மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 29 நவம்பர், 2017

வாசிப்பனுபவம் : அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்

Image result for அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்

'அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்'-

பாலகுமாரன் அவர்களின் இரு வரலாற்றுக் குறுநாவல்களின் வாசிப்பிற்குப் பிறகு வரலாற்றில் இருந்து நிகழ்காலத்துக்கு மாறலாமே என தேடி எடுத்தவைகளில் மனம் ஒட்டாதபோது கிடைத்தது ஜெயகாந்தனின் இக்கதை. 

தலைப்பைப் பார்த்ததும் இது அவரின் சிறுகதைத் தொகுப்பு போல என்ற நினைப்போடுதான் தரவிறக்கினேன். கதைகளை வாசிக்கலாமெனத் திறந்தபோதுதான் தெரிந்தது இது ஒரு நாவல் என்பது. தினமணிக் கதிரில் தொடராக வந்ததென முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.

'இந்த நேரத்தில் இவள்', 'பாட்டிமார்களும் பேத்திமார்களும்', 'அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்' என இந்த மூன்று கதைகளும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பல காலத்து மனிதர்களைப் பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் ஓர் அனுபவமே என்றும் ஒரு கதையில் இளமையாகவும் இன்னொரு கதையில் வயோதிகனாகவும் இருப்பதில் கதாநாயகப் பண்பு குறைந்து விடுவதில்லை. அதை இக் கதைகளில் மீண்டும் உணர்ந்தேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

கதையின் நாயகன் அப்பு.

கிராமங்களில் வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்வார்கள். அப்படியான குடும்பத்தில் பிறந்தவன்... படிப்புக்கும் அவனுக்கும் வெகுதூரமாகி ரொம்ப நாளாச்சு... அரும்பு மீசை லேசாக முளைக்கத் தொடங்கும் பருவம்... யாருக்கும் அடங்கா காளை... ஊருக்குள் எல்லாரிடமும் வாங்கிக் கட்டிக் கொள்வதைப் பற்றிக் கவலைப்படாதவன். தாத்தாவின் நினைவாக வைத்த பெயர் மகுடேசன்.

இவனே நிறைந்து இருக்கிறான் கதை முழுவதற்கும்... ஆகவே இவன் கதையின் நாயகனாய் நம் கண்ணில்.

அம்மாக்கண்ணு... அப்புவைப் பெற்றெடுத்த மகராசி... ஆறு குழந்தைகளை அள்ளிக் கொடுத்துவிட்டு இந்தத் தறுதலையை மட்டும் வச்சிக்கிட்டு படாதபாடு படுறான்னு ஊரார் வருத்தப்படும் உத்தமி. காலையில் வைக்கும் பொட்டு மறுநாள் குளிக்கும் வரை வேர்வையிலும் முகம் கழுவலிலும் அழியாமல் அப்படியே இருக்கும் என்பதே இவளின் சிறப்பு.

வசதியான குடும்பமென சிறுவயதில் வாக்கப்பட்டு வந்து வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் கணவனும் ஓடிவிட... தாங்கள் வாழ்ந்த வீடு வேறொருவர் வசம் இருக்க... அந்த வீட்டினை ஒட்டி வாரமாக இறக்கப்பட்ட கீற்றுக் கொட்டகையில் அப்புவோடு வாழும் நாற்பது வயசுக்காரி. வாழ்வின் விரக்தியில் சிரிப்பவள்... 

செங்கோணிக் கிழவன் தோட்டத்துக் கிணற்றில் குதித்துக் குளிப்பதில் பசங்களுக்கு அலாதிப் பிரியம். அது மட்டுமா அங்கிருக்கும் மாங்காய் சாப்பிடுவதிலும்தான். அப்படிக் குளிக்கும் ஒரு தினத்தில் மணியக்காரர் மகன் கிருஷ்ணன் இறந்துவிட, அந்தப் பலி அவனைக் கூட்டிக் கொண்டு போன அப்பு மீது விழுகிறது.

குளிக்கச் சென்று அங்கிருந்து நாடகம் காணச் சென்று இரவில் திரும்பும் அப்பு, கிருஷ்ணனின் சாவை அறியவில்லை. அவனுக்கு அதில் தொடர்பில்லை என்பதை அறிந்து கொண்ட அம்மாக்கண்ணு ஊரார் தன் பிள்ளையை அடித்துக் கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் இரவோடு இரவாக சென்னைக்கு கிளம்பச் சொல்கிறாள்.

எங்கே போவேன் என்பவனிடம் உன் அப்பாவிடம் போ என்று சொல்ல, அப்போதுதான் அப்பா இருப்பது அம்மாவுக்குத் தெரியும் என்பதே அவனுக்குத் தெரிய வருகிறது. அப்பாவை அடைய துருப்புச் சீட்டாய் ஓடிப்போன கணவன் எப்போதோ எழுதிய கடிதத்தைக் கொடுத்து அப்பனைத் தேடி கண்டுபிடிச்சிக்க என்றும் சொல்லி அனுப்புகிறாள்.

இரயிலில் பட்டணத்தில் பழ வியாபாரம் செய்யும் முத்து என்பவர் நட்பாக, சென்னையில் அவருடன் தங்கி அப்பாவைத் தேடிச் செல்கிறான்.  கடிதத்தில் இருந்த முகவரியில் இப்போது ஒரு செஞ்சிலுவைச் சங்கம் இருக்கிறது. அப்பா இல்லை... அங்கிருக்கும் ஆபீசரிடம் விபரம் சொல்கிறான். அவனின் பெயர் மகுடேசன் என்றும் அப்பா பெயர் சிங்காரவேலுப் பிள்ளை என்றும் சொல்ல, அந்த அதிகாரி இரண்டு நாளில் வா... விசாரித்துச் சொல்கிறேன் என்கிறார்.

மீண்டும் முத்துவோடு வாசம்... பழக்கடை... முத்துவுக்கு உதவி... தான் வெளியில் செல்லும் போது இவன் கடையைப் பார்த்துக் கொள்வான் என அப்பு மீது முத்துக்கு நம்பிக்கை... அம்மாவுக்கு கடிதம்... முத்துவின் ஊதாரி மகன் அப்புவுடன் கை கலப்பு.... முத்துவின் கோபம்... என நகர்ந்து செல்லும் கதையில் மீண்டும் ஆபீசரைச் சந்தித்து அப்பா இருக்கும் இடம் அறிகிறான்.

அவனின் அப்பா... சிறுவயதில் அவன் செல்லமாக அழைக்கும் அப்பாசாமி... ஊரார் அழைக்கும் சிங்காரவேலுப் பிள்ளை இரவு வாட்ச்மேனாக இருக்கிறார். அவருக்குத் துணையாக காசநோயும்...

அவரைச் சந்திக்க, உடனே அடையாளம் கண்டு அகம் மகிழ்ந்து கொஞ்சி மகிழ்கிறார். இரவில் தன்னுடன் பேசிக் கொண்டிருக்க வரும் நண்பர்களிடம் எல்லாம் மகிழ்வோடு அறிமுகம் செய்கிறார்.

அப்பாசாமியின் சொந்த ஊர்க்காரரும் அவரின் அப்பாவின் நெருங்கிய தோழனுமான சாமியாருக்கு ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாசாமாசம் பணம் கொடுக்க வேண்டும் என்பது மகுடேஸ்வரன் பிள்ளையின் வாக்கு. அந்த வாக்குப்படி பணம் வாங்கி செலவு செய்யும் சாமியார்,  அப்புவை அவன் தாத்தாவின் மறு பிறவி என்று சொல்லி தானும் மகுடேஸ்வரன் பிள்ளையும் அந்தக் கிராமத்தில் வாழ்ந்த வாழ்க்கையை நினைவு கூர்கிறார்.

அப்பாவுடன் அவர் தங்கியிருக்கும் இடம் செல்ல, அங்கு அவருக்கு ஒரு குடும்பம் இருப்பதைப் பார்க்கிறான். அங்கு அவனுக்கு அமுதவல்லி என்ற ஒரு தங்கையும் இருக்கிறாள். அப்புவைத் தன் மகனாகப் பார்க்கும் சிற்றன்னை 'அம்மணி' என்று அப்பாவால் அழைக்கப்படுவதால் அம்மணியம்மாள் என்பது அவள் பெயராக இருக்கலாம் என்று நினைத்துக் கொள்கிறான்.

அமுதவல்லி என்ற பெயர்க்காரணத்தின் பின்னே பொன்னம்மாள் அத்தையின் மகள் இருப்பதை அப்பா மூலமாக அறிகிறான். பதினாலு வயதேயான அமுதவல்லியைச் சிங்காரவேலுப் பிள்ளைக்கு கட்டி வைக்க, ஒரு வருடத்தில் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு அவள் செத்துப்போக, குழந்தையும் பின்னாளில் செத்துப் போன கதையைச் சொல்லி அதன் பின்னரே அவன் அம்மா அம்மாக்கண்ணுவை கட்டிய கதையை அப்பா சொன்னபோது அவரின் வேதனையையும் உணர்கிறான்.

ஆங்கிலம் பேசும்... ஆங்கிலப் புத்தகம் வாசிக்கும்... வெள்ளையருக்கு எதிராகப் பேசும்... தனக்குப் பிடித்த காந்திமதி அத்தை, பொன்னம்மா அத்தை, அப்பாவுடன் பேசாத பெரியப்பா, அப்பா பேச்சைத் தட்டாத சித்தப்பா என அப்பா ஒவ்வொருவரைக் குறித்தும் விசாரித்துக் கதை கதையாய்ச் சொல்வதில் லயிக்கிறான்.

அப்பாவின் பேச்சும் அன்பும் அவர் தங்களை விட்டு ஓடி வந்ததையோ... இன்னொருத்தியுடன் குடும்பம் நடத்துவதையோ பெரிதாக எண்ண வைக்கவில்லை. அதனால்  அப்பா மீது அப்புவுக்கு கொஞ்சம் கூட கோபமே இல்லை... மேலும் மேலும் காதல்தான் கூடுகிறது.

படிக்க வைக்கிறேன் என்று சொல்லும் அப்பாவிடம் மறுத்து ஊருக்குப் போய் வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பி மனம் மாறி, கட்டிட வேலை நடக்கும் இடத்தில் சித்தாளாய் வேலைக்குச் சேர்ந்து கொஞ்சம் கணக்கு வழக்குத் தெரியும் என்பதால் ஆபீசரின் உதவியாளனாய் இருந்து சம்பாதிக்கும் பணத்தில் அப்பாவின் குடும்பத்துக்கும் கொடுக்கிறான்.

இடையில் அப்பா குறித்து அம்மாவுக்கு கடிதம்... கிருஷ்ணன் கொலையில் அப்புவுக்கு பங்கில்லை என்பதை மணியக்காரர் குடும்பத்தில் கடிதத்தைக் காட்டி அம்மா எடுத்துச் சொல்ல அவர்களும் ஒத்துக் கொள்ளுதல்... வேலை பார்க்கும் இடத்தில் எல்லாரிடமும் நல்ல பேர்...  இழந்த சொத்த மீட்க வழக்குத் தொடுக்க நினைக்கும் சித்தப்பா... என கதை நகர்கிறது.

அப்பாவுக்கு ஒரு ஆபரேசன் செய்ய வேண்டிய சூழல்... மருத்துவமனையில் அனுமதி... அந்தச் சமயத்தில் ஒரு வார விடுமுறை நாளில் அம்மாவைப் பார்க்க ஊருக்குப் போகிறான் அப்பு, அவனுடன் அம்மா இல்லாத, தன்னுடன் வேலை பார்க்கும் நண்பன் மாணிக்கமும் செல்கிறான். அம்மாவின் அன்பையும் கிராமத்து வாசனையையும் நுகர...

ஊரில் அம்மணி அம்மாளின் பெரியம்மா மீன்காரி வெள்ளையம்மாளைப் பார்க்கிறான். அவளின் வீட்டுக்கே சென்று பாட்டி என்று அழைக்கிறான். அவள் அவனின் அப்பாவுடன் அம்மணி அம்மாள் சென்ற கதையைச் சொல்லி, மகளுக்கு கொடுக்கச் சொல்லி கம்மலைக் கழற்றிக் கொடுக்கிறாள்.

உங்கப்பா உங்கம்மாவை விட்டுப் போக இந்த அம்மணியம்மாள்தான் காரணம் என மாணிக்கம் சொல்ல, இருக்கலாம் அதில் நமக்கென்ன சம்பந்தம் என்று சொல்லி அப்பாவை எப்பவும் போல் மனசுக்குள் உயர்வாய் வைத்திருக்கிறான்.

அப்பாவுக்கு ஆபரேசன் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று பிரார்த்திக்கும் அம்மா அவனுடன் வர மறுக்கிறாள். காந்திமதி அத்தை நானும் வர்றேன்னு சொல்லி கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லைன்னு சொல்ல, அவன் மேல எனக்கு கோபமெல்லாம் இல்லடா... நீயும் என் பிள்ளைதான் என்ற பெரியப்பா வழியனுப்ப வீடு வரை வர, சித்தப்பா மட்டும் வழக்கு விசயமாக பேசவும் அப்புவின் கையெழுத்தை அண்ணனின் அனுமதியுடன் பெறவும் அவர்களுடன் இரயில் ஏறுகிறார்.

அப்புவுன் சித்தப்பாவிடம் இனி அந்தச் சொத்து எனக்கோ என் பிள்ளைக்கோ வேண்டாம்... வழக்குத் தொடுக்க கையெழுத்து இட முடியாதென அடித்துச் சொல்கிறார் அப்பா. சித்தப்பாவுக்கு வருத்தமிருந்தாலும்... வந்ததில் இருந்து  அம்மணி அம்மாள் வீட்டுப் பக்கமே வரவில்லை என்றாலும் அண்ணனின் ஆபரேசனுக்காக மருத்துவமனை அருகில் தங்கி காலை மாலை வந்து பார்த்துச் செல்கிறார்.

சொத்து வேண்டாமென அப்பா சொன்னதில் அப்புவுக்கு ஆனந்தம் அதிகமாக அப்பா இமயமலையாகிறார் மனசுக்குள்...

அப்புவின் அப்பா பேசும் கதைகளை எல்லாம் எழுதி வைக்க வேண்டுமென மாணிக்கம் வாங்கிக் கொடுக்கும் நோட்டில் அப்பு எழுத ஆரம்பிக்கிறான்... அதுவே அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகளாய்...

'இன்னும் ஒரு வாரத்தில் நமது தேசத்துக்கு சுதந்திரம் கிடைத்து விடும், அப்பாவுக்கு ஆபரேசன் ஆகிவிடும் என்று தேசத்தையும் தனி மனிதனையும் இணைத்துப் பார்க்கிற கண்ணோட்டத்தை அவனின் அப்பா தான் சொன்ன கதைகளின் மூலமாக அப்புவிடம் உருவாக்கிவிட்டார்' என்று நினைத்துக் கொள்கிறான் மாணிக்கம்.

அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகளை நாம் கேட்கவில்லை என்றாலும் அவன் எழுதி வைத்துக் கொண்டு வருகிறான்... என்றாவது ஒருநாள் எதாவது ஒரு பதிப்பகத்தில் புத்தகமாக்குவான்... அது ஏதாவது ஒரு புத்தகத் திருவிழாவில் கடைவிரிக்கப்படும் என்று எண்ணினால் அது நம் தவறு... ஆம் கதை சுதந்திரப் போராட்டக் காலத்தில் அல்லவா நடந்திருக்கிறது... அதனால் அக்கதை படிக்கப்படாமலே...

ஊரில் பொறுக்கி எனப் பெயரெடுத்தவனை நகர வாழ்க்கை செம்மைப் படுத்துகிறது.

அம்மாவை விட அவளை விடுத்து வேறொருத்தியுடன் சென்ற அப்பா, அவனின் உள்ளத்தில் உயர்வாய் தெரிகிறார்.

சொத்துப்பத்து மீது ஆசையில்லாத, சொந்த பந்தங்கள் மீது நேசம் கொள்ளும் மனநிலை அவனுள் ஏற்பட அப்பா காரணமாகிறார்.

மீன்காரி என்றாலும் காசநோய்க்காரன் மீது கொண்ட காதலால் அவனுடன் மகிழ்வோடு கஷ்ட ஜீவனம் நடத்தும் அம்மணியம்மாள் பெற்றவளைவிட உயர்வாய்த் தெரிகிறாள்.

அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் என்ன என யோசிக்காமல் அப்புவின் வாழ்க்கைக் கதையை வாசிக்கும் போது நம்மை அவனோடு அந்த ஏரிக்கரையிலும் சென்னையிலும் ஏன் செங்கோணிக் கிழவனின் கிணற்றுக்குள்ளும் குதூகலமாய்... அவன் அவ்வப்போது பயணிக்கும் கற்பனை குதிரையின் மேலேறி நம்மையும் 'டடக்... டடக்...' என பயணிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

***********

பிரதிலிபி போட்டியில்.... (வாசிக்க நினைத்தால் இணைப்பைச் சொடுக்குங்கள்)

                                               சிறுகதை : தலைவாழை
                                               கட்டுரை   : பதின்மம் காப்போம்

-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

ராஜி சொன்னது…

இணைப்பை சொடுக்கிட்டேன்

ஸ்ரீராம். சொன்னது…

விளக்கமாய் கதை கொடுத்திருக்கிறீர்கள். என் கலெக்ஷனில் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மீதி வெள்ளித்திரையில் என்று சொல்வது போல் மீதி புத்தகத்தில் என்று சொல்லாமல் கதையைச் சொல்லிவிட்டீர்களோ என்றாலும் அவரது எழுத்துகளில் வாசிக்க வேண்டும் என்று இருக்கிறது. வீட்டில் நெருங்கிய உறவினரிடம் சேகரிப்பு இருக்கு...அவரிடம் பெற்று வாசிக்கணும்...

கீதா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அருமையான பகிர்வு. அவசியம் நூலைப் படிப்பேன்.

Yarlpavanan சொன்னது…

அருமையான அறிமுகம்
வாசிப்புப் பசி உள்ளோருக்கு
நல்ல விருந்து!