மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 25 நவம்பர், 2017

கோழிக்குடலும் பிலிப்பைனியும்

'காணாமல் போன கனவுகள்' ராஜி அக்கா அருவருப்பான உணவுகள் அப்படின்னு பதிவுகள் எழுதியிருந்தாங்க... அதில் லார்வா புழுக்களை திம்பாங்களா?! அப்படின்னு ஒரு பதிவு... வாசிக்கும் போதே குமட்டல் எடுக்கும்படியான உணவுகள். அதைப் படித்ததும்  எதை எதையோ சாப்பிடுகிறார்களே  என நினைத்தபோது எல்லாத்தையும் ஒரு கை பார்க்கும் சைனாக்காரர்களைப் போல கழிவென்று எதையும் ஒதுக்காமல் சாப்பிடும் பிலிப்பைனிகள் என் ஞாபகத்தில் வந்தார்கள்.

ஆம் பிலிப்பைனிகளின் உணவு முறை மிகவும் வித்தியாசமானதுதான்... திங்கிறதுல இவன் சூரன்னு நம்மூருல சிலரைச் சொல்லுவாங்க... புரோட்டா சூரி மாதிரி அசால்ட்டா ஏழு ஈடு இட்லியைச் சாப்பிட்டுட்டு இன்னும் வேணுமின்னு சொல்ற கிராமத்து... விவசாயம் பார்க்கிற மனிதர்களைப் பார்த்ததுண்டு... ஆனா இவயிங்க... அதான் பிலிப்பைனிகளும் அரபிகளும் இல்லேன்னா அமீரக உணவுக்காக தினமும் லட்சக்கணக்கான கோழிகள் உயிரை இழக்கமாட்டாது.... கே.எப்.சி. செமயா கல்லாக் கட்டுறதுல இவனுக பங்கே அதிகம்.

நான் அபுதாபி வந்த புதிதில் கோழியும் அதன் ஈரலும் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்... அதன் பிறகு அதன் கால்கள், தலை என ஒவ்வொன்றாய் விற்பனைக்கு வர ஆரம்பித்து இப்போ கோழிக்குடலும் விற்பனையில்... இதெல்லாம் யார் சாப்பிடுகிறார்கள் என்றால் பிலிப்பைனிகள்.... பிலிப்பைனிகள் மட்டுமே.

சென்ற வாரத்தில் ஒருநாள் அலுவலகம் முடிந்து இருப்பிடம் திரும்பிய போது லிப்டின் அருகே இரண்டு அட்டைப் பெட்டி இருந்தது. ஒன்றில் கோழியின் கழுத்துப் பகுதி பாக்கெட் பாக்கெட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்து. மற்றொன்றில் பெரிய பெரிய பாக்கெட்டில் நீள நீளமாய்... நாம் பள்ளியில் படிக்கும் காலத்தில் கண்மாயில் மீன் பிடிக்க தூண்டில் முள்ளில் குத்த ஈர மண்ணை வெட்டி புழுவைப் பிடித்து டப்பாவில் அடைத்துச் செல்வோமே அதைபோல் சற்றே பெரியதாய்... வெள்ளையாய்... இடியப்பம் போல்...  நீள... நீளமாய்...

தூண்டில் என்றதும் ஞாபகத்தில் வருவது... பள்ளியில் படிக்கும் போது கடையில் நரம்பும் தூண்டில் முள்ளும் வாங்கி நெட்டியையோ அல்லது மயிலிறகினையோ தட்டையாக்கி நீண்ட கம்பில் கட்டி, முள்ளில் புழுவைக் குத்தி தண்ணீருக்குள் வீசி கம்பைத் தூக்கிப் பிடித்தபடி வெயிலில் காத்து நின்றிருக்கிறோம். கெண்டையும் கெழுத்தியும் உழுவையும் சில நேரம் விறாலின் குட்டிப் பையனும் (விறாக்கண்ணு) பிடிப்படுவதுண்டு. ஒரு சில நாட்களில் ஒன்றுமே கிட்டாமல் போவதும் உண்டு.

 தூண்டில் போடுவதில் நமக்கு அவ்வளவு ராசி இல்லை.... தம்பிக்கு அதில் அதிக ஆர்வம்... அவனுக்கு மீன ராசி இல்லை என்றாலும் மீன் பிடிக்கும் ராசியுண்டு. காலையில் போனால் சாயங்காலம் வரைக்கும் கண்மாயில் கிடந்து திரும்புவான்... அப்போதெல்லாம் அவன் மீது மீன்வாடை அடிக்கும்.

விறால் மீனுக்கென வேறுவிதமான தூண்டில் உண்டு... பெரிய முள்ளும் உண்டு. சிறிய கெண்டையைக் குத்திப் போட வேண்டும். விறால் பிடிப்பதில் வீரர் எங்கள் இரண்டாவது அண்ணன். இரண்டு விறாத்தூண்டிகள் போட்டு முனியையா கோவில் பின்னே இருக்கும் வன்னி மரத்தில் கட்டிவிட்டு அமர்ந்திருப்பார். தட்டை மெல்ல நீரில் முழ்கியதும் அதை மெல்ல இழுத்து கரையில் மீனைத் தூக்கி வீசுவார். முள் குத்திய வலியில் வாயில் முள்ளுடன் குதித்தாடும். விறால் மீன் தண்ணீர் இல்லை என்றாலும் விரைவில் மரணிக்காது.

கெண்டை வலையும் வைத்திருப்பார்... இரவில் கொண்டு போய் கட்டிவிட்டு வந்து மறுநாள் காலை போய் வலையில் மாட்டிய கெண்டைகளை பிடித்துக் கொண்டு வருவார்... கதுவாலி  (அதாங்க கௌதாரி) பிடிக்க நரம்பில் சுறுக்கு போல் கட்டி சின்னச் சின்னதாய் கதுவாலித் தட்டு வைத்திருப்பார். பத்தக்கட்டை போட்டு மீன் பிடிக்கும் குழுவில் முதலாவதாய் இருப்பார். எல்லா வேலைகளையும் செய்வார்... அவரோடு செட்டு (அதாங்க நண்பர்கள்) எல்லாம் ஒரே மாதிரியானவர்கள். அவர்களின் பொழுது போக்கே இதுதான்.

தூண்டில் பின்னே சென்ற ஞாபகத்தை பாக்கெட்டில் அடைக்கப்பட்ட கோழிக் குடல்கள் பக்கம் திருப்புவோமாக.

என்ன இது பாக்கெட்டில்..? 

ஐய்யே... குப்பையில் போட வேண்டிய கோழிக்குடலா..? என்ற யோசனையுடன் அதனருகே நின்ற எங்கள் அறைக்குப் பக்கத்து அறை மலையாளி நண்பனிடம் 'ஆசானே... இது எந்தானு..?' என்று மெல்லக் கேட்டேன் குமட்டல் மறைத்து.

'ஏ... இது கோழிக்கச்சோடம்... குடலு' என்றான். அவன் சிக்கன், மீன் கடைகளுக்கு நேரடி விற்பனையாளன். இதற்கென ஒரு குளிரூட்டப்பட்ட அறை வாடகைக்கு எடுத்து வைத்திருக்கிறான். அதில் மீன், சிக்கன் நிறைய வைத்திருப்பான். ஹோட்டல்களில் சிக்கன் கொண்டு போய் வெட்டிக் கொடுத்துட்டு வருவான்.

'எவட கொண்டு போகுது..? கறி சமைக்காம் போகுதா..?'

'ஏ... இ கச்சோடத்த கறி வைக்கவா... ஒரு பிலிப்பைனி சோவிச்சு... நமக்கு பைசா கிட்டினா மதியல்ல... இவட கொண்டாந்து வைக்காம் பறஞ்சி...  அதான்... ஆயாளுக்கு வெயிட் செய்யிறேன்' என்றான்.

'இதையெல்லாமா திம்பானுங்க...' என்ற யோசனையோடு காத்திருக்க, மற்றோவனும் வந்தான்... இதைப் பார்த்து 'கருமம்... கருமம்...' என்றான்.

லிப்ட் வர நானும் மற்றொருவனும் ஏற,  அந்த மற்றவனும் மலையாளிதான்... 'இவருக்கு என்ன வட்டா (பைத்தியமா)... கச்சாடாவெல்லாம் இவட கொண்டாந்து வச்சிருக்கு... இதெல்லாம் சேல்ஸ் பண்ணி காசு சம்பாதிக்கணுமா'ன்னு திட்டினான்.

இது குறித்து அறையில் உரையாடல் நடந்தபோது நண்பர் ஒருவர் ஆட்டுக்குடல் தின்பதில்லையா... அது மாதிரி அவனுகளுக்கு கோழிக்குடல் பிடிச்சிருக்கு என்றார்.

ஆட்டுக்குடலை சுத்தம் செய்யும் முறை தெரியுமா உங்களுக்கு.... அதை வெளக்குமாத்துக் குச்சியால் திருப்பிச் சுத்தமாக்கி, சுடுதண்ணீர் வைத்து அதில் போட்டு ஒரு முறைக்கு இரண்டு முறை கழுவி, மஞ்சள் போட்டு உரசித் தேய்ச்சு மீண்டும் கழுவி... இப்படிக் கழுவிக் கழுவி சுத்தம் செய்துதான் சமைப்பார்கள்... இப்படி கோழிக்குடலை சுத்தம் செய்ய முடியுமா என்ற போது பிலிப்பைனிக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர் மெல்ல பின்வாங்கினார்.

உடனே மற்றொருவர் அதைச் சாப்பிட்டால் என்ன... எனக்கெல்லாம் சமைத்துக் கொடுத்தால் நான் சாப்பிடுவேன்... ஊர்ல போட்டின்னு ஒன்னு விக்கிறானுங்களே... அதுல இதைக் கலந்திருக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்... இதுக்கு எதுக்கு இங்க விவாதம் வேண்டிக் கிடக்குன்னு வாலண்டியரா வண்டியில ஏறினார்.

இவரு ஆடு, மாடு, கோழி, நாய், நரி, பன்னி என எல்லா ஜீவராசிகளையும் ஒரு கை அல்ல இரண்டு கை பார்க்கும் தமிழர். குறிப்பாக ஊரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்த, இப்போதும் வாட்ஸ் அப்பில் எந்த நேரம் மத்திய அரசின் துதி பாடிக்கொண்டிருப்பதுடன் 'என்ன தமிழனுங்க... என்ன தமிழ்நாடு' என தான் ஒரு தமிழன் என்பதை மறந்து அரசியல் பேசும் அன்பர். இவரிடம் பேச ஆரம்பித்தால் அடுப்பில் வைத்த சட்டி போல் நாம்தான் சூடாக வேண்டும் என்பதால் இவரின் வாதத்தைப் புறந்தள்ளி நகர்ந்தேன்.

பிலிப்பைனிகள் ரொம்பச் சுத்தமாக வெளியில் வருவார்கள். விலை உயர்ந்த செண்ட் அடித்திருப்பார்கள்... இருக்கதிலேயே விலை உயர்ந்த போனும் விலை உயர்ந்த ஹெட்செட்டும் பயன்படுத்துவார்கள். (கில்லர்ஜி அண்ணனுக்குத் தெரியும்... அவரிடம் நிறைய கதைகள் இருக்கலாம்)

சாட்டிங்கில் இருக்கும் போது அவர்களைப் போல் அவ்வளவு வேகமாக ஹையர் லோயர் பாஸ் பண்ணியிருக்கிறேன் எனச் சான்றிதழ் காட்டினாலும் நம்மால் டைப் அடிக்க இயலாது. 

அலுவலகத்தில் ரொம்பப் பொறுமையாய் வேலை செய்வார்கள். அதனால் வரவேற்பிலும் கம்பெனி செயலாளராகவும் இவர்களை அதிகமாகப் பார்க்க முடியும்... அலுவலகத்தில் கோபமே வராது... ஆனால்  அவர்களுக்குள் சண்டை வந்தால் காச் மூச்சென்று நம்ம நரிக்குறவர்கள் (இப்ப இவங்க ரொம்பக் கண்ணியமானவர்கள் ஆகிவிட்டார்கள்... நாம்தான் நரிக்குறவர் போல் ஆகிவிட்டோம்) போல் கத்துவார்கள். இறுதியில் ஒரு கெட்டவார்த்தையோடு சுபம் போடுவார்கள்.

சாப்பாட்டு முறை என்றால் பாதி வேக வைத்து வினிகரை ஊற்றி சாப்பிடுவதுதான் வாடிக்கை.... இப்ப நல்ல உரைப்பா இருக்கிற ஆந்திர பிரியாணி வரை சாப்பிடப் பழகிவிட்டார்கள். 

மசாலா இல்லாமல் சமைப்பது அவர்கள் வழக்கம். மசாலா இருந்தால்தான் சமைப்பது நம் வழக்கம். 

அவர்கள் சாப்பாட்டு பாக்ஸைத் திறந்தால் நமக்கு குமட்டும் அளவுக்கு வாசம் (நாற்றம்) இருக்கும். அந்த வாசம் அரபிகளுக்குப் பிடிக்கும். நம் சாப்பாட்டை இந்தியன் மசாலா என்று சொல்லி, நம் வயிற்றையும் தடவிப் பார்ப்பார்கள். மசாலாவால்தான் தொந்தி என்பது அவர்கள் எண்ணம்.

எங்க அலுவலகத்தில் கூட பிலிப்பைனிகள் சாப்பிட ஆரம்பித்தால் அலுவலகமே வாசமாகும். நமக்கு குமட்டும்... ஆனால் மேலாளரான அரபி அவர்களுக்கு இடையில் அமர்ந்து கொஞ்சிக் கொண்டு எடுத்துச் சாப்பிட்டுப் பார்ப்பார். நம் சாப்பாட்டு பாக்ஸ் திறக்கப்பட்டால் இந்தியன் மசாலா, ஒரே வாசம்... ஏசியை ஆப் பண்ணு... அவங்க சாப்பாட்டை சூடு பண்ணக் கூடாதுன்னு சொல்லுன்னு கத்துவார். இவர் மன்மதன்... இவரைப் பற்றி தனிப் பதிவே எழுதலாம்.

பிலிப்பைனிகள் மீனின் மீது அதிக விருப்பம் கொண்டவர்கள்... சல்மான், ஹம்மூர் (நம்மூரில் என்ன பேரோ தெரியல) என்ற பெரிய மீன்களின் தலைகள் அவர்களுக்காக விற்க்கப்படுவதுண்டு. இவை பெரிய பெரிய ஹோட்டல்களில் வெட்டி எடுத்தது போக மிஞ்சும் கழிவாகும். அதை அவர்கள் அள்ளிச் செல்வதைப் பார்க்கலாம். 

வார இறுதி நாளில் இப்படித்தான் சரக்கையும் அள்ளிச் செல்வார்கள். இன்னொன்னு சொல்லணும் நம்மூர் நகரை மீனுக்கு இங்கு சுல்தான் இப்ராஹிம். நம்மூரில் வாங்கிச் சமைக்க விரும்பாத மத்தியே மலையாளிகளின் விருப்பமான மீன். மலையாளி ஹோட்டல்களில் மீன் பிரை சாப்பாடு என்றால் அதில் மத்திக்கே முதலிடம். கேட்டால் இதில் ஓமேகா அதிகம் என்பார்கள்.

மீனை அரை வேக்காடாய் வேகவைத்து அதில் சாப்பாட்டு வினிகரை ஊற்றி எடுத்து வந்து சாப்பிடத் திறக்கும் போது குமட்டும் என்று மேலே சொன்னேனல்லவா... அந்த நேரத்தில் நான் லிப்டில் இறங்கிக் கொண்டிருப்பேன்... வெளியில் சூடாக இருந்தாலும் அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அலுவலகத்துக்குள் நுழைவதில்லை.. அப்படியிருக்க ஒருவேலை கோழிக்குடலைச் சமைத்து எடுத்து வந்தார்கள் என்றால்.. சத்தியமாக அருகில் இருக்கும் கார்னிச்சில் (கடற்கரை ஏரியா)  கடலைப் பார்த்துக்கொண்டு நிற்க வேண்டியதுதான்.

இங்கு பூனைக்குப் பஞ்சமில்லை... பூனையைப் பாத்துட்டுப் போனா விடியாதுன்னு சொல்வாங்க.... சூரியவம்சத்தில் பூனையைப் பார்த்துட்டுப் போனா சகுனம் நல்லாயிருக்காது என்பதற்கு சுப்ரீம் ஹீரோ நமக்கா, பூனைக்கான்னு  கேக்குற மாதிரி தினமும் பல பூனைகளைத் தாண்டித்தான் வரவேண்டும். சகுனம் நல்லா இருக்கா இல்லையானெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. சகுனம் நல்லாயிருந்தாத்தான் இப்படிக் கஷ்டப்பட வேண்டியதில்லையே... இங்கு வரும்போது பூனையைப் பார்க்காமல்தானே வந்தோம். 

பூனைகள் பிலிப்பைனிகளின் விருப்ப உணவு. தனியாக பூனை மாட்டினால் நாம் முயலைப் பிடிப்பது போல் அமுக்கிக் கொண்டு வந்து விடுவார்கள். அப்புறம் என்ன முழுப்பூனையையும் சுடு தண்ணீருக்குள் அழுக்கி... அரை வேக்காடாய்... மசாலா இன்றி... வினிகரோடு... விரும்பி உண்ண ஆரம்பித்து விடுவார்கள்.

அப்புறம் பிலிப்பைனிகளை இங்கு பூனை என்றுதான் சொல்வார்கள். 

அவர்கள் தங்கியிருக்கும் தளத்தில் நம்மால் தங்க முடியாது. குறிப்பாக சமையலறையில் அவர்கள் சமைக்கும் போது நம்மால் சமைக்க முடியாது. இதேதான் அவர்களும் சொல்லக்கூடும் இந்தியர்கள் சமைக்கும் இடத்தில் நம்மால் நிற்க முடியாதென... அறை தேடும் போது பிலிப்பைனிகள் இல்லாத அறையாகத்தான் பார்ப்பதுண்டு.

எது எப்படியோ கோழியின் கழிவுகள் எல்லாமே லூலூவில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. மலையாளி பிழைக்கத் தெரிந்தவன்... பிலிப்பைனிகளை வைத்துக் கல்லாக் கட்டுகிறான். இந்த லூலூக்காரனின் வளர்ச்சியில் பல மலையாளிகளின் வாழ்க்கைகள் வேரறுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வட இந்தியனின் பெரிய மார்க்கெட்டும் இதில் அடக்கம்.

பிலிப்பைனிகள் எல்லாமும் சாப்பிடுவார்கள்... எதையும் விட்டு வைப்பதில்லை. வார விடுமுறை நாளில் மீன் பிடிக்க தூண்டிலுடன் கிளம்பி விடுவார்கள். இங்கு நம் ஹோட்டல்களைவிட பிலிப்பைனி ரெஸ்ட்டாரண்டுகள் அதிகம். ஆமாம் இங்கு நம்மைக் காட்டிலும் பிலிப்பைனிகளே அதிகம்.

அரபி ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்கும் பிலிப்பைனிகளை பெரும்பாலான அரபிப் பெண்களுக்குப் பிடிப்பதில்லை... காரணமும் சொல்லவும் வேண்டுமா...? 

அப்புறம் இன்னொன்னு நம்மாளுகளும் சாப்பிடுவாங்க போல... இப்பத்தான் பார்த்தேன் அறுசுவையில் கோழிக்குடல் சமையல் குறிப்பு இருக்கு... என்னத்தைச் சொல்ல.... 

அதைப் பார்க்க வேண்டுமா இங்கு பாருங்கள்....

-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

பிலிப்பைனி கொடுத்த வறுகடலை போன்றதை தின்று விட்டு கேட்டேன் இது என்னவென்று ?

அவள் சொன்னாள் பூனை என்று...
ஒரு வாரம் வாந்தி எடுத்தேன் நான்.

நதீஸியாவில் வியாழக்கிழமை இரவு போய்ப்பாருங்கள் பிலிப்பைனிகளுக்கென்றே ஒரு கடை இருக்கிறது.

KILLERGEE Devakottai சொன்னது…

பிலியைப்பற்றி என்னிடம் கதைகள் இல்லை.
உண்மைச் சம்பவங்கள் பல உண்டு.

துரை செல்வராஜூ சொன்னது…

என்னத்தைச் சொல்ல!?..

உலகம் தெரியாத அப்பாவியா இருக்கீங்களே.. இப்போ ஊரிலேயே கோழிக் குடலுக்கு ரொம்பவும் கிராக்கி.. நம்ம ஊர் ஆட்களை மலடாக்கியதில் பிராய்லர் கோழிகளுக்கு ரொம்பவே பங்குண்டு..

கோழி விரலைப் போட்டு சூப்பு வெக்கிறான்..
இவனுங்க உர்..உர்..ன்னு குடிக்கிறானுங்க!..

இன்னும் கோழி மயிரைப் போட்டுத் தான் குருமா வைத்து கல்லா கட்டவில்லை!..

அதையும் கூடிய சீக்கிரம் செய்து விடுவானுங்க!..

எல்லா ஊர்லயும் மெட்ராஸ் பஸ் புறப்படுற இடத்தில திடீர் பிரியாணிக் கடைங்க நெறைய இருக்கும்.. அங்கே எல்லாம் என்னா.. இருக்குன்னு நினைக்கிறீங்க?..

அதுங்களை ஆராய்ச்சி பண்ணினா நெறைய சேதி கிடைக்கும்!..

G.M Balasubramaniam சொன்னது…

இதைப்படிக்கும் போது ஒரு படத்தில் காக்கா பிரியாணி சாப்பிட்டு நடிகர் விவேக் குழம்புவது நினைவுக்கு வருகிறது ஒரு தடவை தொலைக்காட்சியில் கரப்பான் பூச்சிகளை தின்னும் போட்டி கண்டேன்

vimalanperali சொன்னது…

நாட்டுக்கு.நாடு வித்தியாசப்படும் உணவு முறை!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிலர் எதையும் விட்டு வைப்பதில்லை! :)

வட கிழக்கு மாநிலங்களில் இப்படி பல உயிரினங்களைச் சாப்பிடுவது பார்த்து, அது பற்றி எழுதியும் இருக்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பல்லுயிர் ஓம்புதல்!!??? ஹா ஹா ஹா...இப்படித் தென் கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல்லுயிர்களையும் தின்பவர்கள். வெங்கட்ஜி சொல்லியிருப்பது போல் வட கிழக்கு இந்திய மாநிலங்களிலும் இப்படித்தான்...

பூ விழி சொன்னது…

என்ன சொல்வது மனுஷனுக்காவே எல்லாத்தையும் படைச்சிட்டானு மனுஷன் கிடந்தது ஆடறான் நான் முழுவதும் படிக்கவில்லை முடியவில்லை உங்களுக்கெல்லாம் சகிப்பு தன்மையை கொடுக்கும் படி ஆண்டவனை வேண்டி கோங்கோ அங்கிருக்கும் வரை தவிர்க்க முடியாத கடடங்களில்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அவரவர்க்கு பிடித்தது, ஏற்றது என்ற நிலையில் எதையுமே விட்டுவைக்கவில்லை போலுள்ளது.

Unknown சொன்னது…

அவரவருக்கு பிடித்த ஒன்று!

John Saravanan சொன்னது…

அழகான நடை. இன்னும் நிறைய எழுதுங்க. சுஜாதாவைப் படிப்பது போல் இருக்கிறது

John Saravanan சொன்னது…

அழகான நடை. இன்னும் நிறைய எழுதுங்க. சுஜாதாவைப் படிப்பது போல் இருக்கிறது