மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 24 பிப்ரவரி, 2011

கோட்டாமி

அவரு பேரு கோட்டசாமியோ இல்ல கோபால்சாமியோ தெரியலை. எல்லாருக்கும் அவரை கோட்டாமியாத்தான் தெரியும். அவருக்கு எப்படியும் ஐம்பது வயசுக்கு மேலதான் இருக்கும். இந்த ஊருக்கு அவரு வந்து நாலஞ்சு வருசமாச்சு. வரும்போது ஒரு மஞ்சப்பை மூட்டையோடும் அழுக்கு சட்டையுடனும்தான் வந்தார். பிச்சைக்காரராய் இருக்குமோ என்று நினைத்து யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை... ஆனால் அவர் பிச்சை எதுவும் எடுக்கவில்லை... கோவில் அருகில் பயனில்லாமல் கிடந்த ஒரு வீட்டு திண்ணையில் படுத்துக் கொண்டு கோயில் பிரசாதங்களை வாங்கி சாப்பிட்டு வந்தார்.

இப்பதான் ராமேஸ்வரம் போறப்போ மனநலமில்லாதவங்களை தேவகோட்டையில் இறக்கிவிட்டு போயிடறாங்களே... அவங்கள்ல ஒருத்தரா இருக்குமோன்னு நினைச்சு யாரும் அவர்கிட்ட போகலை. அப்படி விடப்படுறவங்க பிச்சை எடுத்துக்கிட்டும்.. தெருவுல கிடந்துக்கிட்டும் அவதிப்படுறாங்க... சிலர் வாகனங்கள்ல அடிபட்டு சாகுறாங்க... அவரைப் பத்தி யோசிக்க யாருக்கும் நேரமில்லை... பத்தோட பதினொன்னுன்னு நினச்சுக்கிட்டாங்க.

கொஞ்ச நாளாக சினேகமா பாக்க ஆரம்பிச்சாரு... கோயில் வாசல்ல இருக்க செடிகளைப் பிடிங்கி சுத்தமாக்கி வைக்க ஆரம்பிச்சாரு. அப்புறம் கோயிலுக்குள்ள சின்ன சின்ன வேலை பாக்க ஆரம்பிச்சாரு. எல்லாருக்கும் அவருகிட்ட இருந்த பயம் மெல்ல விலக ஆரம்பிச்சுருச்சு. அவருக்கு யாராவது காசு கொடுத்தா வாங்க மாட்டேன்னு தலையாட்டி மறுத்துட்டு போயிடுவாரு. ஆனா வேட்டி, சட்டை கொடுத்தா மறுக்க மாட்டாரு. அடுத்த நாள் அந்த உடுப்ப போட்டுக்கிட்டு வலம் வருவாரு. யார்கிட்டயும் வாய் திறந்து பேசமாட்டாரு. எல்லாத்துக்கும் புன்னகையை பதிலா அளிச்சிட்டுப் போயிடுவாரு.

குருக்கள்கிட்ட ரொம்ப நெருக்கமா இருப்பாரு. அவருக்கு வீட்டு வேலையெல்லாம் பாத்துக் கொடுத்துட்டு மாமி போடுற சாப்பாட்டை சாப்பிட்டு அவரு வாசம் செய்யிற திண்ணையில வந்து படுத்துப்பாரு. அவருகிட்ட குருக்கள் உங்க பேரு என்னன்னு கேட்டப்போ கோட்டாமின்னு சொன்னாராம். அவரு விளங்காம திரும்பத் திரும்ப கேட்டப்போ கோட்டாமிதான்னு சொன்னாராம். அதை குருக்கள் சொன்னதுக்கு அப்புறம் இப்ப எல்லாருக்கும் கோட்டாமியாயிட்டாரு.

கோட்டாமிக்கு எந்த ஊரு... சொந்த பந்தமெல்லாம் இருக்கா... இல்லையா... என்று விசாரித்தால் சிரிப்பை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவார். யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யாருக்கும் தொந்தரவில்லை என்றாலும் இத்தனை வருடமா இங்க இருக்கிற அவரை தேடி இதுவரை யாரும் வரவில்லை என்பதும் அவரும் யாரையும் தேடி போகவில்லை என்பது எல்லாருக்கும் உறுத்தலாகவே இருந்தது.

போனவார நிகழ்வுக்குப் பிறகு அவர் முகத்தில் புன்னகை பூக்கவில்லை... மாறாக வெள்ளைத்தாடி வளர்ந்திருந்தது. நீண்ட நேரம் திண்ணையில் அமர்ந்து இருந்தார். சாப்பிட யாராவது கொடுத்தால் மட்டும் சாப்பிட்டார். யாரிடமும் கேட்கவுமில்லை... கோவில் பிரசாதத்தையும் தேடி போகவுமில்லை. குருக்கள் மரணம்தான் அந்த நிகழ்வு. அந்த நிகழ்வில் இருந்து அவரது குடும்பம் மீண்டு வந்தபோதும் கோட்டாமி மட்டும் மீளவில்லை என்பது அவரது முகத்தில் தெரிந்தது.

மாணிக்கம் பிள்ளை டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருந்த கோட்டாமிக்கு அருகில் வந்து அமர்ந்த பூவநாதன், என்ன கோட்டாமி தாடியெல்லாம் வச்சிக்கிட்டு.... ஒரு வாரமா ஆளு டல்லா இருக்கேன்னு கேக்க, ஒரு வெற்றுப் புன்னகையை பதிலாக்கினார். ஏம்பு அவருகிட்ட பேசி என்னாகப் போகுது? யாரு என்ன கேட்டாலும் சிரிப்பாரு... இங்க வந்ததுல இருந்து வாய் தொறந்து எதாவது பேசியிருப்பாரா? ஆனா என்ன சொன்னாலும் செய்வாரு... காசா கொடுத்தா வாங்க மாட்டாரு... சாப்பாடாப் போடணும்... இல்ல துணி மணியாக் கொடுக்கணும் என்ற மாணிக்கம் பிள்ளை, சரசு வீட்டு பிரச்சினை என்னாச்சி என்று கேட்டதும் சரசுவின் பிரச்சினையை பூவநாதன் விளக்க, அங்கிருந்து கோட்டாமி கிளம்பினார்.

நானும் வந்ததில இருந்து பாக்குறேன்... சும்மாதான் படுத்திருப்பாரு... ஆனா இப்ப ஏதோ எழுதுறாரு... தினமும் இல்லாட்டியும் ஒரு சில நாள் ராத்திரி தெருவிளக்கு வெளிச்சத்துல உக்காந்து எழுதி குருக்கள் கொடுத்த டிரங்குப் பெட்டிக்குள்ள வச்சு பூட்டி வச்சிடுவாரு... அந்த பெட்டிக்குள்ள அப்படி என்ன பொக்கிஷம் இருக்குன்னு தெரியலை. காசு பணம் வாங்க மாட்டேங்கிறாரு... கொடுக்கிற துணிகளையும் அப்பவே உடுத்திடுறாரு... பேப்பரத்தான் சேத்து வச்சிருக்கப் போறாருன்னு ஒரு நாள் ராமசாமி அண்ணன் அப்பாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு.

அப்ப அப்பா, அட அவரு கொஞ்சம் மனநிலை சரியில்லாத ஆளுப்பா... நமக்கெல்லாம் வேலை பாத்துக் கொடுக்கிறாரு... நல்ல மனுசனுக்கு இப்படி ஒரு வாழ்க்கை என்னத்தையோ வச்சிட்டுப் போகட்டும்... அதை எதுக்கு நீ ஆராயிறே... யாருமே இல்லாத அந்த மனுசன் நமக்கு முன்னால போனா நல்லபடியா அடக்கம் பண்ணுவோம். இல்ல நாம முந்திக்கிட்டா இருக்கவங்க அவரை நல்லா பாத்து அனுப்பட்டும். இதுதான் நாம அவருக்கு செய்யிற நன்றிக்கடன்னு சொன்னார். சின்ன வயசுல சாவுக்கு பயப்படுற மனசு ஒரு நிலையை எட்டியபோது அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறது என்பது அப்பாவின் பேச்சில் தெரிந்தது.

சரசக்கா வீட்டைப் பத்தி எல்லாரும் தப்புத்தப்பா பேசினாங்க. அவங்க வீட்டுக்காரர் வெளிநாட்டுல இருக்கதால இவங்க இங்க யாருகூடவோ தொடுப்புன்னு கூட சொன்னாங்க. எல்லாரும் அவங்ககிட்ட பேச்ச நிப்பாட்டிட்டாலும் கோட்டாமி மட்டும் தினமும் அவங்க வீட்டுக்கு போயி சின்ன சின்ன வேலை பாத்துக் கொடுத்துட்டு வருவாரு. ஒரு நா அப்படி வரும்போது மாணிக்கம்பிள்ளை என்ன கோட்டாமி அந்த வீட்டம்மாவோட தொடுப்பு யாருன்னு கேட்டப்போ வழக்கத்துக்கு மாறாக அவர் முகத்தில் கோபம் தெரிந்தது. அது எங்க எல்லாருக்குமே புதுசு. ஆனா ஒண்ணும் பேசாம திண்ணைக்கு போயி உக்காந்துட்டாரு.

அம்மாகூட எதுக்கு அவ வீட்டுக்குப் போறே... எல்லாரும் தப்பா பேசுறாங்க, நாளைக்கு உன்னைய இணைச்சுப் பேசினாலும் பேசுவாங்க... இனி போகாதேன்னு சொன்னப்போ சிரிச்சுக்கிட்டே சாப்பாட்டை பாதியில வச்சிட்டு எந்திரிச்சுப் பொயிட்டாரு... அதுக்கப்புறம் எங்க வீட்டுப் பக்கம் அதிகமா வாறதில்லை. எனக்கு அவருக்கும் சரசக்காவுக்கும் தொடர்பா இருக்குமோ அதான் கோவம் வருதுன்னு கூட தோணுச்சு.

ஒரு நாள் கார்ல ஒரு ரெண்டு மூணு பேர் வந்து இறங்கினாங்க... அவங்களைப் பாத்ததும் அவரு முகமெல்லாம் இருண்டு வேர்க்க ஆரம்பிச்சிருச்சு... ஓடப்பாத்தவரை வந்தவங்க வெரட்டிப் புடிச்சு... பொடலியில ரெண்டு அடிவிட்டாங்க. ஆத்தா... ஆத்தான்னு கத்துனாரு... நாங்கல்லாம் தடுத்துப் பாத்தோம் ஆனா முடியலை... அவரோட பசங்கன்னு சொல்லி அவரை இழுத்துக் காருல ஏத்துனாங்க...

இவ்வளவு வருசம் வராத பசங்க இப்ப எப்படி வந்தாங்கன்னு எங்களுக்கு தெரியலை... அவரு ஆத்தா... ஆத்தான்னு கத்தக் கத்த அவரை கார்ல ஏத்தப்போனங்க... திமிறிக்கிட்டு பொட்டி... பொட்டின்னு டிரங்குப் பெட்டிக்கு ஓட, ஆமா சொத்து வச்சிருக்காரு பர்ருன்னு ஒருத்தன் தூக்கி ரோட்டுல ஒடைக்க அதுல இருந்து சில போட்டோக்கள், சில சில்லறைக் காசுகள், ஒரு சேலை, சில வேட்டிகள் என சிதறி ஓடுச்சு... ஒரு டைரியும் சாக்கடைக்குப் பக்கத்துல போயி விழுந்துச்சு. அவங்க அவரை குண்டுக்கட்டா தூக்கி கார்ல ஏத்திக்கிட்டு பொயிட்டாங்க.

அவங்க போனதும் எல்லாரும் அவரைப் பத்தியே பேசிக்கிட்டு இருந்தாங்க... அப்புறம் அவங்க அவங்க வேலையப் பாக்க பொயிட்டாங்க... எல்லாருக்கும் சோகமுன்னாலும் சரசக்கா மட்டும் அழுத மாதிரி தெரிந்தது. அது ஏன் அழணும்... ஊர் சொல்ற மாதிரி அந்த தொடுப்புக்காரன் கோட்டாமியா இருக்குமோ என நினைக்கத் தோன்றியது. எல்லாரும் போனதும் ராமசாமி அண்ணன் சொன்னது ஞாபகத்துக்கு வர, சாக்கடைக்குப் பக்கத்தில் கிடந்த டைரியை எடுத்து பிரித்தேன். அதில் அழகான கையெழுத்தில் எழுதியிருந்தார்.

அதை வாசித்த போது...

'...குருக்கள் ஐயா மரணம் என்னை நிறைய யோசிக்க வைத்து விட்டது. அநாதையாய் வந்த எனக்கு ஆலமரமாய் அடைக்கலம் தந்தவர்... எதுவுமே பேசாத என்னிடம் பேரை மட்டுமே கேட்ட அவர் வேறெதையும் கேட்கவில்லை... ஆனால் ஒருநாள் எல்லாத்தையும் அவரிடம் சொல்லியழ ஆசைப்பட்டேன். ஆனால் அந்த ஒருநாள் வருமுன்னே என்னை அழவைத்துச் சென்றுவிட்டார். என்ன செய்ய... அவருக்கு காரியம் பண்ண உறவு இருந்தது... எனக்கு உறவாய் அவர் மட்டுமே இருந்தார்...'

மேலும் படித்துக் கொண்டே வர, சரசக்கா பத்தியும் எழுதியிருந்தார். '...எல்லாரும் சரசை கொச்சைப் படுத்துகிறார்கள். பாவம் அவள்... அவளும் மனுசிதான்...அவளுக்குள்ளும் ஆசாபாசாங்கள் இருக்கத்தான் செய்யும் என்பது வெள்ளுடை உடுத்திய மனித மிருகங்களுக்குத் தெரியவில்லை. வெளி நாட்டில் அவள் கணவன் இன்னொருத்தியுடன் வாழ்வதை மறைக்கப் பாடுபடும் அந்த அபலை, சில புல்லுறுவிகளின் ஆசைக்கு இணங்காதலால் இப்படி ஒரு அவப்பெயர்... இது போன்ற நிலை இன்னும் எத்தனை பெண்களுக்கு... அவள் வீட்டுக்கு நான் போவதால் என்னையும் அவளையும் இணைத்து பார்க்கிறது சில இருண்ட மனசுகள்... அவர்களுக்குப் எப்படி தெரியும் நான் இழந்த என் மகள் மீண்டும் கிடைத்தது போல் உணர்கிறேன் இந்த அபலையின் அன்பில் என்பது...'

இப்படி நிறைய.... சில படிக்க முடியாமல் மனசை அழுத்தின... என்னையும் அறியாமல் கண்கள் நனைந்த போது கோட்டாமி கோவில்சாமியாகத் தெரிந்தார்.

*******************

தகவல்: நண்பர் சிநேகிதன் அக்பரின் தொடர் அழைப்பு ஒன்று எழுதப்படாமல் இருக்கிறது. இந்த வார விடுமுறையில் முடிக்க எண்ணம்... அதேபோல் நண்பர் ஒருவரின் வாழ்க்கை குறித்தான பார்வைக்கான கட்டுரையும் முற்றுப் பெறாமல் இருக்கு... இரண்டும் விரைவில் பகிர எண்ணம்... பார்க்கலாம். அதற்கு முன் மறக்காமல் இருக்க... இந்தச் சிறுகதைப் பகிர்வு.

-'பரிவை' சே.குமார்.

29 எண்ணங்கள்:

r.v.saravanan சொன்னது…

me first

r.v.saravanan சொன்னது…

பகிர்வுக்கு நன்றி குமார் சிறுகதை நல்லாருக்கு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

kumaar.இண்ட்லி, தமிழ் 10 2லயும் இணைக்கலையா?

sathishsangkavi.blogspot.com சொன்னது…

Very nice & Interesting story...

Asiya Omar சொன்னது…

கோட்டாமி கதை அருமை,வாழ்க்கையை நல்லா படித்தவர் கோட்டாமின்னு நினைக்கிறேன.

Pranavam Ravikumar சொன்னது…

Nice Post..!

சென்னை பித்தன் சொன்னது…

கோட்டாமியை உயிருள்ள ஓவியமாகப் படைத்து விட்டீர்கள்!

ரேவா சொன்னது…

வெளி நாட்டில் அவள் கணவன் இன்னொருத்தியுடன் வாழ்வதை மறைக்கப் பாடுபடும் அந்த அபலை, சில புல்லுறுவிகளின் ஆசைக்கு இணங்காதலால் இப்படி ஒரு அவப்பெயர்

அருமையான கதை நண்பரே

எல் கே சொன்னது…

மிக ஆழமான கருத்து குமார். அருமையா இருக்கு

தினேஷ்குமார் சொன்னது…

கோட்டாமி மனதை நிறைத்து கிளம்பிவிட்டார் ,,,,,

அருமை அண்ணே ....

Chitra சொன்னது…

அவருக்கு காரியம் பண்ண உறவு இருந்தது... எனக்கு உறவாய் அவர் மட்டுமே இருந்தார்...'


.....மனதை தொட்டு விட்ட இடம்.

பா.ராஜாராம் சொன்னது…

நல்லாருக்கு குமார்!

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

நல்லா எழுதி இருக்கீங்க..

மகன்கள் அடிச்சி இழுத்து போனது எப்படி தெரிந்து வந்தார்கள் என்பதெல்லாம் பற்றி தேவையில்லை என்று விட்டு விட்டு அவர் நல்லவர் என்பதை மட்டும் குறிப்பிட்டு முடிச்சிட்டீங்க..

VELU.G சொன்னது…

மனதில் நிலைக்கும் கதை

அருமை

Vidhya Chandrasekaran சொன்னது…

நல்லாருக்கு குமார்.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

கோட்டாமி பாத்திரத்தை இன்னும் செதுக்கியிருக்காலம் என்றே தோன்றுகிறது.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

சிறுகதை நல்லாருக்கு..

Sriakila சொன்னது…

கதை ரொம்ப நெகிழ்வா இருந்துச்சு...

ஹேமா சொன்னது…

கோட்டாமியை மறக்கமுடியாத பாத்திரமாக்கிவிட்டீர்கள் குமார்!

இலா சொன்னது…

குமார்ண்ணா! கதை ரொம்ப அருமை !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

நல்லாயிருக்கு குமார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க செந்தில்குமார்...
இணைப்பில் பிரச்சினை... அதனால் பதிவு ஹிட் ஆகவில்லைங்க... பரவாயில்லை எப்பவும் படிப்பவர்கள் படித்தாச்சு...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சங்கவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஆசியாக்கா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ரவிக்குமார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பித்தன் சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ரேவா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க எல்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தினேஷ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சித்ராக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சித்தப்பா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க முத்துலெட்சுமி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வேலு...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வித்யாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க உழவன் சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க அமைதிச்சாரல்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோ. ஸ்ரீஅகிலா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க இலா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பிரஷா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நாடோடி இலக்கியன் சொன்னது…

நல்லாயிருக்குங்க கோட்டாமி.