மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

நான் நிர்வாணமானவன்: பாரதிராஜா சிறப்பு பேட்டி!

"அன்னக்கொடியும் கொடிவீரனும்" படத்தின் பணிகளில் ரொம்வே பிசியாக இருக்கிறார் பாரதிராஜா. தனது சொந்த ஸ்டூடியோவிலேயே டப்பிங், மிக்சிங் பணிகளை செய்து கொண்டிருக்கிறார். இடையில் இளையராஜா அடித்த கமெண்ட் அவரை கொஞ்சம் கடுப்பேற்றி இருந்தாலும் வழக்கம்போல கரகர குரலில் அளித்த பேட்டி:


* அன்னக்கொடியையும், கொடிவீரனையும் எப்போ கண்ணுல காட்டுவீங்க?



ஏய்யா படம் இம்புட்டு லேட்டுன்னு நேராவே கேட்டுற வேண்டியதுதானே. எப்பவுமே நான் பிளான் பண்ணி அடிக்கிறவன்தான். இந்த முறை கொஞ்சம் மிஸ்சாகிப்போச்சு. கொஞ்ச நாள் வெளிநாடு போயிட்டேன். அப்புறம் படத்துக்கான லொக்கேஷன் தேடி அலைஞ்சதுல கொஞ்சம் தாமதமாகிப்போச்சு. வறண்ட கிராமமாவும் இருக்கணும், வசதியான கிராமமாவும் இருக்கணும் இந்த ரெண்டுல ஒண்ணு இருந்தா இன்னொன்னு இருக்காது. கடைசியில போடி மெட்டு, மலைக்கு கீழ் கரட்டுப்பட்டிங்ற ஒரு ஊரை கண்டுபிடிச்சேன். சொன்னா நம்புவீயாய்யா, அந்த ஊர்ல இப்பவும் பொழுது சாஞ்சபிறகு அசலூருக்காரங்க ராத்திரி தங்ககூடாது. நான் போயி நின்னப்பவே பஞ்சயாத்தை கூட்டிட்டாங்க. சினிமா நம்ம ஊர்ல எடுக்கவே கூடாதுன்னு நின்னாங்க. அப்புறம் நாலு பெரியவங்க யோவ் பாரதி, நம்ம ஊர் பையன்யா நல்ல படமாத்தான் எடுப்பான்னு பஞ்சாயத்துல பேசி அப்புறம் பர்மிஷன் கொடுத்தாங்க. இப்படி பல பஞ்சயாத்துக்களை கடந்த வர வேண்டி இருந்ததால படம் கொஞ்சம் லேட்.



* கார்த்திகா எப்படி?



அவ அம்மாவை நான்தான் அறிமுகப்படுத்தினேன். ராதா கிட்ட கிளாமர்தான்யா இருந்திச்சு. ஆனா இந்த பொண்ணுகிட்ட பர்மாமன்ஸ் இருக்கு. வேணா எழுதி வச்சுக்க, இந்தப் பொண்ணு நடிப்புல அவுங்க அம்மா தொடாத உசரத்தை புடிக்கும்யா. ஐ வில் சேலன்ஞ்.



* அறிமுகம் லக்ஷ்மன் எப்படி செலக்ட் பண்ணினீங்க?



அவன் பெரிய குடும்பத்து பையன். தேனிக்காரன்தான். அவுங்க தாத்தா காசுல அந்தக் காலத்துல நான் நாடகம் போட்டிருக்கேன். என் மடியில வளர்ந்த பையன். பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கேன். ஒரு நாள் என் முன்னாடி வந்து நின்னப்போ, நான் மனசுல உருவாக்கி வச்சிருந்த கொடிவீரன் மாதிரி இருந்தான். டேய் நடிக்கிறியாடான்னு கேட்டேன். அவுங்க அப்பா அம்மா ரொம்ப யோசிச்சாங்க. அப்புறம் கன்வீன்ஸ் பண்ணி கொடிவீரனா மாத்திட்டேன்.



* உண்மை கதைன்னு சொல்றாங்களே...?



சின்ன வயசுல எங்க தாத்தன் பாட்டன் சொன்ன கதைதான் கொடிவீரன்ங்கற செருப்பு தைக்கிற தொழிலாளிக்கும், அன்னக்கொடிங்ற இன்னொரு ஜாதிப் பொண்ணுக்கும் இருக்கிற காதல் அது வளர்ந்த கதை, வீழ்ந்த கதை, மீண்டும் துளிர்த்த கதைதான்.



* விஸ்வரூபம் பிரச்னையில தைரியமா நின்னுனிங்களே... உங்க படத்துக்கு அதனால பிரச்னை வருமா...?



கமல் மகா கலைஞன்யா. அவனை சீண்டினா நான் சும்மா இருந்துடுவேனா. சப்பாணியா நொண்டி நொண்டி நடந்து தமிழ் சினிமாவை தலை நிமிர்ந்து நடக்க வச்சவன்யா. அவன், நான் வெளிநாட்டுக்கு போறேன்னு சொல்றான்னா வெட்கமா இருக்குய்யா. அந்த அளவுக்கு அவனை புண்படுத்திட்டாங்க. அதை எடுக்காத, இதை எடுக்காதன்னு சொன்னா அப்புறம் எதைத்தான் எடுக்குறது?. கஜினி முகம்மது வரலாற்றை படமா எடுத்தா அவன் நம்ம கோவில் சொத்தை கொள்ளை அடிச்சதை எடுத்துதானே ஆகணும். அதை எப்படி தடுப்பாங்க.



* உங்க படத்துலேயும் ஜாதி பிரச்னை இருக்குதாமே?



கிராமத்து பக்கம் கதை பண்ண போயிட்டாலே ஜாதி இல்லாம படம் எடுக்க முடியாது. கிராமத்துல என்ன அம்பானி, பிர்லா சண்டையா இருக்கும். வேதம் புதிது, அலைகள் ஓய்வதில்லை படத்தில் சொல்லாத ஜாதி பிரச்னையா. இதுலேயும் ஜாதி இருக்கு. பலர் மேடையில பேசாததை, பல கட்சிகள் சொல்லாத கருத்தை பாரதிராஜா சினிமாவுல சொல்றான்.



* கிராமங்கள் இப்போ எப்படி இருக்கு...?



ரொம்ப மாறியிருக்கு. கூரை வீடெல்லாம் காரை வீடா மாறியிருக்கு. வயக்காடு குறைஞ்சு வீடாகி இருக்கு. விவசாயம் பண்ற ஆட்கள் குறைஞ்சு போச்சு. சுருக்கமா சொன்னா வசதி அதிகமாயிருக்கு. ஆனா ஜாதி மட்டும் குறையல. அது அப்படியேதான் இருக்கு. தாழ்த்தப்பட்ட ஜாதி ஜனங்கள் வாழ்க்கையும் அப்படியேதான் இருக்கு.



* கிராமங்களை இப்போ சினிமாவுல சரியா காட்டுறாங்களா...?



ஸ்டூடியோக்களுக்குள்ள கிடந்த சினிமாவ நான்தான் கிராமத்துக்கு கூட்டிட்டு போனேன். கிராமத்தை நான் கொஞ்சம் அழகிகளோடு காட்டினேன். இப்போ வர்ற இளைஞர்கள் அதை அப்படியே ரத்தமும் சகதியுமா காட்டுறாங்க. விஷயம் ஒண்ணுதான் காட்டுற பாணி வேறு விதமா இருக்கு.



* இளையராஜா உங்களை பற்றி நிறைய பேசி இருக்காறே?



நாங்க அண்ணன் தம்பி நாலுபேரு. ஆனால் நான்தான் பாரதிராஜாவா மாறியிருக்கேன். ஏன்னா கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கான். என்னை விட திறமையான ஆயிரம் பாரதிராஜாக்கள் சினிமா பக்கமே வரல. அவுங்களுக்கு ஒரு களம் கிடைக்கல. ஆயிரம் ரஜினிகாந்த், ஆயிரம் கமல் இருக்காங்க. அவுங்களுக்கு களம் கிடைக்கல, கமலுக்கும் ரஜினிக்கும் கிடைச்சுது. நாம எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அது கடவுள் கொடுத்த கிப்ட். நாம வெறும் குழாய்தான், தண்ணிய ஊத்துறது அவன். எந்த குழாய்ல ஊத்தணுங்றத அவன்தான் முடிவு பண்றான். இதுல நான்தான் பெரிய ஆள்னு தலைக்கணத்தோடு திரியக்கூடாது. இதைத்தான்யா அவன்கிட்ட சொன்னேன். அவரு கோவிச்சுக்கிட்டாரு. என்னை பத்தி தப்பு தப்பா சொல்லியிருக்காரு.



நான் ஒண்ணும் உத்தம புத்திரன்னு சொல்லல. என்கிட்டடேயும் 20 சதவிகிதம் அழுக்கிருக்கு. ஆனா 80 சதவிகிதம் பரிசுத்தமானவன். என்னோட அழுக்கு பக்கத்தை பேசுறதுக்கும் நான் தயங்கல. நான் நிர்வாணமானவன், எங்கிட்ட எந்த ஒழிவு மறைவும் கிடையாது. நான் பேசுறது பைத்தியக்காரன் பேச்சுன்னு சொல்லியிருக்கார். நான் அப்படி சொல்ல மாட்டேன். அவரு பேசுறது குழந்தைத்தனமானது. ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்குங்க, வேலை செய்ய முடியுறவன் வேலைய செஞ்சிக்கிட்டிருப்பான். வேலை செய்ய முடியாதவன் தத்துவம் பேசிக்கிட்டுருப்பான்.

-'பரிவை' சே.குமார்

நன்றி :  தினமலர்

2 எண்ணங்கள்:

Yoga.S. சொன்னது…

வணக்கம்,குமார்!///'அவரு' நிர்வாணமானவர் இல்ல.'இவரு' நிர்வாணமானவரு தான்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

இரண்டு ராஜாக்களும் இப்படி சண்டை போட்டுக் கொள்வது அழகல்ல.