மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 17 மே, 2017

18.என்னைப் பற்றி நான் - இராய.செல்லப்பா


ந்த வாரம் என்னைப் பற்றி நான் பகுதியில் தன்னைப் பற்றி வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கிறார் அன்பின் ஐயா. இராய. செல்லப்பா அவர்கள். ஐயாவின் தளம் செல்லப்பா தமிழ் டயரி 

ஐயாவைப் பற்றி சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. மிகச் சிறந்த எழுத்தாளர். வலையில் எழுதியவர்களை ஊக்குவித்து எழுத வைப்பவர்களில் இவரும் ஒருவர். இவர் தளத்திற்கு நான் அதிகம் செல்வதில்லை என்றாலும் என் தளத்திற்கு தொடர் வருகை தருபவர். குறிப்பாக சாண்டில்யன் கதைகள் பற்றிய பகிர்வுகளை வாசித்து கருத்து இடுவதுடன் இதுபோல் நிறைய எழுதுங்கள் என அடிக்கடி சொல்பவர்.

தன் மனதில்பட்ட கருத்தை மறைக்காமல் சொல்பவர். நிறைய... நிறைவாய் எழுதக் கூடியவர். பல புத்தகங்களின் ஆசிரியர்... இன்னும் இன்னுமாய் நிறையச் சொல்லலாம் என்றாலும் என்னைப் பற்றி நான் என அவர் சொல்வதைப் பார்க்கலாமே.


என்னைப் பற்றி நான் 

துரையைச் சேர்ந்த ஒரு தம்பதியரை இன்று சந்திக்க நேர்ந்தது. இருவரும் அறுபது வயதுவரை பணிசெய்து முறையாக ஓய்வுபெற்றவர்கள். மகன் இப்போது அமெரிக்காவில் இருப்பதால் அவரைப் பார்க்க வந்திருக்கிறார்கள். மரியாதை நிமித்தமான சந்திப்பு.

இருவரும் பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக்கொண்டோம். சொந்த ஊர் எது, மனைவியின் ஊர் எது, எங்கு வேலை செய்தோம், எத்தனை முறை அமெரிக்கா வந்துள்ளோம் போன்ற தகவல்கள். அடுத்து வழக்கமாக அமெரிக்கா வருபவர்கள் கேட்கும் கேள்வி: எப்படிப் பொழுது போகிறது உங்களுக்கு?

அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவிலும் இது ஒரு முக்கியமான கேள்வி. ஒருவன் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டால் அவனுக்கு நிறைய நேரம் இருப்பதுபோலவும், என்ன செய்வதென்று தெரியாமல் அவன் விழிப்பதுபோலவும் ஒரு பிரமையான எண்ணம் பலருக்கும் இருக்கிறது. கண்ணாடியில் பார்க்கிறவனுக்குத் தன்முகமே தெரிவது போல, பணியிலிருந்த போதும் ஓய்வெடுத்தே பழகிவிட்டவர்களுக்கு, யாரைப் பார்த்தாலும் அவர்களும் கை நிறையப் பொழுதை வைத்துக்கொண்டு செலவழிக்கும்விதம் அறியாமல் இருப்பதாகவே தோன்றிவிடுகிறது.  

இப்படிக் கேள்வி கேட்பவர்களை நான் எளிதாகச் சமாளித்துவிடுவேன்: “இன்னும் ஒரு மாதம் கழித்து நாம் சந்திக்கலாமா? அப்போது, உங்களுடைய பொழுதை நீங்கள் எப்படிக் கழித்தீர்கள் என்று எனக்குச் சொல்வீர்களா?” என்று எதிர்க் கேள்வி எழுப்புவேன். அவ்வளவே.

இன்று சந்தித்த தம்பதியரிடம் சொன்னேன்: “நான் ஒரு எழுத்தாளனும் கூட. எனவே படிப்பதிலும் எழுதுவதிலும் எனக்குப் பொழுது செலவாகிறது. இருபத்துநாலு மணிநேரமே போதுமானதாயில்லை” என்றேன். அந்தப் பெண்மணி ஆர்வத்துடன் கேட்டார்: எந்தப் பெயரில் எழுதுகிறீர்கள் என்று. சொன்னேன். 

“தெரியுமே! பல வருடங்களாக நீங்கள் தினமலர் வாரமலரில் தெய்வீகம் பற்றி எழுதிவருகிறீர்களே! ஞாயிற்றுக்கிழமை வந்தால் உங்கள் கட்டுரையைத்தான் நான் முதலில் படிப்பேன்” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

எனக்கு வெட்கமாகப் போனது. ஏனெனில் அந்த செல்லப்பா நான் அல்லன். இன்னொருவர். அந்தப் பெண்மணியால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 

**** 

ல வருடங்களுக்கு முன்பு எனது கவிதைத்தொகுதி ஒன்று வெளியானபோது, சென்னையில் ஒரு புத்தகக்கடையில் என்னைப் பார்த்த (அப்போதே) முதுபெரும் எழுத்தாளர் ஒருவர், “நலமாக இருக்கிறீர்களா? உங்கள் கவிதைகளையும் கட்டுரைகளையும் நான் தொடர்ந்து படிக்கிறேன். தமிழுக்கு உங்களால் இன்னும் நிறைய சேவைகள் பாக்கியிருக்கிறது” என்றார். இந்தியில் இருந்து தமிழுக்கு ஏராளமான  கதைகளை மொழிபெயர்த்து கல்கி, கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி போன்ற இதழ்களில் வெளியிட்டுவந்தவர் அவர். எனக்கு மகத்தான அதிர்ச்சி. ஏனென்றால் அதுவரை நான் எந்தப் பத்திரிகையிலும் தொடர்ச்சியாக எழுதியதில்லை. அவ்வப்போது ஒன்றிரண்டு வந்திருக்கும். அதையும் படித்தவர்கள் உடனே மறந்திருப்பார்கள். அமர இலக்கியம் எதையும் அப்போது நான் படைத்திருக்கவில்லை. இவர் சொல்வதைப் பார்த்தால் நிச்சயம் இது அவர் நினைவில் எழுந்த ஆள்மாறாட்டம்தான் என்று தெரிந்துவிட்டது.     

‘மன்னிக்க வேண்டும் ஐயா, அது நானாக இருக்கமுடியாது. ஏனென்றால்...” என்பதற்குள் அவர் இடைமறித்தார். “இப்படித் தன்னடக்கத்துடன் இருந்துதான் இந்த நிலைமையில் இருக்கிறீர்கள். இல்லையென்றால் உங்களுக்கு எப்போதோ சாகித்ய அக்கடெமி கிடைத்திருக்காதா? இவ்வளவு வருடங்கள் நீங்கள் காத்திருக்கவேண்டுமா?” என்றார் அவர். அப்பொழுதுதான் அவர் யாரைச் சொல்கிறார் என்று புரிந்தது. தமிழின் மூத்த எழுத்தாளரும், ‘மணிக்கொடி’ பரம்பரையைச் சேர்ந்தவரும், ‘எழுத்து’ இதழின் ஆசிரியருமான சி.சு.செல்லப்பா அவர்களைத்தான் நான் என்று நினைத்துக்கொண்டுவிட்டார், பாவம்! சில மாதங்களுக்கு முன்புதான் சி.சு.செல்லப்பா தமிழ் எழுத்தாளர் என்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிவலோகப் பதவியை அடைந்திருந்தார்.  அந்த விஷயமே அவருக்குத் தெரியவில்லை என்பது எவ்வளவு சோகமான செய்தி!

**** 

சென்னையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இந்து சீனியர் உயர்நிலைப் பள்ளியில் அடிக்கடி பேச்சு, கவியரங்கம் என்று ஏதாவதொரு நிகழ்ச்சிக்கு என்னை அழைப்பார்கள். கம்பீரமான ஷெர்வாணி அணிந்து சிங்கம் மாதிரி நடைபோடுவார் அந்தப் பள்ளியின் முதல்வராக  இருந்த வெங்கடாசலம் அவர்கள். ஒரு கவியரங்க நிகழ்ச்சியின் இடைவெளியில் இரண்டு ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். ‘இவரை நாம் அடிக்கடிக் கூப்பிடுகிறோம் அல்லவா? போன மாத நிகழ்ச்சிக்கும் இவர் தானே வந்திருந்தார்?”

இல்லை நண்பரே, போன மாதம் வந்தவர் ‘சிலம்பொலி’ செல்லப்பன்; நான் வெறும் செல்லப்பா மட்டுமே; அவர் வேறு, நான் வேறு; அவர் என்னைவிட பதினைந்து வருடமாவது பெரியவர் – என்று சொல்லவிரும்பினேன். அதற்குள் அவர்கள் கலைந்துவிட்டார்கள்.

****

ங்கிப்பணியில் இருக்கும்போது எமது வங்கியின் அப்போதைய தலைவர் ஒரு வழக்கத்தைக் கொண்டிருந்தார். தம் கீழ்ப் பணியாற்றும் மேலாளர் பொறுப்பில் இருந்தவர்களுக்குத் தம் கைப்படப் பிறந்தநாள் வாழ்த்துக்  கடிதங்களை அனுப்புவார். பிறந்தநாளன்று சரியாக வந்துசேரும்.  அதில் சிறு தவறு நடந்தாலும் பொறுக்கமாட்டார்.  என் பிறந்த நாளுக்கும் அதுபோல் வாழ்த்துக் கடிதங்கள் வரும். ஆனால் என் விஷயத்தில் மட்டும் அவருடைய செயலாளர்கள்  ஒரு சிறிய தவறு செய்துவிடுவார்கள். ‘To’ என்ற இடத்தில் செல்லப்பாவிற்குப் பதில், ‘புல்லப்பா’ என்று ஒருமுறை அடித்திருந்தார்கள். 

வங்கியின் தலைவர் இம்மாதிரி வாழ்த்து அட்டைகள் அனுப்பிப் பெயர்வாங்கிவிடுவதைப் பொறுக்காத ஒரு பொதுமேலாளர், தாமும் இம்மாதிரி வாழ்த்து அட்டைகளை  அனுப்பத்தொடங்கினார். அவருடைய செயலாளர் என் பெயரை ‘எல்லப்பா’ என்று டைப் செய்திருந்தார். புல்லப்பா என்று ஒருவர் நிச்சயமாக வங்கியில் இருந்தார். ஆந்திராவைச் சேர்ந்தவர். என்னைவிட பணிமூப்பு மிகுந்தவர். ஆனால் எல்லப்பா என்று ஒருவரும் வங்கியில் இல்லை. மேலும், செல்லப்பா என்ற பெயரில் கடந்த நாற்பது ஆண்டுகளில்  வங்கியில் இருந்தவன் நான் ஒருவனே. ஆனால்...?  இம்மாதிரிச் சின்ன விஷயங்களை நாம் பெரிதுபடுத்தினால் தொலைந்தோம். பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்புகள் ஆயிற்றே,  கருடனைப் பார்த்து சௌக்கியமா என்றல்லவா கேட்கும்?  

****

மிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி. ‘சாகித்ய அகாடமி’, ‘சம்ஸ்கிருதி சம்மான்’ விருதுகளைப் பெற்றவர். சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் ஆகிய படைப்புத்துறைகளில் சிறந்து விளங்குபவர். ‘குருதிப்புனல்’ நாவல், ஒளரங்கசீப்’, ‘ ராமானுஜர்’ நாடகங்கள் போன்றவை, இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

அண்மையில் மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானபோது, அஞ்சலி செலுத்தப்போயிருந்தார், இந்திரா பார்த்தசாரதி. அப்போது நடந்ததை அவருடைய  வார்த்தைகளிலேயே பார்ப்போமா? 

நண்பரைப் பனிப்பெட்டியில் பார்த்துவிட்டு கனத்த நினைவுகளுடன் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று கேமராவுடன் இரண்டு இளைஞர்கள் என் முன் முளைத்தார்கள்.

‘‘அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?’’ என்றார் ஒருவர்.

கேமரா என்னை உற்றுப் பார்த்தது. தொலைக்காட்சி சேனல் பெயரைச் சொன்னார் இன்னொரு இளைஞர்.

முதலில் மறுத்துவிடலாம் என்ற எண்ணம் தலைத்தூக்கியது. இது நான் என் நண்பருக்குச் செய்யும் தர்மம் அன்று என்ற எண்ணம் அதைத் தடுத்தது. நான் யாரென்று தெரிந்து கேட்கிறார்கள் என்ற லேசான பெருமையும் என் முகத்தில் புன்னகையாக அடையாளம் கொண்டது.

நான் அவரைப் பற்றி இரண்டு நிமிடங்கள் என் கருத்துகளைச் சொன்னேன்.

கேமரா கண் மூடியது. என்னைப் பேசச் சொன்ன இளைஞர் மிகவும் இயல்பான, யதார்த்தமான குரலில் என்னைக் கேட்டார்:

“உங்கள் பெயர் என்ன?”

நான் யாரென்று தெரியாமலா என்னைப் பேசச் சொன்னார்கள்? புதிதாக வெளியிடப்படும் திரைப்படத்தின் முதல் ‘ஷோ’ முடிந்தவுடன் வெளியே வரும் ரசிக மக்களைத் தொலைக்காட்சி விமர்சகர்கள் கேட்பது போன்ற கேள்வியா என்று எனக்குத் தோன்றிற்று.

அவர்களுக்கு யாரோ சொல்லி யிருக்க வேண்டும். என் பெயரைச் சொல்லி, ‘‘அவர் அதோ போகிறார். கேளுங்கள்’’ என்று கூறியிருக்கக்கூடும். ஒன்று, கேமரா இளைஞர்கள் அந்தப் பெயரை மறந்திருக்கக்கூடும். அல்லது, அந்தக் குறிப்பிட்ட பெயரை உடையவர் நான்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்வதற்காகக் கேட்ட கேள்வியாகவும் இருக்கலாம்.

நான் என் பெயரைச் சொன்னதற்கு, ‘‘தேங்க்ஸ்’’ சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

இந்த அனுபவம் எனக்குத் தேவை யென்று எனக்குத் தோன்றிற்று. என்னைப் பற்றி நானே மிகைப்பட நினைத்துக் கொண்டிருந்தால், என்னை பூமியின் தளத்துக்குக் கொண்டுவரும் அனுபவம்.

**** 

ந்த நிமிடத்திலும் ‘நான்’ என்று கர்வப்படுவதற்குத் தமிழ் எழுத்தாளனுக்கு அதிகாரமில்லை என்பதைப் புரிந்துகொண்டீர்கள் அல்லவா? ‘என்னைப் பற்றி நான்’ என்று பெருமையோடு என்னத்தை எழுதுவது? 

என்றாலும், என்மீது மிகுந்த பிரியம் கொண்டு பரிவை சே.குமார் அவர்கள் என்னை எழுதச் சொன்னதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக என்னைப் பற்றி இதோ சில வரிகள்:

கவிஞராக அறிமுகம் ஆகி, கதாசிரியராகவும் கட்டுரையாளராகவும் தன் எழுத்துப் பரப்பை விரித்துக்கொண்டிருக்கும் இராய செல்லப்பா, இதுவரை மூன்று புத்தகங்களின் ஆசிரியராவார். (‘இரா’ என்பது அவருடைய சொந்த ஊரான இராணிப்பேட்டையைக் குறிக்கும். ‘ய’ என்பது தகப்பனார் யக்யஸ்வாமி என்பதின் முதலெழுத்து. மற்றபடி, பழம்பெரும் எழுத்தாளரான ராய சொக்கலிங்கத்திற்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை)  வங்கி அதிகாரியாக இருந்து, இந்தியாவின் பல நகரங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பலமுறை வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெற்றவர். அந்த அனுபவங்களைத் தமது எழுத்துக்களில் தக்க முறையில் வெளிப்படுத்துபவர். ‘செல்லப்பா தமிழ் டயரி’ என்ற இணையதளத்தின் மூலம் தொடர்ந்து எழுதிவருபவர். மனித உணர்வுகளும் தனிமனிதப் பிரச்சினைகளும், மனிதாபிமானமும் இவரது எழுத்துக்களின் ஆதாரமாக இருப்பவை.

இவருடைய ஆறு புத்தகங்கள் விரைவில் புஸ்தகா நிறுவனத்தின்மூலம் வெளியாகவுள்ளன. (புஸ்தகா- மின்னூல் பதிப்பாளர்கள்). 

1  ஊர்க்கோலம் -கட்டுரைகள்;    
2 உண்மைக்குப் பொய் அழகு – சிறுகதைகள்;  
3  சொல்லட்டுமா கொஞ்சம்? -கட்டுரைகள்;   
4  காதல் பூக்கள் உதிருமா? -சிறுகதைகள்;  
5 அபுசி-தொபசி-பகுதி 1;   
6  அபுசி-தொபசி-பகுதி 2.

இவை தவிர மேலும் ஆறு புத்தகங்கள் இன்னும் சில மாதங்களில் தயாராகிவிடும் நிலையில் உள்ளன. 2013 இல் வலைத்தளம் தொடங்கியிருந்தாலும் 2016 முழுவதும் எழுதாமல் இருந்துவிட்டார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் புத்துணர்ச்சியோடு எழுத ஆரம்பித்துவிட்டார். இதுவரை முப்பத்தெட்டு பதிவுகள் வெளியாகியுள்ளன.

****

ரி, பொழுது எப்படிப் போகிறது என்ற கேள்விக்கு சற்றே நேர்மையான பதிலைச் சொல்லிவிடலாமா?

கணினித்துறையில் ஆர்வம் உள்ளவன் என்பதால், கடந்த பன்னிரண்டு மாதங்களாக, கணினி மொழிகளைப் படிப்பதில் எனது நேரத்தை அதிகம் செலவிட்டிருக்கிறேன். 

(1) சென்னை ஐஐடி நடத்தும் ஆன்லைன் படிப்பான IMAD- Introduction to Modern Application Development  என்ற படிப்பை வெற்றிகரமாக முடித்தேன்.

(2)  IIT Kharagpur நடத்தும்  Natural Language Processing  என்ற மிகக் கடினமான படிப்பையும் படித்தேன். தேர்வு மட்டும் எழுதமுடியவில்லை. தேர்வுத் தேதியில் அமெரிக்கா வந்துவிட்டேனே.  

(3) Chennai Mathematical Institute  நடத்தும்   Design and Analysis of Algorithms என்ற மேலும் கடுமையான படிப்பில் பதிவு செய்துகொண்டேன். ஆனால் முந்தைய மூன்று படிப்புகளுக்கும் கொடுத்த நேரம்போக, நேரம் மீதி இல்லாததால் அதை முடிக்கமுடியவில்லை. இந்த ஆண்டு முடிப்பேன். 

(4) பைத்தான் என்ற -இன்று மிகவும் அதிகம் டிமாண்டு உள்ள - கணினி மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். 

(5)  Python Language  -Harvard University ( edX course). 

இதைத்தொடர்ந்து 

(6) Big Data Analytics  என்ற இன்னொரு மிகுந்த டிமாண்டு உள்ள படிப்பையும் ஆரம்பித்துள்ளேன். முடிக்க ஆறேழு மாதங்கள் ஆகலாம்.

இவை எல்லாமே கணித மற்றும் கணினித்துறையில் மிக நுட்பமான, அதே சமயம் மிகுந்த உழைப்பைக் கோருகின்ற படிப்புகளாகும். ஆர்வத்தின் காரணமாகவே படிக்கிறேன். எனவே வாரத்தில் ஒன்றுக்குமேல் வலைப்பதிவு எழுதவும் கூட எனக்கு நேரம் இல்லை என்பதுதான் உண்மை நிலை.

நன்றி குமார் அவர்களே!

-இராய். செல்லப்பா
நியூஜெர்சி

Image result for இராய.செல்லப்பா

ந்த வாரம் எழுத முடியுமா என்று கேட்டதும் அடுத்த நாளே அனுப்பிக் கொடுத்த ஐயாவுக்கு நன்றி.

என்னைப் பற்றி நான் பகுதிக்கு தொடர்ந்து உறவுகள் அளித்த ஆதரவுக்கு நன்றி.

இதுவரை எழுதித்தரக் கேட்டவர்கள் பலருக்கு விருப்பமில்லை போலும். இனி புதிதாய் சிலரிடம் அழைப்பு விட வேண்டும். ஊருக்குச் செல்வதால் அது முடியாத காரியம். விடுமுறைக்குப் பின் தொடர முடியுமா பார்க்கலாம். நாலைந்து வாரங்கள் போகுமா என்று யோசித்து ஆரம்பித்த ஒரு பகுதியை தொடர்ந்து பதினெட்டு வாரங்கள் நடத்த வைத்த, இதில் தங்களைப் பற்றி பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

சொல்ல மறந்துட்டேனே... நாளை இரவு ஊருக்குப் போகிறேன்... ஒரு மாதத்துக்கு மேல் இருப்பேன். முடிந்தவரை இந்த முறையேனும் உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் + ஆவா.

தொடர்புக்கு : 91 9629215744

என்னைப் பற்றி நான் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 11 மே, 2017

குடந்தையூராரை வாழ்த்துவோம் வாங்க....

ர்.வி.சரவணன்.

குடந்தையூர் ஆர்.வி.சரவணன்.

Image may contain: 1 person, glasses

இந்தப் பெயரை வலையுலகில் நாம் அனைவரும் அறிவோம். இன்று அவரின் பிறந்ததினம். நேற்று இரவே எழுதி வைத்து இன்று காலையில் பகிர்ந்திருக்க வேண்டிய பகிர்வு இது. நேரமின்மை மற்றும் எழுத நினைத்தாலும் எழுத வராத மனநிலையும் வேலைப்பளு கொடுக்கும் அசதியும் சேர்ந்த காரணத்தால் எழுதவில்லை.

சரவணன் அண்ணன் எனக்கு நம்ம அண்ணாச்சி... பலமுறை போனில் போனில் பேசியிருக்கிறோம். இரண்டு நாளைக்கு ஒருமுறை எப்படியும் முகநூல் உள்டப்பியில் வந்து நலம் விசாரித்துவிடுவார். கடந்த வாரம் கூட 'என்னாச்சு... ஏன் எந்தப் பதிவும் வருவதில்லை' என்ற விசாரணையோடு முகநூல் உள்டப்பியில் வந்தார். எனக்குப் பிடித்த அண்ணன்களில் இவரும் ஒருவர்.

தனது வலைப்பக்கத்தில் கதை, கட்டுரை. பார்த்தது கேட்டது படித்தது என எல்லாம் பகிர்வார். நாவல் எழுத்தாளர்... 'இளமை எழுதும் கவிதை நீ' என்னும் தொடரை தனது தளத்தில் எழுதி அதை நாவலாக வெளியிட்டவர், திருமண ஒத்திகை என்னும் நாவலை வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்து பாதியில் நிறுத்தி புத்தகமாக வெளியிடும் முயற்சியில் இருக்கும் போது அதை பாக்யாவில் தொடர்கதையாக வெளியிடும் வாய்ப்புக் கிடைத்து அந்தத் தொடரின் மூலமாக மிகச் சிறந்த எழுத்தாளராக அடையாளம் காட்டப்பட்டார். அது விரைவில் நாவலாக... அவரின் அடுத்த வெளியீடாக மலரும் என்று நினைக்கிறேன். குமுதத்திலும் அவ்வப்போது ஒரு பக்க கதைகள் எழுதி வருகிறார். 

இரண்டு குறும்படங்களை இயக்கிய இந்த எழுத்தாளர்... இயக்குநர்... திரையுலகில் ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்போடு அதற்கான முயற்சியிலும் இருக்கிறார். காலமும் நேரமும் இன்னும் கை கொடுக்கவில்லை என்றாலும் காலம் ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை அவரைப் போல எனக்கும் இருக்கிறது. 

குறும்படம் எடுத்ததுடன் துளசி அண்ணாவின் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். பல்சுவைப் பதிவர் என்பதுடன் பல்சுவை மனிதர் இவர்... குமார் இந்த முறை ஊருக்கு வரும்போது நாம் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று மூன்று வருடங்களாக சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் தனபாலன் அண்ணா, புதுகை செல்வக்குமார் அண்ணா என எல்லாரையும் எப்படி சந்திக்கிறேனோ அப்படித்தான் இவரையும்... இந்த முறையாச்சும்... ம்... முயற்சிக்கணும்.

அவரின் குறும்படமான அகம் புறம் தங்கள் பார்வைக்கு...



அன்பின் அண்ணாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தாங்களும் வாழ்த்துக்கள் உறவுகளே....
-'பரிவை' சே.குமார்.

புதன், 10 மே, 2017

17. என்னைப் பற்றி நான் - தேவா சுப்பையா

ந்த வாரம் என்னைப் பற்றி நான் பகுதியில் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் எங்கள் மண்ணின் மைந்தர் அன்பு அண்ணன் 'WARRIOR' என்னும் தளத்தில் எழுதும் தேவா சுப்பையா அவர்கள்.

வலை நட்பு அபுதாபியில் கொடுத்த சில உறவுகளில் அண்ணனாய் அறிமுகமாகி, இன்று என் அண்ணனாகவே ஆகிப் போனவர். சிறந்த எழுத்தாளர்... வாசிப்பவர்களை தனது எழுத்துக்குள் இழுத்துச் செல்லும் வித்தகர். வாசிக்க வாசிக்க சுவராஸ்யமாய் கொண்டு செல்லும் எழுத்துக்காரர்.

தனது சிறுகதைகள் மற்றும் 'காதலே சுவாசமாக' என்ற கட்டுரையை புத்தகமாகக் கொண்டு வந்தவர். இன்னும் சில புத்தகங்களைக் கொண்டு வரும் பணியில் தற்போது மிகத் தீவிரமாக எழுதி வருபவர்.

துபாயில் இருந்து அபுதாபி வரும்போதெல்லாம் 'நான் வருகிறேன்... உன்னைப் பார்க்கிறேன்ப்பா' என்ற செய்தி வந்துவிடும். இருவரும் நிறைய கதைகள் பேசி... குறைவாய் சாப்பிட்டு... சின்னதாய் ஒரு செல்பி எடுத்து... சரி விடுங்க... அது ரொம்ப சந்தோஷமான நிமிடங்களைக் கொடுக்கும் நாள்.

அன்பின் தேவா அண்ணன் அவரைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம் வாருங்கள்.


ன்னைப் பற்றி நானென்ற கட்டுரையை என்  சகமண்ணின் மைந்தன் தம்பி குமார் கேட்டிருக்கும் இந்த நேரத்தில் மிகப்பெரிய ட்ரான்ஸ்மிஷன் எனக்குள் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. கடந்த வருடத்தில் இதே தலைப்பில் என்னை எழுதச் சொல்லியிருந்தால் இந்தக் கட்டுரை வந்திருக்காது.

இன்னமும் பேருந்து வசதிகளில்லாத, கடைகளில்லாத, பழமையின் கதகதப்பினை உணர முடிந்த வானம் பார்த்த பூமியிலிருந்து ஒலிக்கும் ஒரு பிரதிநிதியின் குரலாய்க்கூட இதை நீங்கள் கருதிக்கொள்ளலாம். இரண்டு மூன்று தூறல்கள் விழுந்ததும் சந்தோசமாய் சென்று உழுது விதைத்து, கண்மாய்க் கரைகளை உயர்த்தி வானம் பார்த்தபடி வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருந்த ஒரு சமூகத்திற்கு மழைதான் எல்லாமுமாயிருந்தது. மழைக்காய் பொங்கல் வைத்து மழைக்காய் நேர்த்திக்கடன் வைத்து மழைக்காய் அழுது, மழைகண்டு சிரித்து மழையில் நனைந்து ஆடுமாடுகளோடு வாழ்ந்து மரித்தவன் என் தாத்தன். இரண்டு மூன்று ஆட்களைச் சேர்த்துக் கொண்டு தன் புன்செய்க்காட்டில் பெருங்கிணறு தோண்டி தன் புன்செய்க்கு கொஞ்சமும் ஊர்குடிநீருக்கு நிறையவும் கொடுக்க அவர்தான் ஏற்பாடு செய்திருந்தார்.

காலில் குத்திய கருவேலம்முள்ளை எடுத்துப் போடாமல் ஊராரோடு சேர்ந்து தன் நிலத்தில் நடவு நட்டவள், களை  பறித்தவள் கதிரறுத்தவள், கதிரடித்தவள், தூற்றியவள், பொனை ஓட்டிய வைக்கோலை எடுத்து வீட்டுக் கொல்லையில் போர்மேடாக்கியவள் என் அப்பத்தா. உலையில் அரிசியை போட்டு விட்டு இடுப்புப் பிள்ளைக்கு சோறூட்டி தொட்டில் பிள்ளைக்கு பாலூட்டி வளர்ந்த பிள்ளைகளுக்கு வகை சொல்லியபடி இடுப்பெலும்பு ஒடிய வயலுக்கும் வீட்டுக்கும் ஓடிக்களைத்த சம்சாரி அவள். சாமான் வாங்க கொடுத்த இரண்டணாவைத் தொலைத்து விட்டு சந்தையிலிருந்து வீட்டுக்கு வந்தால் அடிவிழுமென்று ஊர் எல்லையிலிருக்கும் காட்டுமுனி கோயில் மரத்தடியில் அழுது ஒப்பாரி வைத்த என் அப்பாவிற்கு அப்போது வயது பனிரெண்டென்று பெரிய அத்தை சொல்லுவாள். காசைத் தொலைத்த கதையறிந்து புளியவிளாரால் விளாசிய தாத்தாவை  அவ்வளவு கோபமாய் அதுவரை பார்த்ததில்லை என்று சொல்லும் அத்தைக்கு அப்போது வயது பதினாறாம். காணி காசுக்கு காணியைக் கட்டிப் பிடித்துக் கிடந்து காசாக்கிக் கொடுத்தால் அதைத் தொலைத்து விட்டேனென்று சொன்னால் எப்படித் தாங்கியிருப்பான் என் தாத்தன்.

இந்த வானம் பார்த்த வழி வந்த என்னைத்தான் எழுதச் சொல்லியிருக்கிறான் என் தம்பி என்னை பற்றி. காலம் உருண்டோட என் தந்தையின் பியூசிக்கு கிடைத்த உத்தியோகம் இடம் மாற்றி, வாழ்க்கையை மாற்றி  வேறொரு சமூகச் சூழலுக்குள் வெள்ளைச் சட்டையும் பேண்ட்டுமாய் என் அப்பாவை அரசாங்க அலுவலர் ஆக்கிப் பார்க்க, அங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த கட்டுரையாளனின் கதை. அப்பாவைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கையில் அப்பாவின் பிற்பகுதி வாழ்க்கையில் எல்லாமுமாயிருந்த அம்மாதான் எங்களுக்கும் இன்று வரை எல்லாமே. கனவுகள்  நிறைய காண்பவனாய் இன்னமும் நானிருப்பதற்கும் இப்படி ஏதாவதை எழுத முடியும் என் பிரயத்தனத்திற்கும் அம்மாவே ஆதாரம்.

அம்மாவின் தாத்தன் ஒரு புத்தக ப்ரியன். பட்டு அட்டை போட்டு ஐம்பெருங்காப்பியங்களோடு சங்ககால நூல்களை எல்லாம் எடைக்குப் போட்டுக் கொண்டிருந்த மூன்றாவது தலைமுறையின் சிறு கொடுக்கு நான். விபரமறியாமல் வீட்டார்கள் தூக்கிப் போட்ட என் பாட்டனின்  சொத்து ஊரறிந்தது என்ற வகையில் அறுபது ஏக்கர்கள் நானறிந்தது வரை நாலடுக்கு அலமாரிகள் நான்கு நிறைய புத்தகங்கள். 1800களில் பிறந்திருந்த அம்மாவின் தாத்தா என் பாட்டன் விட்டுச் சென்ற சொத்து என் ஜீனுக்குள் புத்தகம் வாசிக்கும் பழக்கமாய் வந்து உட்கார்ந்து கொள்ள ராணி காமிக்ஸ், பூந்தளிர், அம்புலிமாமாவில் ஆரம்பித்து டால்ஸ்டாயின் வார்& பீஸ் (போரும் அமைதியும்) வரை நீண்டு வந்திருக்கிறது.

வாசித்ததெல்லாம் என்ன வாங்கி வந்த மளிகைச்சாமான் போல அஞ்சரைப் பெட்டிக்குள்ளிருந்து அடுப்படிக்கு சென்று தன் வேலையை முடித்துக் கொள்ளுமா என்ன? வாசித்தது அத்தனையும் யோசிக்க வைக்க அந்த யோசனையை எல்லாம் ஒரு நாள் எழுதிப்பார்க்க வந்தானே நாகரீகக் கோமாளி என்பதைப் போல இந்த தேவா சுப்பையாவிற்கும் கொஞ்சம் எழுதவரும் என்ற எண்ணம் புது மாப்பிள்ளையைக் கண்டால் நாணும் பெண்ணைப் போல வெட்கி வெட்கி என் வெள்ளைத் தாள்களை நிறைக்க தொடங்கியதுதான் இந்த கிறுக்கலகள். என்னைப் பற்றி சொல்ல வேண்டுமானால் என் சமகால துபாய் வாழ்க்கையைச் சொல்ல முடியாது. அது என்னை யாரோவாகவோ விரும்பி மாற்றிக் கொண்டு களமாடும் ஒரு யுத்த வாழ்வு. பொருளீட்டல் என்பது எளிதாய் சிலருக்கு கைகூடும் ஆனால் என்ன ஒன்று எளிதாய் கைகூடும் எல்லாமே எளிதாய் சென்று விடவும் செய்கிறது. அடிப்படையில் தேடிச் சேர்ப்பதிலொரு தர்மம் இருக்கவேண்டும் அந்த தர்மத்தின் பெயர்தான் உழைப்பு.  வாழ்க்கை வேறு திசையில் அழைத்துச் சென்ற பாதையாய் என் பொருள் ஈட்டும் சமகால வாழ்வு இருந்தாலும் கனவு என்னவோ வானத்தில் பறப்பதாயத்தானிருக்கிறது இன்னமும்.

வாழ்ந்து தீர்க்க முடியாத பக்கங்களை ஒரு எழுத்தாளன் எழுதிப் பார்க்கிறான், ஓவியன் வரைந்து பார்க்கிறான், ஒரு இயக்குனர் படமாய் எடுக்கிறான் ஆகமொத்தம பெரும்பாலும் எல்லா படைப்பாளிகளுக்கும் வாழும் உலகம் ஒன்றாயும் வாழ விரும்பும் உலகம் வேறொன்றாயும்தான் இருக்கிறது. இந்தச் சமன்பாட்டு முரண்தான் படைப்பவனின் அதிரகசியமான வாழ்வாய் இருக்கிறது. இந்த கணம் வரை அறுதியிட்டுச் சொல்ல முடியாத வாழ்வின் நிதர்சனத்தில் என்னை ஒரு எழுத்தாளனாய் அடையாளப்படுத்திக் கொள்வதாகவே எனது தினமும் நான் நினைக்கிறேன். எல்லா நேரமும் எழுத விரும்புபவனாகவும், சுற்றி நிகழும் விசயங்களுக்குள் இருக்கும் ஜீவனை ரசிக்க முடிந்தவனாகவும், கொடுமையான வெயிலென்று ஊர் நிராகரிக்கும் உச்சி வெயிலின் உஷ்ணத்தை ரசிக்கத் தெரிந்தவனாகவும், இதற்கு மேல் நின்றால் ஜன்னி கொண்டு விடும் என்று ஊரார் விலக்கி வைக்கும் குளிரை ஸ்வெட்டர் அணியாமல் கைகளால் கட்டிக் கொண்டு அனுபவிக்க விரும்புவனாகவும்...

யாருமற்ற வீதிகளில் இரவு நேரங்களில் விழித்துக் கொண்டிருக்கும் பூமியின் பிரக்ஞைச் சூட்டினை, அந்த கதகதப்பினை அனுபவிக்க ஆசைப்படுபவனாகவும்,  ஆல் இந்திய ரேடியோ திருச்சிராப்பள்ளி வானொலி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி என்று நினைவுகளை மீண்டும் பால்யத்துக்குள் போக விரும்புபவனாகவும் அப்போது தம்பிகளுடன் ஒரு மேரி பிஸ்கெட்டுக்கு சண்டை போடுபவனாகவும், பக்கத்து வீட்டுப் பையனை நங்கென்று அடித்து விட்டு ஓடி வந்து வீட்டிலிருக்கும் பெரிய மரபீரோவுக்கு பின் ஒளிந்து கொள்ள விரும்புபவனாகவும், அப்பாவின் மடியிலமர்ந்து அம்மா சொல்லும் கதைகளைக் கேட்கவிரும்புபவனாகவும் இருக்கும் நான் யாரென்பதுதான் இப்போதெழும் அந்த ஞானக் கேள்வி.

என் கடவுள் தேடல்தான் காதலென்று உணர்ந்த பொழுது கடவுள் தேடல் நின்று போனது. ஆழ்மனதில் விதைக்கும் விசயங்கள், அதற்குப் பின்னான உழைப்பு, முயற்சி, ஒழுக்கம் எல்லாம் சேர்ந்துதான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றுணர்ந்த போது மூடநம்பிக்கைகள் அறுந்து போனது. நெருங்கிய உறவினர்களின் மரணங்களில் என்னை துரத்தி வந்த நிலையாமை ஒரு விபத்தில் என் அப்பாவை பறிகொடுத்த போது என் தோளில் ஏறி அமர்ந்து செவிகடித்து எங்கே செல்கிறாய் நீ என்ற கேள்வியை உச்சி மண்டையிலடித்துக் கேட்டது. எல்லாம் ஒரு நாள் சட்டென்று தீர்ந்து போகும் நீ வெறுமனே நாளை யாரோ ஒரு சிலரின் ஞாபகத்தில் தேங்கிக் கிடக்கப்போகும்  நினைவுதான் என்று சொல்லிக் கொண்டேயிருக்கும் காலத்தின் கை பிடித்துக்கொண்டுதான் இந்த நாட்கள் எனக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இப்படியாய் வாழ்வின் ரகசியங்கள் எல்லாம் நீர்க்குமிழிகளாய் உடைந்து உடைந்து நிதர்சனத்தை போதித்துக் கொண்டேயிருக்க,  இந்த மாலை வேளையில்  தட்டச்சு செய்து கொண்டிருக்கும் இந்தக் கட்டுரை என்னைப் பற்றி உங்களுக்கு சொல்ல முயன்று தோற்றது போலவே நீங்களும் புரிந்து கொள்ள முடியாத ஒரு குழப்பச் சூழலோடே இந்த வார்த்தைகளைக் கடந்து கொண்டிருக்கலாம்தான். அதிலொரு பிழையுமில்லை.

புரிந்து கொள்ள முடியாத இவ்வாழ்வை புரியாமலேயே அணுகுவது எவ்வளவு உன்னதமானதோ அப்படியாய் சிவகங்கை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து நீண்ட இந்தக் கிளை  தன்னை தன் மூதாதையர்களின் பிரதிநிதி என்று அறிவித்து கொள்ள விரும்புவதாய் ஒரு உத்தேசமாய் கருதிக் கொள்ளுங்கள். எழுத்து நோக்கி நீண்டு கொண்டே இருக்கும் கரங்களுக்குச் சொந்தக்காரன், ஒரு சில புத்தகங்களை எழுதியவன், இன்னும் சில புத்தகங்களை எழுதித் தீர்க்க ஆவல் கொண்டவன் என்பதாயும் எனது அடையாளம் வரையறுக்கப்படலாமென்றாலும்...

காலத்தின் கைகளில் தன்னை முழுமையாய் கொடுத்தவன் நான் என்றுதான் என் பிரக்ஞை என்னை எனக்கு அறிமுகம் செய்கிறது.

ப்ரியத்தோடு என்னை எழுத அழைத்த தம்பி குமாருக்கு எனது நன்றிகள். கட்டுரை அபஸ்வரத்திலிருந்து வெடித்திருக்கிறது ஆனால் சுபஸ்வரம்தான் அது என்பதை உணர்வீர்களாக;

தேவா சுப்பையா.
**********

ன்னைப் பற்றி நான் என்னும் தொடர் ஆரம்பித்த போது பலருக்கு கட்டுரை கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். சிலர் மட்டுமே அனுப்பிக் கொடுக்க பதிவைத் தொடர முடியுமா என்ற யோசனையில் முகநூல் வழியாக வாட்ஸ் அப் வழியாக சிலரைப் பிடித்து கட்டுரை வாங்கி போட்டு வந்த எனக்கு இந்த வாரம் போட எந்தக் கட்டுரையும் இல்லாத நிலையில் மனசுக்குள் வந்தவர் தேவா அண்ணன். 

அவரிடம் முன்பே சொல்லியிருந்தாலும் அவரின் தற்போதைய கம்பெனி சூழலால் விரட்டிக் கேட்கவில்லை. இந்த வாரத்துக்கு அவரை விட்டால் வேறு வழி இல்லை என்பதால் கண்டிப்பாக வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி... சொல்லப் போனால் நச்சரித்து... அவர் சூழலில் எனக்காய் எழுதி இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்கும் போதுதான் அனுப்பிக் கொடுத்தார். எனக்காய்... தன் வேலைகளுக்கு இடையில் எழுதிக் கொடுத்த தேவா அண்ணனுக்கு நன்றி.

தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து வரும் உறவுகளுக்கும் நன்றி.

விருப்பம் இருப்பவர்கள்... இதுவரை என்னைப் பற்றி நான் எழுதாதவர்கள் எழுத விரும்பினால் 'kumar006@gmail.com'-ல் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

புதன், 3 மே, 2017

16. என்னைப் பற்றி நான் - ஜி.எம்.பாலசுப்ரமணியம்

ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் நாம் அனைவரும் அறிந்த, பதிவுலகில்  ஜி.எம்.பி என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அன்பின் ஐயா திரு. ஜி.எம்.பாலசுப்ரமணியம் அவர்கள்.

GMB WRITES என்னும் தளத்தில் பல்சுவைப் பதிவுகளைப் பகிர்ந்து வரும் ஐயா அவர்கள், நான் ஒரு திறந்த புத்தகம் என்று சொல்லி, உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும் என்ற வாசகத்தை வலைப்பூவில் வைத்து அதே போன்று எழுதியும் வருகிறார். மணிமேகலைப் பிரசுரம் வாயிலாக சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். அது குறித்து நான் கூட ஒரு பதிவாகக் கிறுக்கியிருந்தேன். 

ஐயாவுடன் வலையுலக தொடர்புதான்... எல்லாரையும் கருத்துக்களால்... அதுவும் மனதில்பட்ட கருத்தை தயங்காது சொல்லித் தட்டிக்கொடுக்கும் ஐயா அப்படித்தான் என் பதிவுகளிலும் தட்டிக் கொடுத்தார். ஐயா என்னைப் பற்றி நானுக்கு எழுதித் தரமுடியுமா என்று கேட்டதும் எழுதிக் கொடுத்தார்.

ஐயா குறித்து அவரின் எழுத்து கீழே.....


னசு குமார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க என்னைப் பற்றி நான். 

ஊரறிந்த பாப்பானுக்கு பூணூல் எதற்கு என்னும்  சொல்வழக்கு இருக்கிறது என்னை நான்  அப்படித்தான்  நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் அது சரியில்லையோ  என்று தோன்றுகிறது சில அடையாளங்கள் மட்டும் போதாது  தமிழ் வலையுலகில் என்னை அறியாதார் இருக்க மாட்டார்கள் என்னும்  கர்வம்   அது அப்படியில்லை ஐயா  என்று எனக்குணர்த்தியது. 

ஒரு வலைப்பூவில் வந்திருந்த ஒரு செய்தி. ஒரு பதிவர் பலரது பதிவர்கள் பெயரைக் குறிப்பிட அதில் என் பெயரைக் காணவில்லை அப்போதுதான் உரைத்தது என்னை அறியாதவர்களும்  படிக்காதவர்களும்  இருக்கிறார்கள் என்று என் ஈகோவுக்கான ஒரு அடி அது. என்பதிவுகளைத் தவறாமல் வாசிப்பவர்களுக்கு நான்  ஒரு திறந்த புத்தகம்  என்பது தெரியும். இது என்னை நானே அறிமுகப்படுத்திக் கொள்ளும்  ஒரு முயற்சியே தாங்க்ஸ் டு மனசு குமார். 

என் பெயர் வயது ஆசைகள் ஆதங்கங்கள் என என்பதிவுகள் ஒரு கலந்து கட்டியவையாக இருக்கும்  என்  வலைத்தள முகப்பில்  எழுதி இருக்கும் வாசகங்கள் என் கொள்கையை ஓரளவு காட்டும்  பெரும்பாலும்  உண்மை என்று நான்  நம்புவதைத்தான்   எழுதுகிறேன்  என் பெயர் படம்  என்பன போன்ற தகவல்களை நான் வெளிப்படையாகவே காட்டுகிறேன்   முகம்  தெரியா வலை அறிமுகங்களில் என்னைப் படிப்பவருக்கு நான்  யார் என்று தெரிந்திருப்பது அவசியம்  என்றே எண்ணுகிறேன் முடிந்தவரை வலை அறிமுகங்களை நட்பாக்கிக் கொள்ள விரும்புகிறேன்  அதற்கு நான்  யார் என்பது தெளிவாக இருக்க வேண்டும் அல்லவா  புனைப் பெயரிலோ தெரியாத தகவல்களிலோ  நான் மறைந்து கொள்ள விரும்பவில்லை இதைப் படிப்பவர்களுக்கு இவன் இப்படித்தான் என்னும்  ஒரு கணிப்பு வரவேண்டும் .

ஜோதிஜி திருப்பூர் எழுதி இருந்ததைப் படித்தபோது  அவரைப் போலவே எனக்கும்  என் மூதாதையரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்  என்னும் ஆவல்பிறந்தது என்  செய்ய எனக்கு என்  தாத்தா பாட்டி மற்றும்  உறவினர்கள் பற்றிய எல்லா செய்தியும்  கிடைக்கவில்லை அதுபோல் என் வாரிசுகளுக்கும்  அந்தப் பிரச்சனை எழக் கூடாது என்று எண்ணியே என்னைப் பற்றி என்  சுய சரிதையை ஆவணமாக்கும்  முயற்சியில்  இருக்கிறேன்  ஆனால் அது ஏனோ முடிவு இல்லாமல் தேங்கி நிற்கிறது.

என் சொந்த ஊர் எது என்பது சந்தேகமாக இருக்கிறது என் அப்பாவின்  ஊர் பாலக்காட்டில் உள்ள கோவிந்தராஜபுரம்  அதன் முதல் எழுத்தே என் பெயரின்  இனிஷியலில் உள்ளது அப்பா பெயர் மஹாதேவன்   அவர் பெயரின்  முதல் எழுத்தே என்  இனிஷியலில் உள்ள இரண்டாவது  எழுத்து ஆக ஜீ. எம் பாலசுப்பிரமணியம்  என்பது என் பெயர் 1938-ம் ஆண்டு நவம்பர் பதினொன்றாம் தேதி பெங்களூரில் பிறந்தேன்  இப்போது ஊரில் எனக்கென்று மூரிங்  ஏதும்  இல்லாததால் என் பிள்ளைகளின் பெயர்களில் என் ஊரின் இனிஷியலை நீக்கி விட்டேன்.  

அப்பாவுக்கு அரசு பணி செல்லும் இடமெல்லாம் நாங்களும்  செல்வோம்   என்  தாய் எனக்கு மூன்று வயதாய் இருக்கும் போதே இறந்து விட்டார்  என் தாயின் முகம்  கூட எனக்கு நினைவில்லை புகைப்படத்தில்  பார்த்ததுதான்  என்  தாய் இறந்த ஓராண்டுக்குள் என் தந்தை மறுமணம் செய்து கொண்டார்  எங்கள் குடும்பம்  பெரியது  தந்தைக்கு முதல் தாரம்  மூலம் ஆறு பேர் பிறந்து இப்போதும் ஐவராக இருந்தோம்  ஒரே சகோதரி அவளும் போய்ச் சேர இப்போது நாங்கள் நால்வர் மீதி இரண்டாம் தாரம்  மூலம்  ஏழு குழந்தைகள் பிறந்தது. அதில் மூவர் பெண்கள் பிறந்த சில நாட்களிலேயே இறந்துவிட்டனர் ஆக மீதி நால்வரில் இரண்டு பேர்  பரலோகம்  சென்று விட்டனர் நான் என் சிறிய தாயாரின்  பராமரிப்பிலேயே வளர்ந்தேன்  என் பிறந்த நாளுக்கு ஒரு முக்கியத்துவம்  உண்டு. அது நூறாண்டுக்கு ஒரு முறைதான்  இப்படி ரிபீட் ஆகும்  11-11- என்று  ஒரு முறை யாரோ இது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள்  

என்னைப் பற்றிய செய்திகள்பலவும் வலையில் எழுதி இருக்கிறேன் பள்ளியில் முதல் மூன்று வகுப்புகள் படிக்கவில்லை அரக்கோணத்தில் மூன்றாம்  வகுப்பில் சேர்ந்து ஆறாம் வகுப்பு படிக்கும் போதே டைபாய்ட் வந்து பள்ளிப் படிப்பு தடை பட்டது அதன் பின்  என் தந்தையாருக்கு பூனாவுக்கு மாற்றல் ஆக பாலக் காட்டில் அப்பா வழிப்பாட்டியுடன்  ஓராண்டு படிப்பே இல்லாமல் சுற்றினோம்  அங்கு மலையாளம் படிக்க வேண்டும் என்பதால் இதன்  நடுவே தந்தைக்கு கோவைக்கு மாற்றல் ஆகி  அங்கே ராமநாதபுரம்  முனிசிபல் பள்ளியில் தேர்ட் ஃபார்மில் சேர்ந்தேன் நான் அந்தப் பள்ளியில் சேர்ந்த  விவரம் எனது  தளத்தில் இது  லஞ்சமா .?  என்ற  பதிவில் இருக்கிறது.

ஃபோர்த் ஃபார்மும்  அங்கேதான்   வகுப்பில் நானே முதலாம்  மாணவன் ஃபிஃப்த் ஃபார்ம் மற்றும்  சிக்ஸ்த் ஃபார்ம் எனப்படும் பள்ளி இறுதி கூனூரில் புனித அந்தோனியார் பள்ளியில் முடித்தேன்   இவை எல்லாம் என் பதிவுகளில் ஆங்காங்கே எழுதப்பட்டிருக்கும் பின் என்ன வேலை தேடு படலம்தான் நான்  கல்லூரி செல்லாதவன்   ஒரு முறை நண்பனொருவனைப் பிற்காலத்தில் சந்தித்து நான்  எஞ்சினீயராக வேலையில் இருக்கிறேன் என்றதும்  அவன்  பத்தாம் க்ளாஸ் படித்து எஞ்சினீயரா  என்று கேலி செய்தது நினைவுக்கு வருகிறது . நான் வாழ்வியலில் நிறையப் படித்திருக்கிறேன் என்பது எங்கும்  என்னை நிலை நாட்டிக் கொள்ள உதவுகிறது  எனது 53  வயது முடிந்தபோது பீ எச் ஈ எல் லிருந்து விருப்ப ஓய்வு பெற்று விட்டேன்   அதையே என்  பதிவொன்றில் என்னை பெற்றவருக்காகவும்  நான் பெற்றதுகளுக்காவும்  இதுவரை வாழ்ந்தாகி விட்டது போதுமடா சாமி இனி எனக்காக வாழவேண்டும்  என்று எழுதி இருப்பேன். 

விருப்ப ஓய்வு பெறும் போது என்  மனைவியிடம்  நமக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வருமானம்போதுமல்லவா என்று கேட்டேன்  அது 1991ம் ஆண்டு அவளும்  நம் இருவருக்கு அது தாராளம் என்றாள் காலம் தான் எவ்வளவு மாறி விட்டது ரூபாயின் மதிப்பே போய் சில நேரங்களில் எடுத்த முடிவு குறித்த சந்தேகம் வந்ததுண்டு இருந்தாலும்  இப்போது நோ ரிக்ரெட்ஸ் என் வாழ்வின் எல்லா நிலைகளுக்கு ம் நானே பொறுப்பு என்பதை உணர்கிறேன்  மற்றபடி விதி என்றோ கடவுள் என்றோ நம்புவதில்லை

வலையில் என் கருத்துகளை ஆணித்தரமாகக் கூறுவேன்  வெளிப்படையாக இருக்கும்  ஆனாலும் பிறர் மனம் புண்படக்கூடாது என்று நினைப்பவன் எனக்கு முன்  வாயில் சிரித்துக் கடை வாயைக் கடிக்கும்  பலரையும் பிடிக்காது  அதே போல் என்னையும் பலருக்குப் பிடிக்காது என்றும் தெரியும் யார் மீதும்  காழ்ப்புணர்ச்சி கிடையாது வெளிப்படையாக இருப்பதே என் பலம் பலவீனமும் கூட பதிவுகளில் எழுதி இருந்த சிறுகதைகளின் தொகுப்பை நூலாக்கி இருக்கிறேன்.    மணிமேகலைப் பிரசுரம்  அதை என்  75-ம் வயது நிறையும் போது என்  மக்கள் பரிசாக்கினர் எனக்கு இந்த எழுதும் வழக்கம்  முன்பே இருந்தது எழுதியவை என்  ஆத்ம திருப்திக்கே பத்திரிக்கைகளுக்கு  அனுப்பியது இல்லை.  

என் எழுத்துகளை யாராவது ரிஜெக்ட் செய்வது எனக்குப் பிடிக்காது நாடகங்களை எழுதி இயக்கி நடித்தும்  இருக்கிறேன்  புதிது புதிதாக எதையாவது செய்ய வேண்டும்  என்னும்  ஒரு உந்துதல் உண்டு எழுத்துகளிலும்  அவற்றைக் கடைப்பிடித்து இருக்கிறேன்   என்  அறுபது வயதுகளில்  தஞ்சாவூர் பெயிண்டிங்கும்   கண்ணாடி பெயிண்டிங்கும் ஆசிரியர் யாருடைய உதவியும் இன்றி கற்றேன்  இப்போது அதைத் தொடர  இயலாமல் இருக்கிறேன்   நுண்ணிய வேலைகளுக்குக் கண்களும் கைகளும் சேர்ந்து இயங்கல் அவசியம் அது இப்போது குறைந்து கொண்டு வருகிறது. ஒரு ஆண்டுக்கு முன்னால் க்வில்லிங்  வேலையும்  டெரகோட்டா அணிகலன் வேலையும்  முயற்சி செய்தேன் ஆனால் நான்  செய்து வைப்பதை யாருக்கு அணிவித்து அழகு பார்க்க என்று தோன்றியதால் விட்டு விட்டேன்.

இப்போதெல்லாம் எல்லா முதியோரைப் போல் கிருஷ்ணா ராமா என்று இருக்க முடியவில்லை  உடலில் தெம்பு இருக்கும் வரை எதையாவது புதிதாகச் செய்து கொண்டிருக்க வேண்டும்  என்று நினைக்கிறேன் வலை உலகில் நான்  டிஃப்ஃபெரெண்ட்  என்று பலருக்கும்  தெரியும். 

மனசு குமாருக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.


நல்வாழ்த்துக்களுடன்,
ஜி.எம்.பாலசுப்ரமணியம்.

நான் கேட்டதும் உடனே எழுதிக் கொடுத்த அன்பின் ஐயா அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களை இட்டு என்னைப் பற்றி நான் எனச் சொல்லும் வலை ஆசிரியர்களை மகிழ்விக்கும் அனைவருக்கும் நன்றி.

என்னைப் பற்றி நான் பகுதிக்கு மட்டும் கருத்துரை மட்டுப்படுத்துதல் நீக்கப்படுகிறது என்பதை அறிவீர்கள். தங்கள் கருத்துக்களை இங்கு பகிருங்கள்... நான் கேட்டவர்களில் பலர் இதுவரை அனுப்பவில்லை... விருப்பமில்லை என்றால் பரவாயில்லை... விருப்பம் இருப்பின் விரைந்து அனுப்பிக் கொடுங்க... நன்றி.

அடுத்த வாரம் மற்றொரு வலை ஆசிரியர் தொடர்வார்...
-'பரிவை'. சே.குமார்.