மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 28 ஜனவரி, 2011

பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு தொகுதி-3)


பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு தொகுதி-1) படிக்க

************

பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு தொகுதி-2) படிக்க


(அரங்கத்தில் வெள்ளமென பார்வையாளர்கள்...)

தங்களது அணிக்காக அழகான வாதங்களை முன்வைத்து மற்றவர்களின் வாதங்களை ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்த திருமதி. சித்ரா, திருமதி. பொற்செல்வி, திரு. செந்தில் வேலன் ஆகியவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்தபடி தனது வாதங்களை எடுத்து வைக்க வந்தார் திரு.சங்கர்.

திரு.சங்கர்: 'செந்தமிழே உன் பிறப்பை யார் அறிவார்' என்று தமிழ்த்தாயை வணங்கி வாதத்தைத் தொடங்கிய சங்கர் அவர்கள் எல்லாரும் பொண்டாட்டி புள்ளைங்ககூட வந்து பட்டிமன்றத்தை ரசிக்கும்போது செந்தில் மட்டும் மனைவியை துபாயிலேயே விட்டுவிட்டு வந்து திருமணத்துக்கு முன்னே பட்டாம் பூச்சி என்று பேசுகிறார் என ஆரம்பத்திலேயே செந்தில் வேலனை சிறு தாக்கு தாக்கி தன்னை தாக்கியவருக்கு நம் பாணியில் பின்னூட்டமிட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

மகிழ்ச்சியான வாழ்க்கை திருமணத்துக்குப் பின்னே என்று என் கட்சிக்காரர்கள் வாதிடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதை கண்டிக்கிறேன்... என்னைக்கு ஒரு பொண்ணைப் பார்த்து நமக்கு அதைப் பிடித்து அதுக்கு நம்மளைப் பிடித்துப் போச்சின்னு வையுங்க அன்னைக்கே மகிழ்ச்சி ஆரம்பிச்சிரும். நீங்க போங்க நாங்க சொல்லி அனுப்புறோமுன்னு சொல்லி அவங்க சொல்லியனுப்புற வரைக்கும் மனசு படுற பாட்டை அனுபவிச்சிருப்பாரு போல... அவ்வளவு அழகா விளக்கினார். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை திருமணமே சொர்க்கம்தானேங்க என்று சிலாகித்தார். அண்ணனுக்கு கல்யாணம் என்றால் தம்பிக்கு சந்தோஷம் ஏன்னா அண்ணிக்குதான் ரெண்டு தங்கைங்க இருக்காங்களேன்னு கொஞ்சம் 'ஜொள்'னார்.

மேலும் சொந்த வீட்ல நாம தெண்டச்சோறா இருந்திருப்போம். சாப்பிட்டியான்னு கேக்கக்கூட நாதியிருக்காது ஆனா திருமணத்துக்குப் பின்னாடி மாமியா வீட்ல பாத்துப் பாத்து கவனிக்கும் போது மச்சினன் பக்கத்துல இருந்துக்கிட்டு மச்சான் அடிக்கடி வாங்கன்னு சொல்றப்போ எனக்கே இன்னைக்குத்தான் கிடைக்குதுன்னு சொல்ல முடியாட்டியும் அதுல இருக்கிற சந்தோஷம் கல்யாணம் பண்ணாதவங்களுக்கு கிடைக்குமான்னு கேட்டார்.  நிறைய சொன்ன அவர்

"திருமணம் செய்து பார்!
வாரத்தில் ஒரு முறையாவது பல் துலக்கத் தொடங்குவாய்!
மாதத்தில் சில முறையாவது குளிக்கத் தொடங்குவாய்!" என்று கவிதையாய் ஆரம்பித்து கடைசியில்
"திருமணம் செய்து பார்!
உன் மனைவிக்கு நீதான் உலகமே!" என்று முடித்தார்.

(திருமணத்திற்குப் பின்பே என்று வாதிட்ட திரு.சங்கர்)

திரு.ஐ.லியோனி: சங்கர் கூறிய கருத்துக்களை தன் நகைச்சுவைப் பாணியில் பாடல்களுடன் விளக்கினார். அப்போது பயக வேலையில்லாம வீட்ல இருக்கும் போது படும்பாட்டை ஒரு கதையின் மூலமாக சொன்னார். வேலையில்லாமல் வீட்டில் இருந்த ஒருத்தன் எல்லாரும் குளித்ததற்குப் பிறகு ஒரு பத்து மணி வாக்குல குளிச்சிட்டு வந்தானாம். அப்போ அவனோட அப்பத்தா பாத்துட்டு என்னமோ வேலை பாக்குற மாதிரித்தான் சீக்கிரம் எந்திரிச்சிக் குளிச்சா என்ன என்று திட்டியதாம். அதனால் அடுத்த நாள் விடியக்காலையில எந்திரிச்சுக் குளிச்சானாம். அவன் அப்பா பாத்துட்டு எந்த ஆபீசுக்குப் போகப் போறாராம் மொத ஆளா குளிக்கிறாருன்னு கேட்டாராம். என்னடா சீக்கிரம் குளிச்சாலும் திட்டுறாங்க... லேட்டா குளிச்சாலும் திட்டுறாங்கன்னு அடுத்த நாள் குளிக்காம இருந்தானாம். வீட்டுப் பக்கம் வந்த அடுத்த வீட்டுப் பாட்டி , என்னமோ தம்பி இப்பத்தான் சமஞ்ச குமரியாட்டம் குத்த வச்சிக்கிட்டு இருக்குன்னு திட்டிட்டுப் போச்சாம் என்று நகைச்சுவையுடன் பேசி திரு. தனபால் அவர்களை திருமணத்திற்கு முன்பாக என்ற அணிக்கு பேச அழைத்தார்.

திரு. தனபால்: நடுவருக்கும் அவைக்கும் வணக்கம் சொல்லி தனது உரையை ஆரம்பித்த தனபால் அவர்கள் நடுவர் அவர்களே கொங்குத் தமிழுக்கு மாறினால்தான் எனக்கு பேச வரும் என்று கோவை பேச்சுக்கு மாறினார். சங்கர் என்னவோ சொல்லிட்டுப் போனார்.இப்ப இங்க என்ன நடந்துச்சு தெரியுங்களா..? நானும் அவரும் இன்னைக்குப் பூராம் சேந்தே இருக்கோம். ரெண்டு போனுதாங்க வந்துச்சு... ஆளே மாறிட்டாரு பாருங்க... வரும் போது கோட்டுப் போட்டுக்கிட்டு வந்தாரு... அப்ப அம்மாகிட்ட இருந்து போன், அம்மாகிட்ட இவரு இன்னைக்கு பட்டிமன்றத்துல பேசுறேம்மான்னு சொல்லவும். கோட்டுச் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டுப் போப்பான்னு சொல்ல, கோட்டுத்தான் போட்டிருக்கேன்னு சொன்னாரு. அப்புறம் தங்கச்சிக்கிட்ட இருந்து போன், இவரு கோட்டுப் போட்டு பட்டிமன்றத்துல பேசப்போறேன்னு சொல்ல, முதல்ல அதைக் கழட்டி வீசுங்கன்னு கோவமா சொல்ல அந்தாப் பாருங்க கழட்டி தொங்க வச்சிட்டு வந்திருக்காருன்னு சொன்னார்.

மேலும் நான் எங்கவூட்ல எம் புள்ளைக்கிட்ட சொல்லி அம்மாகிட்ட காபிதண்ணி வாங்கிட்டு வான்னு சொன்னேன். அவளும் போட்டுக் கொடுத்து விட்டா. குடிச்சா வாயில வைக்க முடியலை, இது யாரு குடிப்பான்னு உங்கம்மாகிட்ட கேளுன்னு சொல்ல, அதுவும் கேட்டுச்சு, அப்ப உள்ள இருந்து ஏழு வருசமா எந்த நாய் குடிக்குதோ அதுதான் குடிக்குமுன்னு சொல்றாங்க. என்னைய எப்பவும் ஒரு புருஷனா நினைக்கிறதே இல்லைங்க எப்பவும் நான் கண்ணாடிதான்.

அப்புறம் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர்ல பிரபலமான எதாவது வாங்கிட்டு வருவேன். மணப்பாறையில ஒரு பட்டிமன்றம் முடிச்சிட்டு வரும்போது முறுக்கு நல்லாயிருக்குமின்னு வாங்கிட்டு வந்து ராத்திரி வந்ததால கண்ணாடிய கழட்டி வச்சிட்டு முறுக்கு வாங்கி வந்திருக்கேன்னு சொல்ல அங்க வையி கண்ணாடின்னா வச்சிட்டு படுத்துட்டேன். கொஞ்ச நேரத்துல என்ன கண்ணாடி முறுக்கு வாங்காந்திருக்கே... கசக்குதுன்னா... நான் தூக்க கல்க்கத்துல நல்லமுறுக்குன்னுதான் வாங்கியாந்தேன்ன்னு சொல்ல, எந்திரிச்சுப் பாருன்னு சொல்ல, எந்திரிச்சு கண்ணாடிய எடுத்துப் போட்டுப் பார்த்தா வாங்கியாந்த முறுக்கு அப்படியே இருக்கு. பக்கத்துல இருந்த கொசுவர்த்தி சுருளை ஒடச்சி சாப்பிட்டுருக்கா நடுவரே என்றார்.

இப்படித்தான் பக்கத்து வீட்ல எதாவது ஒண்ணு வாங்கிட்டா அதைவிட பெரிசா வாங்கணும் எங்கவீட்டு அம்மணிக்கு... பக்கத்து வீட்ல பைக் வாங்கிட்டாங்கன்னு நச்சரிக்க, பல்சர் வண்டி வாங்கி வீதியில கூட்டிக்கிட்டுப் போனா அடுத்தவன் கார் வாங்கிட்டான்னு கார் வாங்கச் சொல்லி சண்டை, அப்புறம் காரும் வாங்கியாச்சு நடுவர் அவர்களே... ஒரு நா வெளிய பொயிட்டு வரும் போது அவங்க வீட்டு வாசல்ல நின்ன வண்டிய பாத்துட்டு கண்ணாடி இது மாதிரி நமக்கும் வாங்கணுமின்னு சொன்னா, எனக்கு தூக்கிப் போட்டுடிச்சு. அவ கேட்டது என்ன தெரியுமா? ரோடு வேலை பாத்துட்டி பொக்லைன் வண்டிய அடுத்த வீட்டு முன்னாடி நிப்பாட்டிட்டு போயிருக்காங்க...

இவர் இவ்வாறு பேசும் போது இடையில் புகுந்த லியோனி, இதைத் தாய்யா அன்னைக்கே கவிஞன் பாடி வச்சான். 'டுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா... அவ ஆத்துக்காரர் பண்ணுறதைக் கேட்டேளா'ன்னு பாட்டைப் பாடி கடைசியா அவன் அடிச்ச பின்னாலயும் அழுதுகிட்டே அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளான்னு பாடுவான்னு சொன்னார்.

தனது பேச்சைத் தொடர்ந்த தனபால், ஒரு நா இப்படித்தான் எங்கம்மாவுக்கும் வூட்டுக்காரிக்கும் சண்டை. நான் வந்தா ரெண்டு பேரும் சண்ட போட்டுக்கிட்டு நா எங்கயோ பேறேன்னு அம்மாவும் நா எங்கம்மா வூட்டுக்குப் போறேனும் பொண்டாட்டியும் கிளம்ப, சொல்லிப் பாத்து கேக்கலை அப்ப நான் சரி ரெண்டு பேரும் போங்க வேலைக்காரியிருக்கான்னு சொன்னேன் திரும்பி வந்துட்டாங்கன்னார். மேலும் நிறைய நகைச்சுவைகளை அள்ளி வீசினார். இவருடன் சேர்ந்து லியோனியும் கலக்க, அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

கடைசியாக நடுவர் அவர்களே எனக்கு எழரைச் சனியின்னா உங்களுக்கு ஜெம்மச்சனி என்று லியோனி மனைவியுடன் வந்திருப்பதை நகைச்சுவையுடன் சொல்ல, அரங்கம் மட்டுமல்ல பேச்சாளர்களும் கைதட்டி ரசித்தார்கள்.

முடிக்கும் போது மணப்பாறைக்கு முறுக்கு, தஞ்சாவூருக்கு பொம்மை, மதுரைக்கு குண்டு மல்லி, மானாமதுரைக்கு மல்லி, திருநெல்வேலிக்கு அல்வா, கும்பகோணத்து வெத்தலை என்று வரிசையாக அடுக்கி கடைசியில் பட்டிமன்றத்துக்கு லியோனி, அபுதாபிக்கு பாரதி நட்புக்காக என்று முடித்தார்.

ஆரம்பம் முதல் கடைசி வரை கொங்குத் தமிழில் நகைச்சுவையை அள்ளி வழங்கினார் திரு.தனபால். அவர் மனைவி மட்டும் கேட்டிருந்தால் அய்யாவுக்கு ஆப்புத்தான். கரண்டி வாராது என்ற நம்பிக்கையில்... கடல் கடந்து வந்த சந்தோஷத்தில் பேசினாரோ என்னவோ...

திரு.லியோனி: அப்பு இப்படி அடுக்குமொழி பேசி பெரிய ஆளா ஆயிரலாமுன்னு நினைக்கிறாரு போல... அடுக்கு மொழி பேசினவங்க எல்லாம் இப்ப இருக்க எடம் தெரியலை என்றார். இவருக்கு ஏழரைச் சனியாம் நான் என் மனைவியுடன் வந்திருப்பதால் ஜென்மச்சனியாம் என்று அவரது பேச்சை விளக்கி, நான் நல்லாயிருக்கனானு கேக்கப்படாது... எனக்குத்தானே தெரியும் என்று முடித்தார்.

திரு.தனபால் அவர்களைத் தொடர்ந்து பேச வந்த மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் பேச்சு மற்றும் திரு.லியோனி அவர்கள் உரையும் நிறைவுப் பகுதியில்...

தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

செங்கோவி சொன்னது…

//தன்னை தாக்கியவருக்கு நம் பாணியில் பின்னூட்டமிட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டார்.//....அது!

Menaga Sathia சொன்னது…

உங்களுக்கு ஞாபக சக்தி ரொம்ப அதிகம்...தொடருங்கள்..

மாணவன் சொன்னது…

பட்டிமன்றத்தை நேரில் பார்த்த, கேட்ட உணர்வுகளை அழகாக பதிவு செஞ்சீருக்கீங்க சார் அருமை,

பகிர்வுக்கு நன்றி

vanathy சொன்னது…

super post. continue..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செங்கோவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மேனகாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மாணவன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.