மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 4 மார்ச், 2013

விளையாடக் கூட ஆளில்லாமல் தவித்த பிரபாகரன் மகன்.. மனம் திறக்கும் பாடிகார்ட்


இப்படி ஒரு கொடுமையான வாழ்க்கை யாருக்கும் அமையக் கூடாது. அதுவும் குழந்தைப் பிராயம் அமையவே கூடாது. அப்படிப்பட்ட சோகமான வாழ்வை வாழ்ந்து முடித்துள்ளான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன்.

பிரபாகரன் குடும்பத்தின் கதி என்ன என்பது பெரும் சோகமான மர்மமாக உள்ளது. மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி இறுதிக் கட்டப் போரின்போது கொல்லப்பட்டு விட்டார். மற்றவர்கள் குறித்துத் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில்தான் இளைய மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்றவர்கள் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. சார்லஸ் ஆண்டனியாவது போரிட்டு உயிரிழந்தார். ஆனால் பாலச்சந்திரன் மரணம்... இதயத்தைப் பதற வைப்பதாக உள்ளது அந்த பாலகனின் கடைசி நிமிடங்கள்.
உயிருடன் பிடித்து உட்கார வைத்து, பிஸ்கட் கொடுத்து சாப்பிட வைத்து, துடிக்க துடிக்க நெஞ்சில் புல்லட்களை இறக்கி கொடூரமாகக் கொன்றுள்ளனர் இதயமே இல்லாத மனிதப் பதர்கள்.

இந்த நிலையில் பாலச்சந்திரனின் சிறு பிராயத்து வாழ்க்கை குறித்து அவரது பாடிகார்டுகளில் ஒருவர் மனம் திறந்து கூறியுள்ளார். சுடரொலி பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது...

பாலச்சந்திரன் எப்போதும் தனிமையிலேயே இருக்கும் நிலையில் இருந்து வந்தான். அவனது அண்ணன் சார்லஸ் ஆண்டனி எப்போதும் கம்ப்யூட்டரிலேயே மூழ்கியிருப்பார். சகோதரி துவாரகா புத்தகம் படித்தபடி இருப்பார். பாலச்சந்திரனுக்கு விளையாடக் கூட ஆள் இருக்காது.

பாதுகாப்பு கருதி பாலச்சந்திரன் வெளியில் செல்ல அனுமதி கிடையாது. எனவே பேசவோ, விளையாடவோ தனது பாடிகார்டுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை பாலச்சந்திரனுக்கு.

தலைவர் பிரபாகரன் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். எப்போதாவதுதான் அவர் குடும்பத்தினரை சந்திப்பார்.

பாலச்சந்திரன் பிறந்ததும் கூட அவனைப் பார்க்க உடனடியாக வரவில்லை பிரபாகரன். மாறாக சில காலம் கழித்தே அவர் தனது மகனைப் பார்க்க வந்தார்.

எல்டிடிஇ கமாண்டர்கள் சொர்ணம் மற்றும் சங்கர் ஆகியோரின் குழந்தைகளுடன்தான் பொதுவாக விளையாடுவான் பாலச்சந்திரன். ஆனாலும் கூட அவர்களும் அடிக்கடி வர மாட்டார்கள் என்பதால் பெரும்பாலும் தனிமையிலேயே சிறைபட்டிருப்பான் பாலச்சந்திரன்.

எங்களிடம் அடிக்கடி வந்து விளையாட வாருங்கள் என்று கூறிக் கெஞ்சுவான். நாங்கள் மறுத்தால், வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று மிரட்டுவான். இதனால் நாங்கள் அவனுடன் விளையாடப் போவோம்.

சில நேரங்களில் நாங்கள் எங்காவது வெளியில் போனால் கூட வருவதாக கூறுவான். சில சமயங்களில் நாங்களும் கூட்டிச் சென்றுள்ளோம். அங்கு நாங்கள் எங்கள் வேலையைப் பார்ப்போம், பாலச்சந்திரன் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பான். தனக்கு முன்பு பரந்து விரிந்து கிடக்கும் பூமியை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருப்பான்.

பாலச்சந்திரனுக்கு தனது அம்மா மதிவதனி செய்யும் சாப்பாடு பிடிக்காது. சரியாக சாப்பிட மாட்டான். இதனால் எங்களிடம் வருவான். நாங்கள் வைத்திருக்கும், நாங்களே சமைத்து சாப்பிடும் சாப்பாட்டை வாங்கி விரும்பி சாப்பிடுவான் என்று நினைவு கூர்ந்துள்ளார் அந்த முன்னாள் பாடிகார்ட். இந்த பாடிகார்ட் தனது பெயர் விவரங்களை கூறிக் கொள்ளவில்லை.

நன்றி : தட்ஸ் தமிழ் இணையம்
-'பரிவை' சே.குமார்

2 எண்ணங்கள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பாலகனின் மரணம் மனதை பிசைகிறது.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கொடுமையான விஷயம்....

இலங்கை ராணுவத்தினருக்கு ஈவு இறக்கமே இல்லையா...?