம் என்ன, அது எப்படிப்பட்டது என்பதை அறியாமல் எங்கோ இருந்து கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்கும், நம் அடையாளத்தை அழிக்க நினைக்கும் ஒரு சிலருக்கு நம்மிலும் சிலர் சொம்பு தூக்குவதுதான் வேடிக்கை... வேதனை. கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளின் கூவலுக்கு செவி மடுக்கும் அரசு ஏழைகளின் குரலை ஏறெடுத்துப் பார்க்குமா என்ன..? அவர்களுக்கு வேண்டியது பணக்காரனும் கார்ப்பரேட்டும் மட்டுமே.  வீணாப் போன விவசாயியும் அவனின் பாரம்பரியமும் அவர்களுக்கு எதுக்கு...? ஓட்டுப் போட மட்டுமே நாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் என்பதைவிட காசுக்கு அடிமையாகி 200, 500க்கும் நம் சுயத்தை விற்பதால்தான் இன்று நம்மை செல்லாக்காசாக மதிக்கிறார்கள். நாம் தரம் தாழ்ந்து போக அரசியல் வாதிகளும் கார்ப்பரேட் அடிமைகளும் மட்டுமல்ல காரணம்... முழு முதற்காரணம் சுயம் இழந்த நாமே.

எங்கள் பாரம்பரியத்தை, எங்கள் கலாச்சாரத்தை காக்க வேண்டும்... எங்கள் உரிமையைப் பறிக்கும் செயலுக்கு நாங்கள் ஏன் அடிபணிய வேண்டும் என நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவருமே கூறவில்லையே... நானும் போராடுவேன்... ஆனால் மத்திய அமைச்சராக இருக்கிறேன் என்கிறான் ஒருவன்... தடையை மீறி நடத்தினால் அரசைக் கலைக்க வேண்டும் என்று சொல்கிறான் மற்றொருவன்... கெடக்கிறது கெடக்கட்டும் கெழவியைத் தூக்கி மனையில வையின்னு அவன் ஆத்தாவோட தங்கச்சி... சின்ன நொம்மாவைத் முதல்வராக்குவேன்... இல்லைன்னா பிரதமராக்குவேன்... அதுவும் இல்லை தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்றால் குடியரசுத் தலைவி ஆக்குவேன்னு இன்னொருத்தன் சொல்றான். இவனுகள் எல்லாருக்கும் பதவி வெறியும் பண வெறியும்தானே ஒழிய பாரம்பரியம் இருந்தா என்ன கழுத அது தலையில இடி விழுந்தா என்னங்கிற நினைப்பு மட்டுந்தான்.

கிரண்பேடின்னு ஒரு அம்மா, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பிஜேபிக்கு போயி நம்ம பாண்டிச்சேரியில கவர்னரா இருந்துக்கிட்டு பண்ற அலப்பறை தாங்க முடியலை. மாட்டை கொடுமைப் படுத்துறதை வீடியோவுலதான் பார்த்தாராம்... அதை தடை பண்ணனுமாம்.. ஆர்.ஜே.பாலாஜி நாக்கைப் புடுங்கிற மாதிரி  ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேருக்கு நேர் கேட்டான். அப்போ அந்தம்மானால பேச முடியலை. எப்படி பேசும்... நல்லது செய்யணும்ன்னு நினைக்கிறவன் போராடினா அதுக்கான காரணத்தை பயமில்லாமல் பேசுவான்... அவனால் பேச முடியும்... அது என்ன கலாச்சாரம் என்ன பாரம்பரியம் என்றெல்லாம் தெரியாமல் கைக்கூலி வேலை பார்க்கும் இந்தம்மாவெல்லாம் தமிழனின் கேள்விக்கு எப்படி பதில் சொல்ல முடியும். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானாய் பீட்டாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்து நாட்டு மாட்டை , தமிழனின் பாரம்பரியத்தை அழிக்கணும்ன்னு தீவிரமாக இருக்கிற கருங்காலியில இதுவும் ஒன்னு... அது எப்படி பதில் சொல்லும்... கிரேட் பாலாஜி.

ஒரு பக்கம் இளைஞர்களின் எழுச்சி, மாணவர்களின் வேகம் என நம் உரிமை காக்க போராட்டக் களமாக தமிழகம் மாறுவதில் சந்தோஷம்தான்... இதே வேகம்... நம்மிடம் ஓட்டு வாங்க வரும் அரசியல் நாதாரிகளை விரட்டுவதில் இருக்கவேண்டும்... இனிமேலாவது படித்தவனாக, பண்புள்ளவனாக , நம்மில் ஒருவனாக, பாரம்பரியத்தை பாதுகாப்பவனாக தேர்ந்தெடுக்க வேண்டும். காசுக்காக நம்மை இழந்தது போதும்... அடிமைத்தனத்திலிருந்து வெளியே வர வேண்டும். பிழைக்க வந்து நம்மை அதட்டிப் பார்க்கும் விஷால் போன்ற விஷ ஜந்துக்களை நாட்டை விட்டே விரட்ட வேண்டும். மோசமானவனாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் சிம்பு போன்றவர்களை நாம் மதிக்காவிட்டாலும் மிதிக்காமலாவது இருக்க வேண்டும். கேரளாவில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ் நடித்த படம் வெற்றி பெற வேண்டும் என போஸ்டர் அடிப்பதை விட்டு விட்டு நம் இனம், நம் மொழி, நம் பாரம்பரியம், நம் விவசாயம் காக்க துணிச்சலாய் இறங்க வேண்டும். உரிமைக் குரல் உயர்ந்து ஒலிக்கும் போதுதான் ஒரு இனத்தின் பாரம்பரியம் காக்கப்படும்.


எதுக்குய்யா இம்புட்டு பொங்குறே...? வெளிநாட்டுல இருக்கே... நீ மாடு பிடிக்கப் போறியா..:? இல்ல இதுக்கு முன்னால மாடு பிடிச்சிருக்கியா...?விட்டுட்டு வேலையைப் பாருன்னு சில நண்பர்கள் சொல்லலாம்... நம் உரிமை, நம் பாரம்பரியத்தை விட்டுட்டு வேலையைப் பார்க்க மனம் விரும்பாத தமிழன் நான்... படிக்கும் காலத்தில் ஆடு, மாடு, கோழிகளுடன் வாழ்ந்த ஒரு சாதாரண கிராமத்தான்.... வயலும் வயல் சார்ந்த இடமும் வெள்ளச்சி, நரை, கருத்தப் பசு, செவல, பில்ல, கிடேரி என எல்லாவற்றுடனும் பாசமும் நேசமுமாய் வளர்ந்தவன்... கன்றுக்குட்டியுடன் கழுத்தோடு கழுத்தைக் கட்டிக் கொண்டு, அது முகமெல்லாம் நக்கி விளையாடிய சந்தோஷத்தை அனுபவித்தவன் நான்... மாடு பிடிக்க வேண்டும் என்றில்லை அதனுடன் கல்லூரி முடிக்கும் வரை வாழ்ந்தவன் என்ற ஒன்று போதும். என் பாரம்பரியம் எனக்கான உரிமை... ஆம் நம் பாரம்பரியம் நமக்கான உரிமை... அந்த உரிமை பறிக்கப்படும் போது குரல் கொடுப்பது நம் கடமை.

-'பரிவை' சே,குமார்.

புதன், 11 ஜனவரி, 2017

1. 'என்னைப் பற்றி நான்' - ஸ்ரீராம்

னசு தளத்தில் 'எங்கள் பிளாக்' போல் வித்தியாசமான முயற்சியாய் ஏதாவது செய்யலாமே என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. ஒருவேளை ஸ்ரீராம் அண்ணன் அவர்களின் கேட்டு வாங்கிப் போடும் கதைதான் இந்த முயற்சியை முன்னெடுக்க வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். வேலைப்பளு மற்றும் அலைச்சல், கொஞ்சம் மன அழுத்தம் இதெல்லாம் எழுத்தில் ஒரு இடைவெளி கொண்டு வந்து விட்டது, எல்லோரையும் வாசித்தாலும் கருத்து இடாமல் வலை நட்புக்களில் இருந்து விலகிச் செல்வது போல் தோன்ற ஆரம்பித்துவிட்டது, அதற்கு காரணமும் இருக்கு... சிறுகதை, தொடர்கதை காப்பி பேஸ்ட் நண்பர்களுக்குப் பயந்து பதிவதில்லை என்பதுடன் வாரம் இரண்டு பதிவெழுதுவதே பெரிய விஷயமாகிவிட்டது. இந்தச் சோர்வில் இருந்து மீள, நாலைந்து பேர் சேர்ந்து வாரம் ஒருவர் என குறுநாவலை எழுதலாமே என்ற எண்ணம் எழுந்தது... அதற்கிடையே 'என்னைப் பற்றி நான்' என நம் பதிவுலக நட்புக்களை அவர்களைப் பற்றி அவர்களையே எழுத வைத்தால் என்ன என்று தோன்றியது. வித்தியாசமாகவும் இருக்கும் நாம் வாசிக்கும் நேசிக்கும் பதிவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பாகவும் அமையும் என்பதால் முதலில் இதைச் செயல்படுத்துவோம் என முதற்கட்டமாக சில உறவுகளுக்கு விபரம் சொல்லி மின்னஞ்சல் அனுப்பினேன்.

இன்று நண்பரிடம் பேசும் போது நானெல்லாம் பிரபலம் இல்லையே என்றார். இது பிரபலங்களை அறிவதற்கான பகிர்வு அல்ல... என்னைப் பொறுத்தவரை, இந்த வலையுலகில் நான் வாசிக்கும் என்னை நேசிக்கும் எல்லாருமே எனக்குப் பிரபலம்தான்... எனவே எழுதி அனுப்புங்கள் என்று சொன்னேன். அதுதான் உண்மை... நான் முதல்கட்டமாக மின்னஞ்சல் அனுப்பியவர்களில் இவர் பிரபலம்... அவர் பிரபலம் என்றெல்லாம் பார்க்கவில்லை... ஒவ்வொருவரும் தங்கள் எழுத்தில் ஒவ்வொரு விதத்தில் அசைக்க முடியாதவர்கள்... எனவே நான் மின்னஞ்சல் செய்தவர்கள், இனிச் செய்ய இருப்பவர்கள் ஒத்துழைக்கும் பட்டத்தில் இந்தப் பதிவு நிரந்தர முதல்வர் போல புதன் கிழமையை நிரந்தரமாக்கிக் கொள்ளும். என் முயற்சிக்கு தங்களின் ஆதரவு இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆங்.... சொல்ல மறந்துட்டேன் பாருங்க... முதல் வாரத்தில் 'என்னைப் பற்றி நான்' எனப் பேச வருபவர் அன்பின் அண்ணன் 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அவர்கள். அவரைப் பார்த்துத்தான் நான் இதில் இறங்கினேன் என்றால் நான் அனுப்பியவர்களில் எனக்கு முதல் முதலில் பதில் அனுப்பியவர் இவர்தான். இதுநாள் வரை இன்னும் மற்றவர்கள் அனுப்பவில்லை என்றாலும் குருவின் பாதம் பணிந்து நம்பிக்கையுடன் அவரின் எழுத்தை இங்கு பகிர்கிறேன்... 

நன்றி.


'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அண்ணா அவரைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை வாசியுங்கள்....


ன்னைப்பற்றி நான் என்ன எழுத முடியும் என்று யோசித்துப் பார்த்தால், டைரி எழுதுவது போல கற்பனையும், பொய்யும் கலந்து வந்து விடுமோ என்று தோன்றுகிறது!!!

வலைப்பதிவு அனுபவங்களில் சொல்லவேண்டியது உங்களைப் போன்ற பலப்பல நட்புகள் கிடைத்திருப்பதுதான்.  சுஜாதா ஒருமுறை சொல்லும்போது எதிர்காலத்தில் எல்லோரும் ஐந்தைந்து நிமிடங்கள் பிரபலமாக இருப்பார்கள் என்று சொல்லியிருந்தார்.  அவர் என்ன அர்த்தத்தில் சொன்னாரோ..  நான் கூட அந்த  ஐந்து நிமிடப் பிரபலங்களில் ஒருவன் இப்போது!  அதாவது முன்பு இருந்ததை விட ஒரு ஐநூறு ஆயிரம் பேர்களுக்கு எங்கள் ப்ளாக்கும் எங்கள் பெயர்களும் பழக்கமாகியிருக்கிறது பாருங்கள்!  இதற்கெல்லாம் நான் கே ஜி கௌதமன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.  எழுதும் எண்ணம் எல்லாம் இல்லாமல் இருந்த என்னை உள்ளே இழுத்துப் போட்டது அவர்தான்.  

வலைப்பதிவு பணியில் மறக்க முடியாத அனுபவம் என்றெல்லாம் ஒன்றுமில்லை.  நான் எழுதிய சில கதைகளை அப்பாதுரை, ஜீவி ஸார் போன்ற பெரியவர்கள் பாராட்டியபோது மகிழ்ச்சி ஏற்பட்டது.  நம் எழுத்தைக் கூட பாராட்டுகிறார்கள் என்கிற சந்தோஷம் ம(று)றக்க முடியாதது.

புனைப்பெயர் வைத்து எழுதுவது அவரவர் விருப்பம்.  நான் முகம் காட்டா பதிவர்!  அவ்வளவுதான்.   

ஆசை என்று எதுவும் வைத்துக் கொள்வதில்லை என்பதால் நிறைவேறிய, நிறைவேறாத ஆசை என்று இல்லை.

 சாதனைகள் என்று ஒன்றுமே இல்லை!

 எதிர்காலத் திட்டம் என்று கூட ஒன்றும் பெரிதாக யோசித்ததில்லை.  நாளை பொழுது என்றும் நல்ல பொழுதாக வேண்டுமென்று நம்பிக்கை  வைக்கும் கோடி மனிதர்களில் நானும் ஒருவன்.  ஒவ்வொரு நாளும் புதிதாக விடிகிறதா, அன்றைய வேலைகளை ஒழுங்காக கவனிக்க முடிகிறதா, இவைதான் என் சாதனை, எதிர்காலத் திட்டம் இல்லை, எதிர்கால ஆசை!

மனசின் முதல் முயற்சிக்கு முதலில் தங்களைப் பற்றி சொன்னதற்கு நன்றி அண்ணா...

குறிப்பு : உறவுகளே உங்களைப் பற்றி நீங்கள் இன்னும் விரிவாகச் சொல்லுங்கள்... விபரமாய்... எனக்குத் தெரிந்த எல்லாரிடமும் வாங்க எண்ணம், சிலரை மின்னஞ்சலில் பிடித்துவிடுவேன்... சிலரை முகநூலில் பிடித்து விடுவேன்... இரண்டிலும் பிடிக்க முடியாமல் பலர் இருக்கலாம்... விருப்பம் இருப்பின் 'kumar006@gmail.com' என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
நன்றி.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

வாழ்த்துவோம் வேலு நாச்சியாரை...

மாணவர்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியை...

வீரமங்கை வேலு நாச்சியாரின் மீது கொண்ட பற்றுதலால் வேலுநாச்சியார் (velunatchiyar.blogspot) என்பதை தன் வலைப்பூவில் நுழைவு வாயிலாக்கி  தென்றல் (THENDRAL) என்னும் தளத்தில் எழுதி வருபவர்...

கவிதைகளில் பெண்ணியக் கருத்துக்களை முன் வைப்பவர்...

பெண் விடுதலை மட்டும் போதாது பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் புதுமைகள் படைக்க வேண்டும் என தன் எழுத்தில் எப்பவும் எழுதிக் கொண்டிருப்பவர்...

ஒரு கோப்பை மனிதம், விழி தூவிய விதைகள், கே.ஜீவபாரதியின் வேலு நாச்சியார் நாவலில் பெண்ணிய சிந்தனைகள் என்ற மூன்று புத்தகங்களின் ஆசிரியர்... 

புதுவையில் நடக்கும் வீதி கலை இலக்கியக் கூட்டம், இணையத் தமிழ் பயிற்சி முகாம் என எல்லா நிகழ்வுகளிலும் தோழர்களோடு தோள் கொடுத்து நிற்பவர்...

சென்ற வருடம் புதுகையில் நடந்த வலைப்பதிவர்கள் மாநாட்டில் முத்து நிலவன் ஐயா, தனபாலன் அண்ணா, செல்வக்குமார் அண்ணா, ஜெயா அக்கா.... எல்லாருடைய பேரும் ஞாபகத்தில் வரலை... என்ன நாலு பேரை மட்டும் சொல்லியிருக்கேன்னு நினைக்க வேண்டாம்... விழா நிகழ உறுதுணையாக நின்ற எல்லாருடன் இணைந்து செயலாற்றியவர்...


முகநூலில் தேவதா தமிழ் என்றால் எல்லாருக்கும் தெரியும்...

புரட்சிகர சிந்தனையாளர்...

புதுமைக் கவிஞர்...

இவர் யாரென்று தெரிகிறதா..? 

தெரியாமலா இருக்கும்... ஆமா அவங்கதான்...

Image may contain: 1 person, text

கவிதாயினி கீதா அக்கா.

இவருடன் நேரடிப் பரிட்சயம் இல்லை... பேசியது இல்லை... முகநூல் அரட்டையில் மணிக்கணக்கில் நிஷா அக்காவோடும் காயத்ரி அக்காவோடும் அரட்டை அடிப்பது போல் இவரிடம் ஒரு முறை கூட அரட்டை அடித்ததில்லை.

ஒருமுறை தேவகோட்டை, முருகானந்தா என்றெல்லாம் எழுதியபோது என் பதிவில் நீங்க தேவகோட்டையாப்பா... முருகானந்தாவுலயா படிச்சீங்க... என்னோட பொண்ணை சுந்தரம் சார் பையன் சாக்ரடீஸ்க்குத்தான் கொடுத்திருக்கு என்றார்கள். முருகானந்தாவில் படித்த போது சுந்தர வாத்தியாருக்கு பயப்படாத மாணவர்களே கிடையாது. அந்தளவுக்கு மனுசன் மிரட்டி வச்சிருப்பார். எட்டாப்பு சார்க்கிட்ட சொல்லவான்னுதான் எங்க தமிழ் ஆசிரியை விஜி (முதன் முதலில் எங்களுக்குத்தான் தமிழ் வகுப்பெடுத்தாங்க) மிரட்டுவாங்க... ஒரு ஆசிரியையே இன்னொரு ஆசிரியர் பேரைச் சொல்லி மிரட்டுனா அவர் எப்படிப்பட்டவரா இருப்பாரு... ஆனா அவர் ரொம்ப நல்ல மனுசன்னு அந்தப் பள்ளியை விட்டு வந்த பிறகு பழகும் சந்தர்ப்பம் கிடைத்த போது அரிய முடிந்தது. அவரும் ஞான சம்பந்தம் ஐயாவும் முருகன் சாரும் எங்கு பார்த்தாலும் எப்படி இருக்கே... நல்லாயிருக்கியா என்று நின்று பேசிச் செல்வதுண்டு. அதுதானே ஒரு மாணவனுக்கு வேணும். எனக்கு அக்காவோட மகள் குடும்பத்தில் அனைவருடனும் நல்ல பழக்கம்... அவர்களின் உறவான வி.சி.வில்வம் அவர்களுடன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் என் நண்பன் முருகன் மூலமாக நல்ல நட்பு இருந்தது. 

ஊருக்கு வரும்போது புதுக்கோட்டைக்கு வாங்க என்று ஒரு முறை கருத்து இட்டிருந்தார்... ஆனால் நான் தேவகோட்டையில் இருந்து புதுக்கோட்டை செல்ல முடியாத சூழலில் ஒரு மாத விடுமுறையை முடித்துக் கொண்டு வந்து விடுவேன். இந்த முறையாவது எல்லாரையும் பார்க்கணும்... பார்க்கலாம் அப்படி ஒரு வாய்ப்பு அமைகிறதா என்று...

அக்காவின் ஒரு கோப்பை மனிதம் புத்தகத்திற்கு அடியேனும் விமர்சனம் என்ற பெயரில் எழுதியிருக்கிறேன். ஆமா எதுக்கு இப்ப அவங்களைப் பற்றி சொல்றேன்னுதானே கேக்குறீங்க... அதாவது இன்னைக்கு அவங்களுக்கு பிறந்தநாளாம்... எல்லாரும் வாழ்த்துங்க...

புதுவருடத்துக்கு அவங்க மாணவர்கள் கொடுத்த அன்புப் பரிசு என்ன தெரியுமா? மாதக் காலண்டர் வடிவமைத்து அதில் அவர் போட்டோ போட்டுக் கொடுத்திருக்காங்க..

கீதா அக்காவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


குறிப்பு : பிறந்தநாளே முடிஞ்சிருச்சு... இப்ப பதிவு போடுறேன்னு நினைக்க வேண்டாம்... இங்க இன்னும் நாள் முடியலை... அலுவலகம் சென்று திரும்பி வந்த போது பயங்கர தலைவலி, இரண்டு நாள் முன் தனபாலன் அண்ணனுக்கு வாழ்த்துச் சொல்லிட்டு பந்தாவா இனி நட்புக்களின் பிறந்தநாள் எனக்கு தெரிய வந்தால் வாழ்த்து சொல்லப்படும்ன்னு அறிக்கை விட்டுட்டு பன்னீரு மாதிரி படுத்துட்டா சரியில்லை என்பதால் ஏதோ எழுதியிருக்கிறேன் என்றாலும் மனம் நிறைந்த வாழ்த்துக்களைச் சொல்கிறேன்.
-'பரிவை' சே.குமார்.


வெள்ளி, 6 ஜனவரி, 2017

வலையுலக பிரம்மாவை வாழ்த்துவோம்

"தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்"

ந்த வரிகளை  ராமு படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் தனது கணீர்க் குரலில் பாடிய 'கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்' என்ற பாடலில் கேட்டிருப்பீர்கள். எதற்காக பாடல் வரிகளை தேடி எடுத்து அதுவும் 'தேடி நின்ற கண்களிலே' என்ற வரியில் இருந்து பகிர்ந்திருக்கிறேன் என்ற எண்ணம் தோணலாம்... அந்த வரிகளை வாசித்தபடி நகரும் போது 'கேட்டவருக்கு கேட்டபடி..' அப்படின்னு ஒரு வரி இருக்கா... இன்றைக்கு வலையுலகில் கேட்டவருக்கு கேட்டபடி மட்டுமின்றி கேட்காத உதவியையும் செய்பவரைப் பற்றி கொஞ்சம் பேசலாமேங்கிறதுக்காக எழுதிய கட்டுரைதான் இது. யார் அவர்..? எதற்காக இந்த பாடல் வரிகள்ன்னு கேட்டீங்கன்னா நீங்க அவரைப் பற்றி அவரின் திருக்குறள் பகிர்வுகளைப் பற்றி அறியாதவராகத்தான் இருப்பீர்கள். வலையுலகில் அவரைத் தெரியாது என்று சொல்லக் கேட்பது ஆச்சர்யமான விஷயமாகத்தான் இருக்கும். காரணம் வலையுலகில் அடியெடுத்து வைக்கும் புதியவர்களுக்கு கூட அவரின் கருத்து பறந்து வந்து விழும் போது அவரை அறியாதவர் வலையுலகில் இருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமே.

என்னது... அட ஆளு யாருன்னு புரிஞ்சி தெரிஞ்சி போச்சா... ஆஹா போயிடக்கூடாது மனசுக்குள்ள வச்சிக்கங்க... பாண்டவர்களுக்கு உதவ கண்ணன் ஓடி வந்தது போல் வலைப்பதிவர்களுக்கு உதவ ஒடோடி வருபவர் இவர்... இவரின் பதிவுகள் பாடல்கள் சுமந்து நிற்கும் அதனால்தான் இவரைப் பற்றி எழுத பாடல் வரிகளோடு ஆரம்பம்... ஆம்... அவர்தான்... அவரே தான்... நம் உள்ளங்களில் நிறைந்திருக்கும் வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் அண்ணா... இவரைப் பற்றி மிகச் சிறப்பாக தேவியர் இல்லத்தில் 'திண்டுக்கல் பூட்டு என்பது பழைய பெருமை?' என்ற தலைப்பில் ஜோதிஜி அண்ணன் எழுதியிருக்கிறார். அதைவிட என்னால் சிறப்பாக எதையும் எழுத முடியாது. எப்பவும் கிறுக்குற மாதிரி இதிலும் நமக்குத் தெரிந்தவற்றை கிறுக்கலாம்.

Image result for திண்டுக்கல் தனபாலன்

வலைச் சித்தர்...

அதென்ன வலைச் சித்தர்... சித்தரை விட மருத்துவர் என்று சொல்லலாம்... ஆம் வலை மருத்துவர்... உடம்புக்கு முடியலைன்னா எங்க போவோம்... டாக்டர்கிட்ட போவோம்... ஒரு ஊசி... ரெண்டு நாளைக்கு மாத்திரை கொடுப்பார்... நமக்கும் சரியாகிவிடும்... அதுபோல்தான் இவர் வலைஞர்களின் மருத்துவர்... எந்த பிரச்சினை என்றாலும் ஜஸ்ட் ஒரு மின்னஞ்சல் தட்டிவிட்டால் போதும் உடனே சரி பண்ணிக் கொடுத்துருவார்... நானெல்லாம் மின்னஞ்சல் கூட விடுவதில்லை முகப்புத்தகத்தில் ஆள் இருக்கிறாரோ இல்லையோ ரெண்டு வரி தட்டி விடுவேன்... சரி பண்ணி விட்டு மின்னஞ்சல் அனுப்புவார். எல்லாருக்கும் எப்பவும் உதவும் 24 மணி நேர வலை மருத்துவர் இவர். எனவே வலைச் சித்தர், வலை மருத்துவர் என எப்படியும் அழைக்கலாம்... வலையுலகப் பிரம்மான்னும் அழைக்கலாம்.

இவருடனான உறவு நாலாண்டுக்கு மேல் இருக்கும்... ஆனாலும் சந்தித்ததில்லை... சந்தித்தால்தானா.. ஆண்டுக்கு ஒரு முறை போன் பண்ணும் போது 'நல்லாயிருக்கீங்களா?' அப்படின்னு கேட்கும் போதே அவரின் அன்பைத் தெரிந்து கொள்ள முடியும். வருடம் ஒரு முறை ஊருக்குச் செல்லும் போது சந்திக்க வேண்டும் என்று நினைத்து போன் பண்ணுவது உண்டு... ஆமாம் பண்ணுவது உண்டு... ஆனால் பார்ப்பதில்லை... அதற்கான நேரமும் வாய்ப்பதில்லை... ஊருக்கு வருகிறேன் என்றதும் இந்த முறை கண்டிப்பாக நாம பார்க்கணும் என்பார்... புதுகை நட்புக்களும் இப்படித்தான். அங்கு செல்ல முடியாத நான் திண்டுக்கல்லுக்கு எப்படிச் செல்வேன். ஒவ்வொரு முறையும் முயற்சிப்பேன் ஆனாலும் சூழல்... ஒரு மாத விடுப்பு... எல்லாமாய் சேர்ந்து பார்க்காமலே நகர்த்தி விடும்.... ஆனாலும் அன்பு மட்டும் அங்கு நகராமல் நின்று கொண்டிருக்கும் என்பதை அடுத்த போனில் அறியலாம். சமீபத்தில் நான் போன் பண்ணிய போது ஒரு பிறந்தநாள் விழாவில் இருந்தார். அப்படியிருந்தும் என்னுடன் பதிவுலகம், அரசியல், குடும்பம் என நீண்ட நேரம் பேசினார். வலையுலக நட்புக்கள் குறித்தும் பேசினார். இந்த முறை சந்திக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டோம்... ;)

தொழில் நுட்ப பகிர்வுகளையும் திருக்குறள் பகிர்வுகளையும் மிக அழகாக, சினிமாப் பாடல்கள் கலந்து எழுதுவார். மனுசனுக்கு எப்படித்தான் இவ்வளவு பாடல் தெரியும்ன்னு ஆச்சர்யமா இருக்கும். தொழிலின் காரணமாக நீண்ட இடைவெளி எடுத்தாலும் தீபாவளிக்குப் பின்னர், இந்த மோடிஜி பண்ணின கூத்தால சிறு தொழிலாளிகள் எல்லாம் பணப் பிரச்சினையில் வாட, இவருக்கும் கொஞ்சம் ஓய்வு... சரி இவ்வளவு நாள் உழைத்தோமே... அலைந்தோமே... என்றெல்லாம் ஹாயாக ஒய்வெடுக்காமல் பதிவர்களுக்கான வாட்ஸ் அப் திரட்டியை கொண்டு வந்தார். புதியவர்களுக்கு வலைப்பூ சம்பந்தமான சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார். தானும் சில ஆக்கப்பூர்வமான பதிவுகளை எழுதினார். தமிழ் பதிவர்களுக்கான வலைப்பூ திரட்டி ஒன்றை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். இன்னும் இன்னுமாய் வலையுலகின் பிதாமகனாய் பரிணமித்துக் கொண்டிருக்கிறார்.

நமக்கெல்லாம் வழிகாட்டியாய் இருக்கும் நம் வலைச் சித்தர், அன்பு அண்ணன் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்... இன்றைய பிறந்த நாளில் அவர் நீண்ட ஆயுளோடு நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கிறேன். அவரின் 'புவனா சாரீஸ்' தமிழகம் எங்கும் கிளைகள் பரப்ப வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா....

உங்களின் அன்பும் ஆசியும் வலைச் சித்தருக்கு கிடைக்கட்டும் உறவுகளே.

நன்றி.



குறிப்பு : முன்பு நண்பர்கள் ஒரு சிலருக்கு பிறந்தநாள் அன்று கட்டுரை எழுதினேன். அதை இன்று தனபாலன் அண்ணனின் பிறந்தநாளில் மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன். இனி என் நட்பில், நான் நன்கறிந்தவர்களின் பிறந்தநாள் எனக்குத் தெரிய வரும் பட்சத்தில் கண்டிப்பாக எழுதுவேன்.

-'பரிவை' சே.குமார்.