மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 26 ஜூலை, 2013

கருப்பண்ணே... நீங்கதாண்ணே உண்மையான ஹீரோ...

கடந்த 20 நாட்களாக சிவகங்கை மற்றும் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது குறித்து திரைப்பட இயக்குநர் கோபி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி.


அங்காடித் தெரு படத்தின் நாயகன் மகேஷ் கதாநாயகனாக நடிக்க வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற பெயரில் திரைப்படம் சிவகங்கை பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது. சிவகங்கையை சொந்த ஊராகக் கொண்ட கஞ்சா கருப்பும், நானும் பங்குதாரராக இணைந்து படம் எடுத்து வருகிறோம். சிவகங்கை மாவட்டத்தில் ஒரு பகுதி செழுமையாகவும், மற்றொரு பகுதி வறட்சியாகவும் உள்ளது. தண்ணீர் பஞ்சம், போர்வெல் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை படத்தின் மையக் கருவாக இருந்தாலும், நகைச்சுவை, பாடல்கள், காதலுக்கும் படத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

 நடிகர் கரண் கதாநாயகனாக நடித்த மலையான் எனது முதல்படம். நடிகர் கஞ்சா கருப்புடன் இணைந்து தயாரிக்கும் வேல்முருகன் போர்வெல்ஸ் எனது இரண்டாவது படமாகும். இந்தப் படத்தில் அங்காடித் தெரு படத்தின் நாயகன் மகேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆரிசி அவருக்கு ஜோடியாக கதைநாயகியாக உள்ளார். இதேபோல் தீப்பெட்டி கணேசன், பிளாக் பாண்டி உள்பட பலரும் நடிக்கின்றனர். பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், சினேகன், பா.விஜய் ஆகியோரின் பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளதாக இயக்குநர் கோபி தெரிவித்தார்.

 120 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் கஞ்சா கருப்பு கூறியதாவது.

தண்ணீர் பிரச்சனையை பிரதமர் கூட தீர்க்க முடியாத நிலையில் போர்வெல் லாரி மூலம் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்கும் வேல்முருகன் என்ற பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளேன். சிவகங்கை போஸ்நகர் எனது சொந்த ஊர் என்பதால் திரைப்படத்தின் மூலம் வளர்ந்த நான் ஊருக்குப் பெருமை சேர்க்க இப்படத்தை சிவகங்கையில் தயாரித்து வருகிறேன் எனறார் நடிகர் கஞ்சா கருப்பு.

படம் பற்றிய செய்திகள் ஒருபுறம் இருக்க,  இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை, காரைக்குடி, நாட்டரசன் கோட்டை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இப்படத்திற்காக ரூ.20 லட்சம் செலவில் ஒரு புது போர்வெல் லாரியை கஞ்சா கருப்பு வாங்கி இருக்கிறாராம். 

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் எந்த ஊரில் தண்ணீர் இல்லையோ அந்த ஊருக்கு லாரியை கொண்டு சென்று இலவசமாகவே போர்வெல் போட்டுக் கொடுக்கிறாராம். இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல் போட்டுக் கொடுத்திருக்கிறாராம் கருப்பு.  இப்போ எங்க ஊருக்கு ஒரு போர்வெல் போட்டுத்தாங்கண்ணே... என்ற கோரிக்கைக் குரல்கள் இப்போது மனுக்களாகக் குவிகிறதாம் நடிகர் கஞ்சா கருப்புவிடம்.


 தங்கள் ஊர்களிலும் போர்வெல் போடச்சொல்லி 100-க்கும் மேற்பட்ட மனுக்களை கஞ்சா கருப்புவுக்கு அனுப்பியுள்ளார்களாம். இவரும் சளைக்காமல் எல்லா மனுக்களுக்கும் பதில் அனுப்பியதோடு, மனு கொடுத்த ஊருக்கும் போய் பார்த்து தேவையென்றால் போட்டுத் தருவதாக வாக்களித்துள்ளாராம். 

மேலும் தேடி வருபவர்களிடம் கஞ்சா கருப்பு அவர்களும் படப்பிடிப்பு முடிவதற்குள் எல்லா ஊர்களுக்கும் வந்து போர்வெல் போட்டுத் தந்திடறோம்ணே.. கவலய விடுங்க என ஆறுதல் வார்த்தை சொல்லி அனுப்புகிறாராம்.

இப்போ எங்க மாவட்டத்து மக்களுக்கு அண்ணன்தான் உண்மையிலே ஹீரோ....

திரு. கஞ்சா கருப்பு அவர்களை எல்லாரும் சேர்ந்தே வாழ்த்துவோம்...

நன்றி : பத்திரிக்கைச் செய்திகள்
படங்கள் : இணையம்

-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

கஞ்சா கருப்பு நீடூழி வாழ்க,தொடரட்டும் தண்ணீர்ப் பஞ்சம் தீர்க்கும் பணி!!!

சென்னை பித்தன் சொன்னது…

எனது வாழ்த்துகளும்