மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 28 ஜூலை, 2017

சினிமா : விக்ரம் வேதா

வேதாளம் விக்ரமாதித்தனிடம் கதை சொல்லி, அதன் முடிவில் ஒரு கேள்வி கேட்கும் அதற்கு சரியான பதில் சொல்லவில்லை என்றால் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும் என்ற மிரட்டலுடன்... அதுவும் கதை சொல்ல... விக்ரமாதித்தனும் பதில் சொல்ல... அதன் பின் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளும் அல்லவா..? அப்படியான கதை சொல்லி அதற்கான விடையையும் பெற்று ஒரு கட்டத்தில் விக்ரமாதித்தனை தடுமாற வைத்து விடை காண எங்கே தேடணுமோ அங்கே தேடு எனச் சொல்லி விடையை கண்டுபிடிக்க வைக்கிறது வைக்கிறது இந்த வேதாளம். பழைய மொந்தையில் பழைய கள்தான் என்றாலும் (நல்லா கவனிங்க புதிய மொந்தையும் இல்லை... புதிய கள்ளும் இல்லை) அதைப் பரிமாறிய விதத்தில் ஜெயித்திருக்கிறது 'விக்ரம் வேதா'.

Image result for விக்ரம் வேதா

18 என்கவுன்டர் செய்த போலீஸ்காரர் விக்ரமிடம் 'திருடா திருடா'. 'திருடா திருடி', 'திருடன் போலீஸ்' என மூன்று கதைகளைச் சொல்லி அதற்கான பதிலாக இதுவா... அதுவா... எனக் கேட்பதை அழகான திரைக்கதையில் விறுவிறுப்பாய் அடுத்தென்ன... அடுத்தென்ன... என ஆவலாய் படம் பார்க்கும்படி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. பலமில்லாத கதை என்றாலும் பலமான திரைக்கதை... வசனம் மற்றும் பின்னணி இசையால் மிகப் பலமான படமாய் வந்திருக்கிறது.

2000-த்தில் கல்லூரிப் பெண்கள் எல்லாம் மேடி, மேடி எனக் கொண்டாடிய 'மின்னலே' மாதவன்... எப்பவுமே நடிப்பில் சோடை போனதில்லை. பெரும்பாலும் அவர் தனக்கான கதைத் தேர்வில் சொதப்புவதில்லை. நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பவர். இதிலும் அப்படியே... ஒரு கட்டிடத்தில் மறைந்திருக்கும் வேதாவின் ஆட்களை தனது சகாக்களுடன் மாதவன் சுட்டுக் கொல்வதில் ஆரம்பிக்கும் படத்தின் ஆரம்பக் காட்சிகளை மாதவனே ஆக்கிரமித்துக் கொள்கிறார்.  தான் எப்படி காதலில் விழுந்து திருமணம் வரை சென்றேன் என்பதை ஒரு பாடலில் சொல்லிவிடுகிறார்.

விஜய் சேதுபதி எப்போ வருவார் எனக் காத்திருக்க, மாஸ் பாடலோ... மாஸ் பைட்டோ இல்லாமல் ஒரு வடையுடன் காவல் நிலையம் வருகிறார்.. கால்கள் மட்டுமே காட்டப்பட்டாலும் கையில் வடையுடன் அந்த நடை... அட அதுவே செம மாஸ் போங்க... பாட்டி வடை சுட்ட கதையை வழிவழியாக கேட்டும் சொல்லியும் வந்திருக்கும் நமக்கு விஜய் சேதுபதி கதை சொல்லப் போறாருன்னு தெரியாது. இங்க பார்றா இம்புட்டு போலீசும் வேதாவைப் பிடிக்க கிளம்பும்போது இந்தாளு அசால்ட்டா வடையோட ஸ்டேஷனுக்குள்ள போறானே... செம சீன் இருக்கும்ன்னு பார்த்தா, தானே சரண்டராகி, விக்ரம் சார் எங்கிட்ட ஒரு கதை இருக்கு சொல்லவான்னு கேட்டு கதை சொல்ல ஆரம்பிச்சிடுறாரு... கதை சுவராஸ்யமாய் நகர ஆரம்பிக்கிறது. அவரும் ஜாமீனில் சென்று விடுகிறார். மற்றொரு தருணத்தில் மற்றொரு கதை மீண்டும் எஸ்கேப்... மறுபடியும் இன்னொரு கதை.. அதில் கிளைமேக்ஸ்.

மாதவனின் மனைவியாக வரும் ஷ்ரத்தா, வேதாவுக்காக ஆஜராகும் வழக்கறிஞரின் ஜூனியர்... கணவன் சுட்டுக் கொல்ல நினைக்கும் ஒருவனை காப்பாற்ற நினைக்கும் மனைவி என்பதால் இருவருக்குள்ளும் ஊடல் வருகிறது. அந்த ஊடலை வெகுநேரம் இழுக்காமல் வீட்டுக்கு வெளியே நம்ம வேலையை விட்டுட்டு வந்துடலாம்... வீட்டுக்குள்ள கணவன் மனைவி  என ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் போட்டுக் கொள்கிறார்கள். அவருக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

Related image

விஜய் சேதுபதியின் தம்பியாக... ரொம்ப நல்லவனாக வரும் கதிர், கதரின் தோழியாக இருந்து மனைவியாகும் வரலெட்சுமிக்கு அதிக வாய்ப்பில்லை என்றாலும் நாட்டாமை பொண்ணுக்கிட்ட நடிப்பு இருக்கு. மாதவனின் பாஸ், மலையாள வில்லன், சின்னச் சின்ன ரவுடிகள், மாதவனின்  சகாக்காளாக வருபவர்கள் என மற்றவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமே சாம் சி.எஸ்-ன் பின்னணி இசையும் வினோத்தின் ஒளிப்பதிவுதான்.

விக்ரம் காதபாத்திரத்தில் மாதவன் அடித்து ஆடினால் வேதாவாக விஜய் சேதுபதி விளாசித் தள்ளுகிறார். அவரின் உடல்மொழியாலேயே பல இடங்களில் கவர்ந்து விடுகிறார். எந்தப் பக்கம் பால் போட்டாலும் சிக்ஸர்தான். இவரின் நடிப்புக்கு தமிழ்த் திரையுலகம் சரியான தீனி போட்டால் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு போட்டி போடுறாரோ இல்லையோ உலக நாயகன் இடத்துக்கு கண்டிப்பாக போட்டி போடுவார். நா தழுதழுக்க பேசும் போதாகட்டும்... சந்தோஷமாக பேசும் போதாகட்டும்... சான்ஸே இல்லை... எத்தனை சிவகார்த்திகேயன்கள் வந்தாலும் நடிப்பில் விஜய் சேதுபதியை தோற்கடிக்க முடியாது.

வசனங்கள் அருமை... டசுக்கு டசுக்கு பாடல் சூப்பர்... இவன் வில்லனா... இல்லை இவனா... இவனுமில்லைன்னா அப்ப எவன்... என இறுதிவரை நம்மளையும் விடை தேட வைத்துவிடுகிறார்கள். எனக்கும் ஒரு காதல் கதை இருக்கு சொல்லவா என்று சொல்லும் வேதா கடைசி வரை காதல் கதையைச் சொல்லவே இல்லை... ஒருவேளை சொல்லியிருந்தா அதுக்கு ஒரு நாயகி, அப்புறம் ரெண்டு பாட்டுன்னு போயிருக்கும்... அப்படிப் போயிருந்தால்... சரி விடுங்க அதான் போகலையே...

படத்தின் ஆரம்பத்தில் தன் அப்பா ஓட்டிய புல்லட்டை சரி செய்ய ஆரம்பிக்கும் மாதவன், ஒவ்வொரு சாமானாக வாங்கி  சரி செய்து வர, கிடைக்காத ஜெயின் மட்டும் வேதாவின் பரிசாக கிடைக்கிறது. இறுதிக்காட்சியில் புல்லட் முழுமை பெற,  யார் வில்லன் என்ற கேள்விக்கும் விடையும் கிடைக்கிறது. விக்ரமும் வேதாவும் துப்பாக்கியுடன் நிற்க, வேதா விக்ரமிடம் கேட்ட கேள்விகளுக்கான விடைகளை நாம் அறிந்து கொண்டாலும் இந்த நேருக்கு நேர் துப்பாக்கி நீட்டலில் என்ன நடக்கும் என்ர கேள்வியை நம்மீது சுமத்தி அனுப்பிவிடுகிறார்கள்.

புரோட்டா எப்படி சாப்பிட வேண்டும் என விஜய் சேதுபதி சொல்லும் போது நமக்கு அப்படி சாப்பிட்டுப் பார்க்கும் ஆவல் வந்தால் நாமும் புரோட்டா ரசிகரே.

நிறைய ஓட்டைகள் இருந்தாலும் அதெல்லாம் படத்தை பாதிக்கவில்லை... என்ன இருந்தாலும் அம்புட்டுப் பாசம் வைத்திருக்கிற தம்பி கொல்லப்பட்டும் கதை சொல்லிக்கிட்டு சாதாரணமாத் திரியிறது சரியில்லைன்னு நமக்கு தோன்றினாலும்... சரி விடுங்க பெரிய ஓட்டைகளோட வர்ற படங்களெல்லாம் மாஸ் ஹிட்டாகும் போது இதை ஏன் பெரிசு பண்ணிக்கிட்டு...   ரவுடிகள் அப்படித்தான்னு நினைச்சுக்குவோம்.

Related image

மொத்தத்தில் விக்ரம் வேதா என்னும் திருடன் போலீஸ் கதை சொல்லப்பட்ட விதத்தில் ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறது.
-'பரிவை' சே.குமார்.